Tamil Bayan Points

03) மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை

நூல்கள்: இது தான் பைபிள்

Last Updated on February 24, 2022 by

மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை

இது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும்.

மூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புகள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா? இதை என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த விஷயத்தில் வேதங்களுக்கும், ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லவே இல்லை! உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. மொழி பெயர்ப்புகளே உள்ளன. அதை விட பரிதாபமான நிலைமை என்னவென்றால் பைபிளின் மூலமொழி எதுவென்பதில் கூட கிறித்தவ மத குருமார்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது தான்.

வேதத்தின் மூல மொழி எதுவென்பதைக் கூட தெரியாமலிருப்பதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும்? இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மத குருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயே பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அதன் மூலமொழி எதுவென்று தெரியாதென்றும் கூறுகிறோம்.

 பைபிளின் மூலமொழி எது?

இது பற்றி கிறித்தவ உலகம் தருகின்ற வாக்குமூலங்களைப் பார்ப்போம்.

பெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில்,  எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பழைய ஏற்பாடு எபிரேயு (ஹீப்ரு) மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகவும் அந்த மூலம் தங்களிடம் உள்ளதாகவும் அந்த மூலத்தை வைத்தே தமிழில் மொழி மாற்றம் செய்ததாகவும் உலகுக்குச் சொல்கிறார்கள். இந்த அர்த்தத்திலேயே மேற்கண்ட வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு தானா? புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழி தானா? என்பதை நாம் ஆராய்வதற்கு முன்னால் இந்திய வேதாகமச் சங்கம் உங்களை ஏமாற்றுவதை அடையாளம் காட்டுவது அவசியமாகின்றது.

ஒரு வாதத்துக்காக இவர்களின் கூற்றில் நம்பிக்கை வைத்து, பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கேட்கிறோம். எபிரேயு மொழியில் பைபிள் உலகில் இருக்கின்றதா? இருக்கிறது என்றால் எங்கே இருக்கின்றது? எபிரேயு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமானால் எபிரேயு மொழியும் தமிழ் மொழியும் தெரிந்த தான் மொழி பெயர்க்க முடியும். அந்த எபிரேயு மொழி வல்லுனர் யார்? இந்தக் கேள்விக்கு கிறித்தவ உலகில் விடை கிடைக்காது.

உலகில் எபிரேயு மொழி செத்துப் போய் பல நூறு ஆண்டுகளாகி விட்டன. வழக்கொழிந்து போய்விட்ட – உலகில் எவருக்குமே தெரியாத – எபிரேயு மொழியிலிருந்து தான் இந்த பைபிள் மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கூறுவது அப்பட்டமான மோசடியாகும்.

இஸ்ரேலில் இப்போது இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகின்றதே என்று சிலர் கருதலாம். செத்து வழக்கொழிந்து போன பின்னர் ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டு இன்று அதற்கு எபிரேயு என்று பெயரிட்டுள்ளார்களே தவிர அது புராதண எபிரேயு மொழி அன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உலகை விட்டு முற்றிலுமாக விடைபெற்று விட்ட அம்மொழி இனி ஒருக்காலும் திரும்பி வர முடியாது.

இது கற்பனையோ, வெறும் அனுமானமோ இல்லை. அதே கிறித்தவ உலகம் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறுகிறோம். கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த, திண்டிவனம் தமிழ்நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையத்தினர் ஒரு பைபிளைத் தமிழில் வெளியிட்டுள்ளனர். 6.4.1980 – ல் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமம் என்ற இந்த பைபிளின் முன்னுரையில்,

நம் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய துணை புரியும் வகையில் திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் 1960 – ல் பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இணைந்த ஒரு நூலாக  வுல்காத்தா எனும் இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவி பரிசுத்த வேதாகமத்தை முதன் முறையாக தமிழ் மொழியில் வெளியிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறித்தவ நண்பர்களே! நன்றாகக் கவனியுங்கள். இலத்தீன் மொழி பெயர்ப்பைத் தழுவியே பைபிள் தமிழ்ப்படுத்தப்பட்டதாகத் தமிழ் பைபிளின் முன்னுரை கூறுகிறது.

எபிரேயு எனும் மூலமொழி உலகில் இருந்திருந்தால் – அந்த மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருந்தால் – இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவுவார்களா? மூலமொழியும், மூலமொழியில் பைபிளும் உலகில் இல்லாத காரணத்தினால் தான் ஒரு மொழிபெயர்ப்பைத் தழுவி எழுத வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேரிட்டது என்பதில் உங்களுக்கு ஐயமுண்டா?

நண்பர்களே! மற்றொரு விஷயத்தைக் கவனியுங்கள்.

மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருக்குமானால் அது கத்தோலிக்கப் பிரிவினரிடம் இருப்பதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் புரோட்டஸ்டண்டு பிரிவை விட காலத்தால் முந்தியதும், ஆதியானதும் கத்தோலிக்கப் பிரிவே. மூலமொழி வேதத்தின் ஒரு பிரதியாவது அவர்களிடம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதையும், அவர்களிடம் இல்லையென்றால் உலகில் எவர்களிடமும் குறிப்பாகப் புரோட்டஸ்டண்டுகளிடம் இருக்கவே முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். எனவே பைபிளின் மூலமொழி வேதம் உலகில் இல்லை என்பது உறுதியாகின்றது.

கத்தோலிக்க உலகம் இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறது. புரோட்டஸ்டண்டுகள் எபிரேயு மூலமொழியில் பைபிள் உலகில் இருக்கின்றது என்ற பொய்யான கருத்தை மெய்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றும், புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்கு என்றும் புரோட்டஸ்டண்டுகள் கூறுகின்றனர். இந்தக் கூற்றிலாவது உண்மை இருக்கின்றதா என்றால் அதுவுமில்லை. புரோட்டஸ்டண்டுகளின் இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட பைபிளில் புதிய ஏற்பாட்டின் துவக்கத்தில்,

நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு இது  மூல பாஷையாகிய கிரேக்குக்கு இசையத் திருத்திய மொழிபெயர்ப்பு (1954) எனக் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய ஏற்பாடு என்பது முதன் முதலில் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டதாகவும், அதிலிருந்து தான் பல மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் உலகை நம்ப வைப்பதற்காகத் திட்டமிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கூற்றாவது உண்மையா?  இல்லை என்று தனக்குத் தானே மறுத்துக் கொள்கிறது கிறித்தவ உலகம். புதிய ஏற்பாட்டின் முதலாவது சுவிஷேசம்  மத்தேயு என்பது. கத்தோலிக்கர்கள் திண்டிவனத்திலிருந்து வெளியிட்ட பைபிளில் மத்தேயு சுவிஷேசத்தின் முன்னுரையில்,

ஆகையால் அக்காலத்தில் பாலஸ்தீன நாட்டில் வழக்கிலிருந்த  அரமாயிக் மொழியில் எழுதினார். அவர் சுவிஷேசத்தை கி.பி 50ஆம் ஆண்டுக்குள் எழுதியிருக்க வேண்டும். 70ஆம் ஆண்டுக்குப் பின் இது கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஷேசம் எழுதப்பட்ட காலத்தில் பாலஸ்தீன நாட்டில் அரமாயிக் மொழி தான் வழக்கத்தில் இருந்தது. அந்த மொழியில் தான் சுவிஷேசங்கள் எழுதப்பட்டன. அதன் பிறகு கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது என்று கத்தோலிக்கர்கள் தெளிவான வாக்கு மூலம் தருகின்றனர்.

கிரேக்க பைபிள் – புதிய ஏற்பாடு – ஒரு மொழி பெயர்ப்புத் தானே தவிர மூலமொழி நூல் அன்று. புதிய ஏற்பாட்டின் மூலமொழியாக இருந்த அரமாயிக் மொழியில் புதிய ஏற்பாடு உலகில் இருக்கின்றதா? அந்த மொழி அறிந்தவர்கள் இருக்கின்றார்களா? நிச்சயமாக இல்லை. புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழியில்லை என்பதற்கும் அரமாயிக் எனும் மூலமொழியில் உலகில் எங்கேயும் பைபிள் கிடையாது என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவை இல்லை.

மூலமொழியாக நம்பப்படும் எபிரேயு மொழியில் பழைய ஏற்பாடு உலகில் கிடையாது என்பது ஒரு புறமிருக்க, அதன் மூலமொழி எபிரேயு தானா? என்பதும் சந்தேகத்திற்குரியதே. ஏனெனில் பழைய ஏற்பாடு என்பது மோசே, தானியேல், எசக்கியேல், யோபு போன்ற பல தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவற்றின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். வெவ்வேறு பகுதிகளிலும், வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவை அனைத்தும் எபிரேயு எனும் ஒரே மொழியில் அருளப்பட்டிருக்க வழியில்லை.

ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசி இருக்கலாம். அவரவர் மொழியில் அவரவர் வேதங்கள் அருளப்பட்டிருக்கலாம். பல்வேறு மொழிகளில் அருளப்பட்டவை பின்னர் எபிரேயு மொழியில் பெயர்த்தெழுதப்பட்டு பின்னர் அதுவும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இதில் எழுகிறது. இந்த எண்ணம் தவறு என்றே வைத்துக் கொண்டாலும், பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்பதை ஒப்புக் கொண்டாலும் எபிரேயு மொழியில் பைபிளில் பழைய ஏற்பாடு கிடையாது என்பதில் ஐயமில்லை.

அது போல் புதிய ஏற்பாடும் அதன் மூலமொழியாகிய அரமாயிக் மொழியில் கிடையாது. கிறிஸ்தவ உலகில் பைபிளில் மூலநூல் நிலையில் கிரேக்க மொழி பெயர்ப்பே இருக்கின்றது. இப்போது உங்கள் முன்னுள்ள கேள்வி, இரண்டு ஏற்பாடுகளும் ஏன் மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை என்பதே!

மூலமொழி நூல் தவறலாமா?

எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன! அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர் காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக், எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

ஒரு நூலை இறை வேதம் என்று மக்கள் நம்பினால் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாக்கவும், அந்த மொழியை வளர்க்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆயிரம் மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டாலும் மூலத்தை அவ்வளவு எளிதில் விட்டு விடமாட்டார்கள். மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இந்த மனித இயல்புக்கு மாற்றமாக, பைபிளை இறை வேதம் என்று நம்புகின்ற ஒரு பெரும் சமுதாயம் மூலமொழி நூலை எப்படித் தொலைத்திருக்க முடியும்? இது சிந்திக்க வேண்டிய கேள்வியாகும்.

அடுத்ததாக, வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எந்தச் சமுதாயத்தினரும் தங்கள் மொழியைக் காப்பதில் அதிக சிரத்தை மேற்கொள்வார்கள். உலகில் மாபெரும் நிலப்பரப்பை நீண்ட நெடுங்காலம் ஆட்சி புரிந்து, உலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்ரவேலர்கள் தங்களின் மூலமொழியை எப்படி கை கழுவினார்கள்? இதுவும் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும். மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஹிந்து மதத்தினரை உதாரணமாக நாம் கொள்வோம்.

பைபிளை விட மிகவும் பழமையான வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் ஹிந்துக்கள். வேதம் என்று அவர்கள் நம்புகின்ற நூல்கள், அவர்கள் மூலமொழி என்று நம்புகின்ற சமஸ்கிருத மொழியில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. பேச்சு வழக்கில் அம்மொழி செத்து விட்டாலும் அதை அறிந்திருப்பவர்களை இன்றளவும் நாம் காணலாம்.

காலம் சென்ற இராஜாஜி, மற்றும் துக்ளக் சோ ராமசாமி ஆகியோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இன்னும் ஏராளமான பிராமணர்கள் தங்கள் வேதத்தை அதன் மூல மொழியாகிய சமஸ்கிருதத்திலேயே அறியக் கூடியவர்களாக உள்ளனர். சமஸ்கிருதக் கல்லூரிகளும் கூட அம்மதத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன. வேதத்துக்குச் சொந்தக்காரர்களும், வரலாற்றுப் பாரம்பரியம் உடையவர்களும் எளிதில் தங்கள் மொழியை விட்டு விடமாட்டார்கள் என்பதற்கு இது மறுக்க முடியாத ஆதாரமாகும்.

இந்த நிலையில் பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படாமல் போனதைத் தற்செயலானது என்று நம்ப முடிவில்லை. அன்றாடம் மக்களால் படித்துப் பாதுகாக்கப்படுகின்ற வேதம் அதன் மூலமொழியில் பாகாக்கப்படாமல் போனது இயற்கையான விபத்து என்றும் நம்ப முடியவில்லை. அந்த மொழியின் காவலர்களாக விளங்கிய மதகுருமார்களே திட்டமிட்டு இந்த நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். அவர்களைத் தவிர மற்றவர்களால் இத்தகைய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற மொழியை ஒழித்திருக்க முடியாது.

பைபிள் அதன் மூலமொழியில் இருக்கும் நிலையில் அந்த மூலமொழியை அறிந்த மக்களும் இருப்பார்களானால் தங்கள் சொந்தச் சரக்கை அதில் சேர்க்க முடியாது என்று கருதிய அம்மதத் தலைவர்கள் திட்டமிட்டே அம்மொழியையும், மூல நூலையும் ஒழித்துக் கட்டி விட்டனர் என்பதே உண்மை. இதை ஆதாரமற்ற அனுமானம் என்று எவரும் கருதிவிட வேண்டாம். கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த வேதத்தில் சேர்த்தவை, நீக்கியவை, மாற்றியவை, மறைத்தவை, ஏராளம்! அவற்றைப் பிறகு தக்க சான்றுகளுடன் உங்களுக்கு விளக்குவோம்.

ஆகையால், வேதம் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படாமல் போனதைச் சாதாரண விஷயமாகக் கருதிவிடக் கூடாது. இறை வேதம் என்ற நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் மிகப் பெரிய விஷயமாகவே இதை நீங்கள் கருத வேண்டும்.

மூலமொழியில் உள்ள பைபிள் தொலைந்து போனது தற்செயலான ஒன்று தான் என்று இதற்குப் பிறகும் எவராவது நம்பினால் அப்போதும் கூட மதகுருமார்கள் மீதுள்ள சந்தேகம் வேண்டுமானால் நீங்கலாமே தவிர, பைபிளின் மீதுள்ள சந்தேகம் நீங்கிவிடப் போவதில்லை.

மூலத்திலிருந்து மொழிமாற்றம் செய்தவர், சில இடங்களில் தவறாக மொழி மாற்றம் செய்திருக்கலாம்; சில வார்த்தைகளை அவர் விட்டிருக்கலாம். வேண்டுமென்று இப்படிச் செய்யாவிட்டாலும் மனிதன் என்ற முறையில் எவரிடமிருந்தும் இத்தகைய தவறுகள் நிகழ்வது சகஜம் தான்.

கிரேக்க மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பைபிள் சரியான முறையில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய மூலத்துடன் ஒப்பு நோக்கியாக வேண்டும். மூலமே இல்லை என்ற நிலையில் சந்தேகம் நீங்க வழியில்லை. எந்த இடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிய வழியில்லாத போது ஒவ்வொரு வசனமும்  தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டது இந்த வசனமாக இருக்குமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மொத்த பைபிளையும் சந்தேகத்திற்குரியதாக்கி விடுகின்றது.

ஒரு வேதத்திற்கு இதை விடப் பரிதாபமான நிலை வேறு என்ன இருக்க முடியும்? நியாய உணர்வுள்ள கிறிஸ்தவ நண்பர்களே! இதைச் சிந்திப்பீர்களா