Tamil Bayan Points

03) ஜின்களின் வகைகள்

நூல்கள்: ஜின்களும் ஷைத்தான்களும்

Last Updated on February 24, 2022 by

3) ஜின்களின் வகைகள்

ஜின்களின் உடல் உறுப்புக்கள் மற்றும் தோற்றம் குறித்து விரிவான தகவல் ஹதீஸ்களில் கிடைக்கப்பெறவில்லை. காற்றில் பறந்து செல்பவர்கள் பூமியில் தங்கி வாழ்பவர்கள் நாய் மற்றும் பாம்பு வடிவில் திரிபவர்கள் இவ்வாறு மூன்று வகையினர் இருப்பதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களும் பாம்புகளும் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயனித்துக்கொண்டும் இருப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூ சஃலபா (ரலி), நூல்: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2941 (2473)

பாம்வு வடிவிலும் நாய் வடிவிலும் சில ஜின்கள் இருக்கிறார்கள் என்று மேலுள்ள ஹதீஸ் கூறுகிறது. இன்றைக்கு உள்ள எல்லா நாய்களும் பாம்புகளும் ஜின்கள் தான் என்று புரிந்து விடக்கூடாது. இவ்வாறு புரிவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பாம்புகளிலும் நாய்களிலும் ஜின்களாக இருப்பவையும் உண்டு. ஜின்களாக இல்லாதவையும் உண்டு என்று கூறுவதே ஏற்புடையதாகும். பாம்புகளில் இவ்வாறு இரு வகை இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

பாம்பு வடிவில் ஜின்கள

நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்த போது அபூ லுபாபா (ரலி) அவர்கள் என்னைக் கூப்பிட்டு, “அதைக் கொல்லாதீர்கள்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில்  வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி-3298 

வீட்டில் வசிக்கும் பாம்புகளை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் ஜின்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து வீட்டிற்கு வெளியே சுற்றித்திரியும் பாம்புகள் ஜின்கள் இல்லை என்பதும் அவற்றை கொல்ல வேண்டும் என்பதும் தெளிவாகிறது. வீடுகளில் தென்படுகின்ற பாம்புகள் அனைத்தும் ஜின்கள் தான் என்று விளங்கவிடக்கூடாது. பாம்புகளை வீட்டில் காணும் போது அவை வெளியேறுவதற்காக மூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். வெளியேறாவிட்டால் அவற்றை கொல்ல வேண்டும் என்று ஹதீஸில் உள்ளது.

ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.

உடனே அபூசயீத் (ரலிலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, “இந்த அறையை நீர் காண்கிறீரா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்’ என்றேன். அப்போது அபூசயீத் (ரலிலி) அவர்கள் கூறினார்கள்:

இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.

பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, “ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலிலில்) வீட்டுக்குள் நுழைந்து, நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்” என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.

உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலிலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)

உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; “அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று சொன்னார்கள்.

பிறகு “மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம்-4502 

மூன்று நாட்களுக்குள் வெளியேறிவிடுகின்ற பாம்புகளில் ஜின்களும் இருக்கலாம். ஜின்களாக இல்லாதவையும் இருக்கலாம். அறிவிப்புச் செய்து மூன்று நாட்கள் கடந்த பிறகும் வீட்டில் பாம்புகள் தென்பட்டால் நிச்சயமாக அவை ஜின்களாக இருக்க முடியாது. அவை மனிதனிற்கு கேடு விளைவிக்கும் சாதாரண பாம்பு என்பதால் அதைக் கொல்லுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

நாய் மற்றும் பாம்புகளின் தோற்றத்தை மட்டுமே நம்மால் காணமுடியும். ஜின்களின் உண்மையான தோற்றத்தை காண இயலாது. ஒரு குறிப்பிட்ட நாயையோ அல்லது பாம்பையோ ஜின் என்று நம்மால் முடிவு செய்யவும் இயலாது.

நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ள ஜின்களால் சாதாரண நாய்களாலும் பாம்புகளாலும் என்ன செய்ய முடியுமோ அதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. பொதுவாக ஜின்களுக்கு வழங்கப்பட்டுள்ள அளப்பறிய ஆற்றல்கள் இந்த வகை ஜின்களுக்கு வழங்கப்படவில்லை.

மதீனாவிற்கு மட்டும் உரிய சட்டம்

பாம்புகளைக் கண்டால் எடுத்தஎடுப்பில் கொன்றுவிடாமல் வெளியேறுமாறு மூன்று நாட்கள் வரை அறிவிப்புச் செய்ய வேண்டும் என்ற இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு மட்டும் பிரத்யேகமானதாக கூறியுள்ளார்கள். மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன என்று நபியவர்கள் கூறியதிலிருந்து இச்சட்டம் மதீனாவிற்கு மட்டும் உரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம்-4504 

உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள்

சில ஜின்கள் பாம்புகளாக உருமாற்றம் செய்யப்பட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்ரவேலர்களில் (சிலர்) பன்றிகளாகவும் குரங்குகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டதைப் போல் (சில) ஜின்கள் பாம்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அஹ்மத்-3254 (3085), தப்ரானீ-11846 (4364)

உருமாற்றப்பட்ட உயிரினங்களுக்கு சந்ததிகளை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இந்த வகை உயிரினங்களுக்கு வழிதோன்றல்கள் இல்லாததால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்துடன் அழிந்து போயிருக்கும். எனவே தற்காலத்தில் பாம்பு வடிவில் உருமாற்றப்பட்ட ஜின்கள் இருப்பதற்கு சாத்தியமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : முஸ்லிம்-5176 

பாம்புகளை கொல்ல வேண்டும்

பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, “பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (“துத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும் குட்டையான- அல்லது- சிதைந்த வால் கொண்ட (“அப்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்” என்று சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி-3297 

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, “வல் முர்சலாத்தி” (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ளி வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள்.

அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : புகாரி-4934 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை பாம்பு காகம், பருந்து, எலி, வெறிநாய் ஆகியனவாகும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : நஸாயீ-2829 (2780)

பாம்புகள் பலிவாங்குமா?

பாம்புகளை கொன்றால் அவை இறந்த பிறகு மீண்டும் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை பலிவாங்கும் என்ற தவறான நம்பிக்கை சில மக்களிடம் உள்ளது. அடிபட்ட பாம்பு தப்பிவிட்டால் அடித்தவரை அது பாலிவாங்காமல் விடாது என்று கருதி பாம்பைக் கண்டால் பயந்து நடுங்குபவர்களும் உண்டு. இது போன்ற தவறான நம்பிக்கையின் காரணமாக பாம்புகளை கொல்லாமல் விடுவது பாவம் என்கின்ற அளவிற்கு நபி (ஸல்) கண்டித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாம்புகள் பலிவாங்கிவிடும் என்று பயந்து யார் அவைகளை கொல்லாமல் விட்டுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. பாம்புகளுடன் நாம் சண்டையிடத்தொடங்கியது முதல் என்றுமே அவைகளுடன் நாம் இணக்கமானதில்லை.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத்-5250 (4570)

ஜின்களில் ஆண்களும் பெண்களும் உண்டு

ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண் பெண் என்ற இரு இனம் இருப்பது போல் ஜின்களிலும் ஆண் பெண் இனங்கள் உண்டு. மனிதர்களில் ஆண் இனம் இருப்பது போல் ஜின்களிலும் ஆண் இனம் உள்ளது என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

72:6 وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ يَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۙ‏

மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர்.

அல்குர்ஆன் (72 : 6)

ஷைத்தான்கள் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களாவர். ஷைத்தான்களில் ஆண் பெண் இனம் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜின்களில் இவ்விரு இனம் இருப்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி-142 

ஜின்களின் இனப்பெருக்கம்

ஜின்களில் ஆண் பெண் ஜோடிகள் இருப்பதால் அவர்களுக்கிடையே இணைபெருக்கம் நடைபெறும் என்பதை அறியலாம். ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானிற்கு வழிதோன்றல்கள் இருப்பதாக அல்லாஹ் கூறுவதிலிருந்தும் இதை அறியாம்.

اَفَتَـتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗۤ اَوْلِيَآءَ مِنْ دُوْنِىْ وَهُمْ لَـكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا‏

என்னையன்றி ஷைத்தானையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் (18 : 50)

இணைப்பெருக்கத்திற்குத் தேவையான காம உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருப்பது போல் ஜின்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

55:56 فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ‌ۚ‏

அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை.

அல்குர்ஆன் (55 : 56)

தனது துணையை தீண்டும் பண்பு மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் உண்டு என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் உள்ளடங்கியுள்ளது. மனிதன் விரும்புகின்ற விஷயங்களில் இல்லற இன்பம் முக்கியமானது. இதை மனிதன் மட்டுமல்லாமல் ஜின்களும் பெரும் பாக்கியமாக நினைக்கிறார்கள் என்பதால் மனித ஜின் கூட்டத்தினரை அழைத்து இந்த பாக்கியம் சொர்க்கத்திலும் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள். உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை. உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

55:76 مُتَّكِــِٕيْنَ عَلٰى رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِىٍّ حِسَانٍ‌ۚ‏

பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (55 : 76)

ஜின்களுக்கிடையே அன்பு

நேசிப்பது இரக்கப்படுவது போன்ற குணங்கள் ஜின்களுக்கும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகிய வற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்-5312