Tamil Bayan Points

36) கடவுளுக்கு மோசமான பரம்பரையா?

நூல்கள்: இயேசு இறை மகனா?

Last Updated on October 30, 2022 by

வேசிப் பிள்ளைகள், விபச்சாரச் சந்ததியினர் கர்த்தரின் சபைக்கு உட்படலாகாது என்று பைபிள் கூறுகிறது.

(உபகாமம் 23:2, 3)

விபச்சாரச் சந்ததிகள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லும் இயேசுவையே விபச்சார சந்ததி எனவும் பைபிள் கூறுகிறது.

தாமார்

தாமார் தனது மாமனாராகிய யூதாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டு பிள்ளை பெற்றவள் என்று பைபிள் கூறுகிறது.

அப்பொழுது ‘உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?’ சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக் கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நேக்கி: வழியண்டை நீரூற்றுக்கள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டு போனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்று மாதம் சென்ற பின்பு ‘உன் மருமகளாகிய தாமார் வேசித் தனம் பண்ணினாள், அந்த வேசித் தனத்தினால் கர்ப்பவதியுமானாள்’ என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: ‘அவளை வெளியே கொண்டு வாருங்கள், அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்’ என்றான். அவள் வெளியே கொண்டு வரப்பட்ட போது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்த போது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிற போது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறி வந்ததென்ன, இந்த மீறுதல் உன் மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

(ஆதியாகமம் 38:13-29)

பைபிளின் மேற்கண்ட வசனத்தில் தாமார் என்ற பெண்ணைப் பற்றிக் கூறப்படுகிறது. அவன் தெரிந்து கொண்டே தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து அதன் மூலம் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள் எனக் கூறப்படுகிறது. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தனது மாமனாரிடம் வஞ்சகமாக அடைமானம் பெற்றுக் கொண்டவள் என்பதும் தெரிகின்றது.

ஒழுக்கம் கெட்டவள் என்று பைபிள் அறிமுகப்படுத்தும் தாமார்’ என்பவள் வழியில் தான் இயேசு பிறந்தார் எனவும் பைபிள் கூறுகிறது.

மத்தேயுவின் முதல் அதிகாரத்தில் 1 முதல் 16 வரை இயேசுவின் பரம்பரைப்பட்டியல் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் தாமார் என்ற ஒழுக்கங்கெட்டவளும் இடம் பெற்றுள்ளாள்.

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றொன்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;

ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசோக்கியாவைப் பெற்றான்;

எசோக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன பின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்திலேல் சொரொபாபேலைப் பெற்றான்;

சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோதைப் பெற்றான்;

ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆதீமைப் பெற்றான்; ஆதீம் எலியூதைப் பெற்றான்;

எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.

(மத்தேயு 1:1-16

இதில் மூன்றாவது வசனத்தைப் பாருங்கள்!

தாமார் என்பவள் மாமனாருடன் விபச்சாரம் செய்தாலும் அவள் விபச்சாரம் செய்வதற்கு முன் கணவன் மூலம் பிள்ளை பெற்றிருக்கலாம் அல்லவா? அந்தப் பிள்ளையின் வழித் தோன்றலாக இயேசு பிறந்திருக்கலாம் அல்லவா? என்றெல்லாம் நாம் நல்லெண்ணம் வைக்க நினைத்தாலும் பைபிள் அதற்கு குறுக்கே நிற்கிறது.

ஏனெனில் தாமார் தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து எந்தப் பிள்ளையைப் பெற்றாலோ அந்தப் பிள்ளையும் இயேசுவின் பரம்பரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தாமார் விபச்சாரம் செய்ததைக் கூறும் வசனத்தில் விபச்சாரத்தில் பிறந்த மகனுக்கு பாரேஸ் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாரேஸ் வழியில் தான் இயேசு பிறந்தார் என்று மத்தேயுவின் பரம்பரைப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

மத்தேயு மூன்றாம் வசனத்தில் இவரது பெயர் கூறப்பட்டுள்ளது.

விபச்சார சந்ததியினர் கடவுளை நெருங்க முடியாது என்று ஒருபக்கம் பைபிள் கூறுகிறது.

மறுபக்கம் இயேசு விபச்சார சந்ததிகளின் வழித்தோன்றலாக வந்தவர் எனவும் கூறுகிறது.

கடவுளுக்கு மகன் இருக்க முடியாது என்பதை மறந்து விட்டு மகன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மாமனாரும் மருமகளும் கூடி விபச்சாரம் செய்து அதன் மூலம் பிறந்த சந்ததியின் வழித்தோன்றலில் தானா தனது மகனைக் கடவுள் தேர்வு செய்வார்? இதைக் கூட கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

உரியாவின் மனைவி

மேலும் அதே வம்சப் பட்டியலில் ‘தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான்’

(மத்தேயு 1:6) என்று கூறுகிறது.

இன்னொருவன் மனைவி மூலம் தாவீது ராஜா பெற்ற சாலமோன் வழியாக இயேசுவின் வம்சம் தொடர்வதாக பைபிள் கூறுகிறது.

ராகாப்

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். (மத்தேயு 1:5)

இயேசுவின் வம்சப் பட்டியலில் இடம் பெறும் இந்த ராகாப் யார்?

அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டிக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். (யோசுவா 2:1)

இந்த விபச்சாரியின் வழியில் தான் இயேசு பிறந்ததாக பைபிள் கூறுகிறது.

ரூத்

போவாஸ் ஒபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்.

(மத்தேயு 1:5)

இயேசுவின் பாரம்பர்யப் பட்டியலில் இடம் பெறும் ரூத் என்பவள் யார்?

அவளும் தகாத நடத்தையுடயவள் என்று ரூத் 1:4, 4:10 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

கடவுள் எந்தப் பரம்பரை தமது சபைக்கு வரலாகாது என்று கூறினாரோ அந்தப் பரம்பரையிலிருந்து தான் தனக்கு மகனைத் தேர்வு செய்வாரா?

பைபிள் கூறும் இயேசுவின் பாரம்பர்யம், நடத்தை, அவரது பலவீனங்கள் இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது இயேசு நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு வர இயலாது. இதன் பின்னரும் கிறித்தவர்கள் அவரைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ கூறினால் இது வரை நாம் எடுத்துக் காட்டிய அத்தனை பைபிள் வசனங்களையும் மறுக்கிறார்கள் என்றே பொருள்.

கடவுளிடம் இருக்கக் கூடாத பலவீனங்கள்

இயேசுவிடம் காணப்பட்ட பலவீனங்கள் அனைத்தையும் மீண்டும் நினைவு கூர்ந்து பாருங்கள்! இத்தனை பலவீனங்களையும் கொண்டிருந்த ஒருவர் கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க இயலுமா? என்றும் சிந்தியுங்கள்!

* இயேசு கண்ணீர் விட்டுக் கலங்கி, துக்கங் கொண்டிருந்தார். * இயேசுவுக்குத் தாகம் எடுத்திருக்கிறது. * இயேசு சாப்பிட்டிருக்கிறார். * இயேசு பயந்திருக்கிறார்.

* இயேசு கவலைப்பட்டிருக்கிறார்.

* இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார்.

* குருவைக் கைவிட்டிருக்கிறார்..

* மிகவும் சலிப்படைந்திருக்கிறார்.

* மதுபானம் அருந்தியிருக்கிறார். * மலஜலம் கழித்திருக்கிறார்.

* அரசனுக்குப் பயந்திருக்கிறார்.

* மோசமான ஆட்சியாளருக்குப் பயந்து கொண்டு வரி செலுத்தி இருக்கிறார். * பலரை மோசமான முறையில் திட்டியிருக்கிறார்.

* விருத்த சேதனம் செய்யப்பட்டிருக்கிறார்.

* தாய்ப்பால் குடித்திருக்கிறார். * தொழில் செய்திருக்கிறார். * மனிதனாகவே வளர்ந்தார். * பாவ அறிக்கையிட்டிருக்கிறார். * பிறருக்கு கால் கழுவி விட்டிருக்கிறார். * ஓடி ஒளிந்திருக்கிறார். * நறுமணம் பூசிக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்.

* துன்புறுத்தப்பட்டுள்ளார்.

* அவரது முகத்தில் துப்பியுள்ளனர்.

* தலையில் குட்டி கன்னத்தில் அறைந்துள்ளனர்.

* வாரினால் அடிக்கப்பட்டார். * முள் முடியைத் தலையில் சுமந்தார். * அவரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். * அவர் வேதனை தாளாமல் கத்தியிருக்கிறார். சாதாரண, சராசரி மனிதனுக்கு உள்ள அத்தனை பலவீனங்களும் இயேசுவிடம் இருந்துள்ளன. மனிதர்கள் எப்படிப் பலவீனங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அப்படித் தான் இயசுவும் இருந்திருக்கிறார் என்பதைப் பைபிளின் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறவில்லையா?

இவ்வளவு பலவீனங்களைக் கொண்ட ஒருவரைக் கடவுள் என்று நம்ப, கிறித்தவர்கள் வெட்கப்பட வேண்டாமா? தன்னையே காத்துக் கொள்ள முடியாதவர் தங்களைக் காப்பார் என்று கிறித்தவர்கள் நம்புவது விவேகமாகுமா?

கடவுள் இவ்வளவு பலவீனங்கள் உள்ளவரைத் தான் தனக்கு மகனாக தேர்வு செய்வாரா?

கடவுளின் மகன் என்றால் சராசரி மனிதர்களின் அத்தனை பலவீனங்களும் அவரிடம் இருந்திருக்குமா?

மனிதர்களையும், இயேசுவையும் யார் படைத்தானோ – இயேசு எவனிடம் தமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்தனை செய்தாரோ அந்த ஒரே கடவுளிடம் தான் அனைவரும் திரும்ப வேண்டும்! ஏனெனில் அவனிடம் தான் இத்தகைய பலவீனங்கள் ஏதும் கிடையாது.