Tamil Bayan Points

02) பைபிள் ஓர் அறிமுகம்

நூல்கள்: இது தான் பைபிள்

Last Updated on February 24, 2022 by

பைபிள் ஓர் அறிமுகம்

  • பைபிள் எனும் நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஒரு பகுதி பழைய ஏற்பாடு எனவும் இன்னொரு பகுதி புதிய ஏற்பாடு எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • கிறித்த நம்பிக்கைப்படி பழைய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுடைய வேதங்களின் தொகுப்பாகும். அதாவது பழைய ஏற்பாடு என்பது பல வேதங்களின் தொகுப்பு எனலாம்.
  • உதாரணமாக பழைய ஏற்பாட்டில் 39 அல்லது 45 ஆகமங்கள் உள்ளன. இதில் முதல் 5 ஆகமங்கள் மோசே எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும்.
  • 6வது ஆகமம் யோசுவாவின் புஸ்தகம் என்பதாகும். இது யோசுவா அவர்களின் வேதம்.
  • முதலாம் சாமுவேல் இரண்டாம் சாமுவேல் என்று இரண்டு ஆகமங்கள் உள்ளன. இது சாமுவேல் எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும்.
  • யோபு என்றொரு ஆகமம். இது யோபு அவர்களின் வேதம்.

இப்படிப் பல தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட பல வேதங்களின் தொகுப்பே கிறித்தவ நம்பிக்கையின் படி பழைய ஏற்பாடு ஆகும். கிறித்தவர்களின் நம்பிக்கைப்படி புதிய ஏற்பாடு என்பது ஏசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவையாகும். இப்படிப் பலர் எழுதியவைகளின் தொகுப்பே புதிய ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது.

  • சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும், புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம்.

ஏசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், ஏசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் ஏசு எழுதியதையும், ஏசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.

புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் கடவுளின் ஏற்பாட்டின்படி பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்டதாக நீங்கள் நம்புவது சரி தானா? என்பதை ஆராய வேண்டாமா நண்பர்களே!

ஒரு நூலை இறைவேதம் என்று நம்புவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். சாதாரண மனிதனால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைபாடுகள் இறைவேதம் எனக் கருதப்படும் நூலில் இருக்குமானால் அதை இறைவேதம் என்று கூற முடியாது.

பைபிளை ஆராயும் பொழுது சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைகளை விட அதிக அளவு குறைகளைக் காண்கிறோம். நடுநிலையான சிந்தனையுடன் நீங்கள் ஆராய்ந்தால் இதை மறுக்க மாட்டீர்கள். பைபிளை இறை வேதம் என்று ஏற்கத் தடையாகவுள்ள குறைபாடுகளை இப்போது ஒவ்வொன்றாக ஆராய்வோம்.