Tamil Bayan Points

02) பேரண்டப் படைப்பின் சுருக்கமான வரலாறு

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

Last Updated on February 24, 2022 by

அத்தியாயம் 1

பேரண்டப் படைப்பின் சுருக்கமான வரலாறு

கல் தோன்றி முள் தோன்றி பற்பல பாலூட்டிகளும் தோன்றிய பின் மானிடனும் தோன்றி விண்ணை நோக்கி வியக்கத் துவங்கினான். அப்போது அவனுக்கு விண்ணகம் என்பது ஒரு சூரியனும், ஒரு சந்திரனும், துளித்துளியாய் ஒளிரும் ஏராளமான விண்மீன்களுமேயாகும். எல்லையற்ற பேருருவாய் விரிந்திருக்கும் பேரண்டம் பற்றி வேறொன்றும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் மனிதர்களில் பலர் விண்ணகப் பொருட்களைத் தெய்வங்களாகக் கருதி அவைகளுக்கு ஆலயங்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

பேரண்டம் வடிவமைத்த வல்லோன் வையகத்தை வழிநடத்த அவ்வப்போது அனுப்பி வைத்த வழிகாட்டிகளாம் தூதர்கள் அவ்விண்ணகப் பொருட்கள் தெய்வங்களன்று; அவையனைத்தும் மனிதர்களின் பயன்பாட்டிற்காக இறைவனால் படைக்கப்பட்ட படைப்பினங்கள்; ஆகவே ஏகனாகிய அவர்களின் இறைவனை மட்டுமே அவர்கள் வழிபட வேண்டும் எனப் போதித்து வந்தனர்.

அதே நேரத்தில் மக்களில் மற்றொரு சாரார் விண்ணில் காணப்படுபவையெல்லாம் விண்ணில் எவ்வாறு நிலைநிற்க முடிகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கினர். வெறும் கண்களால் பார்த்து அவர்களின் அறிவிற்கேற்றவாறு அவர்கள் விளங்கிக் கொண்டதை தலைமுறை தலைமுறையாக கைமாற்றி வந்தனர். இதன் விளைவாக படிப்படியாய் விண்ணில் மேலும் சில கோள்களும் துணைக்கோள்களும் இருப்பதை அவர்கள் விளங்கினர்.

இதைத் தெரிந்து கொண்ட போது இவை யாவும் விண்ணில் எவ்வாறு தோன்றின என்று அறிய ஆசை பிறந்தது. ஆயினும் அப்போது விண்ணகத்தைப் பற்றிய மிகக் குறைந்த தகவல்களே அவர்களிடம் இருந்ததால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தக் காரணத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாறா நிலைப் பேரண்டம்?

பேரண்டத்தைப் பற்றி மிகக் குறைந்த தகவல்களே அவர்களிடம் இருந்ததாலும் அவைகளிலும் பல தவறான அனுமானங்களாக இருந்ததாலும் பேரண்டம் என்றும் நிலையானது; மாற்றமில்லாதது; ஆதியோ அந்தமோ இல்லாதது; அது என்றென்றும் நிலைத்திருப்பது என்ற கருத்துக்கு வந்தனர்.

இக்கருத்தின் அடிப்படையில் பேரண்டம் என்பது தாமாக இருந்து கொண்டிருப்பது, மேலும் அதற்கு ஒரு படைப்பாளன் தேவை இல்லை என்ற முடிவை அவர்களில் சிலர் ஏற்றுக் கொண்டனர். இது ஏறத்தாழ 1948 ல் உருவாக்கப்பட்ட “மாறா நிலைக் கோட்பாடு (steady state theory) என்பதைக் கிட்டத்தட்ட ஒத்திருக்கும் ஒரு கோட்பாடாகும்.

பற்பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பண்டைய உலகின் தலைசிறந்த விஞ்ஞானியும் தத்துவ மேதையுமான அரிடாட்டில் (aristotle 384 BC – 322 BC) இக்கருத்தை ஏற்றுக் கொண்டவராவார். “பேரண்டம் ஆரம்பம் எதுவுமின்றி கடந்த காலத்திலும் இருந்துள்ளது. இனி எப்போதும் அது எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் என அரிஸ்டாட்டில் போதனை செய்து வந்தார். இது இறைத் தூதர்களால் போதிக்கப்பட்டு வந்த இறைவனின் வேத நூல்களுக்கு மாற்றமான கருத்தாகும். எனவே தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அரிஸ்டாட்டிலின் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்கள் பேரண்டம் இறைவனால் படைக்கப்பட்டது. ஆகவே அதற்கோர் ஆரம்பம் இருக்க வேண்டும் என நம்பினர். அறிவியல் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானியாகப் போற்றப்படும் ஐசக் நியூட்டன் (isaac newton 1672- 1727) பேரண்டத்தைப் புரிந்து கொள்வதற்குரிய மிகவும் பயனுள்ள பற்பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

ஆனால் அவரால் பேரண்டம் தாமாகத் தோன்றியது என்பதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அவர் தமது புகழ் வாய்ந்த“பிரின்ஸிப்பியா (mathematical principles of natural philosophy – சுருக்கமாக `pircipia) எனும் நூலில் பேரண்டத்தை உருவாக்கிய பெருமையை கடவுளுக்கு வழங்கினார்.

பொதுவாக விண்ணகப் பொருட்களின் இயக்கம் குறித்து பற்பல விதிகளை அவரால் கண்டுபிடிக்க இயன்ற போதிலும் அது எப்போது எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி எதுவும் அவரால் கூற இயலவில்லை. இருப்பினும் இது குறித்து சரியான கருத்தொன்று ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியலாளர்களால் உருவாக்க முடிந்தது.

பெரு வெடிப்புக் கோட்பாடு

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கானன் லிமாயிட்டர் (conon limaitre) எனும் அறிவியலாளர் பேரண்டத்தின் தோற்றம் பற்றி இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் கருத்து ஒன்றை உருவாக்கினார். பேரண்டத்தைப் பற்றி அதுவரை அவருக்குக் கிடைத்த எல்லாத் தகவல்களையும் ஒன்றிணைத்து விரிவாகவும், ஆழமாகவும் பரிசீலனை செய்து இறுதியாக ஒரு கருத்துக்கு வந்தார்.

லிமாயிட்டர் இந்தக் கருத்தைக் கூறும் போது ஓர் அதிரடி வேட்டு நடந்த இடத்திற்கு ஒருவர் சென்றால் எப்படிப்பட்ட சுற்றுச் சூழலை அவரால் அங்கு உணர முடியுமோ அப்படிப்பட்ட ஓர் உணர்வை உணர முடிவதாக சில அறிவியல் எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வேட்டு வெடித்ததிலிருந்து தோன்றி கலைந்து கொண்டிருக்கும் புகை மூட்டமும் சற்று மிகுதியான வெப்பமும் உணர முடிவதைப் போன்று இப்போதும் பேரண்டம் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு காலகட்டம் (an epoch) இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு “ஒரு முழு முதல் அணு (a primeval super atom) இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக் கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் (fraction of second) அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள்.

அம்மாபெரும் வெடிப்பின் போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரமாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார். அந்த அணு எப்படித் தோன்றியது? அது ஏன் வெடித்தது? போன்ற கேள்விகளுக்கு இது வரை அறிவியலாளர்களால் விடை கூற இயலவில்லை. தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருவெடிப்புக்குப் பிறகு பொருட்கள் தோன்றிய விதத்தை விபரமாகக் கூறுகின்றன. அந்த விபரங்கள் வருமாறு:

விண்ணகப் பொருட்களின் தோற்றம்

பெரு வெடிப்பு நிகழ்ந்த வினாடியின் பல்லாயிரத்தில் ஒரு கண நேரத்தில் வெளியிடப்பட்ட வெப்பத்தின் அளவு எல்லையற்றது (infinite) என்கிறார் தற்கால விஞ்ஞானியர்களில் தலைசிறந்தவரான ஸ்டீஃபன் w. ஹாக்கிங் (stephon w. hawking) அவர்கள். ஒரு வினாடிக்குப் பிறகு இந்த வெப்பம் ஆயிரம் கோடி டிகிரியாகக் குறைந்திருக்கும் என்கிறார் அவர். அந்த நேரத்தில் பேரண்டத்தில் பெரும்பாலும் ஒளித் துகள்களும் (photons) மின் அணுக்களும் (electrons) நியூட்ரினோக்களும் (neutrinoes) அவைகளின் எதிர் துகள்களும் (antipartivles) மட்டுமே இருந்திருக்கக் கூடும் என்கிறார் ஹாக்கிங்.

பெருவெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் (deutrium) எனும் கன ஹைட்ரஜன் வாயுவின் மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் எனவும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவைகளிலிருந்து“லிதியம் மற்றும் “பெரில்லியம் போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும் எனவும் ஹாக்கிங் கூறுகிறார்.

மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்தப் பொருட்களுமே இல்லாத ஆனால் பேரண்டம் மொத்தமும் பற்பல தனிமங்களின் மையக் கருக்களும் அடிப்படைத் துகள் (fundamental particles) களாலும் உருவாக்கப்பட்ட புகைமூட்டம் போன்று காணப்பட்டதாகத் தெரிகிறது. மணல் துளிகள் கூட இல்லாத இந்த வெறும் புகை மூட்டத்திலிருந்து மாபெரும் காலக்சிகளும், நட்சத்திரங்களும், ஏனைய விண்ணகப் பொருட்களும் எவ்வாறு உருவாயின என்பதைப் பற்றி கீழ்க்காணும் விபரங்களைத் தெரிவிக்கிறார் ஹாக்கிங்.

* (பார்க்க : பக்கம் 124 / எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் a brief history of time). இதற்கு மேல் ஹாக்கிங் அவர்களின் மேற்கோள்கள் அனைத்தும் இப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இப்புத்தகத்தில் நாம் விவாதிக்கும் அறிவியல் தொடர்பான தகவல்கள் பெரும்பாலானவைகளுக்கு ஹாக்கிங் அவர்களையே மேற்கோள் காட்டியுள்ளோம்.

ஏனெனில் இப்புத்தகத்தில் நாம் விவாதிக்கும் அறிவியல் விஷயங்களில் இன்றைய உலகின் தலைசிறந்த அறிவியலாளராகவும் ஏனைய விஞ்ஞானிகள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவராகவும் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று அறிவியல் மேதை நியூட்டன் அலங்கரித்த கேம்பிரிட்ஜின் லுக்கேஷியன் பேராசிரியராக (lucasian professor of mathematics) தற்போது பதவியில் அமர்ந்திருப்பவர் ஹாக்கிங் அவர்கள் என்பதே காரணமாகும்.)

காலக்சி (Galaxy) களின் தோற்றம்

சிலமணி நேரத்திற்குள் ஹீலியம் மற்றும் இதர தனிமங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும். அதன் பிறகு 10 லட்சக்கணக்கான (million years or so) வருடங்கள் குறிப்பிடும்படியான வேறு நிகழ்ச்சிகள் எதுவுமின்றி பேரண்டம் விரிவடைந்து கொண்டிருக்கும். படிப்படியாக வெப்பம் தணிந்து சில ஆயிரம் டிகிரிக்கும் குறைந்த போது அவைகளால் மின்காந்தக் கவர்ச்சியை வெல்ல முடியாமல் போகவே அவை அணுக்களாக இணையத் துவங்கின. பேரண்டம் மொத்தமும் விரிந்து குளிரவே அடர்த்தி மிகுதியாக இருந்த சில பகுதிகளில் ஈர்ப்பு விசையின் காரணமாக பேரண்டத்தின் விரிவாக்கத்தில் வேகக் குறைவு ஏற்பட்டிருக்கும். (பார்க்க : பக்கம் 125)

மேற்கண்ட தகவல்களிலிருந்து பல 10 லட்சக் கணக்கான வருடங்கள் பேரண்டத்தில் அணுக்கள் கூட உருவாக முடியாமல் அணுக்களின் மையக் கருக்களும் அடிப்படைத் துகள்களும் (போட்டான்கள், எலக்ட்ரான்கள், நியூரினோக்கள் போன்றவை) நிறைந்த புகைமூட்டம் போன்று காணப்பட்டது எனத் தெரிகிறது.

அடிப்படைத் துகள்கள் அணுக்களாய் இணைய வேண்டுமாயின் அவைகளுக்கிடையே மின்காந்த விசை செயல்பட வேண்டும். (இது குறித்து இப்புத்தகத்தில் வேறு பகுதியில் கூறப்படுகிறது) ஆனால் மின்காந்த விசை அவ்வளவு உயர்ந்த வெப்ப நிலையில் செயல்பட இயலாது. எனவே வெப்பம் குறைவதற்கு 10 லட்சக் கணக்கான வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இந்நிலையில் வாயுக்களின் அடர்த்தி சில இடங்களில் மிகுதியாகக் காணப்படவே அப்பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் அதன் பயனாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இருந்தும் அப்பகுதிகளில்“காலக்சிகள் உருவாயின.

நட்சத்திரங்கள் மற்றும் இதர தனிமங்களின் தோற்றம்

காலப்போக்கில் காலக்சியில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் ஈர்ப்பு விசையால் சுருக்கமடைந்து வேறிட்டன. பிறகு இம்மேகத்திரள்களில் அணுக் கருக்கள் ஒன்றோடு ஒன்று மோதி அணுக்கரு இணைவிற்கு போதுமான வெப்பத்தை உற்பத்தி செய்தன. பிறகு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியமாக இணைந்து அதனால் உற்பத்தியான மிகுதியான வெப்பம் வெப்ப அழுத்தத்தை அதிகரித்து ஈர்ப்பு விசையை சமன் (balance) செய்தது. இதன் விளைவாக அம்மேகத்திரள்கள் மேலும் மேலும் சுருங்கி விடாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறு அம்மேகத் திரள்கள் நமது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களாக மாறின.

இவ்வாறு உருவாகும் நட்சத்திரங்கள் அணுக்கரு இணைவின் (nuclear fusion) மூலம் ஹைட்ரஜனை எரித்து ஹீலியமாக மாற்றி அதனால் உற்பத்தியாகும் ஆற்றலை ஒளியாகவும், வெப்பமாகவும் கதிர் வீச்சாகவும் (Radiation) வெளியேற்றுகிறது.

பேரண்டத்தில் நமது சூரியனை விட ஆயிரக்கணக்கான மடங்கு பெரிய நட்சத்திரங்களும் உள்ளன. பொருண்மை மிகுதியாக உள்ள நட்சத்திரங்கள் அவைகளின் மிகுதியான ஈர்ப்பு விசையைச் சமன் செய்வதற்கு மிகுதியான ஹைட்ரஜனை எரித்து வெப்ப அழுத்தத்தை மிகுதியாக்க வேண்டும். எனவே அவைகளில் உள்ள ஹைட்ரஜன் நூறு தச லட்சம் வருடங்களில் தீர்ந்து போகவே ஈர்ப்பு விசை மிகைத்து அவை சுருங்கத் தொடங்கும். இந்த நிலையில் ஹீலியம் வாயு கனமான கார்பன், ஆக்ஸிஜன் போன்ற தனிமங்களாக மாற்றமடைகின்றன.

நியுட்ரான் நட்சத்திரம், கருங்குழி, சூப்பர் நோவாக்கள்

சுருங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பொருண்மை மிகுந்த நட்சத்திர மையத்தில் அடர்த்தி கூடிக் கொண்டே வந்து அவை நியூட்ரான் (nutron stars) நட்சத்திரங்களாக மற்றும் கருங்குழி (black holes)களாக மாற்றமடைகின்றன. இந்த நட்சத்திரங்களின் வெளிப் பகுதி பிரமாண்டமான ஒளியுடன் வெடித்து சூப்பர் நோவாக்களாக (super novae) சிதைவடைகின்றன. சிதைவடைவதற்கு சற்று முன் அவற்றுள் மேலும் கனமான தனிமங்கள் தோன்றுகின்றன.

இந்த நட்சத்திரங்கள் சிதைவுற்ற பின் (சூப்பர் நோவாவாக ஆன பின்) அவற்றின் சிதைவிலிருந்து உருவாகும் அடுத்த தலமுறை நட்சத்திரங்களில் இந்தக் கனமான தனிமங்கள் நேரடியாகச் சென்று விடுகின்றன. நமது சூரியனில் இப்படிப்பட்ட தனிமங்கள் இரண்டு சதவீதம் இருக்கின்றன. ஏனெனில் நமது சூரியன் இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறை நட்சத்திரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நமது சூரியன் 500 கோடி வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சூப்பர் நோவாவிலிருந்து உருவான நட்சத்திரமாகும்.

(மேற்கண்ட தகவல்கள் யாவும் ஹாக்கிங் எழுதியவையாகும். பார்க்க : பக்கம் – 125, 126)

சென்ற நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஹார்லோ ஷேப்லி (harlow shapley) கடந்த காலத்தில் 500 லிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் தெளிவாகக் குறிப்பிடக்கூடிய ஒரு “படைப்புக் கணம் (s specifiable creative moment) நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

(page 43 of stars and men/bacom/may 1958. இதற்கு மேல் ஷேப்லியை மேற்கோள் காட்டும் அனைத்து குறிப்புகளும் இப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.)

பேரண்டம் நிரந்தரமானது. அதற்கு ஆரம்பமோ, முடிவோ இல்லை என நம்பி வந்த அறிவியல் உலகிற்கு பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது எனும் அறிவியல் கண்டுபிடிப்பு பெரும் வியப்பிற்குரியதாகும். ஹாக்கிங் அவர்களைப் பொருத்த வரை இந்த துவக்கம் 1000 – 2000 கோடி வருடங்களுக்கு இடைப்பட்டதாகும். (பார்க்க : பக்கம் – 9)

பெரு வெடிப்பின் வினோதப் போக்கு

ஷேப்லியின் கூற்றுப்படிப் பார்த்தால் பேரண்டப் படைப்பின் போது மிகவும் குழப்பமான கட்டங்கள் உருவாகி இருந்ததாகவும் அப்போது சிக்கலான விண்ணகப் பொருட்களாம் நெபுலாக்கள் (நட்சத்திரங்கள் தோன்றும் புகைமூட்டம் போன்ற மேகக் கூட்டங்கள்) நட்சத்திரக் கூட்டங்கள் (ளுவயச ஊடயளவநசள) காலக்சிகள் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டன எனவும் தெரிய வருகிறது.

அதன் பிறகு விண்ணில் நடைபெற்ற விண்ணகப் பொருட்களின் தொடர்ச்சியான மோதல்களும், வெடிப்பு நிகழ்ச்சிகளும் குழப்பமான நிலையை நீடிக்கச் செய்தது. வெடித்துச் சிதறிய நட்சத்திரங்கள் மற்றும் இதர விண்ணகப் பொருட்கள் தூசுப்படலங்களாகவும், வாயுப்பொருட்களாகவும் மாறி அடுத்த தலைமுறை நட்சத்திரங்களை உருவாக்கின எனவும் தெரிய வருகிறது. லிமாயிட்டரின் இப்பெருவெடிப்புக் கோட்பாடு பற்பல அறிவியல் தரிசனங்களுக்கு (Observations) மிக உறுதியாக ஒத்து அமைந்த-முரண்பாடற்ற-அறிவியல் கருத்தாகும் எனக் கூறுகிறார் அறிவியலாளர் ஷேப்லி

(பார்க்க : பக்கம் – 143)

இது மட்டுமன்றி ஐன்ஸ்டீனுடைய சார்பியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹாக்கிங் மற்றும் அவரது கூட்டாளி அறிவியலாளர் “பென்ரோஸ் அவர்களாலும் “பெரு வெடிப்புக் கோட்பாடு மெய்யான அறிவியல் கோட்பாடு என 1970ல் நிரூபிக்க முடிந்தது. அதே நேரத்தில் மார்க்ஸினுடைய சித்தாந்தத்தின் நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் பணிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அத்துடன் பெருவெடிப்புக் கோட்பாடின் “வினோதத் தன்மை (Singulatiry) ஐன்ஸ்டீனுடைய கோட்பாட்டின் அழகை அழிப்பதாக எண்ணம் கொண்டவர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தன.

(பார்க்க : பக்கம் – 54)

மாறாநிலைக் கோட்பாட்டின் தோற்றம்

பெருவெடிப்புக் கோட்பாடு என்பதே ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்பதை நாம் அறிவோம். அக்கோட்பாடு `காலத்திற்கு ஒரு தொடக்கம் எனக் குறிப்பிட்டது பலரையும் தொல்லைக்கு உள்ளாக்கியது. காலத்திற்கு ஒரு தொடக்கம் எனும் கருத்தும் கூட கடவுளின் அபாரமான படைப்பாற்றலுக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குவதை உணர்ந்து கொள்ளாமல் அக்கருத்து படைப்புப் பணியில் இறைவனின் தலையீட்டை மறுக்கக் கூடுமோ என பலரையும் ஐயம் கொள்ள வைத்ததே அவர்களைத் தொல்லைப்படுத்தியதற்குக் காரணமாகும்.

வினோதத் தன்மை (Singulatiry) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப்படும் அல்லது பயன்படாத நிலையே “சிங்குலாரிட்டி (வினோதத்தன்மை) ஆகும். பெருவெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும்.

ஆனால் அந்தக் கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெருவெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெருவெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே பெருவெடிப்பு வினோதம் (Bog Bang Singularity) ஆகும்.

(பார்க்க : பக்கம் – 9)

காலத்தின் தொடக்கம் என்பது பெருவெடிப்பாகும். வேறு வார்த்தையில் கூறினால் பெருவெடிப்பு நிகழ்ந்த மைக்ரோ கணத்தில் தாம் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெருவெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பதாகும். காலம் இல்லையேல் நிகழ்ச்சிகளும் இல்லை. எனவே பேரண்டத்தைப் படைத்தது இறைவனாக இருந்திருந்தால் படைப்புப் பணிகள் யாவும் பெருவெடிப்புக்குப் பிறகே இறைவன் நிகழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் பெரு வெடிப்புக்குப் பிறகு நடைபெற்ற யாவும் கடவுளின் தலையீடு இன்றி விதிகளின்படி செயல்பட்டதாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

இதுவே காலத்திற்கு ஒரு தொடக்கம் உண்டு எனும் கருத்து படைப்புப் பணியில் கடவுளின் தலையீட்டைத் தவிர்த்து விடுமோ என்று சிலர் ஐயப்படுவதற்குரிய காரணமாகும். ஆனால் பெருவெடிப்புக்குப் பிறகு இறைவனின் தலையீடு படைப்புப் பணியில் இருக்கவில்லை என்பதும் பெருவெடிப்புக்குப் முன்பு நிகழ்ச்சிகள் எதுவுமே நடைபெறவில்லை என்பதும் திருக்குர்ஆன் கூறும் இறைமைக் கோட்பாட்டையும் அந்த இறைவனின் படைப்புத் திறனையும் மிகமிக வலுவாக நிரூபித்துக் கொண்டிருக்கும் மாபெரும் அறிவியல் ஆதாரமாகும் என்பதை நாம் இந்நூலில் மற்றொரு இடத்தில் விரிவாக விளக்கியுள்ளோம்.

பெருவெடிப்புக் கோட்பாடு நிரூபிக்கப்பட்ட அறிவியலைப் போன்று பரவலாக அனைத்து அறிவியலாளர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருவதைக் கண்ட கத்தோலிக்க சபையினர் இம்முறை சுதாரித்துக் கொண்டனர். கோபர் நிக்கஸின் பிரச்சனையில் நடைபெற்றதைப் போல இந்த முறையும் நடைபெறாதவாறு பார்த்துக் கொண்டனர். எனவே பெருவெடிப்புக் கோட்பாடு பைபிளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளதாக அறிவித்தனர். உடனே நாத்திகச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பெருவெடிப்புக் கோட்பாட்டை மறுப்பதற்கு வகை தேடினர். ஹாக்கிங் கூறுகிறார் :

“மறு பக்கத்தில் கத்தோலிக்கச் சபையினர் 1951ல் பெருவெடிப்பு மாதிரி (Big Bang model) பைபிளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளதாகக் கூறி அதைப் பற்றிக் கொண்டனர். ஆகவே பெருவெடிப்பு நடைபெற்றது என்ற முடிவைத் தவிர்த்து விடவேண்டும் என்பதற்காகப் பற்பல முயற்சிகள் செய்யப்பட்டன. அவற்றுள் மாறாநிலைக் கோட்பாடு (steady state theory) மிகப் பரவலாக ஆதரவு பெற்ற கோட்பாடாக 1948ல் பெருவெடிப்புக் கோட்பாட்டின் எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. ஹெர்மன் போன்டி, தாம கோல்டு, ஃப்ரட் ஹோயல் ஆகிய மூவர் இதை உருவாக்கியவர்கள் ஆவார்கள்.

(பார்க்க : பக்கம் 50)

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு எவ்வளவு எதிர்ப்புகள் தோன்றிய போதிலும் முடிவில் ஹாக்கிங், மற்றொரு புகழ்பெற்ற அறிவியலாளராம் பென்ரோசுடன் இணைந்து பெருவெடிப்புக் கோட்பாடு உண்மையே என்று நிரூபித்ததோடு பெருவெடிப்பு நடைபெற்றதில் கடவுளின் தேவையையும் சில இடங்களில் வலியுறுத்தியுள்ளார். (இதைப் பற்றிய செய்தியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது) மேலும் பெருவெடிப்புக் கோட்பாட்டை எதிர்ப்பதற்காக முன் வைக்கப்பட்ட மாறாநிலைக் கோட்பாடும் முடிவில் அறிவியல் உலகிலிருந்து துடைத்தெறியப்பட்டது.

மாறாநிலைக் கோட்பாடு குறிப்பிடும்படியான எந்த திருத்தல்களோ, புதுமைகளோ இன்றி பழைய நாத்திகக் கோட்பாடாகிய பேரண்டம் ஆதி அந்தம் இல்லாத நிரந்தரமான அமைப்பு எனும் கொள்கையை தீவிரமாகவும், ஆர்வத்துடனும் திரும்பவும் உயிர்ப்பித்துக் கொண்டதே அன்றி வேறில்லை.

கடவுட்கோட்பாட்டை அறிவியல் துணையுடன் எப்படியாவது எதிர்க்க வேண்டும் எனும் முயற்சியே இதுவாகும். ஆயினும் வீரமிக்க, நேர்மையான அறிவியலாளர்கள் பலரும் ஹாக்கிங் அவர்களைப் போன்றே பெருவெடிப்புக் கோட்பாடு கடவுளின் தேவையை ஏற்றுக் கொள்வதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.

அறிவியலாளர் ஷேப்லியைப் போன்றவர்கள் பெரு வெடிப்புக் கருதுகோளில் (Hypothesis) கடவுள் நம்பிக்கையின் சுவை இருப்பதாகக் கூறுகிறார்கள்.

(பார்க்க : பக்கம் 43)

மாறா நிலைக் கோட்பாட்டின் வீழ்ச்சி

பேரண்டம் விரிவடைவதால் ஏற்படும் விண்ணகப் பொருட்களுக்கு இடையிலான இடைவெளிகளை புதிய காலக்சிகள் உருவாகி நிரப்பி விடுவதால் பேரண்டம் ஒரே நிலையாக (ststic) எப்போதும் இருந்து கொண்டிருக்கும் என மாறா நிலைக் கோட்பாடு கூறியது. ஆனால் இக்கோட்பாடு ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தின்படி நேரடியாக ஏற்றுக் கொள்ள இயலாததால் சார்பியல் கோட்பாட்டில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

மேலும் புதிய காலக்சிகளை உருவாக்குவதற்குத் தேவை யான அளவு புதிய பொருட்கள் விண்ணில் தோன்று கின்றனவா என ஆய்வு செய்து பார்த்த போது புதிய காலக்சிகளை உருவாக்குவதற்குத் தேவையான அளவை விட மிகக் குறைந்த அளவு புதிய பொருட்களே (ஒரு கன கிலோ மீட்டருக்கு ஒரே ஒரு அடிப்படைத் துகள் மட்டுமே ஒரு வருடத்தில் உருவாகிறது) உருவாகுவதாகக் கண்டனர்.

இவை அனைத்திற்கும் மேலாக அறிவியலாளர்கள் பென்சியா மற்றும் வில்சன் (Penzias and Wilson) ஆகியவர்கள் 1965ல் செய்த விண்ணில் பரவியுள்ள நுண் அலை கதிர்வீச்சின் (Microwave radiation) கண்டுபிடிப்பு மாறாநிலைக் கோட்பாட்டிற்கு முரண்பட்டதால் இக்கோட்பாடு இறுதியாக அறிவியல் உலகிலிருந்து அகற்றப்பட்டு விட்டது. (பார்க்க : பக்கம் 51) அதன் பிறகு 1970ல் தனது கூட்டாளி `பென்ரோ அவர்களுடன் இணைந்து ஹாக்கிங் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் பெருவெடிப்புக் கோட்பாட்டை நிரூபித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை நாம் கண்ட அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புகளிலிருந்து பேரண்டத் தோற்றத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும் நம்பகமான செய்திகளால் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியல் கோட்பாடு பெருவெடிப்புக் கோட்பாடே என்பது தெளிவு. எனவே தூய திருமறைக் குர்ஆன் இது குறித்து என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். முதலாவதாக பெரு வெடிப்புக்கு முன் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஷேப்லி கூறும் மாபெரும் ஆதி அணுவைப் பற்றிப் பார்ப்போம்.

மாபெரும் ஆதி அணு?

கானன் லிமாயித்தரின் கணிப்புக்கு இசைய அறிவியலாளர் ஹார்லோ ஷேப்லி ஒரு மாபெரும் ஆதி அணுவைப் (a Primeval super atom) பற்றிக் குறிப்பிட்டதை நாம் முன்னர் கண்டோம். இந்த அணு வெடித்துச் சிதறியதால் உருவான தூசுப் படலத்திலிருந்து நமது பேரண்டம் தோன்றி இருப்பதாக ஷேப்லி குறிப்பிடுகிறார். ஆனால் திருக்குர்ஆனை ஆதியோடந்தமாய் படித்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ஓர் அணு பேரண்டம் படைப்பதற்கு முன் இருந்ததாக எங்கும் காண முடியாது. எடுத்த எடுப்பிலேயே ஏன் இப்படி ஒரு சோதனை? மாபெரும் ஆதி அணுவாகக் குறிப்பிடப்படுவது யாது?

இந்த அணு நமது வியாழன் (Jupiter) கோளின் அளவுற்கு இருந்திருக்கக் கூடும் என சில அறிவிலாளர்களால் அனுமானிக்கப்பட்டது. பேரண்டத்தில் இது வரை உள்ளதாக அறியப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களின் அடிப்படைத் துகள்களையும் மிக நெருக்கமாக அழுத்தினால் அப்பொருள் கணக்கிட முடியாத அளவு பளுவுடன் இருப்பினும் அதன் கொள் அளவு வெறும் வியாழன் கோள் அளவிற்குச் சுருங்கி விடும் எனக் கணக்கிடுகின்றனர்.

பேரண்டத்தில் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் உள்ள அடிப்படைத் துகள்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு எனப் பார்த்தால் ஷேப்லி அவர்களின் குறிப்புப்படி 1079 (ஒன்றுக்குப் பின் 79 சைபர்களைக் கொண்ட எண்ணுக்குக் குறையாததாகும்.(பார்க்க: பக்கம் 72,73) ஹாக்கிங் அவர்களின் கணக்குப்படி 1080 (ஒன்றுக்குப் பின் 80 சைபர்கள்) கொண்ட எண்ணுக்குச் சமமாகும்.

மேற்கூறப்பட்ட அதி பிரம்மாண்டமான அளவு துகள்கள் பேரண்டத்தில் இருப்பின் அவைகள் ஒரு வியாழன் கோள் அளவிற்குச் சுருக்க முடியுமா எனும் ஐயம் எழுவது இயற்கையே. இருப்பினும் விண்ணகப் பொருட்களுக்கு இடையே இருக்கும் காலி இடங்களை மட்டுமின்றி பொருட்களுக்குள் பொதுவாக காணப்படும் காலி இடங் களையும் கணக்கிலெடுத்தால் இந்த ஐயம் அகன்றுவிடும். அத்துடன் இவைகளைப் பற்றிய அறிவு இறைவனின் படைப்பாற்றல் எவ்வளவு மகத்தானது என்பதை சிறிதளவேனும் ஒருவருக்குப் புலப்படுத்தும்.

பொருட்கள் யாவும் மூலக் கூறுகளால் (molecules) உருவானவை என்பது நமக்குத் தெரியும். ஆயினும் மூலக் கூறுகளுக்கிடையில் நிறைய காலி இடம் உண்டு. அதைப் போல் மூலக் கூறுகள் அணுக்களால் உருவானவை என்பதும் நமக்குத் தெரியும். ஆயினும் அணுக்களுக்கிடையேயும் காலி இடம் உண்டு. அதைப் போல் அணுக்கள் என்பவை மையக்கரு, எலக்ட்ரான்களால் உருவானவை என்பதும் நமக்குத் தெரியும். இவைகளுக்கிடையேயும் காலி இடம் உண்டு.

சான்றாக ஒரு அணுவின் பொருண்மை முற்றிலுமாக அதன் மையக் கருவிலேயே அடங்கியுள்ளது. ஆனால் அதன் மையக்கரு அணுவின் பரிமானத்தில் (ளுணைந) 1012 (ஒன்றுக்குப் பின் 12 சைபர்கள் கொண்ட எண் = ஒரு இலட்சம் கோடி)-ல் ஒரே ஒரு பங்கு மட்டுமேயாகும்! இது அணு என்பதே கிட்டத்தட்ட முற்றாகக் காலியிடம் எனப் பொருள்படுகிறதன்றோ? (இப்போது நாம் செல்களால் உருவாகியுள்ளோம்;

 ஆனால் நமது செல்கள் அணுக்களால் உருவாகியுள்ளன என்பதால் நாம் இப்போதும் கூட கிட்டத்தட்ட ஒன்றுமில்லாத ஒன்றால் ஒருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இது காட்டுகிறதன்றோ! இறைவனின் படைப் பாற்றலை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் உண்டா?) எனவே தாம் இப்பேரண்டத்தை அப்படியே ஓர் அழுத்து அழுத்தி அடிப்படைத் துகள்களுக்கிடையே இடைவெளியே இல்லாமல் சுருக்கினால் இப்பேரண்டம் நமது வியாழன் கோள் அளவிற்கு பரிமாணமுள்ள பொருளாக மாறும் எனக் கணக்கிட்டிருந்தனர் சில அறிவியலாளர்கள். ஆனால் திருமறைக்குர்ஆனில் இப்படிப்பட்ட பேரணுவைப் பற்றிய விபரம் எதுவும் இல்லவே இல்லை.

பேரணுவின் திடீர் மாயம்

இப்போது வியப்பிற்குரிய செய்தி என்னவெனில் பேரண்டம் படைக்கப்படுவதற்காக அதனுடைய அடிப்படைத் துகள்கள் அதற்கு முன்னரே தயாராக இருந்திருக்க வேண்டியதில்லை எனத் தெரிய வந்துள்ளது. மேலும் ஈடு இணையற்ற அந்த அதிரடி வேட்டு (Big Bank) நடைபெறுவதற்காகவும் எந்த ஒரு பொருளும் இருந்திருக்க வேண்டியதில்லை எனவும் அறிவியல் கூறுகிறது.

(இறைவன் உண்டு என்றும் அவன் எல்லாம் வல்லவன் என்றும் நம்புகின்றவர்களுக்கு மேற்கூறப்பட்ட நவீன அறிவியல் கருத்துக்கள் அவர்களது நம்பிக்கையை மேலும் வலுவாக்கும். அதே நேரத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்களால் இவை எப்படி நம்ப முடியும்?)

இப்போது பேரண்டம் உருவாக்கப்படுவதற்குத் தேவையான அடிப்படைத் துகள்கள் கூட முன்னர் இருக்கவில்லையெனில் வெறும் `வேட்டில் (explosion) இருந்து பொருட்கள் எப்படி உருவாயிற்று எனக் கேட்டால் ஹாக்கிங் பதிலளிக்கிறார். “பதில் என்னவெனில் க்வாண்டம் கோட்பாட்டில் (quantum theory) துகள்கள் ஆற்றலில் இருந்து துகள்/எதிர்த்துகள் எனும் ஜோடிகளாய் (Particle / antiparticle pairs) உருவாக்கப்படும் (பார்க்க : பக்கம் 136) என்பதாகும்.

இப்போது எழும் மற்றொரு வினா என்னவெனில் பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்டவெளியில் ஒன்றுமே இல்லையெனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் “பெருவெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிமாணம் பூஜ்யமாகும்; (zero sizw) அதன் வெப்பம் எல்லை அற்றதுமாகும் (infinite) என்கிறார். (பக்கம் 123)

இங்கு பெருவெடிப்புக்கு முன்னால் நமது பேரண்டத் தின் பரிமாணம் எவ்வளவு இருந்தது என்பதைப் பற்றி எதையும் கூறாமல் பெருவெடிப்பு நிகழும் நேரத்தில் அதன் அப்போதைய பரிமாணம் என்ன என்பதைப் பற்றியே ஹாக்கிங் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பெரு வெடிப்புக்கு முன்னால் என்ன இருந்தது அல்லது என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் அறிவியல் திறமையை பெருவெடிப்பின் வினோதத் தன்மை – சிங்குலாரிட்டி – நம்மிடமிருந்து பறித்து விட்டது.

அத்துடன் பெருவெடிப்புக்கு முன்னால் இருந்திருந்தால் அல்லது நிகழ்ந்திருந்தால் அவைகள் நமது பேரண்டத்தோடு எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும் அறிவியல் விதிகள் கூறுகின்றன. எனவே பெருவெடிப்பு நிகழும் போது பேரண்டம் பூஜ்யமாக இருந்தது என்பதிலிருந்து வெடிப்பு நிகழ்ந்த பொருளின் பரிமாணம் பூஜ்யமாகவே இருந்தது என்பது தெளிவு!

ஆம்! பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை இறைவன் படைத்தான்! உங்கள் இறைவனின் படைப்பாற்றலை என்னவென்று மதிப்பிடுவீர்!

அதே நேரத்தில் அப்போது வெளியிடப்பட்ட ஆற்றலின் அளவு எல்லையற்றது எனக் கூறுகிறது அறிவியல் கண்டு பிடிப்புகள். வெப்பம் என்பது ஆற்றலின் `அருவம் என்பது நமக்குத் தெரியும். அந்த ஆற்றலே முதற்கண் அடிப்படைத் துகள்களாகி அவைகளே பிறகு அணுக் கருக்களாகி, அவைகளே பிறகு அணுக்களாகி, அவைகளே பிறகு மூலக் கூறுகளாகி, அவைகளே மீண்டும் பற்பல பருப் பொருட்களாகி அவைகளிலிருந்தே ஆயிரக்கணக்கான கோடி காலக்சிகளும், கோடானு கோடி ,கோடி நட்சத்திரங்களும், கோடனு கோடானு கோடி, கோடி விண்ணகப் பொருட்களும் உருவாயின என ஐயத்திற்கிடமின்றி அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

சுருங்கக் கூறின் இம்மாபெரும் பேரண்டம் வெறும் ஆற்றலிலிருந்து படைக்கப்பட்டிருப்பதாக அதிநவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவதை நாம் தெளிவாக அறிகிறோம். பேரண்டத்தைப் படைத்த வல்ல இறைவனின் மாட்சிமை மிக்க திருக்குர்ஆனில் கீழ்க்கண்டவாறு கூறுகிறான் :

“விண்ணகத்தை நாம் வல்லமை கொண்டு படைத்தோம்…

(அல்குர்ஆன்:51:47.)

எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மையை இச்சிறு வாக்கியத்திற்குள் திருமறைக் குர்ஆன் கூறியுள்ளது! அடிப்படைத் துகள்கள் இடைவெளி இன்றித் திணிக்கப்பட்ட ஒரு பேரணுவால் பேரண்டம் படைக்கப்படாமல் வெறும் ஆற்றலைக் கொண்டே பேரண்டம் படைக்கப்பட்டது என ஒருவர் கூற வேண்டுமாயின் எந்த அளவிற்கு அறிவியல் ஞானம் அவருக்கு இருக்க வேண்டும் என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை அல்லவா!

1958ல் கூட சிறந்த அறிவியலாளராம் ஷேப்லி எழுதிய நூலில் (of the stars and men) பல முறை இந்த ஆதிப் பேரணுவைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். (ஆயினும் 1970ல் எழுதப்பட்ட ஹாக்கிங் அவர்களின் நூலில் – A Brief History of time-  இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.)

ஆனால் ஆற்றலின் வரைவிலக்கணம் கூடத் தெரிந்திராத ஏழாம் நூற்றாண்டில் வந்த திருமறையாம் திருக்குர்ஆனால் இத்தவறான கற்பனைப் பொருளை மிக எளிதாகத் தவிர்க்க முடிந்தது மட்டுமின்றி பேரண்டத்தின் மெய்யான மூலப் பொருள் `ஆற்றலே என்பதையும் கூற முடிந்தது எனில் திருக்குர்ஆன் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை இது மிகத் தெளிவாகக் காட்டுகிறதல்லவா! மேலும் திருமறை கூறும் இந்த அறிவியல் ஆதாரம் பெருவெடிப்புக் கொள்கைக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

பேரண்டத்தில் பெருங்குழப்பம்

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கிசையப் பார்க்கும் போது பேரண்டத்தில் இன்று காணப்படும் நட்சத்திரங்கள் யாவும் ஆதியிலேயே தோன்றியவை இல்லையென்றும், ஆதியில் தோன்றிய நட்சத்திரங்களும் இதர விண்ணகப் பொருட்களும் ஒன்றோடொன்று மோதி உடைந்து சிதறியும் இரண்டாம் நிலை வெடிப்பு நிகழ்ச்சிகளால் (Secondary explosions) வெடித்துச் சிதறியும் பேரண்டம் தூசு துகள்களால் புகை மூட்டம் போல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இத்தூசுப் படலங்களிலிருந்து அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் தோன்றியதாகவும் தெரிகிறது.

பெருவெடிப்பு நிகழ்ந்து பேரண்டம் விரிவடையத் துவங்கியதும் அங்கு பெரும் குழப்பமான (chaos) நிலை காணப் பட்டதாக அறிவியலாளர் ஷேப்லி கூறுகிறார். ஆரம்பத்தில் சராசரி பொருளடர்த்தி (avarage material density) மிக அதிகமாக இருந்ததாகவும், நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருந்ததாகவும் பற்பல காலக்சிகள் தனித்தனி தொகுதிகளாகப் பிரிந்து இராமல் ஒன்றுக்குள் ஒன்று திணிக்கப்பட்டும் ஒன்றன் மீது ஒன்றாகக் குவிக்கப்பட்டும் இருந்தமையால் மோதல்களும், இரண்டாம் நிலை வெடித்தல்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

குளிர்ச்சியான தொலைவுக்கு எறியப்பட்ட பறக்கும் வாயு விரைவிலேயே குளிர்ந்து,உறைந்து கோள்களைப் போன்ற பொருட்களாக பெருமளவிற்கு உருவாகி மீண்டும் மோதி வெடித்து அதனால் உருவாகும் புகை மூட்டம் போன்ற தூசுகளிலிருந்து அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் தோன்றின என அவர் கூறுகிறார்.

(பார்க்க : பக்கம் 53, 54)

சுருங்கக் கூறின் பேரண்டம் ஆரம்பக் கட்டங்களில் இப்போது இருப்பது போன்று ஒழுங்குடன் இல்லாமல் ஒழுங்கற்ற குழப்பமான நிலையிலேயே இருந்ததாகத் தெரிய வருகிறது.

அறிவியலாளர் ஹாக்கிங் இந்த சாத்தியத்தை ஒப்புக் கொள்வதோடு இப்படிப்பட்ட ஒரு குழப்பமான நிலையிலிருந்து இன்று காணப்படும் இவ்வளவு வழவழப்பான (smooth) மற்றும் ஒழுங்கான (regular) பேரண்டம் எப்படித் தோன்றியது எனக் காண்பது கடினமாகும் எனவும் குறிப்பிடுகிறார்.

(பார்க்க : பக்கம் 129. 130)

குழப்பம் அகன்றது ஒழுங்கு வந்தது

இன்றைய உலகின் மிகச் சிறந்த அறிவியலாளராக மதிக்கப்படும் ஹாக்கிங் அவர்களை வியப்பிற்குள்ளாக்கிய பேரண்டத்தின் இன்றைய நிலை திருக்குர்ஆனுக்கு வியப்பளிக்கவில்லை. அது கீழ்க்கண்டவாறு அதன் காரணத்தைக் கூறுகிறது :

“பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை (ஒழுங்குபடுத்த) நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கட்டளையிட்டான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (பிறகு) இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான்…

(அல்குர்ஆன்:41:11,12.)

இந்த வசனங்களில் அடங்கி இருக்கும் அறிவியல் சிந்திப்பவரை வியக்க வைப்பதாகும்.

முதலாவதாக இந்த வசனங்களில் வானங்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள் இம்மாபெரும் பேரண்டம் ஏழு வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட ஏழு பெரும் தொகுதிகளாக அமையப் பெற்றுள்ளது என்பதோ இல்லது இப்பேரண்டம் முழுவதும் ஒரே தன்மையினதாக இருப்பின் இப்பேரண்டத்தை தவிர வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட மேலும் ஆறு பேரண்டங்கள் இருக்கின்றன என்பதோ இதன் பொருளாக இருக்கலாம். இவற்றுள் எது உண்மை என்பதைக் கண்டுபிடிக்கும் திறமையை நமது அறிவியல் இன்னும் பெற்று விடவில்லை என்பதால் அறிவியலைக் கொண்டு இந்த விபரத்தை மதிப்பிட இயலாது என்பது தெளிவு.

ஆயினும் வானத்தை வகைப்படுத்தி அமைக்கும் பணி ஒரு கட்டத்தில் நடைபெற்றது என்பது அந்த விபரத்தில் தெளிவாகத் தென்படுகிறது. இதைத் தானே ஷேப்லி, ஹாக்கிங் போன்ற சிறந்த அறிவிளலாளர்களின் கூற்றிலிருந்து முன்பத்திகளில் கண்டோம். இருபதாம் நுற்றாண்டின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரிந்தது?

மேலும் பேரண்டப் படைப்பின் ஒரு கட்டத்தில் வானங்கள் வெவ்வேறு தொகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டது என திருமறை கூறியதிலிருந்து அதற்கு முன் ஒழுங்கற்ற ஒரே அமைப்பாக அது இருந்தது என்பது அதன் உட்பொருளாக விளங்குகிறதல்லவா! இந்த நவீன அறிவியல் உண்மை ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரிந்தது?

ஒழுங்குபடுத்துவதற்கு முன் வானங்கள் புகை வடிவாக இருந்ததாக திருமறை மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் இல்லையெனில் அது எப்படித் தெரிந்து கொண்டது?

மேலும் திருமறை வசனங்களில் வானங்கள் ஒழுங்கு படுத்தப்பட்ட காலகட்டம் என்ன என்பதைக் கூட மிகத் தெளிவாகக் கூறுவது நமது கவனத்தை மிகவும் கவர்கிற தல்லவா?வானங்கள் ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்ற போது நாம் வசிக்கும் இந்த பூமி படைக்கப்பட்டிருந்ததாக திருமறை வசனங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. ந

மது பூமி படைக்கப்பட்டிருப்பின் நமது சூரியனும் படைக்கப்பட்டுவிட்டது என்பது அதன் பொருள். இதிலிருந்து இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை நட்சத்திரமாகிய சூரியன் படைக்கப்படும் வரை நமது பூமி உட்பட அனைத்து கோள்களும், நட்சத்திரங்களும், இன்ன பிற விண்ணகப் பொருட்களும், காலக்சிகளும் கூட ஒன்றோடொன்று இரண்டறக் கலந்து ஒழுங்கற்ற தாறு மாறான ஒரேஒரு குழுவாகக் காணப்பட்டது எனத் தெரிய வருகிறது. இந்த அறிவியலைக் கூட மற்றொரு வசனத்தில் மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது திருக்குர்ஆன். அந்த அற்புதமான இறை வசனம் இதோ :

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதை யும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (இத்திருமறை நமது வார்த்தையல்ல என்று கூறி) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

(அல்குர்ஆன்:21:30.)

எவ்வளவு அற்புதமாக வானங்களும், பூமியும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாகக் கலந்து ஒரே ஒரு தொகுதியாகக் காணப்பட்ட அறிவியல் உண்மையை திருமறைக் குர்ஆன் இந்த வசனத்தில் வெளிப்படுத்தியுள்ளது!

திருக்குர்ஆனுடைய கூற்றுக்கிசைய பூமி உட்பட அனைத்து விண்ணகப் பொருட்களும் போதுமான இடைவெளியின்றி ஒன்றாகக் கலந்து ஒரே தொகுதியாக இருந்திருப்பின் அந்தக் காலகட்டத்தில் அப்பொருட்களுக்கிடையே இடைவிடாத மோதல்களும் அதன் பயனாக விண்ணகப் பொருட்களின் தொடர்ச்சியான வெடித்துச் சிதறல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று எல்லாமே ஒரு குழப்பமாகவும் (Chaos) மற்றும் விண்ணகப் பொருட்களின் ஒழுங்கற்ற இயக்கங்களாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பது தெளிவு. திருமறையிலிருந்து விளங்கப் பெறும் இக்கருத்தைத் தான் அறிவிளலாளர்கள் ஷேப்லி மற்றும் ஹாக்கிங் போன்றவர்கள் கூறியதாக முன்பத்திகளில் கண்டோம்.

இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த இந்த அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனுக்கு ஏழாம் நூற்றாண்டில் எப்படித் தெரிந்தது? திருக்குர்ஆன் மனித அறிவால் உருவாக்கப்பட்டதில்லை என்பதை இது நிரூபிக்கிறதன்றோ!

(இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் உயிருள்ள அனைத்து பொருட்களும் தண்ணீரிலிருந்தே படைக்கப்பட்டது என்பதும் இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் அறிவியல் உண்மையாகும். இது உயிரியல் சார்ந்த அறிவியல் என்பதால் இப்பகுதியில் அது ஆய்வு செய்யப்படவில்லை.)

இப்போது முன்னர் கண்ட திருவசனங்களையும் (21 : 29, 41 : 11) இணைத்துப் பார்த்தால் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்ட நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரும் வானும் வானகப் பொருட்களும் ஒழுங்கற்ற தாறுமாறான நிலையில் இருந்ததாகவும் அவை இறைவன் நாடியவாறு ஒழுங்குற வேண்டும் என்பதற்காக “நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டுப்பட்டு நடப்பீர்களாக எனும் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

திருமறையின் வேறுபட்ட நடை

இந்த இடத்தில் சிலருக்கு இறைவனுக்கும் அவனது உயிரற்ற படைப்பினங்களுக்கும் (வானமும், பூமியும்) இடையே நடைபெற்ற உரையாடல் சற்று புதிராகத் தோன்றலாம். ஆனால் படைப்பினங்களுடையதைப் போல இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதோ அல்லது அவனது ஆற்றல் எதையெல்லாம் உள்ளடைக்கியுள்ளது என்பதோ நம்மால் ஒருக்காலும் விளங்கிக் கொள்ள இயலாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் (relative states) ஒப்பீடுகளையும் (Comparisons) கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன் (Absolute). எனவே அவனது அறிவாற்றல் உயிருள்ளவை அல்லது உயிரற்றவை எனும் வேற்றுமைகளால் பாதிக்கப்படாமல் உயிருள்ளவைகளைப் போன்றே உயிரற்றவைகளின் சிறப்பியல்புகளையும் உள்ளடக்கியதாகும்.

மற்றொரு விதத்தில் பார்த்தால் மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். சான்றாக நாம் ஒரு விண்வெளிக் கப்பலை (Space rocket) எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் பறப்பதற்கும் பறத்தலில் செய்யப்பட வேண்டிய பற்பல மாற்றங்களுக்கும் பூமியில் இருந்து கொண்டே நாம் அவைகளுக்கு உத்தரவு இடுகிறோம். அவைகள் நமது உத்தரவுகளை வார்த்தை தவறாமல் நிறைவேற்றுகின்றன.

ஒவ்வொரு முறையும் அவை விண்ணிற்கு ஏவப்படும் போது அவை ஏவப்படுவதற்குத் தயாராக உள்ளனவா எனத் தவறாமல் அவைகளை வினவுகிறோம். சில நேரங்களில் அவை தங்களது பரிபூரண சம்தத்தைத் (திருமறையில் “நாங்கள் விரும்பியே கட்டுப்பட்டோம் என விண்ணும், மண்ணும் கூறியதைப் போன்று) தெரிவிக்கின்றன. எனவே அவை உடனே ஏவப்படுகின்றன. சில நேரங்களில் அவை தயக்கம் காட்டுகின்றன. உடனே பொறியாளர்கள் அவைகளை ஏவும் முயற்சியை நிறுத்திவிட்டு தயக்கத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து சீர் செய்து அதன் பிறகு அவைகளின் ஒப்புதலைப் பெற்று அவைகளை ஏவுகின்றனர்.

மேற்கூறப்பட்ட விபரங்கள் எதுவும் நமக்குப் புதிராக இருப்பதில்லை. நமக்கும் உயிரற்ற இப்பொருட்களுக்கும் இடையில் நடைபெறும் இக்கருத்துப் பரிமாற்றம் மனித மொழிகளிலன்றி மின் அணு மொழியிலாகும் என்பதும் நாம் தெரிந்திருக்கிறோம். ஆனால் படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய இறைவன் நம்மால் ஒரு போதும் விளங்கிக் கொள்ள இயலாத மேலும் சிறந்த மொழிகளில் தமது உயிரற்ற படைப்பினங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லவன் என்பது மிகவும் ஏற்கத்தக்கதேயாகும்.

ஒழுங்கீனத்திலிருந்து ஒழுங்கிற்கு…

இப்போது இறைவன் விண்ணையும் மண்ணையும் கட்டுப்படும்படி கட்டளையிட அக்கட்டளைக்கு அவை பணிந்த பிறகு என்ன நடந்தது எனப் பார்ப்போம். இந்தக் குழப்பமான நிலையிலிருந்து பேரண்டம் படிப்படியாக இப்போதிருக்கும் ஒழுங்கு நிலைக்கு வந்ததாக ஹாக்கிங் கூறுவதை முன்பத்திகளில் கண்டோம். திருமறைக் குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

(வானங்களும், பூமியும் அவை விரும்பியே கட்டுப்பட்டதாகக் கூறிய போது) இரண்டு நாட்களில் (அவைகளை அவன்) ஏழு வானங்களாக அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான்….

(அல்குர்ஆன்:41:12.)

வானும், வானகப் பொருட்களும் ஒட்டுமொத்தமாகக் கலந்தும் குவிந்தும் ஒரே ஒழுங்கற்ற குழுவாகக் கிடந்த அமைப்பு, தனித் தனியான ஏழு பேரண்டங்களாகப் பிரிக்கப்பட்டதை இவ்வசனம் தெரிவிக்கிறது. அவற்றுள் ஒவ்வொரு பேரண்டத்திற்கும் அதன் இயக்கம் தொடர்பான கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டது என்பதிலிருந்து அவைகள் ஒவ்வொன்றும் அதன் பிறகு அக்கட்டளை களுக்கு (விதிகளுக்கு) இசையவே இயங்குகின்றன என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிய வருகிறது. இவ்வாறு ஓர் அமைப்பு அதற்குரிய விதிகளுக்கு இசைய இயங்கு வதைத்தாம் நாம் ஒழுங்கான இயக்கம் எனக் கூறுகிறோம்.

பேரண்டத்தின் திடீர் தோற்றம்

இம்மாபெரும் மகா மகா பேரண்டம் தோன்றியதில் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதமாகத் திகழ்வது இரண்டு நிகழ்ச்சிகளாகும். அதில் ஒன்று அதி, அதி கம்பீரமான ஒரு பிரமாண்ட வெடிப்பு நிகழ்ச்சி. இரண்டாவதாக இவ்வெடிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு மயிரிழையைப் பல்லாயிரம் பாகங்களாகக் கிழித்தாலும் அதில் ஓர் இழையின் அளவு கூடத் தாமதமின்றி நடைபெற்ற அவ்வெடிப்பாற்றலின் விரிவாக்கம். இவற்றுள் பேரண்டப் படைப்பின் முதல் கால்வைப்பாக இருக்கும் பெருவெடிப்பு என்பது வெறும் ஒரு மைக்ரோ கணத்தை விடக் குறைந்த நேரத்தில் திடீரெனத் தோன்றிய ஓர் அதிர் வேட்டாகும்.

தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே ஓர் ஊசிப் பட்டாசு கூட வெடிக்கும் எனும் போது ஈடு இணையற்ற அம்மாபெரும் அதிர் வேட்டு எப்படி நிகழ்ந்தது? வெடிப் பொருள் எப்படித் தோன்றியது? வெடிப்பதற்கு முன் எவ்விதமான சூழ்நிலை நிலவியது? என்பன போன்ற எந்தக் கேள்விக்கும் விடை கண்டுபிடிக்கும் ஆற்றல் நமது அறிவியலுக்குக் கிடையாது. அந்த அளவிற்கு பெரு வெடிப்பு வினோதம் (Big Bang singularity) நமது அறிவியலை முடமாக்கி விட்டது. இன்றைய உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாம் ஹாக்கிங், அறிவியலாளர் `பென்ரோ உடன் இணைந்து பெரு வெடிப்புக் கேட்பாட்டை நிரூபித்துள்ளதாக நாம் முன்னர் கண்டோம். அதைக் குறித்து அவர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

“பேரண்டம் எவ்வாறு தோற்றமெடுத்தது என்று ஒருவர் கூற வேண்டுமாயின் காலத்தின் துவக்கத்திலேயே நடைமுறையில் இருந்த விதிகள் பற்றிய அறிவு அவருக்கு இருக்க வேண்டும். பொது சார்பியல் தத்துவத்தின் நூலியல் கோட்பாடு (Classical theory) சரியாக இருந்தால் நானும், ரோஜர் பென்ரோசும் நிரூபித்த வினோத சூத்திரங்கள் (Singularity) காலத்தின் துவக்கம் எல்லையற்ற அடர்த்தியும் (infinfte density) கால-இடத்தின் (Space – Time ) எல்லையற்ற வளைவாகவும் (infinite curvature of space – time ) உள்ள ஒரு புள்ளியாய் இருந்திருக்கும். அப்படிப்பட்ட புள்ளியில் அறியப்பட்ட எல்லா அறிவியல் விதிகளும் பழுதாகி (break down ) விடும் (பார்க்க : பக்கம் 140)

உண்மையிலேயே பெரும் கண்டுபிடிப்பைத் தாம் இம்மாபெரும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட கூற்றிலிருந்து விளங்குகிறது. ஒரு பொருள் எல்லையற்ற அடர்த்தியைக் கொண்டிருந்தால் அதற்குள் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகள் நமக்கு வழங்கவில்லை. ஆயினும் எல்லையற்ற எதையும் கட்டுப்பட வைக்கும் விதிகளைக் கூட உருவாக்கி இப்பேரண்டத்தைத் தோற்றுவித்த இறைவனுக்கு கால அடர்த்தியின் எல்லையின்மையோ, அல்லது கால – இடத்தின் வளைவின்* எல்லையின்மையோ ஒரு பொருட்டல்ல. ஆகவே பேரண்டம் எப்படித் தோன்றியது என்பதை வினோத சூத்திரங்களால் அறிவு முடமாகிப் போன மானிடர்களுக்காக பேரண்டத்தை எப்படி அவன் தோற்றுவித்தான் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறான் :

“அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து “ஆகு என்று கூறுவான். உடனே அது ஆகிவிடும்.

(திருக்குர்ஆன்:2:117.)

கால – இடத்தின் வளைவு : இது அறிவியல் மேதை ஐன்டீன் கண்டுபிடித்த அறிவியலாகும். இதில் இரண்டு அறிவியல் சித்தாந்தங்கள் இருக்கின்றன. முதலாவதாக பேரண்டத்திலுள்ள அனைத்தும் சார்பியல் நிலைக்கு உட்பட்டது. ஆனால் `காலம் மற்றும்`இடம் ஆகியவை தவிர. இவை சார்பியலுக்கு உட்படாத சுயேட்சையாகவே (absolute) எப்போதும் நிலை கொண்டிருக்கும் என ஐன்டீனுக்கு முன்புள்ள அனைத்து அறிவியலாளர்களும் நம்பி வந்தனர்.

ஆனால் ஐன்டீன் தன்னுடைய புகழ் வாய்ந்த சார்பியல் தத்துவத்தின் (வாநடிசல டிக சநடயவஎவைல) வாயிலாக காலம் மற்றும் இடம் ஆகியவைகளும் சார்பியலானவை எனக் கருதி சமன்பாடுகளால் நிறுவினார். இத்தத்துவத்தை பிரதிபலிப்பதற்காகவே `காலம் மற்றும் `இடம் எனும் வார்த்தைப் பிரயோகத்தையே மாற்றி `கால – இடம் ( theory of relativity) எனத் திருத்தி அமைக்கப்பட்டது.

இரண்டாவதாக ஆகாயம் வளைந்திருக்கிறது எனும் புரட்சிகரமான மற்றொரு சித்தாந்தத்தையும் தமது பொது சார்பியல் தத்துவத்தின் வாயிலாக நிறுவினார். அறிவியல் ஆய்வுகளால் இச்சித்தாந்தம் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த வளைவைத்தாம் தமது அறிவியல் ஆய்வுகளில் ஹாக்கிங் மற்றும் பென்ரோ ஆகியோர் அவ்வளைவுப் பேரண்டம் படைக்கப்படுவதற்கு முன் அப்பேரண்டம் ஒரு புள்ளியாக இருந்த காலகட்டத்தில் எல்லைக்கு உட்படாத, எல்லையற்றதாக இருந்தது எனக் கூறுகிறார்கள். (ஆகாயம் வளைந்திருக்கிறது என்பதோ ஒரு பொருளின் வளைவு எல்லைக்குட்படாதது என்பதோ நமது அறிவுக்கெட்டாத போதும் அது அறிவியல் கண்டுபிடிப்பு என்பதால் நாம் அதை நம்புகிறோம் என்பதையும் கருத்தில் கொள்க.)

இந்த அற்புதமான திருமறை வசனத்தில் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மிக முக்கியமாக கேள்விக்குத் தகுந்த பதில் கிடைக்கிறது. பேரண்டப் படைப்பு துவங்கு வதற்கு (பெருவெடிப்புக்கு) முன் அதற்குரிய சூழலாக என்ன இருந்தது? வெடித்த பொருள் எது?வெடிக்க வைத்த காரணங்கள் யாது? என்பதே நமது பிரதானமான கேள்வி களாகும்.

ஆனால் திருக்குர்ஆன் பேரண்டப் படைப்பு துவங்கு வதற்கு முன் அதற்காக பிரத்யேகமான எவ்விதச் சூழலும் இருந்ததில்லை எனவும் பேரண்டத்தை உருவாக்கியிருக்கும் பொருட்கள் கூட அதற்கு முன்னால் இருந்ததில்லை யெனவும் கூறுவதோடு படைப்பு நிகழ்ச்சி இறைவனுடைய கட்டளையால் தோன்றியது எனவும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.

காரணமில்லாக் காரியம்

பேரண்டம் தோன்றுவதற்கு என்னென்ன அறிவியல் காரணங்கள் (Scientific reasons) இருந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது என ஆய்வு செய்யத் தலைப்பட்ட நம்மை பேரண்டம் தோன்றுவதற்கு எவ்வித அறிவியல் காரணங் களும் இல்லை எனப் பொருள்படும் திருமறையின் கூற்று பெரும் வியப்பிற்குள்ளாக்குகிறதன்றோ! எவ்வித அறிவியல் காரணங்களும் இன்றி கற்பனைக் கெட்டாத இம்மாபெரும் பேரண்டம் தோன்றி இருக்க முடியுமா என்ற கேள்விக்கு `ஆம்! பேரண்டம் தோன்றியதற்கு எவ்விதக் காரணமும் வினோத சூத்திரங்கள் காரணமாக நம்மால் கண்டுபிடிக்க இயலாது என்பதோடு ஒருகால் பெருவெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் கூட அதற்கும் பெரு வெடிப்பிற்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இருந்திருக்க முடியாது என்றும் எனவே பேரண்டப் படைப்பின் துவக்கமாகிய பெருவெடிப்பு எவ்விதக் காரணமும் இன்றி நிகழ்ந்தது எனக் கூறி அற்புதங்களின் அற்புதமாய் வான்மறைக் குர்ஆனில் நாம் என்ன கண்டோமோ அதை அப்படியே மெய்ப்பிக்கிறது உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாம் ஹாக்கிங் போன்றோர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகள்!

இவ்வளவு அற்புதமான இருபதாம் நூற்றாண்டின் அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிலும் அறிவியலாளர்களால் கூட நம்புவதற்குக் கடினமாக இருக்கும் மாபெரும் அறிவியல் அற்புதங்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரால்- அவர் ஒரு மாபெரும் விஞ்ஞானி யாகவே இருந்தால் கூட – கூறி இருக்க முடியும் என பகுத்தறியும் திறனுள்ள எந்த நபரால் ஏற்றுக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் கூறும் அறிவியலிலிருந்து இறைவன் எந்த நாளில் அதில் எந்தக் கணத்தில்`ஆகுக! எனக் கட்டளையிட்டானோ அதன் பிறகு ஒரு மைக்ரோ கம் கூடத் தாமதமின்றி உடனே பேரண்டத்தின் படைப்பு துவக்கம் (Bing Bank) குறித்தது என்பதும் அதிலிருந்து இன்று வரை பேரண்டம் என்னென்ன பொருட்களால் எப்படி எப்படி வடிவமைய வேண்டும் என அவன் தனக்குள் வடிவமைப்பு செய்திருந்தானோ அவ்வாறே நிகழ்ந்து வருகிறது என்பதும் தெளிவாக விளங்குகிறது.

இறைவனின் சொல்லாற்றல்

இங்கு பலருக்கும் ஏற்படக் கூடிய ஐயம் யாதெனில் வெறும் `ஆகுக! (Be!) என்று ஒரு கட்டளை பிறப்பித்த உடன் அக்கட்டளை பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்யும் என்பதாகும். இந்த ஐயம் மனிதர்களாகிய நம்மைப் போன்றே இறைவனையும் கற்பனை செய்வதால் ஏற்படுவதாகும். நாம் `ஆகுக! என்று கூறும் போது நமது கட்டளை வெறும் காற்றின் அதிர்வலைகளாக வெளிவருவதால் அதற்கு எதையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் இருப்பதில்லை. நமது அறிவுத் திறன் என்பது வினோத சூத்திரங்களால் (Singularity theorems) முடமாக்கப்பட்டு பெருவெடிப்புக்கு அப்பால் உள்ளதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத பலவீனத் துக்கு உட்பட்டதாகும்.

எனவே இறைவனின் இயற்பியலைப் பற்றி நமது அறிவுத்திறனால் புரிந்து கொள்ள முடியாது. நிலைமை இவ்வாறிருக்க இறைவனின் வார்த்தைகள் எந்த வடிவத்தில் வெளிப்படும் என்பதை எப்படி நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்? ஆயினும் நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட திருமறை வசனங்களிலிருந்து அவனது வார்த்தைகள் அவனது நாட்டத்தையும் உள்ளடக்கிய ஆற்றலின் வடிவாக வெளிப்படும் திறன் கொண்டது என்பது விளங்குகிறது!

மானிடர்க்கு வழிகாட்டியாய் வந்த மாமறைக் குர்ஆனின் வசனங்கள் பெரு வெடிப்புக்கு முன் இறைவனின் `ஆகுக! என்ற வார்த்தை தவிர மற்றவை யாவும் (பேரண்டத்தின் வடிவமைப்புப் பணிகள் – designing works) அவனுக்குள்ளேயே இருந்ததே அன்றி அண்ட வெளியில் எதுவும் தோன்றி இருக்கவில்லை எனப் பொருட்பட்டதாகக் கண்டோம்.

இதையே நாம் நமது வினோத சூத்திரங்களால் முடமாகிப் போன இயற்பியல் மொழியில் மொழி மாற்றம் செய்தால் அதன் பொருள் பெருவெடிப்புக்கு எதுவுமே காரணமாக இருந்திருக்கவில்லை என்றும் எனவே பெருவெடிப்பே பெரும் புதிரானது என மாற்றமடைவதைக் காணலாம். மிகச் சரியாக இதே கருத்தைத் தான் நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறி சத்தியத் திருமறையை மெய்ப்பித்துக் கொண்டு வருகின்றன.

இம்மாறைக்குர்ஆன் தெய்வீக வெளிப்பாடே அன்றி மானிடப் படைப்பன்று என்பதை மேற்கண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்குப் புலப்படுத்தவில்லையா?

விரிந்து செல்லும் பேரண்டம்

பேரண்டப் படைப்பில் பெருவெடிப்பிற்கு அடுத்தாற் போன்று பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் மற்றொரு இயற்பியல் காரணி பேரண்டத்தின் தொடர்ச்சியான விரிவாக்கமாகும். பெருவெடிப்பு நடைபெற்ற அதே கணத்தில் வெடித்தலில் இருந்து வெளிப்பட்ட ஆற்றலின் விரிவாக்கமும் பிறகு ஆற்றலில் இருந்து தோன்றிய பொருட்களின் விரிவாக்கமும் இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பேரண்டத்தின் இந்த விரிந்து சொல்லும் இயற்பியல் பண்பு இல்லாதிருந்தால் இப்பேரண்டம் பல கோடி வருடங்களுக்கு முன்னரே அழிவுற்றிருக்கும்.

பேரண்டத்தின் இந்த இயற்பியல் பண்பு சென்ற நூற்றாண்டின் புகழ் பெற்ற விஞ்ஞானி ஹப்பிள் (Hubble) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய நிறமாலை (ளுயீநஉவசடிளஉடியீந) ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட `ரெட் ஷிப்ட் (Red shift) எனும் இயற்பியல் விளைவை `டாப்ளர் விளைவுடன் பொருத்திப் பார்த்து பேரண்டம் விரிந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்தார். திருமறையை இறை வேதம் என நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பை நாம் தனித் தலைப்பில் ஆய்வு செய்துள்ளோம். எனவே பேரண்டப் படைப்பு நிகழ்த்தப்பட்ட கால அளவைப் பற்றிய ஆய்விற்குள் செல்வோம்.

`ஆகுக! – உடனே ஆகி விடும்!

திருமறையில் நாம் முன்னர் கண்ட வசனத்தைச் சுட்டிக் காட்டி திருமறையின் விமர்சகர்கள் சிலர் திருக்குர்ஆன் பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளதாய் கூறுகிறார்கள். பெருவெடிப்புக் கோட்பாடு பேரண்டம் உருவாவதற்கு 500 லிருந்து 1500 கோடி வருடங்கள் அல்லது 1000 லிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டது எனக் கூறுவதை நாம் கண்டோம். ஆனால் திருக்குர்ஆன் இதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

“அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து “ஆகு என்றே கூறுவான். உடனே அது ஆகிவிடும்.

(திருக்குர்ஆன்:2 :117.)

இறையாற்றலும் சார்பியல் கோட்பாடும்

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பேரண்டம் தோன்றுவதற்கு தேவைப்பட்டது 500 கோடியிலிருந்து 2000 கோடி வருடங்கள் என்பதைக் கண்டோம். ஆனால் இறைவன் ஏதேனும் ஒன்றைப் படைக்க நாடினால் அதனிடம் `ஆகுக! என்று சொல்வான். உடனே அது ஆகிவிடும் எனப் பல இடங்களில் திருக்குர்ஆன் கூறுகிறது.

இதை ஒரு கோணத்தில் பார்த்தால் “இறைவன் எவ்வாறு அதை உருவாக்க நாடினானோ அவ்வாறே எவ்விதத் தடங்கலோ தாமதமோ இன்றி அவ்வாறே உருவாகி விடும் என்பது அதன் விளக்கமாக இருக்கின்ற அதே வேளையில் மற்றொரு கோணத்தில் பார்த்தால் இறைவனின் கட்டளை பிறந்த மறுகணமே அவன் நாடியது எதுவோ அது அங்கு தோன்றி விடும் என்பது போன்ற அர்த்தமும் அதற்கு இருப்பது போன்று தோன்றுகிறது. இதன் விளக்கம் யாது என்பதே நமது கேள்வியாகும்.

இக்கேள்விக்குரிய பதில் ஐன்டீனின் சார்பியல் கோட்பாட்டில் அமைந்துள்ளது. அதை ஓரிரு உதாரணங்களுடன் சுருக்கமாகக் காண்போம்.

காலம் மற்றும் இடம் ஆகியவையும் சார்பியல் நிலைக்கு உட்பட்டது என ஐன்டீனின் சார்பியல் கோட்பாடு கூறுவதை நாம் முன்னர் கண்டுள்ளோம். நாம் ஒரு சாலை வழியாகப் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். அச்சாலையின் வலது பக்கம் இருக்கும் ஒரு குன்று அந்த இடத்தை விட்டு நகராமல் அதே இடத்தில் இருக்கும் போதே அதே சாலையில் (நாம் பயணம் செய்யும் திசைக்கு எதிராக) பயணம் செய்யும் வேறு சிலர் அக் குன்று சாலையின் இடது பக்கம் இருப்பதாகக் காண்பார்கள். இதிலிருந்து இடம் என்பது நிலையானதல்ல; சார்பானது (அதைப் பார்வையிடும் பார்வையாளர்களைச் சார்ந்தது) என்பது தெரிகிறது.

இதைப் போலவே இப்போது நாம் நமது சூரியனில் ஒரு பெரும் வால் நட்சத்திரம் மோதுவதைப் பார்க்கிறோம் என வைத்துக் கொள்வோம். நமது சூரியனிலிருந்து ஒரு இலட்சம் ஒளியாண்டு தொலைவில் மற்றொரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கிரகத்தில் அறிவு ஜீவிகள் இருப்பதாகவும் அவர்கள் நமது சூரியனை ஆய்வு செய்து கொண்டிருப்ப தாகவும் வைத்துக் கொள்வோம். ஆயினும் நாம் இப்போது நமது சூரியனில் கண்ட வால் நட்சத்திர மோதல் வேற்று கிரகத்தில் இருக்கும் அந்த அறிவு ஜீவிகளால் நாம் பார்த்த அதே நேரத்தில் பார்க்க இயலாது. அவர்கள் இந்த காட்சியைப் பார்க்க வேண்டுமாயின் ஒரு லட்சம் வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒருகால் சார்பியல் கோட்பாட்டைப் பற்றி எதுவுமே அறிந்திராத நபர் இப்புத்தகத்தைப் படிப்பதாக இருந்தால் இவருக்கு இது பெரும் புதிராகவே இருக்கக் கூடும். ஆயினும் மற்றவர்கள் இதற்குரிய காரணத்தைப் புரிந்து கொள்வதால் இது மிகச் சாதாரணமான எளிய உண்மையாக எடுத்துக் கொள்வார்கள்!

ஆம்! ஓரிடத்தில் நடைபெற்ற ஒரே நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி ஒரு சிலருக்கு உடனே நடைபெற்றதாகவும் வேறு சிலருக்கு ஒரு இலட்சம் வருடங்கள் கழித்து நடைபெற்றதாகவும் தெரிகிறது! இதில் ஏதேனும் ஒரு கூற்றை (உடனே நடந்ததாகக் கூறும் கூற்று) மெய் என்றும் மற்றதைப் பொய் என்றும் கூற முடியுமா? முடியவே முடியாது. இரண்டு கூற்றுமே மெய்யாகும்! ஏனிந்த விபரீதம்! வேறொன்றும் இல்லை சூரியன், வால் நட்சத்திரம், பார்வையிடும் நபர்கள் மட்டுமின்றி காலமும் சார்பானது என்பதாலேயே சூரியனில் நிகழ்ந்த மோதலின் காட்சி அதைப் பார்வையிடும் குழுக் களுக்கிடையில் வெவ்வேறு காலத்தில் தென்பட்டது. எனவே காலத்தின் இயல்பு அதைப் பார்வையிடும் பார்வையாளர் களைச் சார்ந்ததே என இதிலிருந்து விளங்குகிறது.

இப்போது நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தில் காலத்தைப் பார்வையிடும் நபர் நம் போன்று சார்பியல் நிலைக்கு உட்பட்டவர் அன்று. அவன் இம் மாபெரும் பேரண்டத்தின் படைப்பாளன். அவன் சார்பியலைக் கடந்த முழுமை (Absolute)யானவன். எனவே அவன் முன்னர் இல்லாமல் இருந்து விட்டு நாளையும் இல்லாமல் போய் விடும் நபர் அன்று. அவன் எப்போதும் உள்ளவன். அவன் தனது இயற்பியல் குணத்தில் தன்னிறைவு பெற்று அதே நிலையில் (அந்த ஒரே நிலையில்) என்றென்றும் உள்ளவன். எனவே அவனுக்கு கடந்த காலம் அல்லது எதிர்காலம் என்பதெல்லாம் இல்லை. அவனுக்கு எல்லாமே நிகழ்காலம்!

இதையே வேறு விதத்தில் கூறினால் கடந்து சென்ற எல்லாக் காலங்களிலும் அவன் இருந்தான். அப்போது எந்தெந்த (அவனுக்கே உரிய) இயற்பியல் நிலையில் அவன் இருந்தானோ அதே நிலையிலேயே இப்போதும் இருக்கிறான். மேலும் வரப்போகும் எதிர்காலம் யாவிலும் அவன் இருப்பான். அப்போது என்னென்ன இயற்பியல் நிலையில் அவன் இருப்பானோ அதே நிலையிலேயே அவன் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறான் என்பதாகும்.

சுருங்கக் கூறின் “முழுமை (Absolute) எனும் சொல்லின் ஆழமான மற்றும் நிறைவான அர்த்தத்தில் அவன் முழுமை யானவன். எனவே கடந்த காலமோ,எதிர்காலமோ இல்லாத அவனுக்கு வெறும் 2000 கோடி வருடம் என்பது வினாடியைப் போன்று அற்பமானதே எனப் பொருள்படக் கூறினால் அது ஏழாம் நூற்றாண்டைப் பொருத்தவரை பிரமிக்கச் செய்யும் ஆழமான ஓர் அறிவியல் உண்மையன்றோ! எனவே“ஆகுக! என அவன் ஏதேனும் ஒன்றுக்கு (தன் மனதில் உள்ள நாட்டத் தில் உருவான பொருளுக்கு) கட்டளை இட்டால் `உடனே அது ஆகிவிடும் எனக் கூறினால் அவனைப் பொருத்த வரை (நம்மைப் பொருத்தன்று) மறுகணமே அது தோன்றி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மேலும் பெருவெடிப்பு நிகழ்ந்த போது காலம் என்பது எல்லையற்ற அடர்த்தி (infinite density) கொண்டதாக இருந்தது என ஹாக்கிங் கூறியதை நாம் முன்னர் கண்டோம். ஹாக்கிங் கூறியது மெய்யென்றால் இறைவனுடைய கட்டளைக்கும் பேரண்டத்தின் தோற்றத்திற்கும் இடையில் கால இடைவெளி எதுவும் இருக்க இயலாது என்பது மிகத் தெளிவாகும். ஏனெனில் காலம் அப்போது எல்லையற்ற அடர்த்தியைக் கொண்டிருந்தது என்பதால்!

மானிடப் பார்வையில் படைப்புக் காலம்

இறைவன் சார்பியல் நிலைக்கு அப்பாற்பட்டு எல்லா நிலைகளிலும் முழுமையானவனாக இருப்பதால் சார்பியல் பண்புகளுக்கு அவன் கட்டுப்படுவதில்லை. எனவே சார்பியல் பண்புகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட இயற்பியல் அமைப்பைக் கொண்ட மனிதர்களால் உணரப்படும் 2000 கோடி வருடத்தின் கால அளவு என்பது இறைவனைப் பொருத்தவரை அர்த்தமற்றதாகும். ஹாக்கிங் அவர்களின் காலத்தின் எல்லையற்ற அடர்த்தி பற்றிய அறிவியல் கண்டு பிடிப்பு நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட திருமறை வசனத்தை (உடனே ஆகிவிடும்!) மேலும் மேலும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது எனும் விபரங்களை இப்போது நாம் ஐயத்திற்கு இடமின்றி கண்டு தெளிந்தோம்.

எனவே இப்போது சார்பியல் நிலைக்குக் கட்டுப்பட்ட மனிதர்களின் பார்வையில் பேரண்டம் தோன்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு எவ்வளவு என்பதைப் பற்றித் திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

இது குறித்து திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

வானங்களையும், பூமியையும் அதற்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

(அல்குர்ஆன:50:38.)

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான்.

(அல்குர்ஆன்:7:54.)

இறைவன் பேரண்டத்தை `ஆகுக! எனக் கட்டளை யிட்ட உடனே (மனிதர்களின் கால அளவின்படி மறுகணமே) பேரண்டம் தோன்றி விட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது எனக்கூறி திருக்குர்ஆனை விமர்சனம் செய்பவர்களின் கூற்று தவறானது என்பதை மேற்கண்ட திருமறை வசனங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

ஆயினும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு நமது கணக்கின்படி ஆறு நாட்கள் என்பது எந்த விதத்தில் சரியாகும் எனும் கேள்விக்குள் நுழையும் முன்னர் இவ்வசனங்களைக் குறித்து செய்யப்படும் மற்றொரு விமர்சனத்தை எடுத்துக் கொள்வது சிறப்பாகும்.

அந்த விமர்சனம் வருமாறு :

பேரண்டம் படைக்கப்படுவதற்கு ஆறு நாட்களே ஆயின என ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் வேறு சில வசனங்களுடன் இது முரண்படுகிறது என்பதே அந்த விமர்சனமாகும். முரண்படும் வசனங்களாக கீழ்க்காணும் வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவைகளாவன :

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகவும் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:41:9.)

அதன் மேலே (பூமியின் மேல்) முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதில் உணவுகளை நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

(அல்குர்ஆன்:41:10.)

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.

(அல்குர்ஆன்:41:11.)

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்) இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.

(அல்குர்ஆன்:41:12.)

மேற்கண்ட வசனங்களில் அடிக்கோடிட்ட நாட்களின் எண்ணிக்கையை கூட்டினால் (2+4+2)மொத்தம் எட்டு நாட்கள் கிடைக்கின்றன. எனவே பேரண்டம் படைக்கப் படுவதற்கு இந்த வசனங்களில் எட்டு நாட்கள் எனக் கூறி இருக்கும் போது முன்னர் கண்ட வசனங்களில் ஆறு நாட்கள் எனக் கூறி இருப்பது முரண்பாடாகும் என்பதே அவர்கள் கூறும் விமர்சனமாகும்.

இந்த விமர்சனம் தவறாகும். ஏனெனில் புகை மூட்டம் போன்ற மேகத்திலிருந்து பூமி கோள வடிவில் உருவாகி வருவதற்கே வசன எண் 41 : 9 ல் கூறப்பட்ட இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் அதற்கடுத்த வசனத்தில் பூமியைக் கோள வடிவில் உருவாக்கியதோடன்றி அதன் தனிச் சிறப்பான அடையாளங்களாம் (Special features) மலைகள் (வாயு மண்டலம், கடல்கள், காடுகள்) உட்பட அதன் உயிராதாரப் பொருட்கள் அனைத்தையும் உருவாக்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே வசன எண் 41 : 9 ல் கூறப்பட்டுள்ள இரண்டு நாட்கள் வசன எண் 41 : 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நாட்களில் அடங்கி விடுகிறது. எனவே இந்த வசனங்களிலும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்களின் எண்ணிக்கை ஆறு என்பதால் முன்னர் கூறப்பட்ட முரண்பாடு அகன்று விடுகிறது.

நாட்களின் அளவு கோல்கள் யாவை?

திருக்குர்ஆனின் மீது நடத்தப்படும் அறிவியல் விமர்சனங்களில் மிக முக்கியமான விமர்சனமே இந்த ஆறு நாட்கள் தொடர்பானதாகும். வெறும் ஆறே நாட்களில் இவ்வளவு மகா மகா பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறுவது நகைப்பிற்கு இடமானதாகும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த விமர்சனம் ஒரு நாள் நம்முடைய கணக்கின்படியான 24 மணி நேரமாகும் எனக் கற்பனை செய்வதால் ஏற்பட்டதாகும்.

ஒரு நாள் என்பதன் கால அளவு 24 மணி நேரமாகும் என்பது நமது பூமிக்கு மட்டுமே செல்லுபடியாகும் கால அளவாகும். ஆனால் இந்தக் கால அளவு நமக்கு கூப்பிடு தொலைவில் இருக்கும் சந்திரனில் கூட செல்லுபடியாகாது. அங்கு ஒரு நாள் என்பது நம்முடைய 24 மணி நேரத்தைப் போன்று 28 மடங்காகும். அங்கு மாதமும் நாளும் ஒரே கால அளவைக் கொண்டதாகும். இதற்கு மாறாக வியாழன் (Jupiter) கோளில் ஒரு நாள் என்பது வெறும் 10 மணி நேரமாகும்.

நாள் என்றால் எங்கும் எப்போதும் 24 மணி நேரமே எனும் பல்லவியை திருக்குர்ஆன் பாடிக் கொண்டிருப்பதில்லை என இத்திருமறையை ஒரே ஒருமுறை படித்தவர்களால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மேலும் திருக்குர்ஆன் நாள் என்ற சொல்லை வெவ்வேறு கால அளவைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தி இருப்பதையும் நாம் பார்க்க முடியும். சான்றாக பேரண்டம் அழிக்கப்பட்ட பிறகு அங்கு நிலைநிற்கப் போகும் நாளைப் பற்றிக் கூறும் போது அந்த நாள் நம் நமது பூமியில் கணக்கிடும் 50,000 வருடங்களுக்குச் சமமானது எனக் கூறுகிறது.

(பார்க்க 70 : 4)

இதைப் போன்றே இப்போது நாம் எந்தப் பூமியில் வசித்துக் கொண்டிருக்கிறோமோ மேலும் எந்தப் பூமியின் 24 மணி நேரத்தை ஒரு நாள் என்று கூறுகிறோமோ அதே பூமியின் ஒரு நாள் என்பது இறைவனிடத்தில் எந்த அளவு கோலால் அளக்கப்படுகிறது என்பதைக் கீழ்க்கண்டவாறு திருமறை கூறுகிறது :

(முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசர மாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.

(அல்குர்ஆன்:22:47.)

மேற்கண்ட வசனத்திலிருந்து தெரியவரும் விபரங்களாவன : இறைவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து குற்றம் புரிந்தால் மறுமையில் வேதனை செய்யப்படுவீர்கள். மேலும் இந்த மறுமை சமீபமானது என இறைத்தூதர் மக்களை எச்சரித்த போது அதற்குப் பதிலாக அம்மக்கள் இறைத் தூதரிடம் “நீ கூறுவது உண்மையாக இருந்தால் அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வா! எனக் கேலி செய்தனர். இதைக் குறித்து இறைவன் தன்னுடைய தூதரிடம் கூறும் விபரமே மேற்கண்ட வசனமாகும்.

இந்த வசனத்தில் மறுமை சமீபமானது என இறைத் தூதர் கூறத் தொடங்கி பல வருடங்கள் ஆன பிறகும் மறுமை வராததற்குக் காரணம் இந்த அற்பமான பூமியைப் பொருத்த அளவில் கூட இறைவனிடம் ஒரு நாள் என்பது எந்தக் கால அளவைக் கொண்டதோ அந்தக் கால அளவு நமது கணக்கின்படி 3,65,000 (1000 வருடங்களுக்கு) நாட்களுக்கு சமமானதாகும். எனவே மறுமை சமீபமானது என 1400 வருடங்களுக்கு முன் இறைத் தூதர் கூறியது மனிதர்களின் கணக்குப்படியன்று. அது பூமியைப் பொருத்த வரையிலான இறைவனின் கணக்குப்படியாகும். எனவே இறைவனின் கணக்குப்படி மறுமை அப்போதும் சமீபமாகவே இருந்தது என்பதை இறைத் தூதரைக் கேலி செய்த மக்களை இந்த வசனம் எச்சரிக்கிறது.

இந்த அற்பமான பூமியைப் பொருத்தவரை இறைவன் ஒரு நாள் எனக் குறிப்பிடுவது நாம் கணக்கிடும் 3,65,000 நாட்களையே எனில் இம்மாபெரும் பேரண்டத்தில் ஒரு நாள் என்பது நமது கணக்கின்படி மாபெரும் கால அளவைப் பெற்றதாகவே இருக்கக் கூடும் என நம்மால் யூகிக்க முடியுமேயன்றி பூமின் நாளைப் பற்றி இறைவன் வெளிப்படையாகக் கூறியதைப் போன்று பேரண்டத்தின் நாளின் (பேரண்டம் படைக்கப்படும் போது நிலவிலிருந்த நாளின்) கால அளவை இறைவனே கூறாதவரை நம்மால் அனுமானிக்க இயலாது.

நமது பூமியைப் பொருத்தவரை ஒரு நாள் என்பதற்கு நம்மிடம் இருக்கும் அளவு கோல் (Creterion) பூமி அதன் அச்சில் ஒரு முறை சுற்றும் கால அளவாகும். ஆனால் பூமியோ, இதர கோள்களோ, நட்சத்திரங்களோ, காலக்சிகளோ படைக்கப்பட்டிராத, ஆனால் அவை யாவும் படைக்கப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் `ஒரு நாள் என்பதன் அளவு கோல் என்ன என்பதை எப்படி நிர்ணயிப்பது?

பேரண்டம் தோன்றுவதற்கு முன்னர் நிலை நின்ற காலத்தின் அளவு கோலை நம்மால் அறிய முடிந்தால் அதை வைத்தாவது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எவ்வளவு நாட்கள் தேவைப்பட்டன என்பதைக் கண்டறிய முடியும். ஆனால் நாம் அறிந்திருக்கும் அறிவியல் விதிகள் பேரண்டத்தின் தொடக்கம் குறித்த வினாடிக்கு முன்னர் உள்ள எதையும் கண்டுபிடிக்கும் திறமையைப் பெற்றிருக்கவில்லை.

இதைப் பற்றி ஹாக்கிங் இவ்வாறு கூறுகிறார்.

வரையறையில்லாத காலம்

`பேரண்டம் எல்லையற்ற அளவு சின்னதாகவும் எல்லை யற்ற அளவு அடர்த்தியாகவும் இருந்த போது, `பெருவெடிப்பு என அழைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது என ஹப்பிளின் தரிசனங்கள் (Observations) அபிப்பிராயப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனம் (Perdiction) செய்யும் அறிவியல் விதிகளின் அனைத்துத் திறமைகளும் பழுதடைந்து விடும்.

இந்தக் காலகட்டத்திற்கு முன் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்திருந்தால் அப்பொழுதும் இப்போதுள்ள கால கட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவைகளுக்கு அதனால் பாதிப்பை ஏற்படுத்த இயலாது. கிரகித்தறியக் கூடிய பின்விளைவுகள் எதுவும் அதற்கு இல்லாததால் அவைகளின் உள்ளமையைப் புறக்கணிக்கலாம். முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பில் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்தத் தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்.

(பக்கம் : 9)

மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் கூற்று பெரு வெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தால் அவைகளைக் கண்டு பிடிக்கும் திறமை நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு இல்லை என்பதைத் தெரிவிக்கிறது. அவ்வாறு ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தால் கூட அவை நடைபெறவில்லை எனப் புறக்கணிக்கலாம் என்கிறார் அவர். ஏனெனில் அவ்வாறு ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தால் அவைகளின் பின் விளைவுகள் பெருவெடிப்பு நிகழ்ச்சித் தொடர்களில் காணப்பட வேண்டும் எனவும் ஆனால் அப்படி ஏதும் இப்போது காணப்படவில்லை என்பதுமே இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் என்றும் கூறுகிறார். மேலும் மற்றொரு கருத்தையும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெருவெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.

மேற்கண்ட விபரங்களிலிருந்து பேரண்டம் படைக்கப்படும் முன்னர் வரையறுக்கப்பட்ட காலம் எதுவும் இல்லை என்பதாலும் அவ்வாறு இருந்திருந்தாலும் நம்மால் அதைக் கண்டு பிடிக்க இயலாது என்பதாலும் பேரண்டம் படைக்கப் பட்ட காலத்தில் ஒரு நாள் என்பது என்ன வென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் நிர்ணயிக்க முடியாது என்பது தெளிவு. இந்த இக்கட்டான நிலையில் பேரண்டம் படைப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக திருமறை கூறும் நாட்களின் கால அளவு என்ன என்பதை நம்மால் கண்டு பிடிக்க இயலாது என்பது தான் முடிவா? இதற்கோர் தீர்வே இல்லையா?

கண் சிமிட்டும் தீர்வு

திருமறை கூறும் பேரண்டம் படைக்கப்பட்ட நாட்களின் கால அளவை நம்மால் கண்டுபிடிக்க இயலவே இயலாதா? எனும் வினாவுடன் மெய்யும் பொய்யும் பிரித்தறிவிக்கும் இந்த அற்புதத் திருமறையை ஆய்வுக் கண்களோடு பார்வை யிட்டால் அறிவியல் கண்களைக் கூட இருட்டாக்கி விட்ட `வினோத சூத்திரங்களால் (singularity theorems) இம்மியும் பாதிக்கப்படாமல் `அந்த நாட்களின் கால அளவை அறிவித் துக் கொண்டிருக்கும் `குர்ஆன் சூத்திரம் (Quranic formula) ஒன்று அதன் வசனங்களில் இழையோடுவதைக் கண்டு பிரமித்துப் போகிறோம்! திருமறை கூறுகிறது :

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்:16:77.)

பேரண்டத்தின் அழிவைப் பற்றிய தகவலே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் பேரண்டத்தின் அழிவு எப்போது ஏற்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவைக் குறிப்படுவதற்கு எந்த அளவுகோல் பயன்படுத்தப்பட்டதோ அதே அளவுகோலே அதன் அழிவு எப்போது எனக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானதாகும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது பேரண்டம் அழிவுறும் நேரம் என்பது இமை வெட்டுவதை விடக் குறைந்த நேரத்தில் வந்திருக்க வேண்டும். இது கூறப்பட்டு 1428 வருடங்களாகியும் அந்த நேரம் இன்னும் வந்து விடவில்லை! ஏன்? காலம் சார்பற்றது, அது சுயம் பூரணமானது (ஹளெடிடரவந) என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை வாழ்ந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது.

எனவே அதில் மனிதனுக்கும், இறைவ னுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர். இதன் காரணமாக இந்த வசனம் பேரண்டத்தின் அழிவு எப்போது என்று கூறவில்லை. ஆனால் பேரண்டம் அழிவைத் தொடங்கி விட்டால் எவ்வளவு நேரத்தில் அழிவு முடிவடையும் என்பதையே கூறுவதாக சிலர் எண்ணிக் கொண்டனர். ஆனால் இந்த அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் கண் இமைக்கும் நேரத்தில் இப்பேரண்டம் அழிவுற்று விடாது.

(இப்படி நினைப்பது உண்மையில் நகைப்புக்குரியதாகும் என்பதையும் கருத்தில் கொள்க.)

பேரழிவு நடைபெறும் போது நிகழக் கூடிய சில நிகழ்ச்சிகளைப் பற்றி திருமறை பல இடங்களில் கூறுகிறது. அவற்றுள் சில இவ்வாறு கூறுகிறது :

சூரியன் சுருட்டப்படும் போது; நட்சத்திரங்கள் உதிரும் போது; மலைகள் பெயர்க்கப்படும் போது; கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது; விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது

(அல்குர்ஆன்:81:1-5.)

வானம் பிளந்து விடும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது, கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது

(அல்குர்ஆன்:82:1-3.)

வானம் பிளந்து விடும் போது, கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அடிபணியும் போது, பூமி நீட்டப்படும் போது

(அல்குர்ஆன்:84:1-3.)

மேற்கண்ட இறை வசனங்களை ஒரு முறை பார்த்தாலே எவ்வித விளக்கமும் தேவையின்றி இவை யாவும் வெறும் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடைபெற இயலாது என்றும் எனவே கண் இமைக்கும் நேரத்தை விட குறைவான நேரம் என்பதை நமது கணக்கின்படி எடுத்துக் கொண்டு பேரண்டம் அழிவுற்று முடியும் நேரத்தை அதனுடன் பொருத்திப் பார்த்தாலும் அந்த நேரத்திற்குள் பேரண்டம் அழிவுற்று முடிந்து விடாது.

எனவே மேற்கூறப்பட்ட வசனத்தில் பேரண்டத்தின் அழிவைக் குறித்து தெரிவிக்கப்பட்ட கால அளவு எக்காரணத்தைக் கொண்டும் மனிதனின் காலக் கணக்கினடிப்படையிலன்றி பேரண்டத்தைக் குறித்து இறைவனிடம் உள்ள கணக்கினடிப்படையிலேயாகும் என்பது தெளிவாகிறது. இந்த முடிவை மற்றொரு கோணத்திலும் சரிபார்ப்போம்.

இறை மறுப்பாளர்களின் கேலியும், கேள்வியும்

பேரண்டம் எப்போது அழிவுறும் என இறைவன் கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. இறைவனால் அனுப்பப்பட்ட தூதராம் முஹம்மது (இறைவனின் சாந்தி அவர் மீது நிலவட்டுமாக!) நபியை ஏற்காமலும், இறைவனுக்குக் கட்டுப்படாமலும் இருந்தால் மறுமையில் தண்டிக்கப்படுவீர்கள் எனத் திருக்குர்ஆன் இடைவிடாமல் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. இதைக் கேட்ட இறை மறுப்பாளர்கள் “மெய்யாகவே அப்படி ஒரு மறுமை இருந்தால் அது எப்போது வரும்? அது நடைபெறும் நேரத்தை எங்களிடம் கொண்டு வா! எனக் கூறி கேலி செய்து கொண்டே வந்தனர்.

இப்பரிகாசங்களுக்கு இறைவன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதில் சொல்கிறான். அதில் ஒன்றே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனமாகும். சான்றாக இறை மறுப்பாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதையும் அதற்கு இறைவன் தனது மாமறையில் பதிலளிப்பதையும் இவ்வாறு காணலாம் :

அந்த நேரம் எப்போது வரும் என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். அது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும் பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும் என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

(அல்குர்ஆன்:7:187.)

மேற்கண்ட இறை வசனத்தில் இறை மறுப்பாளர்கள் மறுமையின் நேரம் எப்போது எனக் கேட்பதையும் அந்த நேரத்தைப் பற்றிய அறிவு தன்னிடமே உள்ளது என்றும் அந்த நேரம் வந்தவுடன் நாமே அதை நிகழச் செய்வோம் என இறைவன் கூறுவதையும் கண்டோம். மற்றொரு சந்தர்ப்பத்தில் திருக்குர்ஆன் இறை மறுப்பாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறது.

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்) என்று அவர்கள் கேட்கின்றனர். ஒரே ஒரு சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே அது பிடித்துக் கொள்ளும்.

(அல்குர்ஆன்:36:48,49.)

மேற்கண்டவாறு பலவிதமான எச்சரிக்கைகள் இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்ட பின்னரும் நிராகரிப் பாளர்கள் தங்களது நையாண்டியை நிறுத்தாமல் “மறுமை உண்டென்றால் அது எப்போது? நீ உண்மையாளனாக இருந்தால் அதைக் கொண்டு வா எங்களிடம் எனக் கூறி இறைத் தூதரை அவமதித்து வந்தார்கள். அப்போது இறைவன் புறத்திலிருந்து மற்றொரு எச்சரிக்கை இவ்வாறு வருகிறது :

அவனே முந்தைய ஆது மற்றும் ஸமூது சமுதயத்தையும், (அதற்கு) முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் விட்டு வைக்காது அழித்தான். அவர்கள் மிகப் பெரும் அநீதி இழைத்து வரம்பு மீறியோர்களாக இருந்தனர். (லூத்துடைய சமுதாயமான) தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊரையும் ஒழித்தான். அதைச் சுற்றி வளைத்துக் கொள்ள வேண்டியது சுற்றி வளைத்துக் கொண்டது. உனது இறைவனின் அருட்கொடைகளில் எவற்றில் சந்தேகம் கொள்கிறாய்?இது முந்தைய எச்சரிக்கைகளில் ஒரு எச்சரிக்கை! நெருங்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது! அல்லாஹ்வையன்றி அதை வெளிப்படுத்துபவர் எவருமில்லை. இந்தச் செய்தியிலா ஆச்சரியப்படுகிறீர்கள்? அழாமல் சிரிக்கிறீர்கள். அலட்சியம் செய்வோராகவும் இருக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கே ஸஜ்தா (சிரம் பணிந்து) வணங்குங்கள்.

(அல்குர்ஆன்:53:50-62.)

இறைவனுடைய இந்த எச்சரிக்கையில் மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களையும்,அட்டூழியங்களையும் இறைவன் அனுமதித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றும் குற்றவாளிகளை அவன் தண்டிப்பான் என்றும் அழுத்தமாகக் கூறுவதோடு அவர்களின் மூதாதையர்கள் அவ்வாறு கொடுமைகள் புரிந்த போது அவர்களைத் தண்டித்த வரலாறுகளை நிராகரிப்போர்களுக்கு நினைவூட்டுகிறான்.

மேலும் இறைவனின் இத்தூதர் (முஹம்மத் – இறைவனின் சாந்தி அவர் மீது நிலவட்டுமாக!) தூதர்களின் பட்டியலில் இறுதியானவர்களாக இருப்பதால் உலக மொத்தத்திற்கும் இவரே தூதராக அனுப்பப்பட்டுள்ளார். எனவே இவருக்குப் பிறகு இவ்வுலகின் ஆயுள் முடிவடைகிறது. எனவே மறுமையின் நேரமும் நெருங்கி விட்டது என மறுமையைப் பற்றி கூறப்படும் வசனங்களிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மறுமையின் நேரம் நெருங்கி விட்டது என்பதைத் திரும்பத் திரும்ப திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

(பார்க்க : 6:31, 12:107, 20:15, 21:40, 22:55, 31:34, 33:63, 38:15, 41:47, 43:66,85, 47:18, 79:42,43)

இருந்த போதிலும் நிராகரிப்பாளர்கள் மறுமையை மறுத்துக் கூறி இறைத் தூதரைக் கேலி செய்வது தொடர்ந்து கொண்டிருந்த போது மேலும் உறுதி வாய்ந்த மிகத் தெளிவான வார்த்தைகளால் அவர்களை எச்சரிக்கை செய்கிறான் பேரண்டத்தின் படைப்பாளனாம் வல்ல இறைவன். அந்த எச்சரிக்கை தாம் நாம் முன்னர் கண்ட வசனத்தில் (16 : 77) கூறப்பட்டிருக்கும் (கண் சிமிட்டுவதை விடக் குறைந்த நேரத்தில் மறுமையின் நேரம் வந்து விடும் எனும்) செய்தியாகும்.

கேள்விக்கேற்ற பதில்

நாம் இது வரை கேட்ட திருமறை வசனங்களிலிருந்து நிராகரிப்பாளர்களின் கேள்வி மறுமையின் நேரம் எப்போது என்பதைப் பற்றியே ஆகும் என்பதை விளங்கிக் கொண்டோம். இதற்கு மாறாக மறுமை தோன்றி விட்டால் அது எவ்வளவு நேரத்தில் முடிவடையும் எனும் செய்தியில் யாருமே அங்கு அக்கறை காட்டவில்லை என்பதையும் ஐயமற விளங்கிக் கொண்டோம். மறுமையையே நம்பாதவர்கள் “மறுமை ஒன்று உண்டென்றால் அது எப்போது? எனும் கேள்வியைத் தாம் கேட்பார்களேயன்றி மறுமை வந்து விட்டால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் எனும் கேள்வியை எழுப்ப மாட்டார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

எனவே இறைத் தூதரிடம் அவர்கள் எழுப்பிய கேள்வி மறுமை (இப்பேரண்டம் அழிக்கப்பட்டு, மற்றொரு வடிவத்தில் இதைத் திரும்பப் படைத்து, மனிதர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, விசாரணை நடத்ததப்படுவதாகக் கூறப்படும் நிகழ்ச்சியின் நேரம்) எப்போது என்பதேயாகும் என்பதால் இறைத் தூதரிடம் அவர்கள் எதனைக் குறித்து கேள்வி தொடுத்துக் கொண்டிருந்தார்களோ அதனைக் குறித்தே திருமறையும் பதில் சொல்லியது என்பதை ஏற்றுக் கொள்வதில் இதற்கு மேல் யாருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லையன்றோ?

இப்போது நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட வசனத்தின் (16:77) பின்னணியை ஓரளவு விளங்கிக் கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள `நேரம் என்பது மறுமை எப்போது தொடங்கும் என்பதைப் பற்றியதே எனும் ஐயமறத் தெரிந்து கொண்டோம். எனவே இவ்வசனத்தில் குறிப்பிட்டபடி மறுமை ஏன் இன்னும் தொடங்கவில்லை என்பதை இப்போது ஆய்வு செய்வோம்.

வேறுபட்ட காலக் கணக்குகள்

நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட வசனத்தின் பொருள் சுருங்கக் கூறின் “(மறுமை) நேரத்தின் காரியம் கண் இமை வெட்டுவது போன்றதா அல்லது அதை விட நெருங்கியதோ அன்றி வேறு இல்லை என்பதாகும். இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டதற்கேற்ப காரியம் நடைபெற்றிருந்ததால் இந்த வார்த்தைகள் சொல்லி முடிப்பதற்குள் மறுமையின் நேரம் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இந்த வார்த்தை கள் சொல்லப்பட்டு 1428 வருடங்கள் கழிந்த பிறகும் மறுமை நேரம் துவங்கவில்லை. இது ஏன் என்பதே இப்போது நம் முன் இருக்கும் கேள்வியாகும். பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான்.

ஆனால் அந்தக் கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். அக்காலத்தில் நாமும் இல்லை நாம் அறிந்தவரை பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக்கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படியன்று.

எனவே இப்பேரண்டத்தின் அழிவு (மறுமையின் ஆரம்பம்) எப்போது என்பது குறித்து இறைவன் கூறியதும் நமது கணக்கின்படியன்று. மாறாகப் பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். இதன் காரணமாகவே மறுமை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதே இந்த வினாவிற்குரிய பதிலாகும்.

மேற்கண்ட பதிலைச் சரியாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு கண் இமை வெட்ட நமக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதைக் கவனிப்போம். இமை வெட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு வினாடியில் இரண்டு, மூன்று முறை நம்மால் இமை வெட்ட முடியும். ஆயினும் திருக்குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்துவிடும் எனக் கூறுவதில் திருப்தி அடையாமல் அதை விடக் குறைவான நேரத்தில் மறுமை வரக் கூடும் எனக் கூறுகிறது.

எனவே இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட் (milli second) கணத்தில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கம் இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

திருக்குர்ஆன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் அற்புதத்தின் பால் நாம் இப்போது வந்து சேர்ந்துள்ளோம்! ஆம்! யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவைக் கண்டுபிடிப்பதற்கான ஓர் அரிய சூத்திரத்தை இப்போது நாம் திருமறையிலிருந்து முதலாவதாகக் கண்டு விட்டோம். விளக்கமாகக் கூறுவோம்.

திருக்குர்ஆன் கூறும் கணித சூத்திரம்

பேரண்டத்தின் அழிவு (மறுமையின் ஆரம்பம்) எப்போது என்பது பற்றித் திருமறை கூறிய காலஅளவு ஏறத்தாழ 0.2 வினாடி எனத் திருமறை வசனத்திலிருந்து நாம் அனுமானித்தோம். ஆயினும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1428 வருடங்களாகியும் இப்பேரண்டம் இன்னும் அழிவுறத் துவங்கவில்லை.

எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதைய 1428 வருடங் களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1428 வருடங்களை விட அதிகம் என்பதாகும். சுருக்கமாக :

0.2 வினாடி > 1428 வருடங்கள்

இந்த இடத்தில் திருமறையின் கணக்குப்படி பேரண்டத்தின் 0.2 வினாடி என்பது உலகியல் கணக்கின்படி 1428 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை `1428 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1428 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் நிலைபெறும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகும்.

இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1428 வருடங்களுக்கு மேல் என்றே குறிப்பிட முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1428 என்ற எண் நிரந்தர ( Constant) மான தன்று என்றும் அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1429, 1430, 1431 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் வாசகர்கள் எளிதாக விளங்கி இருப்பீர்கள்.

இப்போது வாசகர்களிடம் மற்றொரு வினா எழலாம். “பேரண்டத்தின் 0.2 வினாடி என்பதன் சரியான விளக்கம் இப்போதும் மர்மமாகவே இருக்கிறதன்றி திட்டமாக அதன் காலத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லையே! இது ஏன்? என்பதே அந்த வினாவாக இருக்கும். இதை விளங்குவதற்கு நாம் வேறு சில விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே முதலாவதாக பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறப் பட்டிருக்கும் ஆறு நாட்கள் என்பதன் கால அளவு நமது உலகியல் கணக்குப்படி திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்தால் கணக்கிடுவோம். அக்கணக்கு வருமாறு:

கணக்கிடும் முறை

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம்  = 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்தம் 0.2 வினாடிகள் = 0.2 வினாடி X வினாடி X நிமிடம் X மணி

= 5 x 60 x 60 x 24 = 43200 (0.2 வினாடிகள்)

ஃ ஆறு நாட்களுக்கு = 43200 X 6 = 2259000 —– 1

பேரண்டத்தின் 0.2 வினாடியின் காலஅளவு = 1428 (உ.வ.மே)

ஃ 6 நாட்களில் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின்

கால அளவுக்கு நிகரான உலகியல் வருடங்கள் = 1428 x 2259000 = 370,13,76,000 (உ.வ.மே)

என்னவென்று புகழ்வோம் இம்மாமறை தந்த கணித சூத்திரம் தனை!

திருக்குர்ஆன் விடுக்கும் அறை கூவலிலிருந்து உருவா கும் ஏனைய புரட்சிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் பளிச்சிடுவது அதன் அறிவுப் புரட்சியாகும். அந்த அறிவுப் புரட்சியின் ஓர் அம்சமே இது போன்ற அறிவியல் புரட்சியாகும். திருமறையில் காணப்படும் அதன் அறிவுப் புரட்சி வையகத்தில் அதை ஈடு இணையற்ற அற்புதமாக விளங்கச் செய்கிறது!

இது வரை உலகில் தோன்றிய மாபெரும் அறிவியலாளர் களால் நடத்தப்பட்ட பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கே இப்பேரண்டம் உருவாகுவ தற்கு 500 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்களாயின என்பது. இந்த அறிவியல் உண்மையன்றோ திருமறையின் கணித சூத்திரம் கூறிக் கொண்டிருக்கிறது!

பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாளிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லோ ஷேப்லி கூறுகிறார்!

பேரண்டம் உருவாகுவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் று. ஹாக்கிங்!

பேரண்டம் உருவாக்கப்படுவதற்கு 370 கோடி (முழுமை செய்த எண்ணில்) வருடங்களுக்கு மேல் தேவைப்பட்டன எனக் கூறுகிறது இந்த அற்புத் திரு மறையிலிருந்து நாம் கண்ட கணித சூத்திரம்!

திருமறை கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறிவிளலளர்களால் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளோடு ஒட்டி வருகிறதல்லவா!

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் திருக்குர்ஆனை மெப்பிக்கிறதா? அல்லது பொய்ப்பிக்கிறதா? என்பதைக் கண்டறிய முயற்சி செய்பவர்களுக்கு மிகச் சிறந்த ஆதாரமே பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைப் பற்றிய திருக்குர்ஆன் கூறும் கணித சூத்திரமாகும். ஏனெனில் திருக்குர்ஆன் அறிவியலுக்கு முரணானது எனக் கூற நிராகரிப்பாளர்கள் பயன்படுத்தி வந்த முக்கியமான விமர்சனமே திருமறை கூறும் பேரண்டத்தின் படைப்புக் காலமாகும்.

இப்போது அவர்கள் எண்ணி வந்ததற்கு மாறாக திருமறை கூறிக் கொண்டிருக்கும் பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவை அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிரூபிக்கும் பணியையே செய்து வருகின்றன எனப் புரிந்து கொள்வதில் இதற்கு மேல் யாருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லை.

எதிர் நோக்கும் விமர்சனம்

பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவைக் கண்டுபிடிக்க திருமறையிலிருந்து நாம் பெற்ற சூத்திரத்தைக் காணும் நமது விமர்சகர்கள் இக்கணித சூத்திரம் நமக்கு உதவுவதை விட அவர்களின் நிலைபாட்டிற்கே கூடுதலாக உதவும் என மீண்டும் தப்பெண்ணம் கொள்ளக்கூடும். ஏனெனில் இப்பேரண்டம் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் நிலைநின்றாலும் திருமறை கூறிய பேரண்டப் படைப்பின் கால அளவுக்கு (6 நாட்களுக்கு) அது சாதகமாகவே அமையும். அதே நேரத்தில் இப்பேரண்டம் இன்னும் கிட்டத்தட்ட ஒரு பதினாயிரம் வருடங்கள் நிலைத்திருந்தால் அது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிவியல் அனுமானத்திற்கு எதிராக அமையும்.

சான்றாக இப்பேரண்டம் இன்னும் 8572 வருடங்கள் நிலைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தால் திருக்குர்ஆன் வழங்கப்பட்டு அன்றைக்கு (8572வருடங்கள் கழித்து) 10,000 வருடங்கள் (1428 + 8572) ஆகிவிட்டது எனப் பொருளாகும். அந்த நிலையில் திருமறை அப்போதும் கூறிக் கொண்டிருக்கும் “மறுமை நேரம் கண் இமைப்பது போன்றதோ அல்லது அதை விடக் குறைந்தோ அன்றி வேறில்லை எனும் திருமறை வசனத்திற்கு என்ன பொருளாக இருக்கக் கூடும்? 

அப்போது அதன் பொருள் பேரண்டத்தின்0.2 வினாடி (கண் இமைப்பதை விடக் குறைந்த நேரம்) என்பது உலகியல் கணக்குப்படி10,000 வருடங்களை விட மிகுதியானது என்பதாகும். இந்த நிலையில் திருமறையில் இருந்து நாம் பெற்ற சூத்திரத்தின்படி பேரண்டம் படைக்கப்பட்டதாகத் திருமறை கூறிய ஆறு நாட்களின் கால அளவு கணக்கிட்டால் அது இவ்வாறு அமையும்.

விமர்சகரின் கணக்கு

பேரண்டத்தின் 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி = 10,000 வருடங்கள்

6 நாட்களில் உள்ள மொத்தம்

0.2 வினாடி அலகுகள் =22,59,000 —– 1

ஓர் அலகு 0.2 வினாடியின்

கால அளவு 10,000 வருடங்களுக்கு

மேல் என்றால் 22,59,000

அலகுகளின் கால அளவு = 22,59,000 ஒ 10,000 =2259,00,00,000 வருடங்களுக்கு மேல்.

மேற்கண்ட கணக்கின் அடிப்படையில் திருக்குர்ஆன் வழங்கப்பட்ட பின்னரும் பதினாயிரம் வருடங்கள் இப் பேரண்டம் நிலை பெற்றால் பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் உலகியல் கால அளவு திருமறையிலிருந்து பெற்ற கணித சூத்திரத்தினடிப்படையில் கணக்கிடும் போது 2,250 கோடி வருடங்களுக்கு மேல் எனும் இலக்கத்தைக் காட்டுகிறது. இது அறிவியலாளர் ஹாக்கிங் கூறும் உயர்ந்த அளவாகிய 2000 கோடி வருடங்களை மீறி விடுகிறது. எனவே நமது விமர்சகர்கள் இக்கணித சூத்திரம் திருக்குர்ஆன் அறிவியலுக்கு முரணானது எனும் கருத்தை ஊர்ஜிதப் படுத்தவே உதவுகிறது என வாதிடக் கூடும் எனக் கூறினோம்.

இந்த இடத்தில் இப்பேரண்டம் இன்னும் 8500 வருடங்களுக்கு மேல் நிலை பெற்றிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது எனும் மறுகேள்வி எழலாம். ஆயினும் இன்றைய அறிவியல் அனுமானங்களின்படி இச்சூரியக் குடும்பம் அழிவுறுவதற்கே பல மில்லியன் வருடங்கள் தேவைப்படும் எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். பேரண்டம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சம் 1000 கோடி வருடங்களுக்குள் அழிந்து விடுவதற்கான எவ்வித அறிகுறியும் இப்போது தென்படவில்லை எனக் கூறுகிறார் ஹாக்கிங்!

“1000 கோடி வருடங்கள் எங்கே! வெறும் 10,000 வருடங்கள் எங்கே? எனக் கூறி நமது கணிப்பை விமர்சகர்கள் எள்ளி நகைக்கக் கூடும். ஆனால் திருமறை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மற்றுமோர் அற்புதத்தையும் அவர்கள் பார்த்து விட்டுப் பிறகு நகைப்பதா அல்லது திகைப்பதா? என முடிவு செய்யட்டும்.

திகைக்க வைக்கும் திருக்குர்ஆன்

திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்திலிருந்து இப்பேரண்டம் வெறும் பதினாயிரம் வருடங்கள் கூட நீடிக்கப் போவதில்லை எனக் கண்டோம். ஆனால் இப்பேரண்டம் ஆயிரம் கோடி வருடங்களுக்குள் கூட அழிவுறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என ஹாக்கிங் கூறுகிறார்.

இப்போது திருக்குர்ஆன் கூறுவது உண்மையாக இருப்பின் ஒன்று ஹாக்கிங் செய்த அறிவியல் அனுமானம் தவறாக இருக்க வேண்டும் அல்லது பேரண்டம் விரைவிலேயே அழிவதற்கான அறிகுறிகள் தென்பட்டிருந் தும் அவர் பொய் கூறுவதாக இருக்க வேண்டும். இவற்றுள் எது உண்மை என திருக்குர்ஆனைக் கேட்டால் அதன் வரிகளுக்கிடையில் இருந்து வெளிப்படும் பதில் நம்மை வியக்கச் செய்கிறது.

ஆம்! ஹாக்கிங் அவர்களின் அறிவியல் அனுமானத்தி லும் தவறில்லை, அவர் கூறுவது பொய்யும் இல்லை என்பதே திருமறையின் பதிலாகும். இதெப்படி சாத்தியமாகும் என நம்மைத் திகைப்பிலாழ்த்தும் சத்தியத் திருமறை அதற்கான காரணத்தையும் அதன் பற்பல வசனங்களில் கூறிக் கொண்டி ருக்கிறது. சான்றாக :

உங்களிடம் அந்த நேரம் “திடீரென வரும் வரை அல்லது (மறுப்போர்க்கு) பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏக இறைவனை) மறுப்போர் இதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள்.

(அல்குர்ஆன்:22:55.)

அவர்கள் உணராத நிலையில் திடீரென்று அந்த நேரம் அவர்களிடம் வருவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?

(அல்குர்ஆன்:43:66)

பேரழிவுக்கு அறிகுறிகள் இல்லை

மேற்கண்ட திருமறை வசனங்களில் அடிக்கோடிடப்பட்ட வாசகங்களைக் கவனித்தால் அவற்றுள் பேரண்டத்தின் அழிவைப் பற்றி மிக முக்கியமாக இரண்டு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். முதலாவது பேரண்டத்தின் அழிவு திடீரென ஏற்படக் கூடியதாகும் என்றும் இரண்டாவது அந்த அழிவு நிகழப் போகும் விபரத்தை நம்மால் முன்கூட்டியே உணர்ந்து கொள்ள முடியாது என்பதுமாகும்.

பேரண்டத்தின் அழிவு நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்குரிய அறிகுறிகள் இப்பேரண்டத்தில் இருந்து வருவது நமது அறிவியல் கண்களுக்குப் புலப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அறிகுறிகள் எதுவும் தென்படாமல் பேரண்டம் அழிவுறுமாயின் அதுவே நம்மால் உணர்ந்து கொள்ள இயலாத நிலையிர் பேரண்டம் அழிவுறும் நிகழ்ச்சியாகும். இப் பேரண்டம் அப்படிப்பட்ட நிலையிலேயே அழிவுறும் என்பதே மேற்கண்ட திருமறை வசனங்கள் தெரிவிக்கும் செய்தி யாகும்.

(மேலும் பார்க்க 6 : 31, 12 : 107, 21 : 40, 47 : 18)

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பேரண்டத்தின் அழிவு எந்தக் கணத்தில் துவங்குமோ அந்தக் கணம் வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் நமக்குப் (நமது அறிவியல் அறிவுக்கு) புலப்படாது என்பதையே திருமறை கூறிக் கொண்டிருக்கிறது. திருமறையின் இக்கூற்றிலிருந்து 1000 கோடி வருடங் களுக்குள் பேரண்டம் அழிவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனும் ஹாக்கிங் அவர்களின் அனுமானம் தவறான அனுமானம் இல்லை என்பதும் அவர் கூறியது பொய் இல்லை என்பதும் ஐயமறத் தெளிவாகி, நம்மை வியப்பிற்குள் ஆழ்த்துகிறது!

ஹாக்கிங் அவர்களின் எந்த அறிவியல் அனுமானம் (ஆயிரம் கோடி வருடங்களுக்குள் இப்பேரண்டம் அழியாது எனும் அனுமானம்) திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்தை திருமறையின் விமர்சகர்களுக்குச் சாததகமாக மாற்றி விடும் எனக் கருத வாய்ப்பு இருந்ததோ உண்மையில் அதே ஹாக்கிங் அவர்களின் அதே அறிவியல் அனுமானத்தை இந்த ஒப்பற்ற மாமறை தனக்கே சாதகமாக, தன்னையே மெய்ப்பிக்கும் அறிவியல் அனுமானமாக மாற்றி விட்ட வித்தையைக் கண்டு திகைப்படையாமல் இருக்க முடியுமா?

இப்பேரண்டம் அழிவதற்கான எந்த அறிகுறியும் அது அழிவுறப் போகும் வினாடி வரை தென்படவே தென்படாது எனத் திருமறை கூறினால், ஆம்! ஆம்! தென்படவே தென்படவில்லை எனக் கூறி திருமறையை மெய்ப்பிக்க இத்துறையில் ஆற்றல் பெற்ற அறிவியல் நிபுணர்களும் இருக்க வேண்டுமல்லவா? உண்மையிலேயே அப்பணியைத் தான் ஹாக்கிங் போன்ற உலகின் தலை சிறந்த விஞ்ஞானி கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எனும் போது திகைப்பிற்கு மேல் திகைக்க வைக்கும் இம்மாமறை திருக்குர்ஆனின் தெய்வீக ஆற்றலுக்கு இதை விடச் சிறந்த அறிவியல் ஆதாரம் வேறென்ன வேண்டும்?

பேரண்டம் அழிவதற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படாமல் அது திடீரென அழிவுறும் என்பது இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு வியப்பளிப்பதில்லை. ஏனெனில் அதனை ஆக்கவும், அழிக்கவும் ஆற்றலுள்ளவன் தன் ஆளுகையில் அதை வைத்திருக்கிறான் என்றும் அழிப்பதற் கென்றே படைக்கப்பட்டிருக்கும் இப்பேரண்டத்தை அவன் நாடிய போது அழிப்பான்; ஆயினும் அவன் அழிக்கப் போகும் கணம் வரை அதில் அழிவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படப் போவதில்லை என்பதும் திருக்குர்ஆனிலிருந்து அவர்கள் விளங்கியுள்ளார்கள்.

சான்றாக உலகை உலுக்கிய இரண்டு அழிவுச் செய்திகளை சில வருடங்களுக்கு முன் நாம் பார்த்தோம். முதலாவது பாப்ரி மஸ்ஜிதின் கட்டிடத்திற்கு மேல் விஷமிகள் ஏறும் வரை அக்கட்டிடம் அழிவதற்கான எந்த அறிகுறியும் அக்கட்டிடத்தில் தென்படவில்லை. ஆனால் விஷமிகள் அதன் மீது ஏறிய அடுத்த கணமே அது அழியத் துவங்கிற்று. இதைப் போன்று உலக வர்த்தக மையத்தை (World Trade center) விஷமிகள் விமானத்தால் இடிக்கும் வரை அக்கட்டிடத்தில் அழிவதற்கான எந்த அறிகுறியும் தென்பட்டிருக்காது. ஆயினும் விஷமிகள் அதனைத் தாக்கியதும் அது அழிவுறத் துவங்கியது. இதைப் போன்று பேரண்டத்தை அழிக்க வல்ல பேரொலி (நம் அறிவுக்கு இது வரை எட்டாத விசித்திரமான ஒலி) ஒலிக்கப் பட்ட அதே கணத்தில் அதன் அழிவு தொடங்கி விடும்.

இயற்கையும் செயற்கையும் வெவ்வேறானவை

இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மிகமிக முக்கியமான செய்தி யாதெனில் உலக வர்த்தக மையம் சில விஷமிகள் தகர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறையிலிருந்து மிகவும் நம்பத் தகுந்த செய்திகள் அமெரிக்க ஜனாதிபதிக்கு அது தகர்க்கப்படும் சில நாட்களுக்கு முன் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தங்கள் நாட்டிலேயே மிகச் சிறந்த ஒரு பொறியாளர்கள் குழுவை அமைத்து அக்கட்டிடம் உடனே அழிவுறுவதற்கான அறிகுறிகள் ஏதேனும் அக்கட்டிடத்தில் தெரிகிறதா? என சோதித்து அறிக்கை சமர்ப்பிக்கக் கூறினால் அவரைப் பற்றி என்னென்று சொல்வது? ஒரு கால் ஒரு ஜனாதிபதி இப்படிப்பட்ட நிலையில் ஒரு பொறியாளர் குழுவை அமைத்ததாகவும் அக்கட்டிடத்தைச் சோதனையிட்டு அக்கட்டிடம் குறைந்த பட்சம் மூன்று நூற்றாண்டுகளுக்குள் அழிவுறும் அறிகுறிகள் எதுவும் அதில் தென்படவில்லை என அறிக்கை சமர்ப்பித்ததாகவும் வைத்துக் கொள்வோம்.

இந்த அறிக்கைக்கும் உளவுத்துறை சமர்ப்பித்த தகவலுக்கும் இடையில் என்ன தொடர்பு?

பொறியாளர்களின் இந்த அறிக்கையைப் பார்த்து விட்டு பகுத்தறிவுள்ள யாரும் பொறியாளர்களின் ஆய்வறிக்கையில் தவறு நேர்ந்துள்ளது என்றோ அல்லது அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றோ கூற மாட்டார்கள். ஆயினும் விஷமிகள் தடுக்கப்படவில்லையெனில் அக்கட்டிடம் உடனே தகர்க்கப்பட்டு விடும் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கும்.

இதைப் போலவே இப்பேரண்டம் 1000 கோடி வருடங்களுக்குள் அழிவுறும் அறிகுறிகள் அப்பேரண்டத்தில் தென்படவில்லை என அறிவியலாளர்கள் கூறினால் அக்கூற்று உண்மையாகவே இருந்த போதிலும் திருக்குர்ஆன் கூறும் பேரண்டத்தின் அழிவு அறிவியலாளர்கள் கூறுவதி லிருந்து வேறுபட்டதாகும் என்பது மிக எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அறிவியலாளர்கள் பேரண்டத்தின் இயற்கையான (பேரண்டத்தை இயக்கும் விதிகளின்படி நடைபெறும் நிகழ்ச்சிகள்) அழிவைக் குறித்துப் பேசும் போது திருக்குர்ஆன் இறைவனால் நிகழ்த்தப்படும் செயற்கையான (நாம் இது வரை அறிந்திராத மற்றொரு விதியால் செய்யப் படுபவை) அழிவைக் குறித்தே பேசுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனின் அற்புதங்களில் இதுவும் ஒன்று

இந்த இடத்தில் நாம் மனதிற்கொள்ள வேண்டிய செய்தி யாதெனில் இப்பேரண்டம் ஆயிரம் கோடி வருடங்களுக்குள் அழியப் போவதில்லை எனும் அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் தீர்க்க தரிசனம் இப்பேரண்டத்தின் பேரழிவைப் பற்றிய திருக்குர்ஆனின் கூற்றைப் பொய்ப்பிக்கவில்லை மாறாக மெய்ப்பிக்கவே செய்கிறது என்பதாகும்.

ஏனெனில் மறுமை எப்போது நடைபெறும் என்பதை இறைவன் ஒருவனைத் தவிர வேறு ஒருவராலும் முன் கூட்டி அறிய முடியாது என்பதும் அதன் வருகை திடீர் வருகையாகவே இருக்கும் என்பதும் திருக்குர்ஆனின் கூற்றாகும். எனவே திருக்குர்ஆன் கூறியது உண்மையாக இருக்க வேண்டு மானால் பேரண்டம் அழிவதற்கான எந்த அறிகுறியும் பேரண்டத்தில் இப்போது தென்படக் கூடாது.

எனவே பேரண்டம் இப்போது மட்டுமின்றி 1000 கோடி வருடங்களுக் கிடையில் கூட அழியப் போவதற் கான எந்த அறிகுறியும் அதில் தென்படவில்லை எனக் கூறி திருக்குர்ஆனை மெய்ப்பிக்கும் பணியைத் தான் ஹாக்கிங் செய்து கொண்டிருக்கிறார். தன்னை மறுப்பவர்களிலிருந்தே தமது மெய்மைக்குரிய சான்றுகளைக் கொண்டு வருவதும் திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகும்.

பெரும் சுருக்கத்தின் அறிகுறிகள்

பேரண்டத்தின் அழிவின் போது நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளில் பலவும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. அவற்றுள் சில முக்கியமானவை வருமாறு :

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (அதைச்) செய்பவராவோம்.

(அல்குர்ஆன்:21:104.)

அந்நாளில் வானம் உருகிய செம்பு போல் ஆகும்.

(அல்குர்ஆன்:70:8.)

நட்சத்திரங்கள் விழும் இடம் மீது சத்தியம் செய்கிறேன்.

(அல்குர்ஆன்:56 : 75)

சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது, மலைகள் பெயர்க்கப்படும் போது

(அல்குர்ஆன்: 81 : 1,2)

அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் நீங்கள் அவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் : 30 : 11,12)

பேரண்டத்திற்கு ஏற்படப் போகும் அழிவைக் கூட திருக்குர்ஆன் வர்ணிக்கும் போது இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்க கட்டம் வரை நாம் பெற்றுள்ள அறிவியல் அறிவால் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அமைந்திருப்பது திருமறையின் அறிவியல் ஆய்வாளர்களை வியப்பின் சிகரத்திற்கே அழைத்துக் செல்லக் கூடியதாகும். அவ்வர்ணனைகளில் கீழ்க்காணும் அறிவியல் தகவல்கள் அடங்கியுள்ளன :

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானம் சுருட்டப்படுதல்

பேரண்டப் படைப்பை முதலில் துவக்கியது போன்றே மீண்டும் தொடங்குதல்

வானம் உருகிய செம்பைப் போல் ஆகுதல்

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் இடங்கள்

சூரியன் சுருட்டப்படுதல்

மலைகள் பெயர்க்கப்படுதல்

மேற்கண்ட ஆறு பிரதான நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி எண்-2 ஐத் தவிர மற்றவை யாவும் இப்பேரண்டத்தின் அழிவைக் குறித்ததாகும். அறிவியல் நோக்கில் இப் பேரண்டத்திற்கு இப்போது இல்லாமல் 1000 கோடி வருடங்கள் கழித்தாயினும் ஓர் அழிவு உண்டு என்பதும் அதன் அழிவு ஒரு “பெரும் சுருக்கம் (Big crunch) ஆகவும் இருக்கும். பேரண்டம் அவ்வாறு சுருங்கினால் என்னென்ன நிகழ வாய்ப்புண்டோ அந்த நிகழ்ச்சிகளே மேற்கண்ட வர்ணனை யில் கூறப்பட்டுள்ளது.

விரிவடைந்து கொண்டே இருக்கும் ஒரு பொருளின் விரிதலை நிறுத்தி விட்டு அப்பொருள் சுருட்டப்பட்டால் அப்பொருள் சுருங்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. வானகப் பொருட்கள் திட நிலையிலும், வாயு நிலையிலும், பிளாமா நிலையிலும் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அவை சுருக்கமடையும் போது திடப் பொருட்கள் மேலும் மேலும் அடர்த்தியாகும். பூமி சுருக்கமடையும் போது புடைத்து நிற்கும் கன் மலைகள் தெறித்து விழும் காட்சியைப் போன்றதே மலைகள் பெயர்க்கப்படுவதாக திருக்குர்ஆன் கூறும் நிகழ்ச்சியாக விளங்க முடிகிறது.

அவ்வாறே வாயுப் பொருட்களும் பிளாமாவும் சுருக்கமடையும் போது முதலில் அவை திரவப் பொருளாக மாறும். சூரியனும் அது போல் வானத்திலுள்ள கோடானு கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் ப்ளாமா நிலையிலுள்ள வாயுப் பொருட்களாக இருப்பதால் அவை சுருங்கும் போது சுருக்கமடைந்து முதலில் திரவமாக மாற்றமடையும். இந்த நிலையில் ஆகாயத்தைப் பார்த்தால் எவ்வாறு தென்படுமோ அந்த நிலையே வானம் உருகிய செம்பைப் போல் ஆகும் எனத் திருக்குர்ஆனின் வர்ணனையாக நமக்கு விளக்கம் கிடைக்கிறது.

வானத்தின் வாயு மற்றும் ப்ளாமாப் பொருட்கள் சுருக்கமடைந்து திரவமாக மாறிய பிறகும் அவை தொடர்ந்து சுருக்கமடைந்து திடப் பொருளாக மாறுகின்றன. இவ்வாறு திடப் பொருளாக மாறிய நட்சத்திரங்கள் முதலாவதாக அவைகளின் காலக்சியின் ஈர்ப்பு மையத்தில் வீழ்கின்றன. இந்த நிகழ்ச்சியையே திருக்குர்ஆன் நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் இடங்கள் எனக் கூறுவதாக விளங்குகிறோம்.

அதன் பிறகு அவை மீண்டும் சுருங்கி ஒவ்வொரு காலக்சியும் கற்பனைக் கெட்டாத அடர்த்தி மிகு பொருட்களாக மாறி பேரண்டத்தின் ஈர்ப்பு மையத்தில் வீழ்கின்றன. அதன் பிறகும் அங்கு நிலவும் அதி அதி பயங்கரமான ஈர்ப்பு விசையால் அப்பொருட்கள் யாவும் மேலும் மேலும் சுருக்கமடைந்து எல்லையற்ற அடர்த்திக்கு (ஐகேவைந னநளேவைல) உள்ளாகி அவை களின் பரிமாணம் பழையபடி “பூஜ்யமாகி இப்பேரண்டமே இல்லாது போகின்றது.

பேரண்டமே இல்லாது போவதால் மீண்டும் ஒரு பேரண்டம் (பரலோகம் – மறுமை) இறைவன் படைக்க நாடினால் முதலில் அவன் படைத்தது போன்று `குன் எனும் கட்டளை பிறப்பிப்பான் என்றும் அந்த மைக்ரோ கணத்திலேயே மீண்டும் ஒரு பெருவெடிப்பும் அதிலிருந்து பரலோகமும் தோன்றும் என்பதையும் “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம் எனக் கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து நாம் விளங்கலாம்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து இப்பேரண்டத்திற்கு ஒரு அழிவு காலம் உண்டு என்பதும் அது தொலைவில் இல்லை மிக நெருக்கமானதே எனக் கூறும் திருக்குர்ஆன் செய்திகள் மனித அறிவிலிருந்து தோன்றியதில்லை என்றும் அது இறைஞானத்தின் வெளிப்பாடே என்பதில் இதற்கு மேல் ஐயம் கொள்ளத் தேவையில்லை. எனவே இப்பேரண்டத்திற்கு குறைந்த பட்சம் ஆயிரம் கோடி வருடங்களுக்கு முன் அழிவில்லை. எனவே அதைப் பற்றிய கவலை இப்போது தேவையில்லை என அறிவியலாளர் ஹாக்கிங் கூறுவது (பார்க்க : பக்கம் 157 மற்றும் 158) நாம் முன்னர் கூறிய உதாரணத்தில் குறிப்பிட்டவாறு கட்டிடத்தைச் சோதித்த பொறியாளர்களின் அறிக்கையைப் போன்றதாகும்.

எனவே ஹாக்கிங் அவர்களின் அறிக்கையில் தவறில்லையென்றாலும் இம்மாபெரும் பேரண்டம் (ஹாக்கிங் கூறும் பேரண்டத்தின் வயது – 1000 வடி 2000 கோடி வருடங்கள் என்பது – சரியாக இருந்தால்) இதற்கு மேல் அதிக பட்சம் வெறும் 7500 வருடங்கள் கூட நிலை நிற்கப் போவதில்லை. அதற்குள் இப்பேரண்டத்தின் சுருங்கு முகம் (contracting phace) எப்போது வேண்டுமானாலும் ஆரம்பித்து விட வேண்டுமென்பதே திருக்குர்ஆனிலிருந்து நாம் கண்ட கணித சூத்திரத்திலிருந்து விளங்கும் செய்தியாகும்.

ஆறு நாட்களின் முக்கியத்துவம்

இந்த அத்தியாயத்தை முடிப்பதற்கு முன்னர் மற்றொரு பிரதான செய்தியைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைத் திருக்குர்ஆன் கூறும் போது உலகியல் கணக்குப்படி அன்றி பேரண்டத்தைத் தோற்றுவிக்கும் போது இறைவனிடம் கணக்கிடப்பட்ட காலத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாகும் என முன்னர் கண்டோம். எனினும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு “ஆறு நாட்கள் தேவைப்பட்டன எனக் கூறியதற்கு பதில்

பேரண்டம் தோன்றுவதற்கு நீண்ட காலகட்டம் தேவைப்பட்டது எனக் கூறியிருந்தால் ஏராளமான விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் சிலருக்கேனும் தோன்றுகிறது. திருக்குர்ஆனின் மீது எழுகின்ற இது போன்ற விமர்சனங்கள் அது கூறும் செய்திகளுக்குள் இறங்கிச் சென்று ஆய்வு செய்யாமல் நுனிப்புல் மேய்வதால் ஏற்படுவதாகும் என்பதை இந்த அத்தியாயத்தில் நாம் நிறைவாகக் கண்டு விட்டோம்.

இப்படிப்பட்ட பிழையான விமர்சனங்கள் எக்காலத்திலும் இருந்தே தீரும். ஆயினும் நவீன அறிவியல் உலகம் பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைக் கூறும் கணக்கை திருக்குர்ஆனுடைய கணித சூத்திரத்திலிருந்து நாம் வந்தடைய வேண்டுமானால் திருக்குர்ஆன் பயன்படுத்திய ஆறு நாட்கள் என்ற வார்த்தைகள் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதும் அந்த வார்த்தைகளுக்குப் பதில் நீண்ட காலம் அல்லது நீண்ட யுகம் என்பன போன்ற விமர்சகர்கள் கூறும் வார்த்தைகள் ஒரு போதும் பயன் படுத்தப்பட்டிருக்கக் கூடாது என்பதே உண்மையாகும்.

உள்ளபடியே பேரண்டம் படைக்கப்பட்டதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் ஆறு நாட்கள் எனத் திருக்குர்ஆன் கூறியதன் காரணமாகவே திருக்குர்ஆனுடைய கணித சூத்திரத்தைப் பயன்படுத்தி நவீன அறிவியல் உலகின் கணிப்பு (பேரண்டம் தோன்றுவதற்கு 1000 வடி 2000 கோடி வருடங்கள் ஆயின எனும் கணிப்பு) திருக்குர்ஆனுடைய கணிப்பிற்கு ஒத்து வருகிறதா எனக் கண்டு பிடிக்க முடிந்தது.

ஆனால் ஆறு நாட்கள் என்பதற்குப் பதில் நீண்ட கால அளவு அல்லது நீண்ட யுகங்கள் என்ற சொற்பிரயோகங்கள் திருக்குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் அக்கால கட்டங்களின் உலகியல் கால அளவை நம்மால் ஒரு போதும் கண்டு பிடித்திருக்க முடியாது என்பதோடு அறிவியல் சமுதாயத் திற்கு பெருவெடிப்புக் கோட்பாடு திருக்குர்ஆன் ஒப்புக் கொள்கிறதா என்பதைக் கண்டறிவதற்குப் பயன்படும் திருக்குர்ஆனுடைய முக்கியமான கணித சூத்திரமும் பயனற்றுப் போயிருக்கும். எனவே திருக்குர்ஆன் பயன் படுத்திய ஆறு நாட்கள் எனும் சொற்பிரயோகம் மிகவும் பொருட் செறிவுள்ளதும் தவிர்க்க முடியாததுமாகும்.

இந்த அத்தியாயத்தில் நாம் இது வரை விவாதித்த விபரங்கள் இப்பேரண்டம் எவ்வாறு படைக்கப்பட்டது எனத் திருக்குர்ஆன் கூறுகிறதோ அதற்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் சான்றளித்துக் கொண்டிருக்கிறது என்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாகிய பெருவெடிப்புக் கோட்பாட்டிலிருந்து பெறப்படும் இந்த அதி நவீன உண்மைகளெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் வந்த திருக்குர்ஆனில் கூறப்பட வேண்டுமானால் திருக் குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டதும் இறை ஞானத்தின் வெளிப்பாடுமாகும் என்பதற்கு இது ஒரு வலுவான அறிவியல் ஆதாரம் என்பதைப் புறக்கணிக்க முடியாது.