15) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-15
நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழிLast Updated on October 24, 2023 by
15) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-15
நபிமொழி-71
இஸ்லாத்தில் சிறந்தது எது
‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்’.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நூல்: புகாரி-12
நபிமொழி-72
பிரதிபலன் எதிர்பார்க்காமல் உறவை பேணுவோம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரீ-5991
நபிமொழி-73
அளவுக்கு மீறிப் புகழாதீர்கள்
கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-3445
நபிமொழி-74
பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் பிறப்பு உறுப்பை வலது கையால் தொடவும் வேண்டாம். சுத்தம் செய்யவும் வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி)
நூல் : புகாரி-163
நபிமொழி-75
பெண்கள் தனியே பயணித்தல்
‘மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)
நூல் : புகாரி-1862