Tamil Bayan Points

14) மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-1

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

Last Updated on January 19, 2023 by

மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்

அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தித்தல் இணைவைப்பாகும்

மனிதர்களிடம் கேட்பதற்கும் அல்லாஹ்விடம் கேட்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை புத்தகத்தின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளோம். மனிதர்களிடம் பேசுவது போல் அல்லாஹ்விடம் நாம் பேசுவது கிடையாது.

சப்தமில்லாமல் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழியில் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் அல்லாஹ்வையன்றி வேறு யாரும் சக்திபெறாத விசயங்களில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த அடிப்படையில் மண்ணறைகளை வழிபடக்கூடியவர்கள் இறந்து போனவர்களிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இது இணைவைப்பாகும்.

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

அல்குர்ஆன் (13 : 14)

அல்லாஹ்வே உண்மையானவன். அவனன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் (22 : 62)

நாங்கள் அவ்லியாக்களிடம் அதைக் கொடுங்கள். இதைக் கொடுங்கள் என்று கேட்கவில்லை. மாறாக எங்களுக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். பரிந்துரையை வேண்டினாலும் அதுவும் இணைவைப்பாகும். ஏனென்றால் பிரார்த்தனை செய்வதை வணக்கம் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்லாஹ் அல்லாதவர்களிடம் சிறியதை வினவினாலும், பெரியதை வினவினாலும் அது நிச்சயம் இணைவைப்புத்தான்.

பிரார்த்தனைதான் வணக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் (40 : 60) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல் : திர்மிதி (2895)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாளில் நரகத்தின் ஒரு பகுதி கிளம்பும். அதற்குப் பார்க்கும் கண்களும், கேட்கும் செவிகளும், பேசும் நாவும் இருக்கும். வரம்பு மீறி முரண்டு பிடிப்பவன் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளிடம் பிரார்த்தித்தவன் உருவங்களை வரைந்தவர்கள் ஆகிய மூன்று பேரின் மீது நான் சாட்டப்பட்டுள்ளேன் என்று அந்த நரகம் கூறும்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)

நூல் : திர்மிதி (2497)

மற்றவர்களிடம் உதவி தேடுதல் இணைவைப்பாகும்

அல்லாஹ்வின் உதவி எப்படி வருகிறது என்று நமக்குத் தெரியாது . அல்லாஹ்வை நேரில் காணமலேயே அவனிடம் உதவி கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும் என்ற உறுதியுடன் பிரார்த்தனை செய்கிறோம். நமக்கு இயலாதக் காரியங்களிலேயே அல்லாஹ்விடம் உதவி தேடுகிறோம். இது போன்று இறந்து போனவர்களும் உதவி செய்வார்கள் என்று நம்புவது இணைவைப்பாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணைகற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகிவிடாதீர்!

அல்குர்ஆன் (6 : 14)

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

சிறுவனே உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். நீ அல்லாஹ்வுடைய விசயத்தில் பேணுதலாக நடந்து கொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்.

அல்லாஹ்வுடைய விசயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோசமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு. நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது.

அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு தீங்கு செய்து விட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதி (2440)

மற்றவர்களிடம் பாவமன்னிப்பு தேடுதல் இணைவைப்பாகும்

நாம் செய்த பாவத்தினால் பிற மனிதர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பைக் கேட்க வேண்டிய முறையில் கேட்கலாம். ஆனால் அல்லாஹ்விற்கும் மனிதர்களுக்கும் மத்தியில் உள்ள விசயங்களில் தவறிழைத்தால் அதை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்.

ஏனென்றால் இந்த மார்க்கம் அல்லாஹ்வுடையது. நாம் எவற்றை செய்ய வேண்டும்; எவற்றைச் செய்யக் கூடாது என்பதை அல்லாஹ்தான் தெளிவுபடுத்தினான். நம்மை சொர்க்கவாசியாகவும், நரகவாசியாகவும் முடிவு செய்யும் அதிகாரம் அவனிடம் மட்டுமே உள்ளது. இதைப் புரிந்து கொள்ளாமல் நபி (ஸல்) அவர்களிடத்திலும் மகான்கள் என்று இவர்கள் கருதுபவர்களிடத்திலும் பாவத்தை மன்னிக்குமாறு சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கேட்பது இணைவைப்பாகும்.

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?

அல்குர்ஆன் (3 : 135)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான். நாடியோரைத் தண்டிக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (3 : 129)

உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருக்கும் போது நபியவர்கள் பாவங்களை மன்னிப்பார்கள் என்று நம்புவது அல்லாஹ்விற்கு இவர்கள் செய்யும் மாபெரும் அநியாயம் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

நூல் : புகாரி (6306)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையைக் கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்! என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி)

நூல் : புகாரி (834)

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம் : என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாம-ல்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.

அறிவிப்பவர் : அபூமூசா (ரலி)

நூல் : புகாரி (6398)

அல்லாஹ் அல்லாதோரைச் சார்ந்திருத்தல்….

எந்தத் தேவையையும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். நம்முடைய அனைத்துக் காரியங்களுக்கும் அல்லாஹ்விடம் மட்டுமே பொறுப்பு சாட்டி அவனையே சார்ந்திருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அல்குர்ஆன் (8 : 2)

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (9 : 51)

அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் (4 : 81)

அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து அவனை மட்டுமே சார்ந்திருப்பவர்களுக்கு கேள்வி கணக்கு இல்லாமல் சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், (தவறான முறையில்) ஓதிப் பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (647)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீ உன் படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்து கொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த என்று ஓதிக் கொள்.

பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன். (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில்) நீ இறந்து விட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல் : புகாரி (6311)

கவலைகள் ஏற்படும் போது

எவ்வளவு துயரங்கள் வந்தாலும் அல்லாஹ்வை மட்டுமே நாம் சார்ந்திருக்க வேண்டும். அவனால் மட்டுமே நமக்கு ஏற்பட்ட துன்பங்களை அகற்ற முடியும்.

இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணைகற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் (6 : 64)

நூஹ், இதற்கு முன் (நம்மிடம்) பிரார்த்தித்த போது, அவருக்காக (அதை) ஏற்றுக் கொண்டோம். அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.

அல்குர்ஆன் (21 : 76)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் என்று ஓதுவார்கள்.

பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமைமிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (6346)

துன்பம் ஏற்படும் போது நீ கூற வேண்டிய வார்த்தைகளை நான் உனக்கு கற்றுக் கொடுக்கட்டுமா? அல்லாஹ்தான் என் இறைவன். அவனுக்கு எதனையும் இணையாக்க மாட்டேன் (என்பதே அந்த வார்த்தை) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)

நூல் : அபூதாவுத் (1304)

சாதாரணப் பொருட்களுக்கு சக்தி இருப்பதாக எண்ணுதல்

கப்ரின் மீது போடப்பட்ட போர்வைக்கும், பூவிற்கும் அங்கு ஊற்றப்பட்ட எண்ணெய்க்கும் நோய்களை நீக்கி குணமளிக்கும் ஆற்றல் இருப்பதாக கப்ரு வழிபாட்டுக்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆன் வசனங்களை எழுதித் தொங்கவிட்டால் அதனால் வீட்டிற்கு எந்தத் தீங்கும் வராது என்று சிலர் கருதுகிறார்கள். மந்திரிக்கப்பட்ட கயிற்றுக்கு சக்தி இருக்கிறது என்று கருதுபவர்களும் உண்டு. முட்டையைச் சுற்றி நடுத்தெருவில் உடைத்தால் தீமைகள் வராது என்று நம்புகிறார்கள்.

மிளகாய் உப்பை எடுத்து தலையில் மூன்று முறை சுற்றி அடுப்பில் போட்டால் கண்ணேறு போய்விடும் என்று நினைக்கிறார்கள். கண்ணேறு கழிவதற்காக சிலர் சூடத்தை ஏற்றுகிறார்கள். காத்துக்கருப்பு வரக்கூடாது என்ற தவறான நம்பிக்கையில் வீடுகளுக்கு முன்னால் மஞ்சலையும் பூசணிக்காயையும் கட்டித் தொங்க விடுகிறார்கள். இப்படி ஆதாரமில்லாமல் கற்பணையை அடிப்படையாக வைத்து சாதாரணப் பொருட்களுக்குச் சக்தி இருப்பதாக எண்ணுவது இணைவைப்பாகும்.

இணைவைப்பாளர்கள் தாத்துல் அன்வாத் என்ற மரத்தில் தங்கள் வாட்களைத் தொங்கவிட்டு அங்கே தங்குவார்கள். இவ்வாறு செய்வதால் போரில் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள். இது போன்று ஒரு மரத்திற்கோ, ஒரு கல்லிற்கோ அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சக்தியில்லாத எந்தப் பொருளுக்கோ ஆற்றல் உண்டு என்று நாம் நம்பிவிடக் கூடாது என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இணைவைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது  ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு தாதுல் அன்வாத் என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கும் ஒரு தாதுல் அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக! (7 : 138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூவாகித் (ரலி)

நூல் : அஹ்மத் (20892)