Tamil Bayan Points

13) வட்டி குறித்து இஸ்லாம் -2

நூல்கள்: இஸ்லாமியப் பொருளாதாரம்

Last Updated on March 1, 2022 by

13) வட்டி குறித்து இஸ்லாம் -2

இன்சூரன்ஸ்

இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில்தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன.

இஸ்லாம் தடுத்துள்ள வட்டி, மோசடி, ஏமாற்றுதல் போன்றவை இருந்தால் அது எந்த நவீன பிரச்சனையாக இருந்தாலும் அது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும். பொத்தாம் பொதுவாக இன்ஷ்யூரன்ஸ் கூடாது என்று சிலர் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இது தவறாகும்.

இன்ஷ்யூரன்ஸில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வட்டியை அடிப்படையாகக் கொண்டவையும் உள்ளன. அவை மட்டுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்டவையாகும். அவ்வாறு இல்லாத இன்ஷ்யூரன்ஸ் வகைகளைத் தடுப்பதற்கு தக்க காரணம் இல்லை.

உதாரணமாக ஆயுள் காப்பீடு என்ற வகையை எடுத்துக் கொள்வோம். ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார் என்றால் இந்தத் தொகையை குறிப்பிட்ட வருடங்கள் வரை ஆண்டுக்கு இவ்வளவு என்ற விகிதத்தில் அவர் கட்டி வர வேண்டும். முழுகையாகக் கட்டி முடித்து விட்டால் கட்டிய தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும். அல்லது இடையிடையே கணக்குப் பார்த்து போனஸ் என்ற பெயரில் வட்டி தருவார்கள்.

பத்து லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்தவர் முதல் தவணை கட்டிய உடன் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் கிடைத்து விடும்.

காப்பீடு எடுத்தவர் மரணிக்காமல் தொடர்ந்து தவணையைக் கட்டி வரும்போது காப்பீட்டு நிறுவனங்கள் வட்டி தருகிறார்கள். இது மார்க்கத்துக்கு எதிரானதாகும். இதன் காரணமாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரக்கூடாது என்று கூறலாம். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நாம் செலுத்தும் பணத்துக்கு வட்டி தரப்பட மாட்டாது என்ற வகையில் இத்திட்டம் மாற்றப்பட்டால் இதைத் தடை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதில் சேர்பவர்கள் வருடத்துக்கு ஒரு தொகையைக் கட்ட வேண்டும். இதில் சேரக்கூடியவர்களின் வயது, ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து இத்தொகை வேறுபடும். இத்திட்டத்தில் சேர்பவருக்கு பெரிய நோய் வந்து விட்டால் அவர் ஆயிரம் ரூபாய் கட்டி இருந்தாலும் அவரது மருத்துவச் செலவுக்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளும்.

அந்த ஒரு வருடத்துக்குள் எந்த நோயும் வராவிட்டால் அவர் கட்டிய பணம் திரும்பத்தரப்பட மாட்டாது. கட்டிய பணமே திரும்பக் கிடைக்காது என்றால் வட்டியைக் கற்பனை செய்ய முடியாது.

அதாவது பல்லாயிரம் பேர் ஆயிரம் ரூபாய் கட்டுகிறோம். எங்களுக்கு நோய் வந்தால் அதற்கு மருத்துவம் செய்ய உதவுங்கள். நோய் வராவிட்டால் எங்கள் பணம் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்ற அடிப்படையில்தான் இதில் சேர்பவர்கள் பணம் செலுத்துகிறார்கள். இதில் வட்டியும் இல்லை. மோசடியும் இல்லை. யாரையும் ஏமாற்றுதலும் இல்லை.

இதுபோல்தான் வாகனத்திற்கான இன்ஷ்யூரன்ஸும் உள்ளது. நாம் ஒரு வாகனத்தை வாங்கினால் அதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படலாம். விபத்துகள் ஏற்படும்போது அந்த வாகனத்துக்குச் சேதம் ஏற்படலாம். அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்குச் சேதம் ஏற்படலாம். அல்லது வாகனத்தினால் மற்றவருக்குச் சேதம் ஏற்படலாம்.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவோ நமக்குரிய சிகிச்சை செய்து கொள்ளவோ வாகனத்தைச் சீர்செய்யவோ நமக்கு இயலாமல் போகலாம். இதைக் கருத்தில் கொண்டுதான் வாகனக் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாகனத்துக்காக நாம் செலுத்தும் காப்பீட்டுத் தொகை நமக்கு திரும்பத் தரப்படாது.

ஏதேனும் விபத்து அல்லது வாகனத் திருட்டு போன்றவை நடந்தால் காப்பீட்டு நிறுவனம் அதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். மார்க்கத்தின் அடிப்படையில் இதைத் தடை செய்ய ஒரு முகாந்திரமும் இல்லை.

அது போல்தான் வீடுகள், கடைகள், இன்னபிற சொத்துக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்தக் காப்பீட்டுத் திட்டங்களில் ஆண்டு தோறும் நாம் செலுத்தும் தொகை அந்த ஆண்டுடன் காலாவதியாகி விடும். திரும்பத் தரப்படமாட்டாது. அசலும் தரமாட்டார்கள். வட்டியும் தர மாட்டார்கள். எனவே இவற்றைக் கூடாது எனக் கூற எந்த நியாயமும் முகாந்திரமும் இல்லை.

கலவரங்களின்போது முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் இன்னபிற சொத்துக்களும் சூறையாடப்படுகின்றன. முஸ்லிம்கள் காப்பீடு செய்வதில்லை; எனவே அவர்களின் சொத்துக்களை அழித்தால் அதோடு அவர்கள் பிச்சைக்காரர்களாக ஆவார்கள் என்று எதிரிகள் நன்றாக விளங்கி வைத்துள்ளதால் திட்டமிட்டு முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடுவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளனர்.

கடைகள் மற்றும் சொத்துக்களுக்கு காப்பீடு செய்தால் இவர்களின் சொத்துக்களை அழித்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதால் சொத்துக்களைச் சூறையாடுவதுகூட தவிர்க்கப்படும். அப்படி சூறையாடினாலும் காப்பீட்டின் மூலம் இழப்பீட்டைப் பெற்று பழைய நிலையை அடைய முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் இயன்றவரை தொழில் நிறுவனங்களைக் காப்பீடு செய்வதுதான் அறிவுடமையாகும்.

தவணை வியாபாரம்

அதைப் போல தவணை வியாபாரம் பற்றியும் நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது. ரொக்கமாக வியாபாரம் செய்ய அனுமதி உள்ளது போல் கடனாகவும், தவணை முறையிலும் வியாபாரம் செய்ய அனுமதி உள்ளது. ஆனால் ரொக்கத்துக்கு ஒரு விலை கடனுக்கு ஒரு விலை என்று இரட்டை விலை வைத்து விற்பது வட்டி என்பதால் இதற்கு அனுமதி இல்லை.

ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது. அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாக கொடுக்கலாம். அதுபோல் தனக்கு வேண்டியவர்களுக்கு லாபமே வைக்காமல் அசலுக்குக்கூட விற்கலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை.

ஆயிரம் ரூபாய்க்கு நாம் விற்கும் பொருளை நம்முடைய உறவினருக்கு 900 ரூபாய்க்குக் கொடுப்போம். அல்லது இலவசமாகக்கூட கொடுப்போம். இது தடுக்கப்பட்ட இரட்டை விலையில் சேராது. ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்ததால் எனக்கும் இலவசமாகக் கொடு என்று மற்றவர்கள் கேட்க முடியாது.

கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று இரட்டை விலை நிர்ணயிக்கும்போதுதான் அது வட்டியாக ஆகின்றது. அவ்வாறு இல்லாமல் வேறு காரணங்களுக்காக ஒரு பொருளுக்கு இரு விலைகள் நிர்ணயிப்பது குற்றமாகாது.

ஒரு பொருள் வாங்கினால் இன்ன விலை; பத்து பொருள் வாங்கினால் இன்ன விலை என்று சொல்லும்போது இங்கும் இரட்டை விலைதான் வருகிறது. ஆனால் இது குற்றமில்லை. ஏனெனில் கடனுக்காக நாம் விலையை அதிகரிக்கவில்லை.

ஆனால் ரொக்கமாக விற்கும்போது ஆயிரம் ரூபாய் எனவும் கடனாக விற்கும்போது 1200 ரூபாய் எனவும் விற்பனை செய்தால் கூடுதலான 200 ரூபாய் பொருளுக்கான விலை அல்ல. வியாபாரியின் பணம் வாடிக்கையாளரிடம் சில நாட்கள் இருக்கிறது என்பதற்காகத்தான் 200 ரூபாய் அதிகமாக்கப்படுகிறது.

ஒருவரின் பணம் இன்னொருவரிடம் இருப்பதற்காக பெறக்கூடிய ஆதாயம் தான் வட்டியாகும். எனவே கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று விற்பதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.

ஒத்திக்கு விடுதல் கூடாது

சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். வீட்டை ஒப்புக் கொண்டவர் பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் வாடகை ஏதும் கொடுக்காமல் வீட்டில் குடியிருப்பார்.

குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னர் முன்பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒப்படைப்பார். இது ஒத்தி எனவும் சில பகுதிகளில் போகியம் எனவும் கூறப்படுகின்றது. கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொள்வது குற்றமில்லை.

ஆனால் அதற்குரிய வாடகையை வீட்டின் உரிமையாளருக்குக் கொடுக்காமல் கொடுத்த பணத்துக்காக ஆதாயம் அடைவது வட்டியாகும் என்பதால் இதை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடனாக நாம் கொடுக்கும் பணத்துக்கு உத்தரவாதம் தேவை என்றால் வீட்டின் பத்திரத்தை அடைமானமாகப் பெற்று எழுதிக் கொண்டு உரிமையாளரை வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கலாம்.

அல்லது வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டுக் கொள்ள உரிமையாளரை அனுமதிக்கலாம். ஒரு முஸ்லிம் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். ஒருவனுக்கு ஏற்பட்ட பண நெருக்கடியைப் பயன்படுத்தி வட்டியை வேறு பெயரில் வாங்கக் கூடாது.

ஏலச்சீட்டு

ஏலச் சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை.

ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம். பத்து நபர்கள் சேர்ந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் கட்டுவார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் சேரும். பத்து நபர்களில் ஒருவருக்கு அந்தத் தொகையைக் கொடுப்பார்கள்.

குறிப்பிட்ட மாதத்தில் யாருக்குக் கொடுக்கலாம் என்று குலுக்கல் மூலம் நிர்ணயித்து கொடுத்தால் இதில் குற்றம் சொல்ல முடியாது. அல்லது பத்துப் பேரில் யாருக்கு முக்கிய தேவை உள்ளது என்று ஆய்வு செய்து முடிவு செய்தால் அதையும் குற்றம் சொல்ல முடியாது.

ஒவ்வொரு மாதத்திலும் யாருக்குக் கொடுப்பது என்பதை ஏலத்தின் மூலம் முடிவு செய்கிறார்கள். அதாவது ஒரு லட்ச ரூபாய்க்குப் பதிலாக யார் குறைந்த தொகையை வாங்கிக்கொள்ள முன்வருகிறார்களோ அவர்களுக்கு அந்தக் குறைந்த தொகையைக் கொடுப்பார்கள்.

ஒரு லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 90 ஆயிரம் தந்தால் போதும் என்று ஒருவரும் 80 ஆயிரம் தந்தால் போதும் என்று வேறு ஒருவரும் போட்டியிட்டால் 80 ஆயிரத்துக்கு ஏலம் கேட்டவருக்கு 80 ஆயிரத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இவர் மீதி ஒன்பது மாதங்களுக்கு தலா பத்தாயிரம் கட்டி வர வேண்டும். இவரிடம் வசூலிக்கப்படுவது ஒரு லட்சம்.

ஆனால் இவருக்குக் கொடுப்பது 80 ஆயிரம். இதை ஏலச் சீட்டு நடத்துபவர் எடுத்துக் கொள்வார். அல்லது இதில் பாதியை அவர் எடுத்துக் கொண்டு மீதியை ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்.

இது அப்பட்டமான மோசடியாகும். ஒருவனின் நெருக்கடியைப் பயன்படுத்தி செய்யப்படும் சுரண்டலாகும். அவனிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாயைச் சுருட்டுவதற்கு மார்க்கம் அனுமதித்த எந்தக் காரணமும் இல்லை. முன் கூட்டியே பணம் கொடுப்பதால் 80 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் என்று வாங்குவதும் வட்டியில்தான் சேரும்.

பிராவிடண்ட் ஃபண்ட்

அரசு அலுவலகங்களிலும் பெரிய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நமது நாட்டிலும் இன்னும் பல நாடுகளிலும் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்பட்ட தொகை ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதில் பிரச்சனை இல்லை. ஆனால் இவ்வாறு பிடிக்கப்படும் தொகைக்கு அவ்வப்போது வட்டியைக் கணக்கிட்டு ஊழியர்கள் கணக்கில் சேர்ப்பார்கள்.. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட தொகை பத்து லட்சம் என்றால் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும். இதில்தான் பிரச்சனை உள்ளது.

வட்டி மார்க்கத்தில் தடுக்கப்பட்டு இருந்தாலும் நம் விருப்பப்படி முடிவு செய்யும் காரியங்களில்தான் நாம் முடிவு எடுக்க முடியும். என்னுடைய ஊதியத்தில் பிராவிடண்ட் ஃபண்டுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்று கூறும் உரிமை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊழியர்கள் மீது இது கட்டாயமாகத் திணிக்கப்படுவதால் இது நிர்பந்தம் என்ற வகையில் சேரும். இதற்காக ஊழியர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்.

ஆனால் ஓய்வு பெறும்போது வட்டி இல்லாமல் ஊழியரிடமிருந்து பிடித்த பணத்தை மட்டும் பெற்றுக் கொள்ள வழி இருந்தால் அந்த வழியைத் தேர்வு செய்து வட்டியில் இருந்து விடுபட வேண்டும்.

அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளைக் கையாண்டு வட்டியை வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். வட்டியுடன் சேர்த்துத்தான் அந்தப்பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் நம்முடைய ஊதியத்தில் இருந்து சேமிக்கப்பட்ட பணமே கிடைக்காது என்ற நிலை இருந்தால் அப்போது நிர்பந்தம் என்ற நிலைக்கு ஒருவர் தள்ளப்படுகிறார். அவர் மீது திணிக்கப்பட்ட வட்டியை வாங்கிக் கொண்டால் அதற்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

சக்திக்கு மீறி யாரையும் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

(திருக்குர்ஆன்:2:286.)

வங்கிகளில் வேலை செய்யலாமா?

வங்கிகள் பெரும்பாலும் வட்டித் தொழிலுக்கான கேந்திரம் என்றாலும் மார்க்கம் அனுமதித்த காரியங்களும் அதில் நடக்கின்றன. காசோலைகளை மாற்றித் தருதல், பணப்பரிவர்த்தனை செய்தல் போன்ற பல பணிகள் வங்கியில் நடக்கின்றன. வட்டிக்கு துணை போவது தான் மார்க்கத்தில் குற்றமாகும். அது அல்லாத பணிகள் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல.

வங்கியைச் சுத்தம் செய்வது, வங்கிக்கு பெயிண்ட் பண்ணுவது, பர்னிச்சர் செய்து கொடுப்பது போன்ற காரியங்களை ஒருவர் செய்து கொடுத்தால் அது வட்டிக்கு துணை போனதாக ஆகாது.

صحيح مسلم

4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் – 4177

மேற்கண்ட நான்கு பணிகளைச் செய்தால் அது வட்டிக்கு துணை போன குற்றமாக ஆகும்.

கிரெடிட் கார்டு – கடன்அட்டை

தற்போது கிரடிட் கார்டு எனும் கடன்அட்டை பயன்பாடு அதிகரித்து வருகின்றது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அட்டை மூலம் தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கியில் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் அட்டை வைத்திருப்பவர் 45 நாட்கள் அல்லது (குறிப்பிட்ட நாட்கள்) முடிவதற்குள் வங்கியில் பணத்தைச் செலுத்தினால் அதற்கு வட்டி இல்லாமல் செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியுடன் அதைச் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனைச் செலுத்தி விடும்போது வட்டி செலுத்தும் நிலை வராது என்பதால் இது குற்றமாகாது. வட்டி வாங்கிய குற்றம் சேராது. குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் கடனைச் செலுத்தத் தவறினால் வட்டி கட்டும் குற்றத்தைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் வட்டி இல்லாமல் அசலைச் செலுத்தினால் குற்றம் வராது என்றபோதும் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் கடனைச் செலுத்த இயலாமல் போகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடனாகக் கிடைக்கிறது என்பதற்காக சக்திக்கு மீறி கடன் அட்டை மூலம் கடன் வாங்கி விட்டு அதைக் கட்ட முடியாமல் தினறக்கூடிய மக்களை நாம் அதிக அளவில் பார்க்கிறோம்.

அன்றாடம் உழைத்து வாழக் கூடியவர்களும் அதிகமான கையிருப்பு இல்லாதவர்களும் கடன் அட்டை வாங்கினால் அவர்கள் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்கள் கடன் அட்டையைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் பாதுகாப்பானது.

பணம் கையிருப்பில் இருந்தும் பணத்தை எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது என்பதற்காக கடன் அட்டையைப் பயன்படுத்தக் கூடியவர்கள் மட்டும்தான் குறித்த காலத்துக்குள் பணத்தைச் செலுத்தி வட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஏழைகளும், நடுத்தர மக்களும் இதை உணர்ந்து, சிரமத்தில் தள்ளி சக்திக்கு மீறிய பொருட்களை வாங்கத் தூண்டும் கடன் அட்டையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதுதான் இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது.

குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தாவிட்டால் அதற்கான வட்டியைச் செலுத்துவேன் என்று ஒப்புக்கொண்டு விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டால்தான் கடன் அட்டை தரப்படும். நாம் குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தா விட்டால் வட்டி செலுத்துவோம் என்று ஒப்புக் கொண்டது தவறுதானே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தி வட்டி கொடுக்காமல் நடந்து கொள்வேன் என்று நம்பிக்கை வைத்து ஒரு வேளை அப்படி செலுத்த முடியாவிட்டால் வட்டி செலுத்துவேன் என்று கூறுவது வட்டி வாங்கியதாகவோ, கொடுத்ததாகவோ, துணை நின்றதாகவோ ஆகாது. மேலும் பேச்சுக்காக இது போன்ற சொற்களைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் குற்றமாக ஆகாது.

கிறித்தவர்களுடன் விவாதம் செய்யும் போது நீங்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபித்து விட்டால் அதை நாங்கள் வேதமாக ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்கிறோம். அவர்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதால் வாயளவில் இதைக் கூறுகிறோம். பைபிளை ஏற்றுக் கொள்வதாக இதற்கு நாம் அர்த்தம் செய்ய மாட்டோம்.

தர்கா கட்ட ஆதாரத்தைக் காட்டினால் நாங்களும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று கூறுவதோ எழுதுவதோ தர்காவை ஆதரித்ததாக ஆகாது. அவர்களால் ஆதாரத்தைக் காட்டவே முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே நாம் இப்படி கூறுகிறோம்.

ரஹ்மானுக்கு (அல்லாஹ்வுக்கு) பிள்ளை இருக்குமானால் முதலில் வணங்குபவனாக நான் இருப்பேன் என்று கூறுவீராக (43:81) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லவே இல்லை என்பதில் உறுதியாக நம்பிக்கை வைத்த நிலையில் தான் இப்படி நபியைக் கூறச்சொல்கிறான்.

இஸ்லாத்தில் வட்டி தடுக்கப்பட்டதை அறிந்து, வட்டி கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நம்பிக்கை வைத்துள்ள நாம் குறிப்பிட்ட நாளில் கடனைச் செலுத்தத் தவறினால் வட்டி செலுத்துவேன் என்று கூறுகிறோம். வட்டி செலுத்தும் நிலைக்கு போக மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் தான் இப்படி கூறுகிறோம். வட்டி செலுத்துவோம் என்பதற்காகக் கூறவில்லை. எனவே இதைக் காரணமாகக் கொண்டு கடன் அட்டை கூடாது என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல.

மணி டிரான்ஸ்பர் செய்யலாமா?

ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணயமாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதல் என மணி டிரான்ஸ்பர் இரு வகைகளில் அமைந்துள்ளன.

ஒரே வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதலில் கூடுதல் குறைவு இல்லாமல் சமமான மதிப்பில் மாற்றிக் கொள்ள வேண்டும். பத்து கிராம் தங்கக் காசைக் கொடுத்து பத்து ஒரு கிராம் தங்கக் காசுகள் வாங்கலாம். விற்கலாம். பதினொரு அல்லது ஒன்பது காசுகள் என்ற வகையில் மாற்றினால் அது ஹராமாகும்.

அது போல் ஒரு நாட்டின் ரூபாய்க்கு சில்லரை மாற்றும் போது கூடுதல் குறைவு இருக்கக் கூடாது. நூறு ரூபாயை பத்து ரூபாயாக மாற்றும் போது பத்து நோட்டுகள் வாங்கலாம். பதினொன்று அல்லது ஒன்பது நோட்டுக்கள் வாங்கக் கூடாது. அது போல் நோட்டுக்குப் பதிலாக காயன்ஸ் வாங்கும் போது அதற்குச் சமமான மதிப்பில் தான் வாங்க வேண்டும்.

நாணய வகை மாறுபட்டால் மார்கெட் நிலவரப்படி அல்லது நம் விருப்பப்படி விலை நிர்ணயிக்கலாம். மார்க்கத்தில் இது குற்றமாகாது. டாலருக்கு ரியாலை அல்லது ரூபாய்க்கு திர்ஹமை மாற்றும் போது அல்லது தங்கத்துக்கு வெள்ளியை மாற்றும் போது எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால் இது உடனுக்குடன் நடக்க வேண்டும். கடனாக இருக்கக் கூடாது. இன்று ஒரு நூறு டாலர் கொடு நாளை ஐந்தாயிரம் தருகிறேன் என்று வியாபாரம் நடந்தால் கடனுக்காக நாம் அதிகம் பெற்றதாக ஆகி வட்டியில் சேர்ந்து விடும்.

صحيح البخاري

2060 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ أَبِي المِنْهَالِ، قَالَ: كُنْتُ أَتَّجِرُ فِي الصَّرْفِ، فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنِي الفَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا الحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، وَعَامِرُ بْنُ مُصْعَبٍ: أَنَّهُمَا سَمِعَا أَبَا المِنْهَالِ، يَقُولُ: سَأَلْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ، وَزَيْدَ بْنَ أَرْقَمَ عَنِ الصَّرْفِ، فَقَالاَ: كُنَّا تَاجِرَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّرْفِ، فَقَالَ: «إِنْ كَانَ يَدًا بِيَدٍ فَلاَ بَأْسَ، وَإِنْ كَانَ نَسَاءً فَلاَ يَصْلُحُ»

அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நாணயமாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்: அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம்; அதற்கு உடனுக்குடன் மாற்றிக் கொண்டால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது என அவர்கள் பதிலளித்தார்கள் என்றார்கள்.

நூல் : புகாரி – 2060

صحيح البخاري

2175 – حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ أَبُو بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ، وَالفِضَّةَ بِالفِضَّةِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ، وَبِيعُوا الذَّهَبَ بِالفِضَّةِ، وَالفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْتُمْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.

நூல் : புகாரி – 2175