Tamil Bayan Points

11) இது தான் பைபிள்

நூல்கள்: இது தான் பைபிள்

Last Updated on February 24, 2022 by

இதுதான் பைபிள்

காலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும், நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம். இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று; மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று.

1993ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கடைசியில் மதுரையில் நடந்த கிறித்தவ சமூக மாத இதழ் வெளியீட்டு விழாவில் மதுரை மறை மாநிலப் பேராயர் ஆரோக்கிய சாமி பேசும் போது,  தமழிகத்திலுள்ள பல்வேறு கிறித்தவப் பிரிவினரின் ஆயர்கள் ஒன்று கூடி ஒரே பைபிளை வடிவமைக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஏற்றுக் கொண்ட புதிய பைபிள் உருவாக்கப்பட்டது.

இந்த பைபிளில் புதிய அதிகாரங்கள் மற்றும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வரி வடிவம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். (தினகரன்–மதுரை 1-12-93)

இதன் பிறகும் பைபிளை இறை வேதமென்று கிறித்தவர்கள் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்நூலை நிறைவு செய்கிறோம்.

கிறித்தவ நண்பர்களே!

நாங்கள் இதுவரை எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும், அதனடிப்படையில் நாங்கள் எடுத்து வைத்த வாதங்களையும் நடுநிலையுடன் சிந்தித்தால் பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்ற முடிவுக்குத் தான் நீங்கள் வருவீர்கள்! இந்த முடிவுக்கு நீங்கள் வந்து விட்டால் இனி எதை நம்புவது? எந்த வழியில் செல்வது? என்று திகைக்க வேண்டாம்!

பதினான்கு நூற்றாண்டுகளாக மாற்றமோ, திருத்தமோ, கூட்டலோ, குறைத்தலோ செய்யப்படாமல் உலகெங்கும் ஒரே விதமாக அமைந்திருக்கும் ஒரே வேதம் திருக்குர்ஆன் உள்ளது.

பைபிளில் இருப்பது போன்ற நகைப்பிற்கிடமான சட்டதிட்டங்கள் ஏதும் திருக்குர்ஆனில் கிடையாது; ஆபாசம் கிடையாது; முரண்பாடு கிடையாது; ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் போக்குக் கிடையாது!

திருக்குர்ஆன் மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைக்கும் சரியான வழி காட்டுகிறது! அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தருகிறது!

இயேசு உள்ளிட்ட எல்லாத் தீர்க்கதரிசிகளையும் புகழ்ந்து போற்றுகிறது. அவர்களது சேவைகளையும், தியாகங்களையும் மதிக்கிறது.

தீர்க்கதரிசிகள் மது அருந்தியதாக, விபச்சாரம் செய்ததாகச் சுமத்தப்பட்ட களங்கங்களையெல்லாம் திருக்குர்ஆனே துடைத்தெரிந்தது.

அருமைக் கிறித்தவ நண்பர்களே! ஒரு முறையாவது திருக்குர்ஆனைக் கருத்தூன்றிப் படியுங்கள்! உங்கள் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை அது ஏற்படுத்துவதை அறிந்து கொள்வீர்கள்! அதன் மூலம் இஸ்லாத்தின் பால் உங்கள் பார்வைகளைத் திருப்புவீர்கள்! எங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது என்று நம்புகிறோம். இறைவன் உங்களுக்கும், எங்களுக்கும் நேர்வழி காட்ட பிரார்த்தனை செய்கிறோம்.