Tamil Bayan Points

10) ரோஹில்கண்ட்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

10) ரோஹில்கண்ட்

மீரத்தில் துவங்கிய புரட்சி இருபது நாட்களாகியும் ரோஹில் கண்டில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. கான் பகதூர் கான் சிப்பாய்களைச் சந்தித்து புரட்சிக்குத் தூபமிட்டார், தூண்டி விட்டார், பற்றிக் கொண்டது போர். மே31ல் யுத்தம் துவங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள் ஊரைக் காலி செய்துவிட்டு நைனிடாலுக்கு ஓடும் அளவுக்குப் போராளிகள் தமது வீரத்தை வெளிப்படுத்தினர்.

ரோஹில்கண்டில் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு டில்லி அரசரின் பச்சைக் கொடி பறக்க விடப்பட்டது. மன்னரின் பிரதிநிதியாக கான் பகதூர் கான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரோஹில்கண்ட்மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தபோது தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் கான் பகதூர் கான் ஆங்கிலேயர்களால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.(விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 167-168 – (இ.சு.பெ.இ.ப) பக். 790-793).

பதேபூர் புரட்சி, உதவி மாஜிஸ் திரேட்டாக இருந்த ஹிக்மதுல்லாஹ் தலைமையில். கான்பூர் புரட்சி, அஸீமுல்லா கான் தலைமையில். மேவார் புரட்சி, பிரோஸ் ஷா தலைமையில். ஆக்ரா புரட்சி, முராத் அலி தலைமையில்,. இப்படிப் புரட்சியின் வழியெங்கும் பூத்துக் குலுங்கிய நறுமலர்கள் இஸ்லாமிய இளவல்களே! (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 204 – (இ.சு.பெ.இ.ப) பக். 813,804,816,817,821)…