Tamil Bayan Points

10) பொய் சொல்லாதீர்

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

பொய் சொல்லாதீர்

ஒரு முஸ்லிம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் அதற்கு மாற்றமாக சர்வ சாதாரணமாய் பொய் பேசுவதை தான் பார்க்க முடிகின்றது. எதற்கெடுத்தாலும் பொப் அற்பமான சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பொய் பேசுவதை காண முடிகின்றது. நேற்று ஏன் சொற்பொழிவுக்கு வரவில்லை என்று கேட்டால் சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள் அதான் வரமுடியலை என்று நாக்கூசாமல் பொய் சொல்கின்றோம்.

போனில் ஏங்க எங்கங்க இருக்கிறீங்க? என்று மனைவி கேட்டால் அதற்கும் தயாராய் ஒரு பொய்யை வைத்திருப்போம். இந்தா வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டே இருக்கேன் என்று ஒன்றை அள்ளி விடுவோம் இவ்வாறு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் பொய்யை நுனிநாவில் வைத்திருப்போம். இந்த அளவிற்கு பொய் மலிந்து விட்டதன் காரணம் என்ன ஏனெனில் பொய்யை ஒரு பாவமாகவே நம்மில் யாரும் பார்ப்பதில்லை. இதை பெரும் தீமையாக மக்கள் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்.

  1. அவன் பேசும்போது பொய்பேசுவான்
  2. வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்
  3. அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை ஒப்படைத்தால் அதில் மோசடி செய்வான்

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி – 33

பொய் என்பது முஸ்லிமின் பண்பல்ல. மாறாக முனாஃபிக்கின் இரட்டை முகத்தையுடைய நயவஞ்சனுக்குரிய பண்பு என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள். ஒரு சிலர்களின் பேச்சை கவனித்தால் தப்பித்தவறிக்கூட உண்மையை பேச விடக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருக்கின்றார்களோ என்னவோ உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுக்க முழுக்க பொய்யாகவே இருக்கின்றது.

இத்தகையவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தால் பொய்யும் நம்முடன் ஒட்டி உறவாற ஆரம்பித்து விடும். நம்மிடையே பொய் பேசும் பழக்கம் இருக்குமானால் நயவஞ்சகனுக்குரிய பண்பு நம்மிடம் இருக்கின்றது என எண்ணி அதை களையெடுக்க வேண்டும். இல்லையெனில் ??