Tamil Bayan Points

10) ஜாதிகளின் மீது அதிகாரம் செலுத்தியவர் யார்?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 27, 2022 by

10) ஜாதிகளின் மீது அதிகாரம் செலுத்தியவர் யார்?

புதிய ஏற்பாட்டில் யோவானின் தரிசனம் உள்ளது. அதில் இயேசு கூறிய ஒரு முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது. யோவானின் தரிசனம் 2:24 முதல் 2:29 வரை இடம் பெற்ற அந்த முன்னறிவிப்பைக் காதுள்ளவர் கேட்கட்டும்!

தியத்தைராவிலிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு, அதாவது, இந்த உபதேசத்தை அங்கீகரியாமலும் சாத்தானின் ஆழங்களென்று சொல்லப்படுவதை அறியாமலுமிருக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது: உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்த மாட்டேன்.

நான் வரும் வரைக்கும் உங்களுக்குள்ளதைப் பற்றிக் கொண்டேயிருங்கள். நான் என் பிதாவினிடமிருந்து பெற்றுக் கொண்டது போல, ஜெயங்கொண்டு முடிவு பரியந்தம் என் கிரியைகளைக் கைக் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.

இரும்புக் கோலால் அவன் அவர்களை மேய்த்து நடத்துவான், மண் பாண்டங்கள் போல் அவர்கள் நொறுக்கப்படுவார்கள். விடி வெள்ளியையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

யோவான் என்பவருக்கு இயேசு தரிசனம் தந்து அவரிடம் கூறிய செய்திகளே யோவானின் தரிசனம். இயேசு கூறிய இந்த முன்னறிவிப்பு நிச்சயம் இயேசுவுக்குப் பின்னர் வரக்கூடியவரைத் தான் குறிக்கும் என்பதில் அறிவுடைய மக்கள் கருத்து வேறுபாடு கொள்ள மாட்டார்கள்.

இதில் உள்ள ஒவ்வொரு வாசகமும் ஊன்றிக் கவனிக்கத் தக்கதாக அமைந்துள்ளது.

இனி ஒருவர் வரவிருக்கிறார். அவரும் என்னைப் போலவே என் பிதாவிடமிருந்து வேதத்தைப் பெறுவார். இயேசு போதித்த ஒரு கடவுள் கொள்கையை அவர் கைக்கொள்வார். அவர் தனது சாதி மட்டுமின்றி அனைத்து சாதிகள் மீதும் அதிகாரம் செலுத்துவார். இரும்புத் தடியால் இரும்புத் தடி போன்ற கடுமையான சட்ட திட்டங்களால் மக்களை மேய்ப்பார் என்றெல்லாம் இந்த முன்னறிவிப்பு கூறுகிறது.

நபிகள் நாயகத்தின் வரலாற்றை அறிந்த ஒவ்வொருவரும் இயேசுவின் இந்த முன் அறிவிப்பு வார்த்தைக்கு வார்த்தை நபி (ஸல்) அவர்களுக்கும் பொருந்துவதை உணராமல் இருக்க மாட்டார்.