Tamil Bayan Points

1. ஸஹீஹ் الصحيح (ஆதாரப்பூர்வமானவை)

நூல்கள்: சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

Last Updated on May 13, 2019 by Trichy Farook

1. ஸஹீஹ் الصحيح (ஆதாரப்பூர்வமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை.

ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள்.

எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

1 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، ح وحَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»، قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: «إِلَّا بِطُهُورٍ» —سنن الترمذي

தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ்.

இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்.

முஸ்அப் பின் ஸஅது என்பார் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்.

முஸ்அப் பின் ஸஅதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார்.

ஸிமாக்கிடம் வகீவு, அபூ அவானா ஆகிய இருவர் கேட்டனர்.

அதாவது வகீவு என்பார் வழியாகவும், அபூ அவானா என்பார் வழியாகவும் இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதி இமாமுக்குக் கிடைத்துள்ளது.

முதல் வழி

1. நபிகள் நாயகம் (ஸல்)

2. இப்னு உமர் (ரலி)

3. முஸ்அப் பின் ஸஅது

4. ஸிமாக் பின் ஹர்பு

5. இஸ்ராயீல்

6. வகீவு

7. ஹன்னாத்

8. திர்மிதீ

இரண்டாவது வழி

1. நபிகள் நாயகம் (ஸல்)

2. இப்னு உமர் (ரலி)

3. முஸ்அப் பின் ஸஅது

4. ஸிமாக் பின் ஹர்பு

5. அபூ அவானா

6. குதைபா

7. திர்மிதீ

மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார்.

நாம் எடுத்துக்காட்டிய இந்த முதல் ஹதீஸ் மட்டுமின்றி அந்த நூலில் இடம்பெற்ற ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை திர்மிதி கூறுகின்றார்.

உதாரணத்துக்காகத் தான் திர்மிதி என்ற ஹதீஸ் நூலை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். எந்த ஹதீஸ் நூலை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு ஹதீஸும் அதன் முழு அறிவிப்பாளர் வரிசைத் தொடருடன் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

எடுத்துக்காட்டாக திர்மிதி நூலிலிருந்து நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸைச் சரியான ஹதீஸ் என்று கூற வேண்டுமானால் கீழ்க்கண்ட அனைத்து விபரங்களும் சரியானதாக இருக்க வேண்டும்.

இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு முந்தைய அறிவிப்பாளரிடமிருந்து கேட்டிருக்க வேண்டும்.

இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான – ஸஹீஹான  ஹதீஸ் என்பர்.

அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஆதாரப்பூர்வமான – ஸஹீஹான  ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.