Tamil Bayan Points

01) முன்னுரை

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

Last Updated on February 24, 2022 by

முன்னுரை

புகழனைத்தும் அல்லாஹ்விற்கு!

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்நூல் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கிய ஒரு எளிய வாசகனால் எழுதப்பட்ட நூலாகும்.

அறிவியலைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டதன் காரணமாக இளம் வயதிலேயே அது தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். அறிவியல் செய்திகளில் ஓரளவு தனி ஈடுபாடு எனக்குள் இருப்பதைத் தாமதியாமல் புரிந்து கொண்டேன். சில வருடங்கள் கழித்து திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்று அதையும் படிக்கத் தொடங்கினேன்.

அப்போது அறிவியல் நூல்களில் நான் படித்த சில செய்திகள் செய்திச் சுருக்கம் போல் திருக்குர்ஆனில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். மேலும் படிக்கப் படிக்க சில செய்திகள் புரிகின்ற விதத்திலும், சில செய்திகள் புரியாதது போன்றும் தென்பட்டன. மற்றும் சில செய்திகள் நான் அது வரை எந்த அறிவியல் நூல்களிலும் படிக்காதவைகளாகவும் இருந்தன. எனவே படிக்காத அறிவியல் செய்திகளுக்காக புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்கத் தொடங்கினேன்.

இவ்வாறு ஒரு புறம் திருக்குர்ஆனையும் மறுபுறம் அறிவியல் நூல்களையும் மாறிமாறி படிக்கத் துவங்கிய போது திருக்குர்ஆனில் கொஞ்சமும் எதிர்பார்த்திராத அறிவியல் செய்திகள் ஏராளமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூலாக இல்லாமல் வேத நூலாக இருந்தும் கூட இவ்வளவு பெருவாரியான அறிவியல் செய்திகள் அதிலும் திருக்குர்ஆன் ஏழாம் நுற்றாண்டில் இறக்கப்பட்டிருக்க, அந்நூலில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அதிநவீன அறிவியல் உண்மைகள் கூட சொல்லப்பட்டிருக்கும் அற்புதத்தைக் கண்டு பிரமித்துப் போனேன்.

திருக்குர்ஆனிலிருந்து பெருவாரியான அறிவியல் செய்திகள் வரத் தொடங்கிய போது அவற்றுள் சில செய்திகள் முரண்படுவதைப் போன்றும், வேறு சில செய்திகள் விளங்காதது போன்றும் தென்படத் தொடங்கியது. எனவே திருக்குர்ஆனுடைய வசனங்களுக்குள் ஆழமாக இறங்கிச் சென்று சிந்திக்கத் தொடங்கினேன்.

இதன் விளைவாக விளங்காத செய்திகள் விளங்கத் தொடங்கி முரண்பாடுகளும் விலகத் தொடங்கின. சில முரண்பாடுகளின் தீர்வு அந்தந்த வசனங்களின் ஆழங்களிலேயே இருந்தன. மற்றும் சில முரண்பாடுகளின் தீர்வு வேறு வசனங்களில் கிடைத்தன. ஆயினும் வேறு சில முரண்பாடுகள் தீர்க்கப்படாமலே காணப்பட்டன.

ஏனெனில் அந்த முரண்பாடுகளின் காரணம் உள்ளபடியே அறிவியல் அனுமானங்கள் தவறாக இருந்ததாகும். நமது பணியை மேலும் தொடர்ந்த போது தவறான அறிவியல் அனுமானங்கள் திருத்தப்பட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் திருக்குர்ஆனுடைய அறிவியலே உண்மை என நிரூபித்த அற்புதத்தையும் காண முடிந்தது.

ஆய்வுக் கண்களோடு பார்த்தால் திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதை நிரூபிப்பதற்காக ஏராளமான ஆதாரங்களை அது வழங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவைகளில் இறை இயல், அரசியல், நீதி, வரலாறு, தத்துவம், இலக்கியம் மற்றும் அறிவியல் போன்ற துறைகள் குறிப்பிடத் தக்கவைகளாகும். அவைகளில் நாம் அறிவியல் சார்ந்த ஆதாரங்களையே இந்நூலில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் இல்லை என்றும், அது இறைவனால் வழங்கப்பட்ட வேத நூலே என்றும் நாம் அறிவோம். இருப்பினும் இதில் இந்த அளவிற்கு அறிவியல் செய்திகள் வழங்கப்படுவதற்கு இரண்டு காரணங்களை நம்மால் காண முடிகிறது.

முதலாவதாக இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை பற்றிக் கூறும் போதும், மானிடர்க்கு இறைவன் செய்துள்ள அனுக்கிரகங்களைப் பற்றிக் கூறும் போதும் அதில் இயல்பாகவே அறிவியல் வந்து விடுகிறது.

இரண்டாவதாக திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட கடைசி வேத நூலாக இருப்பதால் இந்த உலகம் உள்ளளவும் அது உலக மக்கள் அனைவருக்குமான இறைவனின் வழிகாட்டியாக இருந்து வருகிறது. எனவே உலகில் தோன்றிய அறிவியல் புரட்சிக்குப் பிறகும் இங்கு வாழும் அறிவியல் அபிமானிகளுக்கு இது இறைவனிடமிருந்து வந்துள்ள வேத நூலே என்பதற்கான ஆதாரங்களைத் தரும் பொருட்டும் அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் கூறப்படும் தேவை ஏற்பட்டது. இந்த இரண்டாவது காரணம் நம்மை வெகுவாகக் கவர்கிறது.

இந்த அறிவியல் யுகத்தில் அறிவியல் அபிமானிகளாக வாழும் கோடிக்கணக்கான மக்கள் எதை நம்புவதாக இருந்தாலும் அது அறிவியலுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று ஆராய்ந்து தீர்மானிக்கும் இயல்பைப் பெற்றுள்ளார்கள். அம்மக்களில் பெரும்பாலானவர்களின் ஒரு பொதுவான கருத்து வேத நூல்கள் யாவும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவைகளே; எனவே அவை யாவும் கடவுளின் பெயரால் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளே என்பதுமாகும். ஆனால் திருக்குர்ஆனைப் பொருத்தவரை அவர்களுடைய இக்கருத்து உண்மைக்குப் புறம்பானதாகும்.

திருக்குர்ஆனைத் தவிர மேலும் சில வேத நூல்கள் திருக்குர்ஆனுக்கு முன்னர் இறைவனால் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் பிற்காலத்தில் அவைகளில் ஒரு பக்கம் மகான்களின் உபதேசங்கள் குடியேறிய போது மறுபக்கம் மத மேலாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பல திருத்தங்களும் நடைபெற்றுள்ளன என்று இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர்.

இவ்வாறு மனிதர்களின் சொந்தக் கருத்துக்களாகக் குடியேறிய வேத வசனங்களில் அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் தோன்றுவது இயல்பே. ஆயினும் திருக்குர்ஆன் இறைவனின் கடைசி வேத நூலாக இருப்பதாலும், உலகுள்ள காலம் வரை அது இறைவனின் வழிகாட்டியாக உலக மக்களுக்குப் பயன்பட வேண்டிய காரணத்தாலும் அதன் பாதுகாப்பை இறைவன் தானே ஏற்றுக் கொண்டான்.

எனவே திருக்குர்ஆனில் மானிடனின் வார்த்தைகள் – அவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்த போதிலும் – ஒன்று கூட உட்புக முடியவில்லை. திருக்குர்ஆனில் உள்ள 77 ஆயிரம் வார்த்தைகளும், 3,20,000 எழுத்துக்களும் இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடாகும்.

திருக்குர்ஆனில் எடுத்த எடுப்பிலேயே முரண்பாடாகத் தோன்றும் ஓரிரு செய்திகள் (சான்றாக பேரண்டம் படைக்கப்பட்டது ஆறு நாட்களில், ஆகாயம் பூமிக்குக் கூரை,ஆகாயத்தில் நிலைநாட்டப்பட்ட தராசு போன்றவை) நுனிப்புல் மேய்வதனால் தோன்றுவதாகும். வசனங்களுக்குள் ஆழமாக இறங்கிச் சென்று பார்த்தால் எதிர்பாராத நவீன அறிவியல் உண்மைகளின் அழுத்தத்தால் மூச்சுத் திணறலே ஏற்படக் கூடும்.

அந்த அளவிற்கு அபாரமான அறிவியல் உண்மைகள் அவற்றுக்குள் அடங்கி இருப்பதைக் காணலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் திருக்குர்ஆனுக்கு இருந்தும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சில அறிவியல் செய்திகளைப் பற்றிய ஆய்வுகள் மட்டுமே இத்துறையில் நடைபெற்றுள்ளதாகவே காண முடிகிறது.

ஆனால் உலகுள்ளளவும் உலக மக்கள் அனைவருக்குமாக இறைவன் இறக்கி வைத்த ஒரே வேதமாகிய இத்திருமறைக்குரிய அறிவியல் ஆதாரங்களின் மீது விரிவான ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உலக மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் திருக்குர்ஆனின் நம்பிக்கையாளர்களாக இருக்கும் தகுதி வாய்ந்த அறிவியலாளர்களின் கவனத்திற்கு அதில் கூறப்பட்டுள்ள புரட்சிகரமான நவீன அறிவியல் உண்மைகளைப் பற்றிய செய்திகள் சென்றடையவில்லை.

இந்நூல் அவர்களின் கவனத்தைக் கவர்ந்து திருக்குர்ஆனிலுள்ள அறிவியல் ஆதாரங்களைச் சிறந்த முறையில் அவர்களிடமிருந்து வெளிவரச் செய்வதற்கான ஒரு முயற்சியாகும். இம்முயற்சி நிறைவேற இறைவன் துணை புரிவானாக!

அல்ஜன்னத் பத்திரிக்கையில் 1992-ல் இருந்து தொடர்ச்சியாக சில வருடங்கள் திருக்குர்ஆனுடைய அறிவியல் ஆதாரங்களைக் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருந்த போது வாசகர்கள் அளித்த அமோகமான வரவேற்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அக்கட்டுரைகள் கல்விக் கூடங்களையும் எட்டி சில கல்லூரிகளிலிருந்து திருக்குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதற்கான வாய்ப்பைக் கூட பெற்றுத் தந்துள்ளன.

நான் எழுதிய கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிடும்படி நண்பர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இருப்பினும் திருக்குர்ஆனுடைய அறிவியல் ஆதாரங்களின் மீது வெளியிடப்படும் ஆய்வுப் புத்தகம் உள்ளபடியே தகுதி வாய்ந்த அறிவியலாளர்களிடமிருந்து வெளி வருவதே சிறப்பாக இருக்கும் எனக் கருதி நண்பர்களின் வற்புறுத்தல்களைத் தட்டிக் கழித்து வந்தேன்.

ஆனால் நான் எழுதிய கட்டுரைகள் வருடக் கணக்காக வெளியிடப்பட்ட மாதாந்திரப் பத்திரிகைகளில் சிதறிக் கிடப்பதால் அவை உரியவர்களின் கவனத்தைச் சென்றடையாத நிலையே ஏற்பட்டுள்ளது. இக்குறையை நீக்குவதற்காகவே நான் முதலில் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றோடு திருக்குர்ஆனிலிருந்து இது வரை வெளிப்படுத்தப்படாத மற்றும் பல அறிவியல் ஆதாரங்களையும் இணைத்து இந்த முதல் தொகுதியை உருவாக்கி உள்ளேன்.

இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் ஒரு எளிய அறிவியல் நூல் வாசகனால் திருக்குர்ஆனிலிருந்து இந்த அளவிற்கு அறிவியல் ஆதாரங்களைப் பெற முடிந்தால் உள்ளபடியே ஒரு அறிவியலாளர் இப்பணியைச் செய்திருந்தால் திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்டதே என்பதற்கு எந்த அளவிற்கு மேலும் சிறப்பான ஆதாரங்களைப் பெற முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் இது வரை திருக்குர்ஆனுடைய தோற்றுவாய் (ஆசிரியர்) யார் என்று அறியாத வாசகர்கள் இந்நூலில் காணும் அறிவியல் ஆதாரங்களைப் பார்வையிட்டு திருக்குர்ஆன் இறைவனிடமிருந்தன்றி வேறு யாரிடமிருந்தாவது வந்திருப்பதற்கு எள்ளளவாவது அல்லது எள்ளின் முனை அளவாவது வாய்ப்பிருக்கிறதா என்பதை விருப்பு வெறுப்பின்றி சிந்தித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என சகோதரப் பாசத்தோடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்களது ஆய்வில் திருக்குர்ஆனின் தோற்றுவாய் இறைவனே என்பதை உங்கள் பகுத்தறிவு ஒப்புக் கொண்டால் திருக்குர்ஆனை உங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த போது, சந்திக்கும் போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தி பற்பல கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்பையும் உருவாக்கித் தந்த எஸ். கமாலுதீன் மதனீ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகையில் எழுதுவதற்கு வாய்ப்பை உருவாக்கித் தந்து, திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்புக்களில் எனக்கேற்படும் ஐயங்களைத் தீர்த்து வைத்து எனது கட்டுரைகள் சிறப்பாக அமைய துணை புரிந்ததோடு மக்கள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தி பற்பல கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்புக்களையும் உருவாக்கி என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்திய அப்போதைய அல்ஜன்னத் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பி. ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மேலும் இப்புத்தகத்தை எழுதும் பணியிலும் பயனுள்ள பற்பல அரிய ஆலோசனைகளை வழங்கி புத்தகம் சிறப்பாக அமைய உதவியதற்காகவும் எனது மனமார்ந்த நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலை எழுதும் போது திருக்குர்ஆனுடைய மொழி பெயர்ப்புகளில் ஏற்பட்ட ஐயங்களை நிவர்த்தி செய்து தந்த மௌலவி யூசுஃப் பெரும்பாவூர் அவர்களுக்கும், அறிவியல் நூல்களைத் தந்து உதவிய அன்புச் சகோதரர்கள் பேராசிரியர் டி.சி. அப்துல் மஜீத் மற்றும் முஹம்மது நஜீப், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி மற்றும் ஹ.ஐ. அப்துல் மஜீத், பட்டிக்கரை ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்னை அவ்வப்போது ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த பெயர் குறிப்பிடப்படாத சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த நூலை வல்ல இறைவனின் துணையோடு உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்

ஏ.கே. அப்துர் ரஹ்மான