Tamil Bayan Points

03) இயேசு என் குமாரன் எனக் கர்த்தர் கூறுவது

நூல்கள்: இயேசு இறை மகனா?

Last Updated on October 30, 2022 by

1. இயேசுவைத் தமது குமாரன் என்று கர்த்தரே பைபிளிள் குறிப்பிட்டுள்ளார்.

2. இயேசுவும், கர்த்தரும் ஒன்றுக்குள் ஒன்று என பைபிள் கூறுகிறது.

3. பைபிள் இயேசுவை ஆண்டவர் என்கிறது.

4. இயேசு தந்தையின்றிப் பிறந்தார்.

5. இயேசு ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.

6. இறந்த பின் இயேசு உயிர்த்தெழுந்தார்.

7. இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்.

என்பன போன்ற காரணங்களால் இயேசுவைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ கிறித்தவ மக்கள் நம்புகின்றனர்.

இயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ‘இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்’ என்று உரைத்தது.

(மத்தேயு 3:17)

‘என்னுடைய நேச குமாரன்’ என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்?

என்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.

கர்த்தர் தனது நேசகுமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

பைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.

பைபிளில் இறை மகன்’ என்று குறிப்பிடப்பட்டவர்கள் பற்றிய விபரத்தைக் காண்போம்.

இஸ்ரவேல் இறை மகன்

அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் ‘இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்’ என்றார்.

(யாத்திராகமம் 4:22,23)

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.

(எரேமியா 31:9)

இயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும்.

இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. அசரீரியான சப்தம் தான் அவ்வாறு கூறியதாகக் காணப்படுகிறது. அது கடவுளின் சப்தமாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிசாசு கூட இவ்வாறு விளையாடி இருக்க முடியும்.

முன்பொரு முறை பிசாசு இயேசுவைச் சோதித்ததாக மத்தேயு 4:9,10 வசனங்கள் கூறுகின்றன.

ஆனால் இஸ்ரவேலைக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்.

இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்’ (சங்கீதம் 2:7)

என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக்குமாரனாய் இருப்பான்.

(முதலாம் நாளாகமம் 17:13)

சாலமோன் இறை மகன்

அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.

(முதலாம் நாளாகமம் 22:10)

எப்ராயீம் இறை மகன்

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

(எரேமியா 31:9)

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.

(இரண்டாம் சாமுவேல் 7:14)

இயேசு இறை மகன்’ எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்? இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன்’ எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானதாகும்.

எல்லா மக்களும் தேவ குமாரர்கள்

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! (உபாகமம் 14:1)

தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார்.

(சங்கீதம் 68:5)

திக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால் ‘அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே! அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே! எங்களுக்கு உதவுங்கள்’ என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே? அது ஏன்?

இறை மகன்’ எனும் அடைமொழி கடவுளின் புத்திரர்கள்’ எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை; இறைவனின் அடியார்கள்’ எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறை மகன்’ என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

இயேசுவின் வாக்கு மூலம்

மேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன் மக்களைக் கடவுளின் புத்திரர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார். (மத்தேயு 6:14,15)

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்.

(மத்தேயு 5:9)

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.

(மத்தேயு 5:45)

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

(மத்தேயு 7:11)

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

(மத்தேயு 23:9)

அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

(யோவான் 1:12)

அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

(லூக்கா 6:35)

பவுல் வாக்கு மூலம்

இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைந்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே. ஆனால் இவர் கூட தன்னையுமறியாமல் இறைவனுக்கு மட்டும் மகனாக இருக்க முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.

நாம் தேவனுடைய சந்ததியராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுத்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

(அப்போஸ்தலர் 17:29)

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி

கொடுக்கின்றார்.

(ரோமர் 8:16)

அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்.

(இரண்டாம் கொரிந்தியர் 6:18)

* எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.

* இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.

* இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.

இதிலிருந்து குமாரர்’ எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதல்வர்கள்’ எனும் அர்த்தத்திலே அப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் பிறகும் கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அனைவருமே புதல்வர்கள் தாம் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இறை மகன்’ என்பதன் பொருள்

இயேசு இறை மகன் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளார்.. இன்னும் பலரும் இறை மக்கள் என்று கூறப்பட்டுள்ளனர். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

தங்கள் மனோ இச்சைப் பிரகாரம் விளக்கம் கொடுத்துப் புரிந்து கொள்வதை விட பைபிளின் வெளிச்சத்தில் புரிந்து கொண்டால் தான் பைபிளை மதித்தவர்களாக ஆக முடியும்.

* இறை மகன், இறைக் குமாரன் என்பன போன்ற சொற்களுக்கு இறைவனிலிருந்து பிறந்தவர், அதனால் இறைவனாகவே ஆகிவிட்டவர் என்று பொருள் கொள்வதா?

* அல்லது இறைவன் விரும்பும் விதமாக தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்று பொருள் கொள்வதா?

இதைத் தான் கிறித்தவர்கள் விளங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்!

இறை மகன் என்பது போன்ற சொற்களுக்கு முதலாவது அர்த்தம் இருக்க முடியாது.

கிறித்தவர்களே இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கு அந்தச் சொல் பயன்படுத்தப்படும் போது முதலில் சொன்ன பொருளைக் கொள்வதில்லை. அப்படியானால் அந்தச் சொல்லுக்கு இரண்டாவது பொருளே கொண்டாக வேண்டும். பைபிளும் கூட இதை உறுதி செய்கின்றது.

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

(மத்தேயு 23:9)

பூமியில் உள்ள ஒருவரையும் பிதா – தந்தை என்று சொல்லக் கூடாது என்று இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகிறது. அந்தக் கட்டளையின் பிரகாரம் நம்மைப் பெற்ற தந்தையைக் கூட தந்தை என்று கூறக் கூடாது. அவ்வாறு கூறினால் இந்தக் கட்டளையை மீறுவதாக ஆகும்.

ஆனாலும் ஒவ்வொரு கிறித்தவரும் தனது தந்தையை தந்தை என்று தான் கூறுகிறார்.

அப்படியானால் ஒருவரையும் பிதா என்று கூறக் கூடாது என்ற கட்டளையை அவர் மீறுகிறாரா? என்பதைச் சிந்திக்கும் போது தான் இங்கே பிதா’ என்பது எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும் பிதா என்பது இரண்டு பொருளில் பயன்படுத்தப்படும் சொல் என்பதும் புரிகிறது.

படைத்தவன், கடவுள் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு.

பெற்ற தந்தை எனவும் பொருள் உண்டு.

படைத்தவன், கடவுள் என்ற பொருளிலேயே இங்கே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.

‘பூமியில் உள்ள எவரையும் கடவுள் என்று கூறாதீர்கள். பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்கள் கடவுள்’ என்று சொல்லிப் பார்த்தால் இதன் அர்த்தம் தெளிவாக விளங்குகிறது.

‘பூமியில் உள்ள எவரையும் உங்கள் தந்தை என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருப்பவரே உங்கள் தந்தை’ என்று சொல்லிப் பார்த்தால் அது அனர்த்தம் ஆகிறது.

பள்ளிக் கூடங்களில், அரசு அலுவலகங்களில், வாக்காளர் பட்டியலில், ரேஷன் கார்டுகளில், பாஸ் போர்ட்டுகளில், திருமணப் பதிவேடுகளில் இன்னும் பல சந்தர்ப்பங்களில் உங்கள் தந்தையின் பெயர் என்ன என்று கேட்கப்பட்டால் பரலோகத்திலிருப்பவர்’ என்று கிறித்தவர்கள் கூறுவார்களா? அல்லது தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரைக் கூறுவார்களா?

நிச்சயமாக தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரையே கூறுவார்கள்! அப்படியானால் பைபிளின் கட்டளையைக் கிறித்தவர்கள் மீறி விடுகிறார்களே! இந்தக் கட்டளையை மீறாமல் உலகில் வாழவே முடியாதே! இப்படித் தான் அவர்கள் கூறப் போகிறார்களா?

நிச்சயமாகக் கூற மாட்டார்கள். பிதா’ என்பது கடவுள் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தான் கூறுவார்கள்.

பிதா’ என்பதற்குப் படைத்தவன்’ என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் குமாரன்’ என்பதற்கு படைக்கப்பட்டவன்’ என்ற பொருளைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது.

பிதா என்பதற்கு இறைவன்’ என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் மகன் என்பதற்கு அடியான்’ என்பது தான் பொருளாக இருக்க முடியும்.

இந்தச் சாதாரண உண்மையைக் கிறித்தவர்கள் விளங்கிக் கொண்டால் ‘இயேசு இறைவனுக்குப் பிறந்தவர்; அதனால் இறைவனாகவே ஆகி விட்டவர்’ என்று கூற மாட்டார்கள்! இறை குமாரன் என்று இயேசு குறிப்பிடப்படுவதால் அவரும் இறைவனே’ என்று நம்புகின்ற கிறித்தவர்களின் நம்பிக்கை எவ்வளவு தவறானது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

பைபிளின் பிரகடணம்

ஒரே கடவுளாகிய கர்த்தர் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். (யாத்திராகமம் 20:3)

‘என்னையன்றி வேறு தேவர்கள் உனக்கு வேண்டாம்’ என்ற கர்த்தரின் கூற்று தெரிவிப்பதென்ன? கடவுளாகிய கர்த்தரைத் தவிர வேறு தேவர்கள் கிடையாது என்பது தானே? இதற்கு முரணாக, இயேசு இறை மகன்’ என்று எப்படிக் கூற முடியும்?

கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது. (உபாகமம் 4:35)

இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.

(உபாகமம் 6:4-6)

நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை (ஏசாயா 46:9)

என்று கர்த்தர் கூறினார்.

நானும் கடவுள்’ என்று கர்த்தர் கூறினால் இயேசுவையும் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்புவதில் நியாயமிருக்கும்.

‘நானே – நான் மட்டுமே – கடவுள்’ என்ற பைபிளின் இவ்வசனம் இயேசு உள்ளிட்ட எவரும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றது.

எனக்கு இணையில்லை; நிகரில்லை என்ற சொற்கள் இன்னும் இதை அழுத்தமாகக் கூறுகிறது. இதற்கு முரணாக இறை மகன் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவது பைபிளுக்கே முரணாகத் தோன்றவில்லையா?

ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

(யோவான் 17:3,4)

என்று இயேசு கூறினார்.

கிறித்தவர்கள் எந்த இயேசுவைக் கடவுளாகக் கருதி வழிபட்டு வருகிறார்களோ அந்த இயேசு கூறிய போதனை இது!

நான் கடவுள் இல்லை’ என்று இயேசு தருகின்ற தெளிவான ஒப்புதல் வாக்கு மூலம் இது.

* ‘மெய்யான ஒரே கடவுளாகிய’ என்று அவர் கூறியதன் மூலம் தாம் கடவுள் அல்லர்’ என்று ஒப்புக் கொள்கிறார்.

* ‘நீர் அனுப்பினவராகிய இயேசு’ என்று அவர் கூறியதன் மூலம் தாம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே’ என்று ஒப்புக் கொள்கிறார்.

* ‘நான் செய்யும் படி நீர் எனக்குத் தந்த வேலையைச் செய்து முடித்து’ என்று கூறுவதன் மூலம் அந்த ஒரே கடவுளின் கட்டளைப்படி நடக்கக் கடமைப்பட்டவன் நான்’ என்றும் கூறுகிறார்.

* செய்து முடித்து’ என்பதன் மூலம் ‘நான் வந்த வேலை முடிந்து விட்டது; இனி என்னை அழைப்பதில் பயனில்லை’ என அறிவிக்கிறார்.

‘நான் இறைவனுக்குப் பிறந்தவனுமல்லன்; இறைவனுமல்லன்’ என்று இயேசு பிரகடனம் செய்ததற்கு முரணாக, இறை மகன்’ என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வது இயேசுவையே அவமதிக்கும் போக்காகக் கிறித்தவர்களுக்கு ஏன் தோன்றவில்லை?

முதன்மையான கற்பனை

போதகரே! நியாயப் பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்மாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூர்வாயாக. இது முதலாம் பிரதான கற்பனை என்றார்.

(மத்தேயு 22:36-38) பாதி இதயத்தையும், பாதி ஆத்மாவையும், பாதி மனத்தையும் இயேசுவுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பது பிரதானமானதும், முதன்மையானதுமான கற்பனையை மீறுவதாகும்.

இறை மகன்’ என்பதற்கு அவர்கள் கொள்கின்ற பொருள் சரி தான் என்றால் இயேசு இவ்வாறு கூறியிருப்பாரா?

அந்த நாளை குமாரனும் அறியார்

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.

(மார்க்கு 13:32)

என்று இயேசு கூறினார்.

இயேசுவே கடவுள் என்றால் ‘அந்த நாளும், நாழிகையும் தமக்குத் தெரியாது; பிதாவுக்கு மட்டுமே தெரியும்’ என்று கூறியிருப்பாரா? கடவுளுக்குத் தெரியாதது என்று ஏதும் இருக்க முடியுமா? கிறித்தவர்கள் சிந்திக்கட்டும்!

கடவுளின் ராஜ்ஜியத்தில் அதிகாரம் இல்லை

அவர் அவளை நோக்கி ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு அவள் ‘உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி அருள் செய்ய வேண்டும்’ என்றாள்.

(மத்தேயு 20:21)

இதற்கு இயேசு கூறிய பதிலென்ன? நான் அவ்வாறு அருளுவேன்’ என்று கூறவில்லை.

அவர் கூறிய பதில் இது தான்:

அவர் அவர்களை நோக்கி ‘என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும், என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருள்வது என் காரியமல்ல’

என்றார். (மத்தேயு 20:23)

கர்த்தரின் சன்னதியில் அனைவரும் நிறுத்தப்பட்டிருக்கும் அந்நாளில் சொர்க்கத்தை வழங்குவதும், நரகத்தை வழங்குவதும் கர்த்தரின் தனிப்பட்ட அதிகாரம். எனக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று இயேசு அறிவிப்பது கிறித்தவர்கள் உண்மையை விளங்கப் போதிய ஆதாரமாகும்.

கடவுளின் ராஜ்ஜியத்தில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று இயேசு அறிவித்த பின்னரும் இறை மகன் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்டு, இயேசுவிடம் வேண்டுதல் செய்வதும் அவரை வழிபடுவதும் சரி தானா?

கடவுள் அழிவில்லாதவர்; காணப்படாதவர்

நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென். (ஒ தீமோத்தேயு 1:17)

கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே! (பைபிள் போதனைப் படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?

இயேசுவைப் பற்றிப் பிடிக்காதே!

இயேசு அவளை நோக்கி, ‘என்னைத் தொடாதே! நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்குப் போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன்’ என்று அவர்களுக்குச் சொல்லு’ என்றார். (யோவான் 20:17)

இயேசுவைப் பற்றிப் பிடித்துக் கொள்வதில் நித்திய ஜீவனை அடைய முடியாது என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவாக விளக்குகின்றது.

பிதா என்பதன் பொருளையும் இயேசுவின் இந்தக் கூற்று தெளிவாக விளக்குகின்றது.

இயேசு மனுஷ குமாரன்

இறை மகன்’ என்பதை இறைவன்’ என்று தவறான பொருளில் புரிந்து கொண்ட கிறித்தவர்கள், இயேசு தம்மை மனிதன்’ என்றும் மனுஷ குமாரன்’ என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்?

அதற்கு இயேசு, ‘நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை’ என்றார்.

(மத்தேயு 8:20)

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, ‘நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ’ என்றார்.

(மத்தேயு 9:6)

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவைன மகிமைப்படுத்தினார்கள்.

(மத்தேயு 9:8)

பின்பு இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

(மத்தேயு 16:13)

மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

(மத்தேயு 16:27)

அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும் போது, இயேசு அவர்களை நோக்கி மனுஷ குமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார் எனக் கூறினார்.

(மத்தேயு 17:22) ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.

(மத்தேயு 17:12)

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி, ‘மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்’ என்று கட்டளையிட்டார். (மத்தேயு 17:9)

அதற்கு இயேசு, ‘மறுஜென்ம காலத்திலே மனுஷ குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரெண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள்’ என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(மத்தேயு 19:28)

இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷ குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புக் கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து… (மத்தேயு 20:18)

அப்படியே மனுஷ குமாரனும் ஊழியங் கொள்ளும் படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

(மத்தேயு 20:28)

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும்.

(மத்தேயு 24:27)

மனுஷ குமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

(மத்தேயு 26:24)

அதற்கு இயேசு, நீர் சொன்னபடி தான். அன்றியும், மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

(மத்தேயு 26:64)

பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷ குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது என்றார்.

(மத்தேயு 26:45) மேற்கண்ட இடங்களில் இயேசு தம்மை மனுஷ குமாரன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சுவிஷேசங்களிலும் பல இடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசுவை இறை மகன் எனக் கூறும் வசனங்களை விட இவை அதிக எண்ணிக்கையிலானவை. இயேசு கடவுள் தன்மை பெற்ற, கடவுளின் மகனாக ஆகி விட்டார் என்றால் அவர் தம்மை மனுஷ குமாரன் என ஏராளமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது ஏன்?

நாம் எடுத்துக் காட்டிய இந்த வசனங்கள் யாவும் இயேசு கடவுளாகவோ, கடவுளுக்குப் பிறந்தவராகவோ, கடவுள் தன்மை பெற்றவராகவோ இருக்கவில்லை என ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

இவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இறை மகன் என்பதை விளங்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட பைபிள் வசனங்களை நிராகரிப்பதாக ஆகும்.

‘இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்; இறைவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து வந்த நல்ல மனிதர்’ என்று இறை மகன் என்பதைப் புரிந்து கொண்டால் பைபிளின் அனைத்து வசனங்களையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும். கிறித்தவர்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?

இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்னரும் இறை மகன் என்பதை இறைவன் என்று புரிந்து கொள்வதில் கிறித்தவர்கள் பிடிவாதம் காட்டினால் பைபிளில் இறை மகன் எனக் கூறப்பட்ட அனைவரையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவை வழிபடுகின்றவர்கள் கூட இயேசுவைப் போல் இறை குமாரர்கள் தாம்! அப்படித் தான் பைபிள் கூறுகிறது. அவர்களே இறை மக்களாக – அதாவது இறைவனாக – இருக்கையில் இன்னொருவரை வழிபடலாமா? இரண்டு அர்த்தங்களில் அவர்கள் எதை ஏற்றாலும் இயேசுவை அழைக்கவோ, வழிபடவோ எந்த நியாயமும் கிடையாது.