Tamil Bayan Points

08) பேராசையை வெல்ல

நூல்கள்: இஸ்லாமியப் பொருளாதாரம்

Last Updated on March 7, 2022 by Trichy Farook

08) பேராசையை வெல்ல

இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல்

மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாகக் கொடுக்கப்பட்டதைக் கண்டால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.

  • இறைவன் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ அதில் திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அந்த வழி.

நம்மைப் படைத்த இறைவன் நமது தேவைகளையும் நமது நிலைகளையும் நம்மை விட நன்கு அறிந்தவன். அவன் நமக்குக் குறைவாகக் கொடுத்தாலும் அதில் நமது தேவையை நிறைவு செய்வான். அல்லது நமக்குச் சிரமத்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்ப்பதற்காக நமக்கு அளவோடு தந்திருப்பான் என்று நாம் கருதிக் கொண்டால் நமக்குக் கிடைத்திருப்பதில் திருப்தி ஏற்பட்டுவிடும். திருப்தி ஏற்பட்டு விட்டால் நம்முடைய நிம்மதிக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

صحيح مسلم

2467 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ ».

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.

நூல் : முஸ்லிம்-1898 (2467)

இருப்பதை வைத்து திருப்தி அடையாதவன் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறான். அவருக்கு நான் சளைத்தவன் அல்ல என்று காட்டிக் கொள்ளும் விதமாக கடன் வாங்கி பெருமை அடிக்கிறான். வசதி படைத்தவர்கள் வீடு கட்டுவதையும், கார் வாங்குவதையும் இன்ன பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதையும் பார்த்து வசதியற்றவர்களும் ஆசைப்படுவதற்கு போதுமென்ற மனமில்லாததே காரணம்.

கடன் வாங்கிவிட்டு அதைக் கட்ட முடியாமல் திணறுவதற்கும் கடன் கொடுத்தவன் முன்னால் கூனிக் குறுகி நிற்பதற்கும் வாங்கிய கடனை வாரிசுகள் தலையில் சுமத்தி விட்டுச் செல்வதற்கும் இதுவே காரணம்.

صحيح مسلم

2473 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ عَنْ سَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ حَدَّثَنِى شُرَحْبِيلُ – وَهُوَ ابْنُ شَرِيكٍ – عَنْ أَبِى عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ ».

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்று விட்டார்.

நூல் : முஸ்லிம்-1903 (2473)

صحيح البخاري

6416 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو المُنْذِرِ الطُّفَاوِيُّ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي مُجَاهِدٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு “உலகத்தில் நீ வெளியூர்வாசியைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி-6416 

பேராசை கூடாது

صحيح البخاري

6435 – حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ»

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.

நூல் : புகாரி-6435 

سنن الترمذي

2376 – حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ المَرْءِ عَلَى المَالِ وَالشَّرَفِ لِدِينِهِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப்பற்றை நாசாமாக்கி விடும்.

நூல் : திர்மிதீ-2376 (2298)

صحيح البخاري

6420 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لاَ يَزَالُ قَلْبُ الكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ: فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الأَمَلِ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும்.

  1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள ஆசை
  2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை

நூல் : புகாரி-6420 , 6421

பேராசை என்றால் என்ன?

ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும்.

ஒரு விஷயத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதை வைத்து விரும்புவது ஆசையாகும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. ஆனால் முக்கியமான விஷயத்தைப் புறக்கணித்து விட்டு முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் ஆசையே பேராசை எனப்படும்.

பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைவிட முக்கியமானவையும் உள்ளன. பொருளாதாரத்துக்காக அந்த முக்கியமானவைகளை ஒருவன் புறக்கணித்து விட்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றால் அவனுக்குப் பொருளாதாரத்தில் பேராசை உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

தொழுகையை விட்டுவிட்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவதால் ஒருவனுக்குப் பணம் கிடைக்கும் என்றால் தொழுகையை விட்டுவிட்டு அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான். காரணம் பணத்தை அடைவதற்காக அதைவிட முக்கியமானதை அவன் விட்டு விட்டான்.

அது போல் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய கடமை மனிதனுக்கு உண்டு. அதில் மனிதனுக்கு ஆசையும் உண்டு. ஆனால் அதிகமான பணம் கிடைக்கிறது என்பதற்காக மனைவியை விட்டு பல வருடங்கள் பிரிந்து விட ஒருவன் முன்வந்தால் அதற்குக் காரணமும் பேராசைதான். மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பதை விட பணத்துக்கு இவன் முதலிடம் கொடுத்ததால் இது பேராசையாகி விடுகிறது.

சமூகத்தைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்படும்போது அதில் பங்கு பெறாவிட்டால சமுதாயத்தைப் பாதிக்கும் என்ற நிலையில் பணம் திரட்டச் சென்றால் அதுவும் பேராசைதான். குடும்பத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்க நம்மிடம் வசதி இருக்கும்போது அரசாங்க மருத்துவ மனையில் சேர்த்தால் அதுகூட பேராசைதான்.

சுருக்கமாகச் சொன்னால் பணத்தை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயங்களுடன் பணம் மோதும்போது நாம் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பேராசையாகும்.

ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை அடைவதற்காக அவன் ஆசைப்பட்டால் தொகை பெரிதாக இருந்தாலும் அது பேராசையாகாது. இது நியாயமான ஆசை தான். கூனிக்குறுகி கும்பிடு போட்டால் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதற்கு ஆசைப்படுவது பேராசையாகிவிடும். ஏனெனில் மானம் மரியாதையை விட பத்து ரூபாய் இவனுக்குப் பெரிதாக தெரிகின்றது.

பேராசையில் இருந்து எப்படி விடுபடுவது?

பேராசையில் இருந்து எப்படி விடுபடலாம்? இதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர். நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்தைத் திரட்டினாலும் அது உண்மையில் நம்முடையது அல்ல. பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர் அனைத்தையும் சாப்பிட முடியாது. அனைத்தையும் அனுபவித்து விட முடியாது. ஒரு அந்தஸ்து இதனால் கிடைக்குமே தவிர அனைத்தையும் யாராலும் அனுபவிக்க முடியாது.

ஒரு அளவுக்கு மேல் பணத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. இதை உணர்ந்து கொண்டால் பொருளாதாரத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது எளிதாகி விடும்.

صحيح مسلم

7609 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِيهِ قَالَ أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقْرَأُ (أَلْهَاكُمُ التَّكَاثُرُ) قَالَ « يَقُولُ ابْنُ آدَمَ مَالِى مَالِى – قَالَ – وَهَلْ لَكَ يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلاَّ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ ».

 

அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

“மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது” என்று தொடங்கும் (102வது) அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.

அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து (மறுமைக்காக) சேமித்ததையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்.

நூல் : முஸ்லிம்-5665 (7609) 

இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப் படமாட்டோம். என்னதான் பணத்தைத் திரட்டினாலும் மரணம் வந்து விட்டால் நாம் அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவோம் என்று புரிந்து கொள்வது பேராசையை ஒழிக்கும்.

பேராசைப்பட்டு செல்வத்தின் பின்னே நாம் அலைந்து கொண்டிருந்தால் எந்த நேரத்திலாவது போதும் என்று நாம் நினைப்போமா? ஒருக்காலும் நினைக்க மாட்டோம். ஒரு கோடி கிடைக்கும் வரை அதுவே இலட்சியமாக இருக்கும். ஒரு கோடி கிடைத்து விட்டால் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட மாட்டோம். இரண்டு கோடிக்கு அலைய ஆரம்பித்து விடுவோம். பல லட்சம் கோடிகளில்கூட நாம் திருப்தி அடைய மாட்டோம். முடிவே இல்லாத இந்தப் போக்கு ஒரு வகை மனநோய் என்றுதான் கூற வேண்டும்.

அனைத்தையும் அனுபவிக்கவும் முடியாது. பாதுகாக்கவும் முடியாது. எந்தக் கட்டத்திலும் திருப்தி அடையவும் முடியாது என்று தெரிந்து கொண்டே அதன் பின்னே அலைவது மனநோய்தான். இதனால்தான் மனைவி மக்கள் இன்ன பிற கடமைகளைக்கூட மனநோயாளி மறப்பதைப் போல் சிலர் மறந்து பணத்திற்காக அலைய ஆரம்பித்து விடுகின்றனர்.

صحيح البخاري

6439 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு ஓடை இருந்தால் தனக்கு இரண்டு தங்க ஓடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

நூல் : புகாரி-6439 , 6436

செல்வம் அவசியம் என்றபோதும் அதைவிட முக்கியமான கொள்கைக்காக செல்வத்தைத் தூக்கியெறியவும் முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இப்படி கொள்கைக்காக செல்வத்தையும், வசதி வாய்ப்புகளையும் தூக்கி எறிந்த ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்களை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் கூறுவதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

66:11 وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ

“என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!” என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

(திருக்குர்ஆன்:66:11.)

கொடுங்கோல் ஆட்சி செய்த ஃபிர்அவ்ன் என்பவன் தன்னைக் கடவுள் என்று வாதிட்டபோது அவனது மனைவி ஆஸியா அவர்கள் அதை எதிர்த்தார்கள். மனிதன் கடவுளாக முடியாது; அகிலத்தைப் படைத்த மாபெரும் ஆற்றல் மிக்கவன்தான் கடவுள் என்று துணிந்து முழங்கினார்கள்.

பட்டத்து ராணி என்ற அடிப்படையில் இவ்வுலகில் அனுபவித்து வந்த பல இன்பங்களை இதனால் இழக்க நேரும் என்று தெரிந்து கொண்டே கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். செல்வத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல் கொள்கைக்காக செல்வத்தை தியாகம் செய்த இப்பெண்மணியை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான்.

இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது

இருப்பதை வைத்து திருப்தி அடைவது எப்படி என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர்.

உலகத்தில் நம்மை விட மேலான நிலையில் சிலர் இருப்பது போல் நம்மை விடத் தாழ்ந்த நிலையிலும் பலர் உள்ளனர். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நமது நிலையை ஒப்பு நோக்கிப் பார்த்தால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை நமக்கு வந்து விடும்.

صحيح مسلم

7617 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ يَحْيَى أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِىُّ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِى الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.

நூல் : முஸ்லிம்-5670 (7619)

صحيح البخاري

6490 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.

நூல் : புகாரி-6490 

அனைத்து உயிரினங்களின் தேவைகளுக்கும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என்பதைப் புரிந்து கொள்பவர்களுக்கு போதுமென்ற மனநிலையை அடைவது எளிதானதுதான். நம் தேவைகளுக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என்றால் அவன் குறைவாக நமக்குத் தந்தாலும் அதில் நிச்சயம் நம் தேவையை நிறைவேற்றுவான். இப்படி நம்பும்போது போதுமென்ற மனம் வந்து விடும்.

17:31 وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ‌ؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا

வறுமையை அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் நாம்தான் உங்களுக்கும், அவர்களுக்கும் உணவளிக்கிறோம்.

(திருக்குர்ஆன்:17:31.)

11:6 وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

(திருக்குர்ஆன்:11:6.)

سنن الترمذي

2344 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الكِنْدِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي تَمِيمٍ الجَيْشَانِيِّ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا يُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا»:  ” هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு மூமின் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அல்லாஹ் அவனுக்கு ஒரு பறவைக்கு உணவளிப்பதைப் போல உணவளிப்பான். அது காலையில் ஒட்டிய வயிற்றுடன் செல்கிறது. ஆனால் மாலையில் நிரம்பிய வயிறோடு தன் கூட்டுக்குத் திரும்புகிறது.

நூல் : திர்மிதீ-2344 (2266)

صحيح ابن حبان

3240 – أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَرْوَانَ، عَنْ هُزَيْلِ بن شرحبيل عن بن عُمَرَ قَالَ: جَاءَ سَائِلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا تَمْرَةٌ عَائِرَةٌ، فَأَعْطَاهُ إِيَّاهَا، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: “خذها. لو لم تأتها لأتتك”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் யாசகம் கேட்டு வந்தார். அப்போது கீழே கிடந்த பேரீச்சம்பழங்களை அவருக்குக் கொடுத்துவிட்டு இதைப் பெற்றுக் கொள். இதைப் பெற்றுக் கொள்ள நீ இங்கே வராவிட்டால் அது உன்னைத் தேடி வந்திருக்கும் என்று கூறினார்கள் .

நூல் : இப்னு ஹிப்பான்-3240 

எது நமக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் விதித்து விட்டானோ அது நமக்கு எப்படியும் கிடைத்து விடும். ஏனென்றால் அல்லாஹ் மனிதனை எப்போது படைத்தானோ அப்போதே அவனுக்குரிய செல்வத்தை நிர்ணயித்து எழுதி விட்டான். அவன் எதை எழுதினானோ அதுதான் கிடைக்கும். அதற்கு மேல் வேறொன்றும் கிடைத்து விடாது.

سنن الترمذي

2516 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، وَابْنُ لَهِيعَةَ، عَنْ قَيْسِ بْنِ الحَجَّاجِ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا أَبُو الوَلِيدِ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ الحَجَّاجِ، المَعْنَى وَاحِدٌ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ، رُفِعَتِ الأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ “

சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்!

மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.

நூல் : திர்மிதீ-2516 (2440)

அல்லாஹ் நமக்குத் தர நினைத்ததைத் தவிர வேறு எதுவும் நமக்குக் கிடைக்காது என்பதையும், அவன் தர விரும்பாத எதுவும் நமக்குக் கிடைக்காது என்பதையும் ஒருவன் நம்பவில்லையானால் அவனிடம் இறைநம்பிக்கை இல்லை என்பதே பொருள். அல்லாஹ் நமக்குத் தர நினைத்தது எப்படியும் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று நாம் நம்பிக்கை வைத்தால் நாம் நினைத்துப் பார்க்காத வகையில் அது நம்மை வந்து அடைந்துவிடும்.

மர்யம் (அலை) அவர்களுக்கு இப்படி நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ் உணவளித்ததை சொல்லிக் காட்டுகிறான்.

3:37 فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌ۚ‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்” என்று (மர்யம்) கூறினார்.

(திருக்குர்ஆன்:3 :37.)

அல்லாஹ் நாடினால் இறைத்தூதர்களுக்கு வழங்காத பரக்கத்தை இறைத்தூதர் அல்லாதவர்களுக்கும் வழங்கி விடுவான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

மர்யம் (அலை) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஸக்கரியா நபி அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் உணவு கொண்டு வருதற்கு முன்பே பள்ளிவாசலில் உணவு இருப்பதைக் காண்கிறார்கள். இது எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டபோது இது அல்லாஹ்விடமிருந்து எனக்குக் கிடைத்தது; அல்லாஹ், நாடுவோருக்கு கணக்கில்லாமல் கொடுப்பான் என்று மர்யம் (அலை) பதில் அளித்தார்கள். இது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் உரியது அல்ல; அனைவருக்கும் உரியது என்பதை இதன் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا , 65:3 وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

(திருக்குர்ஆன்:65:2,3.)

மனிதர்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையிலும் அல்லாஹ்விடமிருந்து செல்வம் வந்து சேரும் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

14:37 رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கு அருகில் விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக.

(திருக்குர்ஆன்:14 :37.)

இப்ராஹீம் நபியவர்கள் பலைவனத்தில் தமது குடும்பத்தைக் குடியமர்த்தியபோது மேற்கண்டவாறு பிரார்த்தனை செய்தார்கள்.

எந்த இடத்தில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லையோ அந்த இடத்தில் இப்ராஹீம் நபியவர்கள் தமது மனைவியையும், புதல்வரையும் குடியமர்த்த எப்படித் துணிந்தார்கள்? அல்லாஹ் நாடினால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையிலும் உணவளிப்பான்; வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தருவான் என்று இப்ராஹீம் நபி அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம்.

அவர்களின் அசைக்க முடியாத இந்த நம்பிக்கைக்காக அல்லாஹ் தந்த பரிசுதான் ஜம்ஜம் நீரூற்று. மக்காவில் பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருக்கிறது. இப்போது மக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அல்லாஹ்வை மட்டும் நம்பினால் இப்படிப்பட்ட அதிசயத்தை அவன் நிகழ்த்துவான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக ஜம்ஜம் நீரூற்று அமைந்துள்ளது.