Tamil Bayan Points

08) இறைவனுடைய பண்புகளில் இணைவைக்கக்கூடாது

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

Last Updated on January 19, 2023 by

இறைவனுடைய பண்புகளில் இணைவைக்கக்கூடாது

படைக்கப்படாமலும் தாய் தந்தை இல்லாமலும் இருத்தல் எந்தப்பொருளின் பக்கமும் தேவையுறாமல் இருத்தல் தூங்காமல் இருத்தல் சோர்வடையாமல் இருத்தல் தவறிழைக்காமல் இருத்தல் மறக்காமல் இருத்தல் மறைவானவற்றை அறிதல் மரணிக்காமல் இருத்தல் இவையெல்லாம் இறைவனின் பண்புகளாகும். இத்தகைய பண்புகள் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. யாருக்காவது இத்தகைய பண்புகள் இருப்பதாக ஒருவன் நினைத்தால் அவன் இணைவைத்தவனாகி விடுவான்.

அல்லாஹ்விற்குத் தூக்கம் இல்லை

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

அல்குர்ஆன் (2 : 225)

அல்லாஹ்விற்குச் சோர்வு இல்லை

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

அல்குர்ஆன் (50 : 38)

அல்லாஹ்விற்கு மரணமில்லை

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

அல்குர்ஆன் (3 : 2)

என்றென்றும் உயிருடனிருப்பவன் முன்னே முகங்கள் கவிழ்ந்து விடும். அநியாயத்தைச் சுமந்தவன் நஷ்டமடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (20 : 111)

அல்லாஹ்விற்கு மறதி இல்லை

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

அல்குர்ஆன் (19 : 64)

என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான் என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் (20 : 52)

அல்லாஹ்விற்கு பசி தாகம் இல்லை

அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (6 : 14)

அல்லாஹ்விற்குத் தேவைகள் இல்லை

அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

அல்குர்ஆன் (2 : 263)

அல்லாஹ் தேவையற்றவன்.

அல்குர்ஆன் (112 : 2)

அல்லாஹ்விற்கு மனைவியும், பிள்ளைகளும் இல்லை

அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?

அல்குர்ஆன் (6 : 101)

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

அல்குர்ஆன் (72 : 3)

அல்லாஹ்விற்குப் பெற்றோர்கள் இல்லை

அவனே முதலானவன்; முடிவானவன்; வெளிப்படையானவன்; அந்தரங்கமானவன். ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் (57 : 3)

யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

அல்குர்ஆன் (112 : 3)