Tamil Bayan Points

06) ஒட்டகங்களில் ஏறிவரும் தீர்க்கதரிசி யார்?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 26, 2022 by

06) ஒட்டகங்களில் ஏறிவரும் தீர்க்கதரிசி யார்?

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள ஏசாயா ஆகமத்தில் மேலும் ஒரு முன் அறிவிப்புக் காணப்படுகிறது.

இந்த முன் அறிவிப்பு இயேசுவைத் தான் குறிக்கிறது என பைபிள் புதிய ஏற்பாடு சாதிக்கிறது. ஆனால், இந்த முன் அறிவிப்பில் 10க்கும் மேற்பட்ட அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரே ஒரு அம்சம் தான் இயேசுவுக்குப் பொருந்துகிறது. அதில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் பொருந்தக் கூடிய ஒரே தீர்க்கதரிசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். இதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.

கழுதையில் ஏறி வந்தவர்

இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறிப் போனார். இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்தில் அறியவில்லை இயேசு மகிமை அடைந்த பின்பு இப்படி இவரைக் குறித்து எழுதியிருப்பதையும் தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவு கூர்ந்தார்கள்.

(யோவான் 12:15)

எதிர்காலத்தில் வரக்கூடிய தீர்க்கதரிசி கழுதையில் ஏறிச் செல்வார் என்று முந்தைய வேதங்களில் எழுதப்பட்டுள்ளது எனவும் இயேசு கழுதையில் ஏறியதன் மூலம் அது நிறைவேறியது எனவும் இந்த வசனம் கூறுகின்றது.

பைபிளின் பழைய ஏற்பாட்டைப் புரட்டிப் பாரத்தால் கழுதையில் ஏறி வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கூறப்படுகின்றது. அதைத் தான் யோவான் இங்கே குறிப்பிடுகிறார் என்று கிறித்தவ உலகமும் ஒத்துக் கொள்கின்றது. அந்த வசனம் இதுதான்.

அவன் ஒரு இரதத்தையும் ஜோடு ஜோடான குதிரை வீரரையும் ஜோடு ஜோடாகக் கழுதைகளின் மேலும் ஒட்டகங்களின் மேலும் ஏறி வருகின்றவர்களையும் மிகுந்த கவனமாகக் கவனித்துக் கொண்டே இருந்து….

(ஏசாயா 21:7)

ஜோடு ஜோடாக கழுதைகளின் மேலும் என்ற சொற்றொடர் ஒவ்வொரு கழுதையிலும் இரண்டிரண்டு நபர்கள் ஏறி வருவதைக் குறிக்கிறது என்பதை யாரும் அறியலாம். இரண்டு கழுதைகளின் மேல் ஒருவர் ஏறுவது என்பதே இதன் பொருள் என்று மாத்தேயு விளங்கிக் கொண்டு பின்வருமாறு கூறுகிறார்.

சீஷர் போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழதையையும் கழுதைக் குட்டியையும் கொண்டு வந்து அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போடவே அவர் அவைகளின் மேல் உட்கார்ந்தார்.

(மத்தேயு 21:7)

இயேசு ஒரே நேரத்தில் இரண்டு கழதைகளின் மீது ஏறியதாக மத்தேயு கூறியது ஏன் தெரிகிறதா? ஜோடு ஜோடாக கழுதைகளின் மேல் என்பதை ஜோடிக் கழுதை எனப் புரிந்து கொண்டது தான் காரணம்.

இந்த முன்னறிவிப்பில் ஜோடி ஜோடியாக வரக்கூடிய குதிரை வீர்ர்கள், கழுதையில் ஜோடி ஜோடியாய சவாரி செய்து வரக்கூடியவர்கள். ஒட்டகத்தில் ஜோடி ஜோடியாக வரக்கூடியவர்கள் என்றெல்லாம் கூறப்படுகிறன்றது. தனி ஒரு மனிதரைப் பற்றி இந்த முன்னறிவிப்புகள் கூறவில்லை. ஒரு சமுதாயத்தைப் பற்றி ஒரு குழுவைப் பற்றி கூறப்படுகின்றது. என்பதை யாரும் விளங்க முடியும்.

ஒரு மனிதரைப் பற்றிய முன்னறிவிப்பு என்றே வைத்துக் கொண்டாலும் கழுதையில் ஏறியது மட்டும் தானே புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இரண்டு ஒட்டகங்கள் மீது இயேசு எப்போது ஏறினார்? ஜோடு ஜோடான குதிரை வீரர் எங்கே? இதையெல்லாம் புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

இந்த வசனத்தில் கூறப்படும் முன்னறிவிப்பு எது? இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இதைத் தொடர்ந்து கூறப்படும் மற்ற வசனங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வசனங்களைப் பாருங்கள்.

இதோ ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின் மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான். பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அதன் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோட மோதி உடைத்தார் என்று பிரதியுத்தம் சொல்கிறான்.

(ஏசாயா 21:9)

21:7 வசனம் ஜோடி ஜோடியாக மக்கள் குதிரையிலும் கழுதையிலும் ஒட்டகத்திலும் வருவதைக் கூறுகிறது. 21:9 வசனம் அந்தக் கூட்டத்தின் தலைவரைப் பற்றிக் கூறுகிறது. அந்தத் தலைவரின் வருகைக்குப் பின் பாபிலோன் நகரம் வெற்றி கொள்ளப்படும். விக்கிரக ஆராதனை ஒழிக்கப்படும் என்றெல்லாம் கூறப்படுகின்றது. நபிகள் நாயகத்தின் வருகையினாலேயே இது நிகழ்ந்தது.

நபிகள் நாயகத்தின் சமுதாயத்தவர்களே இந்த மூன்று வாகனங்களையும் பயன்படுத்தியவர்கள்.

அரபியாவின் பாரம் : திதானியராகிய பயணக் கூட்டங்களே நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள். தேமா தேசத்தின் குடிகளே நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டு போய் தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டு போங்கள்! அவர்கள் பட்டயங்களும் உருவின கட்கத்துக்கும் நாணேற்றின வில்லுக்கும் யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.

ஆண்டவன் என்னை நோக்கி ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்குக்கொத்த ஒரே ஒரு வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போகும். கேதார் புத்திரராகிய பராக்கிரம வில் வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சம் பேராயிருப்பார்கள் என்றார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.

(ஏசாயா 21:13-17)

அரபியாவின் பாரம் என்றால் அரபியாவின் தீர்க்க தரிசனம் என்பது பொருள். அரேபியாவின் தீர்க்க தரிசனம் என்று கூறிவிட்டு ஏசாயா தொடர்ந்து கூறுவதைக் கவனியுங்கள்!

திதானியராகிய வர்த்தகக் கூட்டத்தையும், தேமா தேசத்தின் குடிமக்களையும் ஏசாயா அழைக்கிறார். அவர்கள் ஒரு சமுதாயத்தினருக்கு உதவுமாறு வலியுறுத்துகிறார். யாருக்கு உதவுமாறு கூறுகிறார்?

எதிரிகளின் வாளுக்கும் அச்சுறுத்தலுக்கும் அஞ்சி அவர்கள் ஊரை விட்டு ஓடிவருகிறார்கள். அவ்வாறு ஊரைக் காலி செய்து ஓடிவரும் மக்களுக்கு உதவுவதற்காக அரேபியாவின் காடுகளில் தங்குங்கள்! தண்ணீர் கொடுங்கள். உணவு கொடுங்கள் என்றெல்லாம் கூறுகிறார். இவ்வாறு ஓடி வருபவர்கள் நன்மக்கள் கொடுமைக்காரக் கூட்டத்திலிருந்து தப்பிக்கவே ஓடிவருகின்றனர் என்கிறார் ஏசாயா.

அது அரேபியாவில் நடக்கும் எனவும் கூறுகிறார். இவ்வாறு ஓடி ச்வரக்கூடியவர்கள் யார்? இவர்களை விரட்டியடிப்பவர்கள் யார்? அதையும் ஏசாயா கூறுகிறார்.

இஸ்ரவேலின் மகனாகிய ”கேதார்” வழி வந்தவர்களே இத்தகைய கொடுமைக்காரர்கள் இவர்களால் விரட்டப்பட்டவர்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்ட சமுதாயத்தினர்.

இந்த ஆணவக்காரக் கூட்டத்தின் – கேதார் வம்சத்தின் – ஆணவம் ஏறக்குறைய ஒரு வருடத்தில் அடங்கும் . கோதாரின் மகிமை அற்றுப் போகும். பெரும்பாலோர் அழிந்து போவார்கள். எனவும் ஏசாயா கூறுகிறார்.

இப்போது நபிகள் நாயகத்தின் வரலாற்றை நினைவுபடுத்திப் பாருங்கள்.

நபிகள் நாயகம் கேதார் வம்சா வழியில் தோன்றினார்கள். கேதார் வம்சத்தினர் நபிகள் நாயகத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட மக்களையும் சொல்லெனாத் துன்பத்துக்கு ஆளாக்கினார்கள். இதைத் தாங்க முடியாத முஸ்லிம்கள் அபீசீனியாவுக்கும், மதினாவுக்கும் ஓடலானார்கள்.

இவ்வாறு ஓடி மதீனாவில் ஒரு ஆட்சியையும் நிறுவி ஒரு வருடம் நிறைவடைவதற்குள் பல வழிகளிலும் கேதார் வம்சத்தின் வியாபாரம் முடக்கப்பட்டது. சிரியாவுக்கு வியாபாரம் செய்ய அவர்களால் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையை முஸ்லிம்கள் உருவாக்கினார்கள். முதலாவது போர்க்களமான ”பத்ரில்” கோதாரியர்கள் வேரறுக்கப்பட்டார்கள்.

தங்களை எவரும் வெற்றி கொள்ள முடியாது என்ற இறுமாப்புடன் நடந்து வந்த அரபுகளுக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது.

இவ்வளவு விபரங்களை ஏசாயா கூறுகிறார். இவையனைத்தையும் கண்டு கொள்ளாமல் கழுதையில் ஏறி வருவார் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என வாதிடுவது எந்த வகையிலும் ஏற்கமுடியாத ஒன்றாகும்.

இன்றைய ஈரான் மற்றும் இராக் நாடுகளில் தலை நகரமாக இருந்த பாபிலோன் இவரது வருகையின் பின்னர் விழும் என்ற வாசகமும் நபிகள் நாயகத்துக்கே பொருந்தும். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் இன்று வரை அப்பகுதியை முஸ்லிம்களே ஆளுகின்றனர். என்பது கவனிக்கத்தக்கது.

இதில் கூறப்பட்ட அனைத்தும் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே முழு அளவுக்குப் பொருந்துகிறது.

இதைக் கர்த்தர் உரைத்தார் என்று ஏசாயா இறுதியில் கூறுகிறார். கர்த்தரே அறிவித்த முன்னறிவிப்பாக இது அமைந்துள்ளது. மேலும் இது அரேபியாவின் தீர்க்கதரிசனம் எனக் கூறப்படுகிறது. அரபு நாட்டில் நடக்கவுள்ள ஒரு புரட்சியைப் பற்றிய முன்னறிவிப்புத் தான் இது என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.