Tamil Bayan Points

04) கேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 22, 2022 by

04) கேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்?

பைபிளின் பழைய ஏற்பாட்டில் ஏசாயா என்றொரு ஆகமம் இருக்கிறது. இந்த ஆகமம் இயேசுவுக்கு முன் வாழ்ந்த ஏசாயா என்ற தீர்க்கதரிசியின் வேதம் என்று கிறித்தவர்களால் நம்பப்படுகிறது.

இந்த ஆகமத்தின் 42ஆம் அதிகாரத்தில் இனி தோன்றக் கூடிய தீர்க்கதரிசி பற்றியும், அவரது அடையாளங்கள் பற்றியும் விளக்கமாகக் கூறப்படுகிறது. அந்த அடையாளங்கள் ஏசாயாவை நோக்கி கர்த்தர் கூறுவதைப் போல் அமைந்திருக்கின்றன.

அந்த அடையாளங்கள் ஏசாயாவுக்கு பின் இன்று வரை உலகில் தோன்றிய யாருக்காவது பொருந்துமென்றால், நபிகள் நாயகத்திற்கே பொருந்தும்.

இயேசு உள்ளிட்ட வேறு எவருக்கும் அந்த அடையாளங்கள் அறவே பொருந்தவில்லை.

கிறித்தவ சமுதாயத்தவர்கள் பைபிளை இறைவேதமென்று உண்மையிலேயே நம்புவார்களானால், ஏசாயாவின் இந்த முன்னறிவிப்பையும் அவர்கள் நம்பியாக வேண்டும்.

இதுதான் அந்த முன்னறிவிப்பு

இதோ நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்தெடுத்தவரும் என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே,

என் ஆவியை அவர் மேல் அமரப் பண்ணினேன்,

அவர் புற ஜாதியாருக்குள் சற்சமயம் பரவச் செய்வார்

அவர் கூக்குரலிட மாட்டார்.

தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் வீதியிலே கேட்கப் பண்ணவும் மாட்டார்.

அவர் தெரிந்த நாணலை முறியார்,

மங்கியெரிகிற திரியை அணையார்,

உண்மையைச் சற்சமயம் பரவச் செய்வார்.

சற்சமயத்தை பூமியிலே நிலைநாட்டு மட்டும் அவர் சோர்ந்து போவதுமில்லை.

அவருடைய உபதேசத்தைக் கேட்க தீவுகள் காத்திருக்கும்.

வானங்களைப் படைத்து அவைகளை விரித்தவரும், பூமியையும் அதில் உண்டானவைகளையும் பரப்பினவரும், அதிலுள்ள ஜனங்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுத்தவருமான கர்த்தராகிய கடவுள் சொல்லுகிறதைக் கேளுங்கள்.

கர்த்தராகிய நான் நீதியின் படி உம்மை அழைத்தேன்.

உமது கையைப் பிடித்து, உம்மைக் காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், புறஜாதியாருக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.

நீர் குருடர் கண்களைத் திறக்கவும் கட்டுண்டர்களைக் காவலிலிருந்தும் இருளிலிருப்பவர்களைச் சிறையிலிருந்தும் வெளியே கொண்டுவரவும் நான் உம்மை அழைத்தேன்.

நானே கர்த்தர், என் நாமம் இதுவே, என் மகிமையை மற்றவர்களுக்கும் என் புகழை விக்கிரங்களுக்கும் கொடேன்.

பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள் இதோ நிறைவேறலாயின. புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன். அவை தோன்றாததற்கு முன்னே அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(ஏசாயா 42:1-9)

கிறித்தவ அன்பர்கள் இது இயேசுவைக் குறிப்பதாக கூறினாலும் உண்மையில் இது இயேசுவைக் குறிக்க முடியாது. நபிகள் நாயகத்தைத் தான் குறிக்கிறது.

முதல் வசனத்தைப் பாருங்கள்! ”இதோ நான் ஆதரிக்கிற என் தாசன்” என்பது முதல் வசனம்.

இயேசு கர்த்தரின் தாசன் என கூறப்படவில்லை. குமாரர் என்றே கூறப்படுகிறார். கிறித்தவ சமுதாயத்தின் நம்பிக்கையும் இதுவே!

ஆனால் நபிகள் நாயகத்தின் நிலை என்ன?

”இயேசுவை கிறித்தவ சமுதாயத்தினர் வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல என்னை நீ்ங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். என்னை அல்லாஹ்வின் தூதர் எனவும் அல்லாஹ்வின் தாசன் (அடிமை) எனவும் கூறுங்கள்” என்று நபிகள் நாயகம் கூறியுள்ளனர்.

(புகாரி)

தம்மைக் கர்த்தரின் தாசன் எனவும் இவ்வாறு தான் அழைக்க வெண்டும் எனவும் கூறியவர்கள் நபிகள் நாயகம் தானே தவிர இயேசு அல்ல என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

”அவர் புற ஜாதியாருக்குள் சற்சமயம் பரவச் செய்வார்” என்பது முதல் வசனத்தில் உள்ள வாசகம்.

நல்ல சமயத்தை – மதத்தை – புற ஜாதியாருக்குள் பரவச் செய்வார் என்பது நிச்சயம் இயேசுவைக் குறிக்க முடியாது. ஏனெனில் அவர் தம்மை இஸ்ரவேல் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவராகத் தான் அறிமுகப்படுத்தினார்.

(மத்தேயு 15:24,25)

அவர் வாழ்ந்த காலத்தில் புற ஜாதியாரிடம் அவரது மார்க்கம் பரவுவது இருக்கட்டும். அவரது ஜாதியாரிடமே பரவவில்லை. அவரது ஜாதியினர் தான காட்டிக் கொடுத்தனர். கழுவிலேற்றியதும் (கிறிஸ்தவ நம்பிக்கையின்படி) அவரது ஜாதியினர் தான்.

ஆனால் நபிகள் நாயகம் தாம் வாழ்ந்த காலத்திலேயே தமது ஜாதியினரையும் கடந்து பல ஜாதிகள், பல பகுதிகளுக்குச் சற் சமயத்தை மார்க்கத்தைப் பரவச் செய்தார்கள்.

அரபகம் முழுவரையும் தமது ஆளுகையின் கீழும் தமது மதத்தின் கீழும் கொண்டு வந்தார்கள். எனவே இந்த வாசகமும் நபிகள் நாயகத்தைத் தான் குறிக்க முடியும்.

கூக்குரலிட மாட்டார், தம்முடைய சப்தத்தை உயர்த்த மாட்டார் என்பது நபிகள் நாயகத்தின் பண்புகளையே குறிக்கின்றன. அவர்களது பண்புகளைக் குறித்து இஸ்லாமிய வரலாறு இப்படித் தான் கூறுகிறது.

“சற்சமயத்தை பூமியிலேயே நிலைநாட்டு மட்டும் அவர் சோர்ந்து போவதுமில்லை, தளர்ந்து போவதுமில்லை”,

வாழ்நாளிலேயே சற்சமயத்தை நிலைநாட்டி வெற்றி கண்டார் என்ற இந்தக் கருத்து நிச்சயம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்.

அது போல் கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளிலிருப்பவர்களைச் சிறையில் இருந்தும் வெளியே கொண்டுவரும் பணியையும் அவர் மேற்கொண்டார் என 7வது வசனம் கூறுகிறது.

அடிமைப்பட்டுக் கிடந்த எவரையும் இயேசு விடுவிக்கவில்லை. முஹம்மது நபியோ அந்தச் சமுதாயத்தின் அடிமைத் தளையை உடைத்து எறிந்தார்கள். விடுதலை பெற்ற சமுதாயமாக தமது சமுதாயத்தை மாற்றினார்கள்.

தான் இனி கூறப் போவது வருங்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்புத் தான் என்று தெளிவாக அறிவித்துவிட்டு ஏசாயா தொடர்ந்து கூறுவதைக் கேளுங்கள்.

சமுத்திரத்தில் யாத்திரை பண்ணுகிறவர்களே! அதிலுள்ளவைகளே! தீவுகளே! அவைகளின் குடிகளே! கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்! பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்! வானாந்திரமும் அதன் ஊர்களும் கேதாரியாவில் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சப்தமிடக் கடவது, கனிமலைகளிலேயே குடியிறுக்கிறவர்கள் கெம்பீரித்து பர்வதங்களில் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக!

(ஏசாயா 42:10,11)

உலகம் முழுவதையும் உள்ள எல்லா மக்களையும் ஏசாயா அழைத்து அனைவரையும் கர்த்தருக்குப் புதுப்பாட்டு பாடச் சொல்கிறார். புதிய மார்க்கம் தான் புதுப்பாட்டு என்று இங்கே கூறப்படுகின்றது.

அகில உலக மக்களுக்கு வழிகாட்டக் கூடிய புது மார்க்கம் எது? அதைக் கொண்டு வந்தவர் யார்? ஏசாயாவுக்குப் பிறகு அகில உலகுக்கும் வழி காட்டக்கூடிய – எந்தத் தீர்க்கதரிசியும் வந்ததில்லை. குறிப்பிட்ட பிரதேசம், கோத்திரம் ஆகியவற்றுக்கே தீர்க்கதரிசிகள் அனுப்பப்பட்டார்கள்.

இயேசு கூட தாம் இஸ்ரவேலர் என்ற இனத்தக்கு மட்டுமே வழிகாட்டியாக வந்தவர். என்று கூறியுள்ளார். கானானியப் பெண்ணொருத்தி ஆசி கேட்டு வரும் போது ”பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குப் போடுவது நல்லதல்ல” என்று கூறியிருக்கிறார். (மாத்தேயு 15:25)

இயேசுவுக்கு முன் – ஏசாயாவுக்குப் பின் அகில உலகுக்கும் பொதுவான எந்த ஒரு தீர்க்கதரிசியும் வந்ததில்லை.

இந்த முன்னறிவிப்பில் ”கோதாரியர் குடியிருக்கிற கிராமங்களும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பில் இது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். யார் இந்தக் கோதாரியர்? இதோ பைபிள் கூறுகிறது.

பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத் பின்பு ”கேதார்” அத்பியேல், மீம்சாம்.

(ஆதியாகமம் 25:13)

இஸ்மவேலின் இரண்டாம் மகன் கேதார். அவர் வழித்தோன்றல்களும் அரபியரும் கேதாரியர் என்று கூறப்பட்டு வந்தனர். இஸ்மவேலர்களின் வழித்தோன்றல்களான அரபுகள் கர்த்தருக்குப் புதுப்பாட்டு பாட வேண்டும். உரத்த சப்தமிட்டு கர்த்தரின் புகழைப் பாட வேண்டும். மலைகளின் உச்சியிலிருந்து முழங்க வேண்டும் என்றெல்லாம் இந்த முன்னறிவிப்புக் கூறுகின்றது.

இஸ்மவேலரில் இஸ்மவேலுக்குப் பிறகு எந்தத் தீர்க்கதரிசியும் (நபிகள் நாயகத்திற்கு முன்) வந்ததில்லை. கர்த்தருக்குப் புதுப்பாட்டுப் பாடியதில்லை. நபிகள் நாயகம் வந்தபின் தான் கர்த்தரை நம்பினார்கள், புதுப்பாட்டு பாடினார்கள்.

கேதாரியர் உட்பட அனைத்து மக்களும் மலைகளின் உச்சியிலிருந்து உரத்த சப்தத்துடன் கர்த்தரை துதிப்பது நபிகள் நாயகம் அவர்களின் வருகைக்குப் பின்தான் ஏற்பட்டது. ஹஜ் கடமையின் போது அகில உலகும் அங்குள்ள மலை உச்சிகளில் ”லப்பைக்” என்று கர்த்தரை உரத்த சப்தத்துடன் துதிப்பதை இன்று வரை உலகம் கண்டு வருகிறது.

கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக!

(ஏசாயா 42:12)

இந்தக் கேதாரியர்கள் புதுப்பாட்டை புது மார்க்கத்தைத் – தங்களுக்கே வைத்துக் கொள்ளாமல் பாரெங்கும் பரவச் செய்வார்கள் என்று இந்த முன்னறிவிப்புக் கூறுகிறது. நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்ட கேதாரியரான நபித் தோழர்கள் புது மார்க்கத்தைப் பாரெங்கும் கொண்டு சென்றது வரலாறு கூறும் உண்மையாகும்.

கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல் புறப்பட்டு யுத்த வீரனைப் போல் வைராக்கியம் பூண்டு முழங்கிக் கெர்சித்து தம்முடைய சத்ருக்களை மேற்கொள்வார். நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன். சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப் போலச் சத்தமிட்டு அவர்களை பாழாக்கி விழுங்குவேன்.

(ஏசாயா 42:13,14)

இந்தக் கோதாரியர்களும் அவர்களைச் சுற்றியிருக்கிறவர்களும் பல்லாண்டுகள் அட்டகாசம் புரிந்ததையும் அவர்கள் கர்த்தரால் தண்டிக்கப்படாமல் நீண்டகாலம் விடப்பட்டதையும் அதன் பின் அவர்கள் போர்கள் மூலம் அழிக்கப்பட்டதையும் இவ்வசனங்கள் கூறுகின்றன. இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதா?

எப்போது நிறைவேறியது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகையினால் தான் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அட்டூழியம் புரிந்தவர்கள் – கர்த்தருக்கு ஆத்திரமூட்டியவர்கள் அனைவரும் கருவருக்கப்பட்டனர்.

சித்திர வேலையான விக்கிரங்களை நம்பி வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள். (ஏசாயா 42:17)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கேதாரியர்களின் தோன்றும் போது அம்மக்கள் விக்கிரங்களைத் தேவர்களென வழிபட்டு வந்ததையும் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்பு அம்மக்கள் வெட்கித் தலை குனிந்ததையும் வரலாறு கூறுகிறது.

ஏசாயா கூறிய முன்னறிவிப்பு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறியது.

இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும் சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே செடிகளிலே அகப்பட்டு காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள், தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.

(ஏசாயா 42:22)

இந்த ஜனம் என்று ஏசாயா தமது இனத்தை – இஸ்ரவேலரைக் குறிப்பிடுகிறார். இந்த முன்னறிவிப்பு நிறைவேறும் போது இந்த ஜனங்களின் – இஸ்ரவேலர்களின் நிலை எத்தகையதாக இருக்கும் என்பதை அறிவிக்கிறார்.

இஸ்ரவேலர்கள் நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின்னர் இதில் கூறப்பட்ட இழிநிலையை அடைந்தார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. எனவே ஏசாயாவின் இந்த முன்னறிவிப்பை நம்புவோர் – நபிகள் நாயகத்தை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.