Tamil Bayan Points

03) சொர்க்க நரகத்தை தீர்மானிக்கும் நாவு

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

சொர்க்க நரகத்தை தீர்மானிக்கும் நாவு

இறைவன் தந்த உடலுறுப்புகளில் எத்தனையோ இருக்க நாவைப்பற்றி பேசுவதன் அவசியம் என்ன? என்று சிலருக்கு தோன்றும். நியாயமே. ஏன் பேசுகிறோம்? மற்ற உறுப்புகளின் மூலம் (மறை உறுப்பைத்தவிர) ஏற்படும் விளைவை விடவும் நாவு மூலம் ஏற்படும் விளைவு ஒவ்வொரு முஸ்லிமையும் அச்சுறுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ளது. மற்ற உறுப்புகளை அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பதை விடவும் நாவை அடக்கி கட்டுக்குள் வைப்பது சிரமமான ஒன்றாகவே இருக்கின்றது.

வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பலநாடுகள் தமக்குள் சண்டையிட்ட தற்கும். பலதலைகள் உருளுவதற்கும் வாள் காரணமாக இருந்ததை விட 50 கிராம் மதிப்பில்லாத இந்த நாவு தான் அதிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தான் காரணமாக. பின்புலமாக இருந்துள்ளது என்பதை திட்டவட்டமாக அறியலாம். நாவு ஏற்படுத்தும் விளைவும். அதை தன் கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம் .

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளதான நாவிற்கும் தம் இரு கால்களுக்கு இடையே உள்ளதான மர்ம உறுப்பிற்கும் என்ளிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். 

அறிவிப்பவர் சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல் புகாரி – 6474

பாருங்கள் நாவை அடக்கி ஆள்வேன் என்று ஸஹாபாக்களில் யாராவது உத்தரவாதம் அளித்தால் அவருக்கு எப்படியேனும் சொர்க்கத்தை பெற்றுத்தருவேன். அவர் சொர்க்கம் செல்ல நாள் பொறுப்பு என்று நபிகளார் தெரிவிக்கின்றார்கள் அதுமட்டுமல்ல நாவை தன் கட்டுக்குள் வைத்து பேணி நடந்தால் அவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்ற நற்செய்தியையும், ஆனால் அது சிரமும் கூட என்பதையும் இந்த செய்தி வாயிலாக நபிகளார் கூறுகின்றார்கள்.

இப்போது சொல்லூங்கள். நாவினால் ஏற்படும் விளைவு நாம் நினைப்பது போலா நமது மறுமை வாழ்வை தீர்மானிக்கும் சக்தி பெற்றதாக இந்த நாவு அமைந்துள்ளது. நமது மறுமை வாழ்க்கையை சொர்க்கமாக்குவதும் அல்லது நரகமாக்குவதும் நாம் நாவை பேணி பாதுகாப்பதில் தான் உள்ளது. இது வெளியிடும் எந்த ஒரு வார்த்தையையும் அற்பமாக எண்ணி விட முடியாது. நம் நாவு வெளியிடும் ஒரு சின்ன வார்த்தையில் தான் நமது மறுமை வாழ்க்கையே உள்ளது என்று பின்வரும் செய்தியில் நபிகளார் தெரிவுபடுத்துகின்றார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்

அறிவிப்பவர்: ஆபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி – 6478

நமது மறுமை வாழ்வையே மாற்றியமைக்க கூடிய இந்த நாவை நாம் அடக்கா விட்டால் அது இஷ்டத்துக்கு விட்டு விட்டால் நம்கதி அதோகதி தான். எனவே சொர்க்கம் செல்ல விரும்புகின்ற அனைவரும் இந்த நாவை பேணியே ஆக வேண்டும். நாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்

ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை சொர்க்கத்தில் சேர்க்கின்ற ஒரு அமலை எனக்கு கற்றுத் தாருங்கள் என கேட்டார். அதற்கு நபியவர்கள்- இதற்கு முடியாவிட்டால் பசித்தவருக்கு உணவளிப்பீராக தாகித்தவருக்கு தண்ணீர் கொடுப்பாயாக. நன்மையை ஏவி தீமையை தடுப்பீராக இதற்கு முடியாவிட்டால் உனது நாவை நன்மையான காரியங்களில் மட்டும் தடுத்துக் கொள்வீராக

அறிவிப்பாளர் பரா பின் ஆஸிப்

நூல் அஹ்மத் – 17902

சொர்க்கம் செல்லும் வழியை எங்கோ தேடிப்போக வேண்டியதில்லை. நம்முடனே இருக்கும் நாவை பேணினால் அதுவே நம்மை சொர்க்கத்திற்கு கொண்டு போய் சேர்க்கும். அதை பேணத்தவறும் போது விளைவுகள் படுமோசமானதாய் இருக்கும் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.