Tamil Bayan Points

2) பங்குத் தந்தைகள் நம்பிக்கைக்கு உரியவர்களா?

நூல்கள்: இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

Last Updated on October 30, 2022 by

02) பங்குத் தந்தைகள் நம்பிக்கைக்கு உரியவர்களா?

இயேசுவின் சிலுவைப் பலி கொள்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னாள் இந்தக் கொள்கையைச் சொல்பவர்களின் நம்பகத் தன்மையை கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.

ஏனெனில் இவர்கள் தான் கர்த்தருக்கும் இயேசுவுக்கும் எதிரான இக்கொள்கையைப் பிரச்சாரம் செய்பவர்கள். தாங்கள் கூறுவது பைபிளுக்கு எதிரானது என்று தெரிந்து கொண்டே தான் இக்கொள்கையைப் பிரச்சாரம் செய்கின்றனர். தமக்குச் சாதகமான சில வசனங்களை மட்டும் தமது சுய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எனவே பரலோக ராஜ்ஜியத்தில் மக்கள் பிரவேசிக்காமல் முட்டுக்கட்டை போடும் இவர்களைப் பற்றி கிறித்தவ மக்கள் சரியாகப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

இந்தக் கொள்கையைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வரும் பங்குத் தந்தைகளும், பாதிரிகளும் பிற மதங்களில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலய நிர்வாக உரிமையை கிறித்தவ மக்களுக்கு வழங்குவதில்லை. ஆலயங்களின் முழுக் கட்டுப்பாட்டையும் தங்கள் கைகளில் வைத்துக் கொள்கின்றனர்.

அவர்கள் கோடி கோடியாகக் கொள்ளை அடித்தாலும் அவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது. அவர்களை எதிர்த்தால் இறந்தவர்களைக் கல்லறையில் அடக்கம் செய்ய முடியாது. கிறித்தவ மக்கள் தங்கள் குடும்பத்தின் திருமணம் உள்ளிட்ட எந்தச் சடங்கையும் தேவாலயத்தில் செய்ய முடியாது.

யார் ஆலயங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என்ற கடும் கோட்பாடு காரணமாக சுதந்திரமாக யாரும் சிந்திக்க முடியாத நிலையையும், சிந்தித்துக் கண்டறிந்த உண்மைகளை வெளியே பேச முடியாத நிலையையும் பாதிரிமார்கள் ஏற்படுத்தி விட்டனர்.

இதைக் கிறித்தவ மதத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஃபாதர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டு இவர்கள் செய்யும் ஊழியத்தையும், இது குறித்து இயேசு கூறியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்களுக்கும் இயேசுவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை அறியலாம்

தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காண வேண்டுமென்று செய்கிறார்கள். தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்.

கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்! கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

மத்தேயு 23:5

ஃபாதர் (பிதா) என்று ஒருவரையும் அழைக்கக் கூடாது என்று இயேசு தெளிவாகக் கட்டளை இட்டிருக்க இவர்களோ பிதா (ஃபாதர்) என்று தங்களை அழைத்துக் கொள்வதன் மூலம் இயேசுவுக்கு எதிரிகளாக ஆகி விட்டனர்.

மேலும் மத குருக்கள் என்று தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இயேசுவைத் தவிர யாரும் யாருக்கும் குருவாக முடியாது என்று இயேசு கூறியதையும் மீறுகிறார்கள்.

தங்களைப் பிற மக்களிடமிருந்து வேறுபடுத்தி தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக வழக்கத்தில் இல்லாத வகையில் நீண்ட அங்கிகளை அணிகிறார்கள். விருந்துகளிலும், ஜெப ஆலயங்களிலும், கடை வீதிகளிலும் தமக்குத் தனி மரியாதை தரப்பட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். இவர்களுக்கும், இயேசுவுக்கும் என்ன சம்மந்தம்? என்று கிறித்தவ சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இயேசுவுக்கு ஊழியம் செய்கிறோம் என்ற பெயரில் தேவாலயங்களிலும், தொலைக் காட்சிகளிலும் இவர்கள் செய்யும் பிரச்சாரத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். அதற்கும் இயேசுவுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதைப் பைபிளின் பின்வரும் வசனங்கள் நிரூபிக்கின்றன.

அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம். மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு! அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்!

அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்! உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

மத்தேயு 6:5-8

கடவுளிடம் ஜெபிக்கும் போது வீண் வார்த்தைகளைக் கூறி அலப்பக் கூடாது என்று இயேசு கூறுகிறார். மேலும் இரகசியமாக வீட்டின் கதவைப் பூட்டிக் கொண்டு தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று இயேசு கூறுகிறார். ஆனால் மத போதகர்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யும் போது கடவுளை உருட்டி மிரட்டி கட்டளை இடும் விதமாக ஜெபிக்கிறார்கள்.

மேலும் ஆலயங்களில் ஜெபிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் திறந்த வெளி மைதானங்களிலும் இவர்கள் செய்யும் அலப்பரையைப் பார்க்கும் போது இயேசு இவர்களைக் குறித்தே மேற்கண்ட எச்சரிக்கை விட்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

படிப்பறிவில்லாத ஏழை மக்களுக்குப் பணத்தாசை காட்டி மதமாற்றம் செய்வதற்கும் இவர்கள் அலைந்து திரிகின்றனர். ஆனால் மதத்தில் சேர்த்தவுடன் அவர்களுக்கு இயேசு கூறிய கொள்கையைக் கூறாமல் அவன் நரகத்துக்குப் போகும் வழியை இவர்கள் காட்டுகின்றனர்.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்;. நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை. பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள்.

இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத்தேயு 23:13-15

இயேசுவின் இந்த எச்சரிக்கை அப்படியே இன்றைய கிறித்தவப் பாதிரிகளுக்குப் பொருந்துவதையும் கிறித்தவ அன்பர்கள் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

கர்த்தருக்கு ஊழியம் செய்பவர் காசு பணம் சேர்க்கக் கூடாது; எதையும் சேமித்து வைக்கக் கூடாது என்று இயேசு தெளிவான இலக்கணம் கூறிச் சென்றுள்ளார்.

உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது வழிக்காகப் பையையாவது இரண்டு அங்கிகளையாவது பாதரட்சைகளையாவது தடியையாவது தேடி வைக்க வேண்டாம்! வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

மத்தேயு 10:9,10

தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களைச் சேர்க்கக் கூடாது என்றும் ஒரு பையைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்றும், மாற்று உடைகளைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்றும் செருப்பையும் கைத்தடியையும் கூட வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் இயேசு மிகத் தெளிவாகக் கட்டளை இட்டுள்ளார்.

ஆனால் இன்று கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்கள் ஊரை வளைத்துப் போடுகிறார்கள். கோடாணுகோடி ரூபாய்களுக்குச் சொத்துக்களைச் சேர்த்துள்ளனர். வெளிநாட்டுப் பணக்காரர்களை ஏமாற்றி பணத்தைக் குவிக்கின்றனர். இவர்களுக்கும் இயேசுவுக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா என்பதையும் கிறித்தவ அன்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மதமாற்றத்துக்கு ஆள் பிடிக்க கொல்லைப் புறமாக வந்து மக்களை ஏமாற்றுவதையும் இவர்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்யும் போது அரபுச் சொற்களைப் பயன்படுத்தியும், குர்ஆன் வசனங்களைப் பொருத்தமற்ற இடங்களில் பயன்படுத்தியும் வருகின்றனர். அதாவது இஸ்லாமே இவர்களின் கொள்கையை ஏற்றுக் கொள்வது போல் மக்களை ஏமாற்றுகின்றனர். இஸ்லாத்தில் இருந்து கிறித்துவராக மாறிய சகோதரர் நற்செய்தி அளிக்கிறார் என்றும் புளுகி குறுக்கு வழியில் ஆள் பிடித்து வருகின்றன.

இதையும் இயேசு மிகத் தெளிவாக எச்சரிக்கை செய்துள்ளதைப் பாருங்கள்.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.; ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ப் பிரவேசியாமல் வேறு வழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

யோவான் 10:1

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்!; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 7:15

குருடர் பார்க்கிறார் என்றும் செவிடர் கேட்கிறார் என்றும் முடவர் நடக்கிறார் என்றும் மக்களைக் கூட்டி வைத்துக் கொண்டு நாடகம் நடத்துகின்றனர். பேய்களைத் துரத்துகிறோம் என்று மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இன்னொரு புறம் அதிகமான மருத்துவ மனைகளையும் இவர்கள் தான் நடத்துகின்றனர்.

இவர்கள் கூறுவது உண்மையானால் நாட்டில் உள்ள எல்லா குருடர்களுக்கும் பார்வை வழங்கிக் காட்டட்டும். குருடனைப் போல் நடிக்க வைத்து அவனுக்கு பார்வை வந்தது போல் நடிக்கச் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். மதத்தைப் பரப்புவதற்காகப் பொய் சொல்லலாம் என்று வேதப் புத்தகத்திலேயே எழுதி வைத்துக் கொண்டவர்கள் இவர்கள்.

அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

முதலாம் கொரிந்தியர்-9:7

உலகில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆள் பிடிக்கலாம் என்பதை வேதத்திலேயே எழுதி வைத்துக் கொண்டவர்கள் இவர்கள் மட்டுமே.

இது குறித்தும் இயேசு எச்சரிக்கை செய்துள்ளார்.

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள்.

மத்தேயு 24:11

இயேசு அதோ வருகிறார்; இதோ வருகிறார்; அதோ இறங்குகிறார் எனவும் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். ஜெபம் செய்யும் போது இறங்குவீராக என்று இயேசுவுக்குக் கட்டளையும் போடுகிறார்கள். இதையும் இயேசு மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்.

அப்பொழுது இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார்; அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

ஆகையால்: அதோ வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்! இதோ அறை வீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

மத்தேயு 24:23-27

அப்பொழுது: இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார் அதோ அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

மாற்கு 13:21,22

இயேசு சொல்வதை இன்னும் கேளுங்கள்!

குருடரான வழிகாட்டிகளே கொசுயில்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர் கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! போஜன பான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்.

உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ!

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்;. உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ. நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால் அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப் பழிக்கு உடன்பட்டிருக்க மாட்டோம் என்கிறீர்கள்.

மத்தேயு 23:24-30

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு 7:22,23

மேலும் இவர்கள் இயேசுவுக்கும் மேரிக்கும் சிலைகளை நிறுவி அதை வழிபடுகின்றனர். விக்கிரக(சிலை) வழிபாட்டை இயேசு அறவே மறுத்துள்ளார் என்பதை மறந்து விட்டனர். பில்லி சூனியம் என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அதையும் இயேசு கண்டித்திருப்பதைப் பைபிள் பின்வருமாறு கூறுகிறது.

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லி சூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னது போல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கலாத்தியர் 5:19-21

பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்குச் சாதகமானதை மட்டும் மக்கள் மத்தியில் வாசித்து பிரச்சாரம் செய்யும் கிறித்தவ போதகர்கள் உண்மையில் பைபிளின் போதனைகளை மீறி வருகிறார்கள் என்பதே உண்மை.

இவர்களின் தனிப்பட்ட ஒழுக்க வாழ்க்கை போப் ஆண்டவர் அடிக்கடி உலக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு கேவலமாக உள்ளதையும் கிறித்தவர்கள் எண்ணிப் பார்த்து சுயமாகச் சிந்தித்தால் இயேசுவின் சிலுவைப் பலி என்ற கொள்கை இயேசுவின் போதனைக்கு எதிரானது என்பதை அறிந்து கொள்வார்கள்.