069. ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி தக்பீருக்குப் பின் துஆ உண்டா?
கேள்வி-பதில்: ஹஜ் உம்ராLast Updated on July 7, 2017 by Trichy Farook
ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிட முடியாதபட்சத்தில், அதை நோக்கி கையை நீட்டி ‘அல்லாஹு அக்பர்’ என சொல்லும்போது சைகைக்காக நீட்டிய கையை முத்தமிட்டுக் கொள்ளலாமா? ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி கையை நீட்டி தக்பீர் சொல்லிய பிறகு ‘அல்லாஹும்ம ஈமானம் பிக, வ தஸ்தீகம் பிகிதாபிக….’ என்பதுபோல் ஆரம்பிக்கும் துஆக்களுக்கு ஆதாரம் உள்ளதா?
பதில்
இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்!” எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1611
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள்.
நூல்: புகாரி 1612, 1613, 5293
ஹஜ் அஸ்வதை கைகளால் தொட்டு, அந்தக் கையை முத்தமிடுவது, வாயால் முத்தமிடுவது போன்றவை தான் ஹதீஸ்களில் இடம்பெறுகின்றது. இதற்கு இயலாவிட்டால் அதை நோக்கி சைகை செய்வதற்கு ஆதாரம் உள்ளது.
சைகை செய்த கையை முத்தமிட்டதாக ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் இல்லை.
ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடுவதற்காகவோ, அல்லது சைகை செய்வதற்காகவோ பிரத்தியேகமான பிரார்த்தனை எதுவும் ஹதீஸ்களில் இல்லை.