Tamil Bayan Points

வெற்றியாளர்கள் யார் – 5

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on January 21, 2017 by Trichy Farook

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம்.

 

நல்லறங்கள் செய்வோர்

முன்னரே கூறியபடி, நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது.

 

فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏

திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர்.

(அல்குர்ஆன் ; 28;67)

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் ; 22;77)

நல்லறங்களுக்கான கூலி

தான் செய்யக்கூடிய காரியம் சிறியது என்றாலும் அதற்கான பலனை எதிர்பார்த்தே மக்கள் அதனை செய்கின்றனர். அதன் பலனை நாம் அறியும் போது தான் அதனை தொடர்ந்து செய்வதற்கு நமக்கு ஆர்வம் அதிகரிக்கும். இறைவன் நாம் செய்யக்கூடிய அனைத்து நல்லறங்களுக்கும் கூலியை ஏற்படுத்தியுள்ளான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரது இஸ்லாம் (அகத்திலும் புறத்திலும்) அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன்செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகின்றான். அ(வருடைய இஸ்லாம் அழகு பெற்றுவிட்ட)தன் பின்னரும் “கிஸாஸ்’ (உலகில் சக மனிதனுக்கு அவர் இழைத்த குற்றங்களுக்குரிய தண்டனை) இருக்கவே செய்யும். (அவர் செய்யும்) ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் பதியப்படும். (அவர் புரியும்) ஒவ்வொரு தீமைக்கும் அதைப் போன்று (ஒரேயொரு தண்டனை)தான் உண்டு. அதையும் அல்லாஹ் மன்னித்து விட்டால் (எந்தத் தண்டனையும்) கிடையாது.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : புகாரி (41)

நல்லறங்களைத் தொடர்ந்து செய்வோம்

நாம் செய்யக்கூடிய நல்லறங்கள் குறைவாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் .

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னவர்?’ என்று கூறிவிட்டு அவரது தொழுகை பற்றி (“அவர் அதிகம் வணங்குபவர்’ என்று புகழ்ந்து) கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதும் நிறுத்து! (வணக்கவழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி :43 

மரணத்திற்கு முன்பே நல்லறம்

ஒரு காரியம் இந்த நாளில் நடக்கப்போகின்றது என்றால் அதற்கு முன் தினம் தான் அதற்கு மக்கள் தயாராகுகின்றனர். இதுவே பெரும்பாலான மக்களின் செயலாக அமைந்துள்ளது. மனிதர்களுக்கு நல்லறங்கள் செய்வதற்கான கால வரையரையை அல்லாஹ் மரணத்திற்கு முன்பு வரை ஏற்படுத்திவைத்துள்ளான்.

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

அல் குர்ஆன் 67: 2

நாம் திடகாத்திரமாக ஆரோக்கியமாக இருக்கும் போதே நல்லறங்களை செய்துவிடவேண்டும். ஏனெனில் தனக்கு மரணம் எப்போது வரும் என்று யாராலும் அறிய முடியாது. அப்போதிருந்து நான் தொழவில்லையே தர்மம் கொடுக்கவில்லையே என்று புலம்புவதில் ஒரு பயனும் இல்லை .

 

حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏ لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல் குர்ஆன் 23 : 99, 100

 

قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ

“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலை குனிந்து, “எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங் களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுவதை நீர் காண வேண்டுமே.

அல் குர்ஆன் 32 : 11

 

திருப்தியான வாழ்க்கையை பெறும் வழி

நாம் அதிகமான நல்லறங்களை செய்தால் தான் மறுமையில் திருப்தியான வாழ்க்கையை பெற முடியும் . இல்லையெனில் நஷ்டமடைய வேண்டியது தான்.

 

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏

. யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார். யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.. ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?

 

نَارٌ حَامِيَةٌ‏

(அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.

அல்குர்ஆன் 101 : 6 – 11

 

நன்மைகள் செய்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!” என்றார்

அல் குர்ஆன் 27: 19

இறைவனின் விருப்பத்திற்குரிய நல்லறங்களை செய்து வெற்றியாளர்களாக ஆக அல்லாஹ் அருள் புரிவானாக!

 
இன்னும் ஏராளமான பண்புகளை வெற்றியாளர்களின் பண்புகளாக இஸ்லாத்தை சொல்லித் தருகிறது. வெற்றியாளர்களின் மற்ற பண்புகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!