Tamil Bayan Points

வலீமார்களிடம்  உதவி தேடலாமா?-1

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

வலீமார்களிடம்  உதவி தேடலாமா?

அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து, அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:23:117.)

அல்லாஹ் ஆதாரமில்லை என்று சொன்ன விஷயத்திற்கு உலகில் எவராலும் ஆதாரம் கொண்டு வர இயலாது.

உலகைப் படைத்த அல்லாஹ்வே ஒன்றிற்கு ஆதாரமில்லை என்று சொன்ன பிறகு அவ்விஷயத்திற்கு நான் ஆதாரம் தருகிறேன் என ஒருவன் கூறினால் அவன் சொல்வது உண்மையான ஆதாரமில்லை என்பதுடன் அவன் இறைவனுடனும், இறைவேதத்துடனும் மோதத் தயாராகி விட்டான் என்று பொருள். இறைவேதத்துடன் மோதும் இந்த வேலையைத் தான் கப்ர் வணங்கிகள் கலக்கமின்றி செய்து வருகிறார்கள்.

அல்லாஹ் அல்லாதவரை அழைத்துப் பிரார்த்தனை  புரியவும், அவர்களிடம் உதவி தேடவும் திருக்குர்ஆன், நபிமொழிகளில் ஆதாரமுண்டு எனக்கூறி அப்பாவி மக்களை நரகப்படுகுழிக்கு இவர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வே ஆதாரமில்லை என்று சொன்ன விஷயத்திற்கு இவர்கள் ஆதாரம் குறிப்பிடுகிறார்களாம். அதையும் திருக்குர்ஆன் – நபிமொழிகளிலிருந்தே காட்டுகிறார்களாம்.

இவர்கள் அப்பாவி மக்களை இணைவைப்பை நோக்கி அழைப்பதற்கு எம்மாதிரியான தந்திரங் களை, கைங்கர்யங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அதை முறியடிப்பது கொள்கைவாதிகளின் கடமையாகும்.

வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் இவர்கள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் அறிந்து கொள்வோம்.

வாதம்: 1

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

اطلبوا الحوائج الي ذوي الرحمة من امتي

‘என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்’ (ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்.)

பதில்: 1

இது பலவீனமான செய்தியாகும். அத்துடன் இதில் இவர்களின் குட்டும் அம்பலமாகிறது.

இச்செய்தி இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் பைஹகீ, தப்ரானீயில் இல்லை. மாறாக இப்னு அஸாகிரின் தாரீகு திமிஷ்க், பாகம்: 43, பக்கம்: 5 மற்றும் இப்னு முன்தஹ் அவர்களின் மஜாலிஸ், பக்கம்: 33 உள்ளிட்ட நூல்களில் தான் இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் இடம் பெற்றுள்ளது.

இச்செய்திகளில் உள்ள பலவீனத்தை அறியும் முன் இதற்கு இவர்கள் செய்த பொருள் சரியா? என்பதைப் பார்ப்போம்.

اطلبوا الحوائج الي ذوي الرحمة

என்ற வார்த்தைக்கு ரஹ்மத்தான கூட்டத் தார்களிடம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று பொருள் செய்து, ரஹ்மத்தான கூட்டத்தார் என்றால் அவர்கள் தான் வலீமார்கள், நாதாக்கள். அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கலாம் என வியாக்கியானம் அளிக்கிறார்கள். இச்சொல்லுக்கான அர்த்தம் இதுவல்ல. இவர்கள் குறிப்பிடும் பொருளில் இச்செய்தி இல்லை.

மனிதர்களிடம் துஆ செய்வதைப் பற்றி இச்செய்தி பேசவில்லை. யாசகம், பொருளாதார உதவி கேட்பது பற்றித்தான் இச்செய்தியில் சொல்லப்படுகிறது. யாரிடம் யாசகம் கேட்கலாம் – யாரிடம் கேட்க கூடாது என்பதை தான் இச்செய்தி சொல்கிறது என்பதை அதன் முழுமையான மொழிபெயர்ப்பை அறியும் போது தெரியலாம்.

اطلبوا الحوائج إلى ذوي الرحمة من أمتي ترزقوا وتنجحوا فإن الله يقول رحمتي في ذوي الرحمة من عبادي ولا تطلبوا الحوائج عند القاسية قلوبهم فلا ترزقوا ولا تنجحوا

என் சமுதாயத்தில் உள்ள இரக்கமுடையோரிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள். அப்போது தான் உணவளிக்கப்படுவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். எனது அருள் என் அடியார்களில் உள்ள இரக்கமுடையோருக்குத்தான் என்று அல்லாஹ் கூறியுள்ளான். கடின சித்தம் கொண்டோரிடம் தேவைகளைக் கேட்காதீர்கள். அவர்களிடம் கேட்டால் நீங்கள் உணவளிக்கப்பட மாட்டீர்கள். வெற்றியும் கிடைக்காது என நபிகள் நாயகம் கூறினார்கள்.

ரஹ்மத் என்றால் அன்பு, இரக்கம், அருள் என பல அர்த்தங்கள் உள்ளது.

ரஹ்மத் உடையோரிடம் கேட்டால் உணவு கிடைக்கும் என்றால் இந்த ரஹ்மத் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

இரக்கம் உள்ளோரிடம் யாசகம் கேட்டால் தான் அவன் எதையாவது தருவான். உண்ண உணவு கிடைக்கும். கடுகடுப்பான நபர்களிடம் கேட்டால் அவர்கள் எதையும் தரமாட்டார்கள், உண்ண உணவும் கிடைக்காது. இது தான் இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே இது மனிதர்களிடம் யாசகம், பொருளாதார உதவி கேட்பதைப் பற்றித் தான் குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்.

மற்றபடி மனிதர்களிடம் துஆ செய்து உங்கள் தேவைகளைக் கேளுங்கள் என்று இந்த பலவீனமான செய்தியில் (கூட) இல்லை.

ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்லும் பொருளில் தான் இச்செய்தி உள்ளது என்றாலும் அப்போதும் இது ஏற்கப்படாது. காரணம் இது மிகவும் பலவீனமான செய்தியாகும்.

இப்னு அஸாகிரின் அறிவிப்பில் கல்ஃப் பின் யஹ்யா என்பார் இடம் பெறுகிறார்.

الجرح والتعديل (3/ 372)

1697 – خلف بن يحيى الخراساني بخارى

وسألته عنه فقال: متروك الحديث كان كذابا لا يشتغل به ولا بحديثه

இவரை அபூஹாதம் இமாம் அவர்கள் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர், பொய்யர், இவரும் இவரது ஹதீஸ்களும் கண்டு கொள்ளப்படாது என்று விமர்சித்துள்ளார்.

அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 3, பக்கம்: 372

மேலும் இதில் இடம்பெறும் அலீ பின் தாஹிர் அல்குரஷீ என்பவரின் நம்பகத்தன்மை ஹதீஸ் கலை அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை.

இப்னு முன்தஹ் அவர்களின் அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்ஹாரிஸ் என்பார் இடம்பெறுகிறார்.

இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று அறிஞர்களால் சந்தேகிக்கப்படுபவர் ஆவார்.

நம்பகமானவர்களிடமிருந்து ஆச்சரியப்படத் தக்கவைகளைச் சொல்கிறார் என்று இமாம் ஹாகிம் அவர்களும், பலவீனமானவர் என்று அபூஸூர்ஆ அவர்களும், ஆதாரம் கொள்ளப்பட மாட்டார் என்று அபூஹாதம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இன்னும் பல விமர்சனம் இவர் மீது உள்ளது.

பார்க்க: மீஸானுல் இஃதிதால், பாகம்: 2 பக்கம்: 496

அடுத்து இதில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் மர்வான் அவரையும் அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் நஸாயி மற்றும் அபூஹாதம் அவர்களும், மதிப்பற்றவர் என்று இமாம் ஸஃதீ அவர்களும், நம்பகமானவர் அல்ல என்று இமாம் இப்னு மயீன் அவர்களும் இவரது செய்திகள் கண்டிப்பாக எழுதப்படாது என்று இமாம் புகாரி அவர்களும் விமர்சித்துள்ளனர்.

பார்க்க: தஹ்தீபுல் கமால்,  பாகம்: 26,      பக்கம்: 392, 393

அந்தோ பரிதாபம்

கப்ர் வணங்கிகளின் நிலையைக் கண்டால் உண்மையில் பரிதாபமாகவே உள்ளது.

மிகவும் பலவீனமான செய்தியைக் கூட உள்ளது உள்ளபடிக் கூறி, தங்கள் கருத்தை நிலைநாட்ட இவர்களால் முடியவில்லை. மிகவும் பலவீனமான செய்தி, மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியில் அதன் யதார்த்த அர்த்தத்தை மாற்றி தங்கள் சொந்தச் சரக்குகளை உள்ளே திணித்தால் மட்டுமே தங்கள் கருத்தை நிலைநாட்ட முடியும் எனும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். கப்ர் வணக்கத்தின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகம் அந்த இழிநிலைக்கும் இவர்களை இட்டுச்சென்று விட்டது என்பதை இது பளிச்சென்று காட்டுகிறது.

தப்ரானியில் என்ன உள்ளது?

இவர்கள் தப்ரானியில் உள்ளதாகக் குறிப்பிட்டார்கள் அல்லவா?

இவர்கள் குறிப்பிட்ட தப்ரானீயில் அபூஹூரைராவின் அறிவிப்பாகப் பின்வரும் வாசக அமைப்பில் உள்ளது.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:”اطْلُبُوا الْحَوَائِجَ إِلَى حِسَانِ الْوُجُوهِ”.

அழகிய முகம் கொண்டவர்களிடம் உங்கள் தேவைகளைக் கேளுங்கள்.

தப்ரானீ, பாகம்: 19, பக்கம்: 309

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அழகானவர்களிடம் துஆ செய்யலாம், அழகற்றவர்களிடம் துஆ செய்யக் கூடாது என்று கப்ர் வணங்கிகள் வாதிடுவார்கள் போலும். வாதிட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இமாமைப் பள்ளியில் சேர்க்க அவரின் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொன்னவர்கள் அவ்லியா என்றால் அவர் அழகாக இருக்க வேண்டும், அழகான அவ்லியா(?)விடம் தான் நாம் துஆ செய்ய முடியும் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்பட என்னவுள்ளது?

இந்தச் செய்தியின் பொருள் என்ன என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இதுவும் பலவீனமான செய்தியே.

தப்ரானியின் அறிவிப்பில் தல்ஹா பின் அம்ர் இடம்பெறுகிறார்.

இவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அஹ்மத் மற்றும் நஸாயி ஆகியோரும், இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று இமாம் புகாரி அவர்களும், பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும், ஹதீஸில் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார் என்று இப்றாஹீம் பின் யஃகூப் அவர்களும் விமர்சித்துள்ளனர்.

தஹ்தீபுல்  கமால், பாகம்: 13, பக்கம்: 427

ஜாபிர் (ரலி) அறிவிப்பு

இதே செய்தி  தமாமுர் ராஸி அவர்களின் ஃபவாயித் எனும் நூலில் ஜாபிர் (ரலி) அறிவிப்பாக உள்ளது.

இதில் இடம்பெறும் சுலைமான் பின் கராஸ் மற்றும் உமர் பின் சுஹ்பான் ஆகிய இரு அறிவிப்பாளர்களுமே பலவீனமானவர்கள் ஆவர். அறிஞர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளனர்.

சுலைமான் பின் கராஸை இப்னு அதீ, அபூஹாதம் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.

அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன்

பாகம்: 2, பக்கம்: 23

அவரது அதிகமான செய்திகளில் தவறு உள்ளது என்று உகைலீ குறிப்பிடுகிறார்.

அல்லுஅஃபாஉ லில் உகைலீ

 பாகம்: 2, பக்கம்: 138

உமர் பின் சுஹ்பானை இமாம் புகாரி மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.

தாரீகுல் கபீர், பாகம்: 6, பக்கம்: 165

அபூஹாதம் அவர்களும் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்.

அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 6, பக்கம்: 116

தப்ரானீயின் மற்றொரு அறிவிப்பில்,

المعجم الأوسط (5/ 76)

قال رسول الله صلى الله عليه و سلم اطلبوا الفضل إلى الرحماء من امتي تعيشوا في اكنافهم

எனது சமுதாயத்தில் உள்ள இரக்கம் கொண்டோரிடம் செல்வத்தை வேண்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் பொறுப்பில் நீங்கள் வாழலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

முஃஜமுல் அவ்ஸத், பாகம்: 5, பக்கம்: 76

இச்செய்தியில் முஹம்மத் பின் மர்வான் என்பவர் இடம் பெறுகிறார். அவரது விமர்சனம் முந்தைய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மூஸா பின் முஹம்மத் என்பாரும் இதில் இடம் பெறுகிறார்.

ميزان الاعتدال (4/ 219)

 موسى بن محمد بن عطاء الدمياطي البلقاوى المقدسي الواعظ، أبو طاهر، أحد التلفى

كذبه أبو زرعة، وأبو حاتم.

وقال النسائي: ليس بثقة.

وقال الدارقطني وغيره: متروك.

قال الاسدي: فلم أعد إليه.

وقال ابن حبان: لا تحل الرواية عنه، كان يضع الحديث.

وقال ابن عدى: كان يسرق الحديث.

இவரை இப்னு ஹிப்பான், அபூஹாதம், அபூஸூர்ஆ உள்ளிட்ட பலரும் இவரை பொய்யர், ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பார்க்க: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 219

மேலும் இறுதியாகக் குறிப்பிட்ட இச்செய்தியில் இவர்கள் சொன்ன கருத்து எதுவுமில்லை. நாம் முன்னர் சொன்ன கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த பலவீனமான செய்தி அமைந்துள்ளது. அதாவது உணவோ, பொருளாதார உதவியோ கேட்பதாக இருந்தால் இரக்கமுள்ளவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு தந்து வாழ்வளிப்பார்கள் என்று தான் இதன் பொருள் அமைந்துள்ளது.

இந்தச் செய்தியும் பல்வேறு வாசக மாற்றங்களுடன் வரும் இச்செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

கப்ர் வணங்கிகள் கூறும் மயிர்க்கூச்செறியச் செய்யும் மற்றுமொரு வாதத்தைப் பார்ப்போம்.

வாதம்: 2

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

 اذا تحيرتم في الامور فاستعينوا باهل القبور

நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடவும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

ஆதாரம்: தஃப்ஸீருல் ரூஹூல் பயான், பாகம்: 5

பதில்: 2

கப்ர் வணங்கிகள் எத்தகைய கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதை இந்த வாதத்தின் மூலம் அவர்களை அறியாதவர்களும் அறிந்து கொள்ளலாம்.

தங்கள் வழிகெட்ட கொள்கையை நிலை நாட்டவும் மக்களிடம் அதை விற்கவும் எந்தச் செயலிலும் இறங்குவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இது ஒன்றே போதுமானது.

நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரில் உள்ள வலிமார்களை கொண்டு உதவி தேடவும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களாம்.

தர்காவாதிகளுக்கு பகிரங்க சவால் விடுகிறோம்.

இந்தச் செய்தி எந்த ஹதீஸ் நூலில் உள்ளது? இதன் முழு அறிவிப்பாளர் தொடர் என்ன?

இணை வைப்பை ஒழிக்க வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?

இவர்கள் குறிப்பிடும் தஃப்ஸீருல் ரூஹுல் பயானிலிருந்து இதற்கான ஏற்கத்தக்க ஆதாரத்தை அரபி மூலத்துடன் வெளியிடுவார்களா?

ஒருக்காலும் அவர்களால் இப்படி ஒரு ஹதீஸை எடுத்துக் காட்ட முடியாது.

இது முழுக்க முழுக்க கப்ர் வணங்கிகளால் நபிகளார் மீது துணிந்து இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இது எந்த ஹதீஸ் நூலிலும் இல்லை.

நபிகளார் மீது இட்டுக்கட்ட எப்படி மனம் வந்தது? என்றெல்லாம் கப்ர் வணங்கிகளிடம் கேட்க முடியாது. அவர்களின் தொழிலே அது தானே!

தங்கள் கருத்தை நிலைநாட்ட நபிகள் நாயகத்தின் பெயரைப் பயன்படுத்திப் பொய்களை அள்ளி விடுவது கப்ர் வணங்கிகளுக்குக் கைவந்த கலை. அவர்கள் படித்த மத்ஹபு நூற்கள் அவர்களை அப்படி பயபக்தி கொண்டவர்களாக பரிணமிக்கச் செய்கிறது.

அதனால் எப்படி நபி மீது இட்டுக்கட்டினீர்கள் என்ற கேள்வியைத் தவிர்த்து விட்டு வேறு சில கேள்விகளை தர்காவாதிகளிடம் கேட்கிறோம். முடிந்தால் பதிலளிக்கட்டும்.

கேள்வி: 1

ஒரு செயலில் தடுமாற்றம் ஏற்படும் போது வலிமார்களின் கப்ரில் உதவி வேண்டுமாறு நபிகளார் சொன்னது உண்மை எனில் பிறகேன் அதைச் செய்த யூத, கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள் (தமது மரணத்தருவாயில்) நோயுற்றிருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்கள் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்’’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புகாரி 1390

கப்ர் வணங்கிகளின் வாதப்படி நபிகளார் சொன்னதைத் தானே யூத, கிறித்தவர்கள் செய்தார்கள்?

தடுமாற்றம் வரும்போது மட்டும் என்றில்லாமல் பல நேரங்களில் அவர்கள் நபிமார்களின் கப்ருகளுக்கு சென்று நபி சொன்னதை (?) விட ஒரு படி மேலே சென்றுள்ளார்கள்.

பிறகேன் இந்த யூதர்களும் கிறித்தவர்களும் நபிகள் நாயகத்தால் சபிக்கப்பட்டார்கள் என்பதை யூத, கிறித்தவ கூட்டாளிகளான தர்காவாதிகள் விளக்குவார்களா?

கேள்வி: 2

எதைக் கேட்பதாக இருந்தாலும் அல்லாஹ்விடம் மட்டுமே கேள் என்று குர்ஆன் வழியில் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’’ (என்பதைக் கூறுவீராக!)

அல்குர்ஆன் 2:186

இந்த இறைவசனத்தை நமக்கு கற்றுத் தந்த நபிகளார் இதற்கு மாற்றமாக, ‘உனக்குத் தடுமாற்றம் வந்தால் கப்ரில் உள்ளோரிடம் போய் உதவி தேடு, அவர்களிடம் போய் பிரார்த்தனை செய்’ என்று எப்படிக் கூறுவார்கள்?

தர்காவாதிகள் பதிலளிப்பார்களா? அல்லது பல்லிளிப்பார்களா?

கேள்வி: 3

நபிகள் நாயகம் கூறியதாக கப்ர் வணங்கிகள் இட்டுக்கட்டிச் சொன்ன செய்தியை சற்று நன்றாகக் கவனியுங்கள்.

நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடவும்.

இதில் வலிமார்களை என்பது நேரடிச் சொல்லில் இல்லை. அடைப்புக்குறிக்குள் தான் உள்ளது.

அப்படி பார்த்தால் கப்ரு உடையவர்களை அதாவது கப்ரில் உள்ளவர்களைக் கொண்டு உதவி தேடவும் என்று தான் அந்தச் செய்தியில் உள்ளது.

கப்ரில் உள்ளவர்கள் என்பது பொதுவான சொல்லாகும்.

கப்ரில் நல்லோரும் இருப்பார்கள் தீயோரும் இருப்பார்கள்.

அதன்படி கப்ரில் உள்ள யாரைக் கொண்டும் உதவி தேடலாம் என்று சொல்லவேண்டியது தானே?

மேலும் முஸ்லிம்கள் மட்டுமின்றி இறை மறுப்பாளர்களும் கப்ரில் உள்ளவர்கள் தாம். கப்ரில் உள்ளவர்களைக் கொண்டு உதவி தேடு என்று நபி சொன்னது உண்மை எனில் கப்ரில் இறை மறுப்பாளர்களை கொண்டும் உதவி கேட்க வேண்டியது தானே? நபி சொன்னதற்குப் பிறகு அவர்களைக் கொண்டு உதவி தேடுவதில் இவர்களுக்கு என்ன தடை?

நபி மீது இட்டுக்கட்டிச் சொல்வது என்றாகி விட்டதற்குப் பிறகு வலிமார்களிடம் என்பது மட்டும் ஏன் அடைப்புக்குறிக்குள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? அதையும் நேரடியாக நபியின் வார்த்தையாக இட்டுக்கட்டி இது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாமே?

இப்படிப் பல கேள்விகள் இவர்களிடம் கேட்கலாம்.

பல வருடங்களாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு வாய் திறக்க மறுப்பவர்கள் இதற்கா பதிலளிக்கப் போகிறார்கள்?