Tamil Bayan Points

வலீமார்களிடம் உதவி தேடலாமா?-3

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

வலீமார்களிடம் உதவி தேடலாமா?

வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்குத் திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் பரேலவிகள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும், அதற்கான பதில்களையும் பார்த்து வருகிறோம்.

வாதம்: 5

அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.

 குர்ஆன் கூறுகிறது:

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்.

(அல்குர்ஆன்:16:43.)

இவ்வசனம், உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்தக் காரியம் கைகூட வேண்டுமோ, அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்குத் தெரியாத விஷயங்களை நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறது.

என்று வாதம் செய்கின்றனர்.

பதில்: 5

இதைப் படித்ததும் நபிகள் நாயகம் காலத்து இறைமறுப்பாளர்களும், யூதர்களும் தான் நம் சிந்தனைக்கு வருகிறார்கள்.

அவர்கள் தான் இறைவனின் வசனத்தையும், இறைத்தூதரின் போதனையையும் தங்கள் மனோ இச்சைக்கு தகுந்தவாறும் தங்களுக்கு சாதகமாகவும் திரித்துக் கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அதனாலே இறைவனின் சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.

நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!’’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்:5:41.)

இன்றைய கப்ர் வணங்கிகளின் செயல் அச்சரம் பிசகாமல் அன்றைய காஃபிர்கள் – யூதர்களின் செயலை அப்படியே ஒத்திருக்கின்றது.

இருக்கின்ற குர்ஆன் வசனங்களை தங்கள் கருத்திற்குத் தோதாக வளைத்து திரிப்பது, இல்லாத நபிமொழிகளை நபிகள் நாயகம் கூறியதாக அபாண்டமாகப் பொய் சொல்வது இவ்விரண்டுமே கப்ர் வணங்கிகளின் ஆதார செயலாகும். இவ்விரண்டு வழிமுறையைப் பயன்படுத்தியே தங்களின் அழிந்து போன கொள்கைகளை மக்களிடையே உயிரூட்ட முற்படுகிறார்கள்.

வலிமார்களிடம் உதவி தேடலாம் எனும் இந்தத் தலைப்பிலும் தங்களின் வழக்கமான பாணியில் அதே வழியில் தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.

அது சரி! அல்ஹம்து சூராவில் 7 வசனம் உள்ளதை ஏழாம் நாள் பாத்திஹா ஓதுவதற்கு ஆதாரம் காட்டிய மூளையற்ற கூட்டம் தானே!

மண்ணை வணங்கும் மடையர்களிடம் வேறு என்ன ஆதாரத்தை எதிர்பார்க்க இயலும்?

இனி இவர்களின் அளப்பரிய அறிவாற்றலை வெளிப்படுத்தும் ஆதாரத்திற்கு வருவோம்.

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

உங்களுக்குத் தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்.

(அல்குர்ஆன்:16:43.)

இதுதான் அவ்லியாக்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்பதற்கு கப்ர் வணங்கிகள் குறிப்பிடும் ஆதாரம். திக்ர் உடையவர்கள் என்றால் அவ்லியாக்களாம். என்னே இவர்களது குர்ஆன் ஞானம்.

ஒரு வாதத்திற்கு இவர்கள் செய்த பொருளின்படி திக்ர் செய்பவர்கள் – திக்ரை உடையவர்கள் என்று அர்த்தம் வைத்தாலும் திக்ர் செய்யும் அனைவரையும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தானே!

 ஒரு வார்த்தைக்கு என்ன பொருள் செய்தாலும் அடைப்புக்குறி போட்டு அதில் அவ்லியா என்று மறக்காமல் எழுதி விட வேண்டும் என்று யார் தான் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களோ?

இவர்கள் குறிப்பிட்ட வசனத்தை முழுமையாகப் படித்தாலே திக்ர் உடையவர்கள் என்றால் யார்? அவர்கள் அவ்லியாக்களா? என்பதை இலகுவாகப் புரியலாம்.

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

(அல்குர்ஆன்:16:43.)

உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம் என்பது இறைவன் நபிகள் நாயகத்திற்குச் சொல்லும் சேதியாகும். இதுவரை ஆண்களையே இறைத்தூதர்களாக அனுப்பியதாக அல்லாஹ் நபிகளாரிடம் தெரிவித்து விட்டு, வேண்டுமானால் திக்ர் உடையவர்களிடம் கேட்டுப்பார் என்கிறான். இவர்கள் செய்த பொருளின் படி அவ்லியாக்களிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அல்லாஹ் சொன்னான் என்றாகி விடும்.

நபிகள் நாயகம் எந்த அவ்லியாவிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்? முஹ்யித்தீனா? ஷாகுல் ஹமீது பாதுஷாவா? அல்லது வேறு யாருமா?

முதலில் அஹ்லுத் திக்ர் என்றால் அவ்லியா என்று இவர்களுக்கு யார் சொன்னது? என்ன ஆதாரம்? மனம் போன போக்கில் அர்த்தம் வைத்துப் பழகியதன் விளைவினாலும் திக்ர் மஜ்லிஸ் என்று அவ்லியாக்களின் பெயரால் அதிகம் கூத்தடிப்பதாலும் எங்கே திக்ர் என்று பார்த்தாலும் இவர்களுக்கு அவ்லியாக்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள் போலும்.

அதற்காக குர்ஆனில் திக்ர் என்று வந்தாலும் கூட இறைவனை நினைவு கூராமல் அவ்லியாக்கள் என்று மனிதர்களை நினைவு கூர்வது திக்ர் மஜ்லிஸ் தாக்கம் சற்றே அதிகம் எனத்தோன்றுகிறது.

திக்ர் என்றால் அறிவுரை என்று பொருள்.

குர்ஆனும் திக்ர் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.  (பார்க்க: அல்குர்ஆன் 15:6,9)

அஹ்லுத் திக்ர் என்றால் அறிவுரை வழங்கப்பட்டவர் எனப் பொருளாகும். எந்த அகராதியிலும் அவ்லியா என்று பொருள் கிடையாது.

உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம் எனக் கூறிவிட்டு, வேண்டுமானால் திக்ர் வழங்கப்பட்டவர்கள் அதாவது தவ்ராத், இன்ஜீல் எனும் அறிவுரைகள் வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இது தான் இந்த வசனத்திற்கு விளக்கமாகும்.

மனம் போன போக்கில் இறைவசனத்திற்கு அர்த்தம் வைக்க ஆரம்பித்தால் இப்படித்தான் கண்டதையும் உளறும் படி மறை கழன்று போகும் என்பதை அறிவுறுத்துகிறோம்.

வாதம்: 6

‘அல்லாஹ்வை அதிகமாக நேசித்ததால் அந்த அடியாரின் பார்வையாகவும், செவிப்புலனாகவும் கரமாகவும், காலாகவும் அல்லாஹ் ஆகிவிடுகிறான்’ (ஹதீது குத்ஸி புகாரி)

அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான்.

பதில்: 6

இறைநேசர்கள் என்போர் திக்ர் அதிகமதிகம் செய்து இறைவன் அளவில் சேர்ந்து விட்டார்களாம். அதனால் அவர்கள் இப்போது மனிதர்கள் இல்லையாம் அல்லாஹ் தானாம்.

அல்லாஹ்விடமிருந்து வெளிப்படும் அத்தனையும் அந்த அவ்லியாவிடமிருந்தும் வெளிப்படுமாம். அதனால் அவரிடம் நாம் துஆ செய்யலாமாம்.

இவர்கள் செய்யும் இருட்டு திக்ர், குருட்டு திக்ர், பாட்டு திக்ர், கைகோர்த்து டான்ஸ் ஆடும் திக்ர், சினிமா பாடல் பாடும் திக்ர் என்று அதிகமாக திக்ர் செய்வதால் அல்லாஹ் ஆகிவிடுவார்களாம்.

அல்லாஹ் தான் இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளிப்படும் ஸ்தலமாக மாறிவிடுகிறார்கள் என்றால் ஒருவரையாவது அப்படி காட்ட முடியுமா?

அல்லாஹ்வின் சக்தி எல்லாம் வெளிப்பட வேண்டாம். அற்ப மனிதர்களின் சக்தியாவாது வெளிப்படுமா?

உயிருள்ள மனிதனிடம் பேசினால் பதிலளிக்கிறான்.

திக்ரின் மூலம் அல்லாஹ்வைத் தஞ்ச மடைந்த, இறந்து போன இறைநேசர்களின் ஸ்தலங்களில் அவர்களை அழைத்தால் அவர்கள் பதிலளிப்பார்களா?

மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பின்பு மனித சக்தியே வெளிப்பட வக்கில்லை. இங்கு அல்லாஹ்வின் சக்தி வெளிப்படுமாம்.

என்ன விளக்கம்

யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டாரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவர் கேட்கும் காதாக, அவர் பார்க்கும் கண்ணாக, அவர் பிடிக்கும் கையாக, அவர் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரீ 6502) என்று அல்லாஹ் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்குச் சான்றாகக் காட்டுகிறார்கள்.

“பார்த்தீர்களா? அவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்’’ என்று கூறி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். “இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்” என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். “ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்” என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.

இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?’’ என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் “நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?’’ என்று கேட்பான், அதற்கு இறைவன் “ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்’’ என்று கூறுவான்.

(பார்க்க: முஸ்லிம் 5021)

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?

இந்தச் செய்தியை எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ அப்படியே புகாரீ 6502வது செய்தியையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அல்லாஹ் மட்டுமே பிரார்த்திக்கப்பட தகுதி படைத்தவன்.

அவனை மட்டுமே வணங்குவோம் அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்வோம்

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

(அல்குர்ஆன்:72:18.)

(ஏகஇறைவனை) மறுப்போர் வெறுத்தபோதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!

(அல்குர்ஆன்:40:14.)

அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைத்து பிரார்த்தனை செய்வோருக்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்ற இறைவாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பதை மீண்டும் நினைவு கூர்கிறோம்.

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:23:117.)