Tamil Bayan Points

02) வரலாற்றுச் சுருக்கம்

நூல்கள்: மாமனிதர் நபிகள் நாயகம்

Last Updated on February 24, 2022 by

மாமனிதர் நபிகள் நாயகம்

சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.

இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து ‘த ஹன்ட்ரட்’ (the hundred) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (micheal harte) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது ‘நூறு பேர்’ என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.

மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூல் அவர் குறிப்பிடுகிறார்.

மைக்கேல் ஹார்ட் கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட ‘மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதலிடம் நபிகள் நாயகத்துக்குத் தான்’ என்று குறிப்பிடுகிறார்.

வரலாற்று நாயகர்கள் குறித்து நடுநிலையோடும், காய்தல் உவத்தலின்றியும் யார் ஆய்வு செய்தாலும், எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவரால் நபிகள் நாயகத்துக்குத் தான் முதலிடத்தைத் தர முடியும்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் அன்று கூறிய, நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் மட்டும் தான்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி கொடுக்கல் வாங்கல், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எந்தப் பிரச்சினையானாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டவாறு நடக்கக் கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக உலகில் இருந்து வருகிறது.

‘அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வழிகாட்டி’ என்று உலகில் கால் பகுதிக்கும் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள். இத்தகையோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காட்சியையும் உலகம் காண்கிறது.

உலகில் எந்தத் தலைவருக்கும் இந்தச் சிறப்புத் தகுதி கிடைத்ததில்லை என்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் மற்றும் அனைவரையும் விட, ஏன் தம் உயிரையும் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் இன்றும் வாழ்கிறார்கள்.

உலக மக்களால் காட்டுமிராண்டிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலைவனத்தில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடிந்தது எப்படி?

இக்கேள்விக்கான விடை தான் இந்நூல்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலாக இது இருக்குமோ என்று யாரும் கருதிவிட வேண்டாம்.

இது வரலாற்று நூல் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய ஆன்மீகப் பாதையை விளக்கும் நூலும் அல்ல.

இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகளையோ, அதன் சட்டதிட்டங்களையோ விளக்குவதற்காகவும் இந்நூல் எழுதப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைப் பட்டியட்டு பிரமிப்பை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமன்று.

மாறாக 1400 ஆண்டுகளுக்கு முன் உலகில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏனைய தலைவர்களிடமிருந்து எப்படி தனித்து விளங்கினார்கள்?

‘நபிகள் நாயகம் (ஸல்) போன்ற ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை’ என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்றாசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்?

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அவர்களை இன்றளவும் அப்படியே பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையே இந்நூல்.

முஸ்லிமல்லாத நண்பர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் அவர்களது சிறப்பையும், தகுதிகளையும் நிச்சயம் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.

முஸ்லிம்களுக்குக் கூட நபிகள் நாயகம் (ஸல்) குறித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இதில் உள்ளன.

வரலாற்றுச் சுருக்கம்

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

குலப் பெருமையையும், சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்’ என்னும் குலத்தில் பிறந்தார்கள்.

தாயின் வயிற்றிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறிகொடுத்து அனாதையாக நின்றார்கள்.

பின்னர் பாட்டனார் அப்துல் முத்தபின் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.

சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான காசுக்காக ஆடு மேய்த்தார்கள். ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள். இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எழுதவோ, படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது.

தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள். மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், பண்பாடு, நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார். நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும், விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

இதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்.

தமது நாற்பது வயது வரை அவர்கள் சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். நாற்பது வயது வரை எந்த ஒரு இயக்கத்தையும் அவர்கள் தோற்றுவிக்கவில்லை. எந்த ஒரு கொள்கைப் பிரச்சாரமும் செய்ததில்லை.

நாற்பது வயது வரையிலான நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சுருக்கம் இது தான்.

நாற்பது வயதுக்குப் பின்னுள்ள நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இரு பெரும் அத்தியாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று மக்கா வாழ்க்கை. மற்றொன்று மதீனா வாழ்க்கை. இது குறித்தும் ஓரளவு அறிந்து கொள்வோம். நாற்பது வயது வரை சராசரி மனிதர்களில் ஒருவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.

‘அகில உலகையும் படைத்தவன் ஒரே கடவுள் தான்; அந்த ஒரு கடவுளைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் கடவுளிடமிருந்து தமக்கு வருகின்ற முக்கியமான செய்தி’ என்றார்கள்.

‘கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்’ என்ற செய்தியும் கடவுளிடமிருந்து தமக்கு வருவதாகக் கூறினார்கள்.

கஃபா என்னும் ஆலயத்திலும், அதைச் சுற்றிலும் 360 சிலைகளை நிறுவி தினம் ஒரு சிலைக்கு வழிபாடு நடத்திய சமுதாயத்தில் ‘ஒரே ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும்; மற்றவை கடவுள் அல்ல’ என்று கூறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை வரலாற்றைப் படிக்காதவர்களும் அனுமானிக்க முடியும்.

உண்மையாளர், நம்பிக்கைக்கு உரியவர் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டிய மக்கள் இந்தக் கொள்கை முழக்கத்துக்குப் பின் கடும் பகைவர்களாகி விட்டனர். பைத்தியம் என்று பட்டம் சூட்டினார்கள். அவர்களையும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரையும் சொல்லொனாத துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதலில் எதிர்த்தவர்களும், கடுமையாக எதிர்த்தவர்களும் அவர்களது குடும்பத்தினர் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தமது குலத்தைச் சேர்ந்த ஒருவரே எல்லோரும் சமம்’ என்று பிரச்சாரம் செய்கிறாரே! தாழ்த்தப்பட்டவர்களையும், இழிகுலத்தோரையும், கறுப்பர்களையும், அடிமைகளையும் உயர் குலத்துக்குச் சமம் என்கிறாரே! தம்மோடு சரிக்குச் சரியாக அவர்களையும் மதித்து குலப்பெருமையைக் கெடுக்கிறாரே’ என்ற ஆத்திரத்தில் தம்மை மிகவும் உயர் குலம் என்று நம்பிய நபிகள் நாயகத்தின் குலத்தினர் கடுமையாக நபிகள் நாயகத்தை எதிர்த்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரச்சாரத்தை இரகசியமாக நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட அப்பாவிகளையும், கேட்பதற்கு நாதியற்றவர்களையும் கொன்று குவித்தார்கள். சிறுவர்களை ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கணவாய்க்கு நபிகள் நாயகத்தையும், அவர்களது சகாக்களையும் விரட்டியடித்து சமூகப் புறக்கணிப்பும் செய்தனர். பல நாட்கள் இலைகளையும், காய்ந்த சருகுகளையும் மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

‘நபிகள் நாயகத்துடன் யாரும் பேசக் கூடாது; அவருடன் யாரும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்றெல்லாம் ஊர்க் கட்டுப்பாடு போட்டார்கள்.

நபிகள் நாயகத்தின் சகாக்கள் ஒரு கட்டத்தில் ஊரை விட்டே ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு ஆளானார்கள். நபிகள் நாயகத்தின் அனுமதியோடு சிலர் அபீசீனியாவுக்கும், வேறு சிலர் மதீனா எனும் நகருக்கும் குடி பெயர்ந்தார்கள்.

இத்தனை அடக்குமுறைகளையும் மீறி நபிகள் நாயகத்தின் கொள்கை வளர்ந்து கொண்டு தான் இருந்தது.

முடிவில் ‘இவரை உயிரோடு விட்டு வைத்தால் ஊரையே கெடுத்து விடுவார்; எனவே கொலை செய்து விடுவோம்’ என்று திட்டம் வகுத்தார்கள்.

இச்செய்தியை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொத்து, சுகம், வீடுவாசல் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு எளிதாக எடுத்துச் செல்ல இயன்ற தங்க நாணயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தம் தோழர் அபூபக்ருடன் மதீனா என்னும் நகர் நோக்கி தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

நாற்பதாம் வயதில் ஆரம்பித்த மக்கா வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53 ஆம் வயது வரை நீடித்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது அவர்களது கொள்கைப் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு மதீனாவிலிருந்து சிலர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே சந்தித்திருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கொள்கை விளக்கத்தையும் ஏற்றிருந்தனர்.

‘மக்காவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் நீங்கள் எந்தத் தயக்கமும் இன்றி மதீனா வரலாம்; எங்கள் உயிரைக் கொடுத்தேனும் உங்களைக் காப்போம்’ என்று அவர்கள் உறுதிமொழியும் கொடுத்திருந்தனர். மதீனா சென்று நபிகள் நாயகம் (ஸல்) போதனை செய்த ஒரு கடவுள் கொள்கையைப் பிரச்சாரம் செய்து ஓரளவு மக்களையும் அவர்கள் வென்றெடுத்திருந்தனர்.

இதன் காரணமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குப் புறப்பட்டார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தது போல அவ்வூரில் மகத்தான வரவேற்பு அவர்களுக்குக் காத்திருந்தது. அவ்வூர் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்த கொள்கையையும் ஏற்றார்கள். நபிகள் நாயகத்தைத் தங்களின் தலைவராகவும் ஏற்றுக் கொண்டார்கள்.

மதீனா நகரின் மக்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது 63 ஆம் வயதில் மதீனாவில் மரணிக்கும் போது இன்றைய இந்தியாவை விட அதிக நிலப்பரப்பைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருந்தார்கள்.

இந்தியா போன்ற பெரும் நிலப்பரப்பை ஒரு நாடாக ஆக்குவதற்கு எண்ணூறு ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியும், இருநூறு ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சியும் ஆக ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு அகண்ட ராஜ்ஜியத்தைப் பத்தே ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். அதுவும் அடக்குமுறையினால் இல்லாமல் தமது கொள்கைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை வென்றெடுத்து இந்த ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். இத்தகைய சாம்ராஜ்ஜியம் நபிகள் நாயகத்துக்கு முன்போ, பின்போ உலகில் எங்குமே ஏற்பட்டதில்லை எனலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த கால கட்டத்தில் இத்தாயும், பாரசீகமும் உலகில் மிகவும் வலிமை மிக்க நாடுகளாக இருந்தன. உலகின் மிகப் பெரிய வல்லரசுகளாக இவ்விரு நாடுகளும் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தே ஆண்டுகளில் தமது ராஜ்ஜியத்தை உலகின் ஒரே வல்லரசாக உயர்த்தினார்கள்.

அன்றைக்கு உலகில் மிகவும் வலிமை மிக்க இராணுவ பலம் கொண்டதாகவும், கூக்காக பணி செய்யாத வீரர்களைக் கொண்டதாகவும் நபிகள் நாயகத்தின் இராணுவம் இருந்தது. அது போல் கேள்வி கேட்பாரில்லாத வகையில் அதிக அதிகாரம் பெற்ற தலைவராகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.

ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரண மாகவே மக்கள் கட்டுப்படுவார்கள். முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள். மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள். ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும், நாட்டையே ஆளும் தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.

யாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால், ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.

இதனால், நபிகள் நாயகத்தின் நடை, உடை, பாவணையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

கேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?

தலைமைக்கு ஆசைப்படுபவரும், இது போன்ற பதவிகளையும், அதிகாரத்தையும் அடைந்தவரும் எவ்வாறு நடந்து கொள்வார்களோ, அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடக்கவில்லை. பதவியையும், அதிகாரத்தையும் பெற்றவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவார்களோ அவ்வாறு அவர்கள் பயன்படுத்தவும் இல்லை.

சொத்தும் சேர்க்கவில்லை சொகுசாகவும் வாழவில்லை

இவ்வளவு மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பொருள் திரட்டினார்களா? தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்களா? சொத்துக்களை வாங்கிக் குவித்தார்களா? அறுசுவை உண்டிகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்களா?

இதை முதலில் நாம் ஆராய்வோம்.

ஏனெனில் அரசியலோ, ஆன்மீகத்திலோ தலைமைத்துவத்தைப் பெற்றவர்கள் அந்தத் தலைமையைப் பயன்படுத்தி இப்படித் தான் நடந்து கொள்கின்றனர்.

ஒரு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றவர் சில மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்து விட்டு பதவி இழந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்பதவியைப் பெறுவதற்கு முன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாரோ, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தனவோ அதே அளவு தான் இப்போதும் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவர் பதவி வகித்த சில மாதங்களிலேயே பல மடங்கு சொத்துக்களைக் குவித்திருப்பார்.

இவ்வாறு சொத்துக்கள் குவிப்பதற்கு பிரதமர் பதவி கூடத் தேவையில்லை. பிரதமரை விட அதிகாரம் குறைந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட சொகுசான வாழ்க்கை வாழ்ந்து, தமது பெயரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களைக் குவித்துக் கொள்வதை நாம் காண்கிறோம்.

இதை விடக் குறைந்த அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் கூட அதிகாரத்தைத் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம்.

இவர்கள் இப்பதவிகளைப் பெறுவதற்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ, அதை விடப் பல்லாயிரம் மடங்கு வசதிகள் உடையவர்களாக மாறி விடுகிறார்கள்.

இதை ஒப்புக்கொள்வதற்கு வரலாற்று அறிவோ, ஆதாரமோ தேவையில்லை. நமது கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவரும் இதற்கு நிதர்சனமான உதாரணமாகத் திகழ்கிறார்கள்.

எந்த ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் ‘நான் ஊழல் செய்யவில்லை’ என்று அவர் மறுத்ததில்லை. ‘நீ ஊழல் செய்யவில்லையா?’ என்று குற்றம் சாட்டியவரையே திருப்பிக் கேட்பது தான் அவரது பதிலாகவுள்ளது.

கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளும், தண்டிப்பதற்குச் சட்டமும், நீதிமன்றங்களும், அம்பலப்படுத்திட செய்தி ஊடகங்களும் உள்ள இந்தக் காலத்திலேயே இப்படியென்றால், இத்தகைய இடையூறுகள் இல்லாத காலத்தில் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்?

இதற்கு வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவர்கள் களியாட்டம் போட்ட அரண்மனைகளும், கோட்டை கொத்தளங்களும், அந்தப்புரங்களும், ஆடம்பரப் பொருட்களும் இன்றளவும் இதற்குச் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

அமரும் ஆசனத்தைக் கூட தங்கத்தில் அமைத்துக் கொண்டவர்கள், காதக்காக மக்கள் வரிப் பணத்தில் காதல் மாளிகை எழுப்பியவர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற கேள்வி கேட்பாரற்ற காலத்தில் தான் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்தனர். அவர்களைச் சுற்றிலும் கைசர், கிஸ்ரா, ஹெர்குஸ் போன்ற பெரிய மன்னர்களும், சிற்றரசர்களும் ஆட்சி புரிந்தார்கள். அவர்களைப் போல் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்திருந்தால் யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்!

தலைமைப் பதவியைப் பெற்ற ஒருவர்

வகை வகையாக உண்டு, உடுத்தியிருக்கிறாரா?

பல வகையான பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறாரா?

ஆடம்பரப் பொருட்களைக் குவித்திருக்கிறாரா?

அண்ணாந்து பார்க்கும் மாளிகைகளைக் கட்டினாரா?

ஊரை வளைத்துப் போட்டாரா?

தனது வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்துச் சென்றிருக்கிறாரா?

என்ற கேள்விகளுக்கு இல்லை என்று விடை அளிக்க முடிந்தால் தான் ‘அவர் பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை’ என்று கூற முடியும். மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் நபிகள் நாயகத்தைப் பொருத்தவரை ‘இல்லை’ என்று தான் வரலாறு விடை கூறுகிறது.