Tamil Bayan Points

யுவன் சங்கர் ராஜாவின் பயணம்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on March 11, 2017 by Trichy Farook

தனது இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடியவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் யுவன். அதன் பிறகு ஒரே ஆறுதலாக இருந்த அவரது தாயாரின் மறைவு அவரை இன்னும் சோகத்திலும் தூக்கமின்மையிலும் ஆழ்த்தியது. இவரது சிரமங்களை கேள்வியுற்ற இவரது நெருங்கிய இஸ்லாமிய நண்பர் அவரிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்பை கொடுத்து ‘இதனை ஆழ்ந்து படியுங்கள்! உங்கள் மன உளைச்சல் இதில் மாறலாம்’ என்று சொல்லியுள்ளார். இரவில் குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார் யுவன். படிக்க படிக்க அவரையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனம் இலேசாவதை உணர்ந்தார். நிம்மதியான தூக்கமும் அவரை ஆட்கொண்டது. அன்றிலிருந்து இஸ்லாமியனாக மாறி விடுவது என்று முடிவெடுத்து நண்பர்களின் உதவியால் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தனது பெயரை அப்துல்லாவாக மாற்றியுள்ளதாக கேள்விப்படுகிறோம். ‘யுவன் சங்கர் ராஜா’ என்ற பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் தொடரந்தால், அவர் எந்த சாதி என்று அடுத்த கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் அரபு பெயராக இருந்தால் இந்த கேள்வி எழாது. இதை அனுபவத்தில் பலமுறை நாம் பார்த்திருப்போம். ‘அப்துல்லாஹ்’ என்ற பெயருக்கு ‘இறைவனின் அடிமை’ என்று பொருள் வரும். மிக அழகிய பெயர். இறைவனுக்கு பிடித்த இரண்டு பெயர்கள் அப்துல்லாஹ், அப்துல் ரஹ்மான். அந்த இரண்டு பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்த யுவனை வாழ்த்தி வரவேற்போம்.

தனது டிவிட்டர் தளத்தில் யுவன் கொடுத்துள்ள சில செய்திகள் கீழே!

My family supports my decision and there is no misunderstanding between me and my dad.

I’m not married for the third time. That news is fake and yes I follow Islam and I’m proud about it. Alhamdhulillah!

Without you,I’m nothing. I love you all for supporting me all though my life. Nandri endra oru varthai pathadhu. May god bless you all.

I don’t hate nobody,after all we are humans n we breathe the same air.

I know God is with me.

I don’t believe in awards and rewards.I believe in being righteous and doing my work properly,rest is up to GOD.

எல்லா புகழும் இறைவனுக்கே!

குர்ஆன் ஒரு மனிதனை எந்த அளவு பக்குவப்படுத்தும் என்பதற்கு மேலே உள்ள யுவனின் ட்விட்டர் செய்திகளே சாட்சி!

இசையை பொருத்த வரையில் இஸ்லாத்தில் அதற்கு அறவே அனுமதி இல்லை. புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த யுவன் ”வழமை போலவே, எல்லா மதத்தவரையும், இனத்தவரையும் அதே அன்போடு அணுக வேண்டும். உலக மக்கள் யாவருமே ஆதமுடைய மக்களே! எல்லோரையும் படைத்தது அந்த ஏக இறைவன் ஒருவனே!வெறுப்பை நீக்கி அன்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்“ இந்த செய்தியைத்தான் இஸ்லாமும் உங்களுக்கு சொல்கிறது. 

‘இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!’

-குர்ஆன் 110: 1,2,3

உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு யுவனின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்” என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17


இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல் : அஸ்ஸ‚னனுல் குப்ரா, பாகம் : 3, பக்கம் : 272 புகாரி (5590)

விபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் “இவற்றை ஆகுமாக்குவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாலும் இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1619

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது.

சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2494

ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தன் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள் (என்னிடம் அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதேப் பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)

நூல் : அஹ்மத் (4307)

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடை செய்யப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.