Tamil Bayan Points

மூடநம்பிக்கை ஏற்படுத்திய பாதகம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 4, 2019 by

மூடநம்பிக்கை ஏற்படுத்திய பாதகம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். ஒரு பேக்கரியில் வேலை செய்யும் இவருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் 19 வயது மூத்த மகனுக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக பல தனியார் மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்றும் குணம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாந்த்ரிகம் செய்தால் சரியாகி விடும் என சிலர் சொல்ல, இதை நம்பிய கோவிந்தன் கேரள மாநிலம், நொச்சோடு தரூர் என்ற மாந்த்ரிகரை அணுகி பரிகாரம் செய்யச் சொல்லியுள்ளார். முதலில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு பூஜை செய்வது போல் நடித்த மந்திரவாதி நந்தகுமார் கடந்த மாதம் 15ஆம் தேதி கோவிந்தன் வீட்டுக்கு இரவில் வந்து உனது மனைவிக்கு பூஜை செய்ய வேண்டும்.

அதுவும் யாரும் இல்லாத தனியறையில் வைத்து செய்ய வேண்டும். அப்போதுதான் உனது மகன் குணமாவான் என்று கூறி இருக்கிறார். சரி, எப்படியாவது மகனுக்கு குணம் கிடைத்தால் போதும் என்று நினைத்த கோவிந்தன் ஜோதிடர் இருந்த தனியறைக்கு மனைவியை அனுப்பி விட்டு, வாசலில் காவல் கிடந்துள்ளார். உள்ளே சென்ற மனைவிக்கு பரிகார பூஜை செய்வது போல் நடித்த ஜோதிடர் நந்த குமார் ஒரு கட்டத்தில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டார்.

மயக்கம் தெளிந்த கோவிந்தனின் மனைவி நடந்த சம்பவம் பற்றி வெளியில் இருந்த கணவன் கோவிந்தனிடம் சொல்ல ஆத்திரமடைந்த கோவிந்தன் இரும்புக் கம்பியை எடுத்து ஜோதிடரின் மண்டையில் ஒரே போடு போட்டார். அந்த அடியில் மண்டை பிளந்து, ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் ஜோதிடர்.

பின்னர் பிணத்தை ஏரிக்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீசில் கோவிந்தன் வாக்குமூலம் கொடுக்க, போலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மாந்த்ரிகம் என்ற மூடநம்பிக்கையை நம்பியதால் ஜோதிடர் செத்து விட்டார்.

கோவிந்தன் கம்பி எண்ணுகிறார். அவரது மனைவி கற்பழித்து, கணவன் இல்லாமல் தவிக்கிறார். ஒரு மூடநம்பிக்கை இவ்வளவையும் செய்து முடித்துள்ளது. பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாமை ஏற்று, மாந்த்ரிகம் என்ற மூடநம்பிக்கையில் இருந்து கோவிந்தன் விலகி இருந்தால் இவையெல்லாம் நடந்திருக்குமா? இதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்த்து மூடநம்பிக்கையில் இருந்து விலகி இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

Source: unarvu ( 14/07/17 )