Tamil Bayan Points

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-2

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

பகல் நேர தொழுகை கால்நடைகளா?

நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

ஒற்றைப்படையில் ருகூவு, ஸஜ்தா தஸ்பீஹ்கள்?

கமர்ஷியல் பத்திரிக்கைகளை மக்களிடையே விளம்பரப்படுத்த, பக்கத்திற்குப் பக்கம் பரபரப்பு என்று குறிப்பிடுவார்கள்.

அந்த பாணியில் ஹிதாயா நூலை விளம்பரப்படுத்துவதாக இருந்தால் பக்கத்திற்கு பக்கம் பச்சைப் பொய்கள் என்று கூறலாம். சாதாரணமான பொய்கள் அல்ல, நரகைப் பரிசளிக்கும் நபி மீதான பொய்கள் நிறையவே ஹிதாயாவில் உள்ளன. அதுவும் பக்கத்திற்குப் பக்கம் உள்ளது எனலாம்.

 

الهداية شرح البداية – (1 / 50)

 ويستحب أن يزيد على الثلاث في الركوع والسجود بعد أن يختم بالوتر لأنه عليه الصلاة والسلام كان يختم بالوتر

ருகூவு, ஸஜ்தாவில் (தஸ்பீஹ்களை) மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்துவது விரும்பத்தக்கதாகும். அப்போது அவற்றை ஒற்றைப்படையான இலக்கத்தில் முடிக்க வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் ஒற்றைப்படையான இலக்கத்தில் முடிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 50

ருகூவு, ஸஜ்தாவில் செய்யும் தஸ்பீஹ்களை மூன்று தடவைக்கு மேல் அதிகமாகச் செய்வதாக இருந்தால் ஒற்றைப்படையான இலக்கத்தில் தான் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு நபிகள் நாயகம் செய்துள்ளதாக ஹதீஸ் உள்ளது என்றும் நபி மீது பச்சைப் பொய்யைக் கூறுகிறார்.

எங்கிருந்து இந்தச் செய்தியை எடுத்தார்? இதற்கு ஆதாரமாக அமைந்த ஹதீஸ் நூல் எது? மத்ஹபினரே பதில் சொல்லுங்கள்.

பகல் நேர தொழுகை கால்நடைகளா?

கிராஅத் (ஓதுதல்) சம்பந்தமான பிரிவு என்று தலைப்பிட்டு விட்டு அதில், லுஹர், அஸர் நேர தொழுகைகளில் இமாம் சப்தமின்றி மௌனமாக கிராஅத் – ஓத வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு ஆதாரமாக நபிகள் நாயகம் கூறியதாகப் பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகிறார்.

الهداية شرح البداية – (1 / 53)

لقوله عليه الصلاة والسلام صلاة النهار عجماء

பகல் நேர தொழுகையாகிறது கால்நடைகளாகும். (அதாவது கால்நடை பேசாது  – மௌனம் காப்பதை போன்று கிராஅத் சப்தமாக ஓதப்படாது)

இந்தச் செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

மேலும் இமாம் நவவீ அவர்கள் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு இது அடிப்படை ஆதாரமில்லாத தவறான செய்தி என்று விமர்சித்துள்ளார்.

المجموع شرح المهذب – (3 / 389)

وقوله صلاة النهار عجماء ,,,وهذا الحديث الذى ذكره باطل غريب لا أصل له.

அல்மஜ்மூஉ, பாகம் 3, பக்கம் 389

மேலும் தாரகுத்னீ மற்றும் பிற அறிஞர்கள் இந்தச் செய்தி நபிகளாரின் கூற்றல்ல, மாறாக சில மார்க்க அறிஞர்களின் கூற்றே என்று கூறியுள்ளதாகவும் இமாம் நவவீ கூறுகிறார்.

المجموع شرح المهذب – (3 / 46)

 (صلاة النهار عجماء) قلنا قال الدارقطني وغيره من الحفاظ هذا ليس من كلام النبي صلى الله عليه وسلم يرو عنه وانما هو قول بعض الفقهاء

அல்மஜ்மூஉ, பாகம் 4, பக்கம்  46

மத்ஹபு அறிஞர்களே இது நபி மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்று இனம் காட்டும் அளவுக்கு ஹிதாயாவின் வாய்மையின் இலட்சணம் இதன் மூலம் தெளிவாகிறது.

இந்த லட்சணத்தில் இந்த ஹிதாயா நூலை தான் அரபி மத்ரஸாக்களில் ஆலிம்களுக்கு (?) பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பாட போதனைகளாக படித்தால் நபி மீது பொய்யுரைப்பதில் புடம் போட்ட தங்கங்களாக வருவார்கள் என்பதில் என்ன சந்தேகம்? அது தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்தக் கூடாது?

ஹிதாயாவில் இமாம் அபூஹனிஃபா அவர்களின் பெயரால் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

الهداية شرح البداية – (1 / 67)

قال أبو حنيفة رحمه الله إن صلى ثمان ركعات بتسليمة جاز وتكره الزيادة على ذلك ,,,ودليل الكراهة أنه عليه الصلاة والسلام لم يزد على ذلك

எட்டு ரக்அத்களை ஒரு சலாமில் தொழுதால் அது கூடும். ஆனால் அதை விட அதிகப்படுத்துவது வெறுப்பிற்குரியதாகும் என்று அபூஹனிபா கூறுகிறார். நபிகள் நாயகம் இதை விட அதிகப்படுத்தியதில்லை என்பதுவே அவ்வெறுப்பிற்கான காரணமாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம்  67

அதிகபட்சமாக ஒரு சலாமில் எட்டு ரக்அத்களே தொழ இயலும் என்றும் அதற்கு மேல் அதிகமாக தொழுவது வெறுக்கத்தக்கது என்றும் அபூஹனிபா கூறியதாகக் கூறுகிறார்.

இங்கே நாம் கேள்விக்குள்ளாக்குவது அபூஹனிபா இப்படிச் சொன்னாரா? இல்லையா? அது சரியா? தவறா? என்பதை அல்ல. அபூஹனிபா இவ்வாறு சொன்னதை முட்டுக் கொடுக்க நபி மீது இட்டுக்கட்டிய குட்டு வெளிப்பட்டதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்துவது சரியல்ல என்று அபூஹனிபா சொன்னதை நிறுவ நபிகளாரை ஏன் வம்பிழுக்க வேண்டும்? நபிகள் நாயகம் இவ்வாறு தொழவில்லை என்று நபி மீது ஏன் துணிந்து பொய் சொல்ல வேண்டும்?

இப்படி நாம் விமர்சிக்கக் காரணம் உண்டு.

நபிகளார் ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரப் பூர்வமான நபிமொழிகள் இருக்கின்றன.

நான், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றிக் கூறுங்கள்?’’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்துவைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான். அவர்கள் எழுந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தி(ன் இறுதியி)ல்தான் அவர்கள் அமர்வார்கள்.

பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு சலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள். (ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சலாம் கொடுப்பார்கள். சலாம் கொடுத்த பின் உட்கார்ந்தவாறே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அருமை மகனே! ஆக, இவை பதினோரு ரக்அத்கள் ஆகும்.

அறிவிப்பவர்: சஅத் பின் ஹிஷாம் (ரஹ்)

நூல்: முஸ்லிம்-1357

இந்தச் செய்தி நபிகளார் ஒரு சலாமில் ஒன்பது ரக்அத்கள் தொழுதுள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்க இதை வெறுக்கத்தக்கது என்று குறிப்பிட்டதோடு நபிகள் நாயகம் இவ்வாறு செய்யவில்லை என்று அறிவிப்பது நூலாசிரியரின் அலட்சியத்தை அப்பட்டமாக அறியத்தருகின்றது.

பெண்ணே! செல் பின்னே!

இமாமத் பற்றி அலசும் பாடத்தில் பெண்ணை இமாமாக முன்னிறுத்த கூடாது என்றுரைக்கிறார். அதற்கு அவர் நபியின் பெயரில் குறிப்பிடும் செய்தி அபத்தமானது.

الهداية شرح البداية – (1 / 56)

 أما المرأة فلقوله عليه الصلاة والسلام أخروهن من حيث أخرهن الله فلا يجوز تقديمها

அல்லாஹ் அவர்களை (பெண்களை) அப்புறப்படுத்தியுள்ளவாறு நீங்களும் அப்பெண்களை அப்புறப்படுத்தி விடுங்கள் என்று நபிகளார் கூறியுள்ளதால் பெண்களை (இமாமாக) முன்னிறுத்துவது கூடாது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 56

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யக் கூடாது என்ற கருத்தில் நாம் உடன்படுகிறோம். அதற்கு வேறு சில நபிமொழிகள் ஆதாரங்களாக உள்ளன.

தொழுகை வரிசை முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கும் போது ஆண்கள், சிறுவர்கள், பெண்கள் என்று வரிசைப்படுத்தியுள்ளதால் பெண் இமாமத் செய்வது இதற்கு முரணாகிறது என்பது போன்ற பல ஆதாரங்களால் நாமும் அதைக் கூடாது என்றே கூறுகிறோம்.

ஆனால் ஹிதாயா நூலாசிரியரோ புதிதாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்.

அல்லாஹ் அவர்களை (பெண்களை) அப்புறப்படுத்தியவாறு நீங்களும் அப்பெண்களை அப்புறப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் சொன்னதாகப் பதிவு செய்து தம் கருத்திற்கு வலு சேர்க்கின்றார்.

ஆனால் இதை நபிகள் நாயகம் கூறியதாக எந்த ஹதீசும் இல்லை. இவ்வாறு கூறுவது நபிகளாரின் மேல் கூறும் வடிகட்டிய பொய்யாகும்.

மத்ஹபினர்களுக்குத் துணிவிருந்தால் – தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக கருதுவதில் உண்மையிருந்தால் – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரத்தை மக்களிடம் சமர்ப்பிக்கட்டும்.

ஸஜ்தா திலாவத்

ஸஜ்தா திலாவத் பற்றிய பாடத்தில் குர்ஆனில் மொத்தம் 14 இடங்களில் இறை வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்றும் அவ்விடங்கள் எவையெவை என்பதையும் விளக்குகிறார்.

அதை தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்.

الهداية شرح البداية – (1 / 78)

والسجدة واجبة في هذه المواضع على التالي والسامع سواء قصد سماع القرآن أو لم يقصد لقوله عليه الصلاة والسلام السجدة على من سمعها وعلى من تلاها وهي كلمة إيجاب

இவ்விடங்களில் சஜ்தா திலாவத் செய்வது ஓதுபவர், செவியேற்பவர் இருவர் மீதும் அவசியமானதாகும். அவர் குர்ஆனை செவியேற்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரியே. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியேற்பவர் – ஓதுபவர் இருவர் மீதும் ஸஜ்தா உண்டு என கூறியுள்ளார்கள். இது கட்டாயம் எனும் கருத்தை தரும் வார்த்தையாகும்.

ஸஜ்தா வசனங்கள் மொத்தம் 14 என்பதற்கு ஆதாரமில்லை என்பது தனி விஷயம்.

ஸஜ்தா வசனங்களைக் கேட்பவர், ஓதுபவர் என இருவரும் சஜ்தா செய்வது கட்டாயம்; இவ்வாறு நபிகள் நாயகம் உத்தரவிட்டுள்ளார்கள் என்று புழுகியுள்ளார்.

இல்லாத நபிமொழியை எப்படி குறிப்பிடுகிறார் என்று பாருங்கள்.

இவர் குறிப்பிட்ட வார்த்தையை நபிகள் நாயகம் மொழிந்தார்கள் என்பதற்குரிய ஆதாரத்தை நிலைநாட்டுவார்களா?

நபிகள் நாயகம் கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் பதிவாகாத நபிமொழிகள் (?) இவருக்கு மட்டும் எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ? வாய் திறப்பார்களா வக்காலத்து வாங்குவோர்?

வலதுபுறத்தை அல்லாஹ் விரும்புவதாக ஹதீஸ் உள்ளதா?

உளூவில் விரும்பத்தக்க செயல்கள் என்று சிலவற்றை ஹிதாயா நூலாசிரியர் பட்டியலிடுகிறார்.

அதில் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பது சிறப்பிற்குரியது என்று கூறிவிட்டு எல்லாவற்றிலும் வலப்புறத்திலிருந்து துவக்குவதை அல்லாஹ் விரும்புவதாக நபி சொன்னார்கள் என்று புளுகியுள்ளார். இதோ அதற்கான ஆதாரம்:

الهداية شرح البداية – (1 / 13)

والبداءة بالميامن فضيلة لقوله عليه الصلاة والسلام إن الله تعالى يحب التيامن في كل شيء حتى التنعل والترجل

செருப்பணிதல், தலைவாருதல் என அனைத்திலேயும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை அல்லாஹ் விரும்புவதாக நபிகள் நாயகம் கூறியுள்ளதால் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பது சிறப்பானதாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம்  13

நாம் பார்த்த வரை எந்த ஹதீஸ் நூலிலும் வலதிலிருந்து துவங்குவதை அல்லாஹ் விரும்புகிறான் என்ற ஹதீஸ் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலதை விரும்புவார்கள் என்று தான் ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யும்போதும், தலை வாரும்போதும், செருப்பணியும் போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி: 426

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்புவார்கள் எனும் செய்தியை உல்டா செய்து அல்லாஹ் விரும்புவதாகச் சொல்வதே தவறு. அதிலும் இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியமைக்கு எந்த ஆதாரமும் இல்லாமலிருக்கும் போது அதை நபியின் பெயரில் பதிவு செய்வது மகா தவறல்லவா?

இதை விட சிறியதொரு வார்த்தை மாற்றத்தை பேச்சின் வேகத்தில் நாம் மாற்றிச் சொல்லி விட்டால் போதும்! நபி நேசம் கட்டுப்பாடற்று பொங்கியெழுந்து அதை (வீடியோ) படமாக்கி, கட்டிங் வேலைகள் செய்து, ‘பார்த்தீர்களா!  தில்லுமுல்லை’ என ஊர் ஊராகப் படம் ஓட்டி விடுவார்கள் இந்த மத்ஹப்வாதிகள்.

ஆனால் அவர்கள் மதிக்கும் மத்ஹபு இமாம்கள் அதை விடப் பெரும் பிழையைச் செய்தால், இல்லாத செய்தியை நபியின் மீது இட்டுக்கட்டிக் கூறினால் அப்போது மட்டும் இவர்களது பார்வை செயலிழந்து போகும். நபி நேசம் வற்றிவிடும். ஆஹா என்னே நபி நேசம்? என்னே மத்ஹபு பற்று?

“ஹதஸ்” பற்றி ஹதீஸ் உண்டா?

ஹதஸ் என்பது காற்று பிரிதல், மலம் – ஜலம் கழித்தல் ஆகியவைகளைக் குறிக்கும் சொல்லாகும். காற்று பிரிதல், மலஜலம் கழித்தல் இவைகளைப் பற்றித்தான் நபிகள் நாயகம் கூறிய ஹதீஸ் உள்ளதே? பிறகேன் இப்படியொரு தலைப்பு என புருவத்தை உயர்த்தி விட வேண்டாம். இது தொடர்பாகப் பல ஹதீஸ்கள் இருந்தாலும் நூலாசிரியர் கூறும் ஹதீஸ் (?) இல்லாததால் இந்த சிறு தலைப்பை இட்டுள்ளோம்.

சரி! விஷயத்திற்கு வருவோம்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14ல் உளூவை முறிக்கும் காரியங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் முன்பின் துவாரங்களிலிருந்து வெளியேறுபவை உளூவை முறித்து விடும் என்று துவக்கமாகச் சொல்கிறார். அதற்கு ஆதாரங்களாக திருக்குர்ஆன் 5:6 வசனத்தையும், அதைத் தொடர்ந்து பின்வரும் செய்தியையும் எடுத்தெழுதுகிறார்.

இதில் வசனத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி நாம் விமர்சனம் செய்யவில்லை. செய்யவும் முடியாது.  ஏனெனில் அவர் குறிப்பிட்ட வசனம் இது தான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக் காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்:5:6.)

கழிப்பறையிலிருந்து வந்தால் தண்ணீர் கிடைக்காத போது தயம்மும் செய்ய வேண்டும் என்ற இறைவசனம் நூலாசிரியரின் கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுகிறது.

கழிவறைக்குச் செல்பவர் முன் பின் துவாரங்களிலிருந்து வெளியேறுகிற சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவே செல்வார். அவற்றை வெளியேற்றி விட்டு வரும்போது தொழுகைக்குத் தயாராவதாக இருந்தால் உளூ செய்ய வேண்டும் என்ற கருத்தை மேலுள்ள வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. எனவே தம் கருத்துக்கு நூலாசிரியர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டியது மிகச் சரியானதே! ஆனால் அதையடுத்து அவர் கூறுகிறார்.

الهداية شرح البداية – (1 / 14)

وقيل لرسول الله صلى الله عليه وسلم ما الحدث قال ما يخرج من السبيلين

ஹதஸ் என்றால் என்னவென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முன்பின்) இரு துவாரங்களிலிருந்து வெளியேறுபவையே ஹதஸ் ஆகும் என்றார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14

அவர் சொன்ன இந்த நபிமொழி (?) குறித்து தான் நாம் கேள்வி எழுப்புகிறோம். இப்படியொரு ஹதீஸ் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹதஸ் என்றால் என்னவென்று கேட்கப்பட்டதாகக் கதை கட்டும் இச்சம்பவம் எந்த நூலில் பதிவாகியுள்ளது?

அபூஹுரைராவிடம் இது பற்றி கேட்கப்பட்டதாக புகாரியில் ஹதீஸ் உள்ளது. ஆனால் அதிலும் கூட நூலாசிரியர் நபி சொன்னதாகச் சொன்ன பதிலை அபூஹுரைரா (ரலி) கூறியதாக இல்லை.

ஹம்மாம் பின் முனப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறுதுடக்கு (ஹதஸ்) ஏற்பட்டவர் உளூசெய்யாத வரை அவருடைய தொழுகை ஏற்கப்படாது’’ எனக் கூறியதாக அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் “அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறுதுடக்கு என்பது என்ன?’ என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 135)

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு நடந்த சம்பவத்தை கொஞ்சம் டிங்கரிங் செய்து அப்படியே நபிகள் நாயகத்திற்கு நடந்த ஒன்றைப் போன்று சித்தரித்துக் காட்டுகின்ற நூலாசிரியரின் இச்செயல் மத்ஹபினருக்குக் கோபத்தை வரவழைக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் நூலாசிரியர் தவ்ஹீத் ஜமாஅத் காரர் அல்லவே!

நபிகளார் வாந்தி எடுத்த பின் உளூ செய்யவில்லை என்ற ஹதீஸ்

வாந்தி எடுப்பது உளூவை முறிக்காது என்பதில் இரு கருத்துக் கொள்ள இடமில்லை. எனினும் ஒரு கருத்தை நபியின் பெயரில் சொல்வதாக இருந்தால் தகுந்த ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்.

ஹிதாயாவில் வாந்தி உளூவை முறிக்காது என்பதற்கு ஆதாரம் என்ற பெயரில் ஒரு செய்தியைப் பதிவிடுகிறார்கள்.

الهداية شرح البداية – (1 / 14)

روي أنه عليه الصلاة والسلام قاء فلم يتوضأ

நபி (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள்; ஆனால் உளூச் செய்யவில்லை என்று ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14

ஹதஸ் தொடர்பாக நபியின் வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்வை நடந்தததாக நூலாசிரியர் கட்டிய கதையை மேலே பார்த்தோம் அல்லவா? அந்தக் கதையின் வடு கூட மாறாத நிலையில் அதற்கு அடுத்த வரியில் இப்படிப் பொய்யை அவிழ்த்து விடுகிறார். நபிகளார் வாந்தி எடுத்தார்கள்; பிறகு உளூ செய்தார்கள் என்று பலவீனமான செய்திகள் உள்ளன. ஆனால் ஹிதாயா ஆசிரியர் குறிப்பிடுவதைப் போன்று நபிகள் நாயகம் வாந்தி எடுத்து உளூ செய்யவில்லை என்று எந்தச் செய்தியும் கிடையாது.

அடிப்படை ஆதாரமற்ற ஒரு செய்தியைப் புனைந்து அல்லது யாரோ புனைந்து கூறியதை அப்படியே வாந்தி எடுத்து, நபிகள் வாந்தி எடுத்து உளூ செய்யவில்லை என்று கூறினால் இது நியாயமா? தகுமா? இதற்கு மத்ஹபினர் என்ன பதிலை அளிக்கப் போகின்றார்கள்?

குளிப்பின் பர்ளு?

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது அவசியம் செய்ய வேண்டிய காரியங்களென சிலவற்றை ஹிதாயா நூலாசிரியர் பட்டியலிடுகிறார். அவற்றில் வாய் கொப்பளிப்பது, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்துவது என இவ்விரண்டையும் குளிப்பின் பர்ளு என குறிப்பிடுகிறார். இதற்கு நபிமொழி ஆதாரம் என இவர் முன்வைப்பது ஹதீஸ் நூல்களில் இல்லாததாகும்.

وَالْمُرَادُ بِمَا رُوِيَ حَالَةَ الْحَدَثِ بِدَلِيلِ قَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ       { إنَّهُمَا فَرْضَانِ فِي الْجَنَابَةِ سُنَّتَانِ فِي الْوُضُوءِ } “ .

கடமையான குளிப்பின் போது வாய் கொப்பளிப்பது, மூக்கை சிந்துவது இரண்டும் பர்ளாகும். உளூ செய்யும் போது இவ்விரண்டும் சுன்னத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 16

இப்படி ஒரு நபிமொழி எங்கும் இல்லை.

வாய் கொப்பளிப்பது மூக்கிற்கு தண்ணீர் செலுத்துவது இயற்கை மரபு என்று நபி சொன்ன செய்திகள் உண்டு. (முஸ்லிம் 436)

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது இவ்விரண்டையும் நபிகளார் செய்துள்ளார்கள் என்றும் ஹதீஸ்கள் உள்ளது. (புகாரி 259)

ஆனால் மேலே நாம் கண்டதைப் போன்று வாய் கொப்பளிப்பது, மூக்கைச் சிந்துவது கடமையான குளிப்பின் போது பர்ளு, உளூவின் போது சுன்னத்  என்று எந்த ஹதீஸும் கிடையாது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஹதீஸ் நூல்களில் இல்லாத இந்தச் செய்தியை இரண்டு நபித்தோழர்கள் அறிவித்திருப்பதாக வேறு குறிப்பிடுகிறார்.

ஆம்! இனாயா ஷரஹ் ஹிதாயா, பக்கம் 70ல் இந்தச் செய்தியைப் பற்றிக் குறிப்பிடும் போது ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் இதை அறிவித்திருப்பதாகக் கூறுகிறார். என்னவொரு வினோதமிது? இப்படி ஒரு செய்தியை நபி சொன்னதாக ஆதாரமே இல்லை என்று நாம் கூறுகையில் இதை இரண்டு நபித்தோழர்களின் தலையில் சுமத்தி விடுவது பொய்யின் மேல் பொய்யை வீசும் செயலல்லவா?

இது தான் நபிமொழிகளை அறிவிப்பதில் உள்ள பேணுதலா? இது மத்ஹபினர்களுக்கு நபி மீது பொய்யுரைப்பதாகத் தெரிய வில்லையா? இப்படியெல்லாம் இரண்டு நபித்தோழர்களின் பெயரைப் பயன்படுத்தி நபி சொன்னார்கள் என்று சொல்கிறாரே வேறு எங்கும் இச்செய்தி உள்ளதா என்று முடிந்த மட்டும் தேடிப்பார்த்தாலும் பின்வரும் செய்தி ஒன்றே கிடைக்கின்றது.

கடமையான குளிப்பின் போது வாய் கொப்பளிப்பதையும், மூக்கை சிந்துவதையும் மூன்று முறை அவசியம் செய்ய வேண்டும் என நபி உத்தரவிட்டுள்ளார்கள் என்று அபூஹுரைரா அறிவிப்பதாக ஒரு செய்தி தாரகுத்னீ (ஹதீஸ் எண் 409) உள்ளிட்ட சில நூல்களில் உள்ளது.

இமாம் தாரகுத்னீ அவர்களே இதைப் பதிவு செய்து விட்டு இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று குறிப்பிட்டுள்ளது தனி விஷயம். ஆனால் இந்தச் செய்தி நூலாசிரியர் குறிப்பிட்ட பொய்யான செய்தியை ஒத்ததாக இல்லை. அவர் பதிவிட்ட அடிப்படையே இல்லாத பொய்யான செய்திக்கும் இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கும் அதிக வேறுபாடு உள்ளது தெளிவு.

நபியின் பெயரால் சொல்லப்படும் செய்தியை உறுதிப்படுத்தி விட்டுச் சொல்ல வேண்டும் என்ற நியதிக்கு மாற்றமாக, கேட்டதையெல்லாம் தன் நூலில் கொண்டு வந்துள்ளார் என்றே இதைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது. மேலும் ஆதாரப்பூர்வமான இதர நபிமொழிகள் கடமையான குளிப்பை நிறைவேற்ற வாய் கொப்பளிப்பது, மூக்கைச் சிந்துவது ஆகியவை அவசியம் இல்லை. இவற்றைச் செய்யாமலேயே குளிப்பு நிறைவேறிடும் என்ற கருத்தைத் தருகின்றன.

‘அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம்: 497

கடமையான குளிப்பு நிறைவேற உடலும், தலையின் அடிபாகமும் நனைவதே போதுமானது என்பதை இச்செய்தி தெரிவிக்கின்றது. உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் இவ்விரண்டைத்தான் போதிக்கிறார்கள். மூக்கைச் சிந்துவது வாய் கொப்பளிப்பதை வலியுறுத்தவில்லை என்பதிலிருந்து இதை அறியலாம்.

எனவே நூலாசிரியர் நபியின் பெயரால் அவிழ்த்து விட்ட பொய்ச் செய்தி எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை என்பதோடு, இதர நபிமொழிகளுக்கு மாற்றமாக உள்ளதையும் கவனத்தில் கொள்வது சாலச் சிறந்தது.