Tamil Bayan Points

7) மற்ற அனைத்தும்

நூல்கள்: மனிதனுக்கேற்ற மார்க்கம்

Last Updated on December 12, 2019 by

இஸ்லாம் தான் முதலில் தோன்றிய மார்க்கம்

உலகத்திற்கெல்லாம் கடவுள் ஒருவன்; அவன் ஆதியில் இருந்தே இருந்து கொண்டிருக்கின்றான் என்றால் 14 நூற்றாண்டுகளுக்கு முன் தானே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வந்திருக்கின்றார்கள்?

இப்படி இருக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்றால் இந்த 14 நூற்றாண்டுகளில் வாழும் மக்களுக்குத் தான் வழிகாட்ட வேண்டுமா? இதற்கு முன்னால் எவ்வளவோ மக்கள் வாழ்ந்திருக்கிறார்களே? என்ற சந்தேகம் வரலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் தான் அல்லாஹ்வுடைய தூதர் என்று இஸ்லாம் கூறினால் இந்தக் கேள்விக்கு இடம் உள்ளது. ஆனால் இஸ்லாம் அவ்வாறு கூறவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வுடைய தூதர்களில் ஒருவர் என்று தான் இஸ்லாம் சொல்கின்றது.

முதல் மனிதர் ஆதம் கூட அல்லாஹ்வின் தூதர் தான்; அவரும் இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை – என்ற கொள்கையைத் தான் சொன்னார்; ஆதமுக்குப் பிறகு நூஹ் நபியும், மூஸா நபியும், ஈஸா நபியும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையைத் தான் சொன்னார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஆதமிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வரை இடையிலுள்ள பல்லாயிரக் கணக்கான நபிமார்களும் இந்தக் கொள்கையைத் தான் கூறினார்களே தவிர நபி (ஸல்) அவர்கள் தான் முதன் முதலில் கூறியவர்கள் என்பது அல்ல.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப வேண்டும் என்பதன் கருத்து அவர்கள் இறைவனின் தூதர்களில் கடைசியாக வந்தவர் என்பது தான். அவருக்கு முன்னால் தூதர்கள் எவருமே வரவில்லை என்று நாம் நம்பக் கூடாது. திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் ஏராளமான இறைத் தூதர்கள் ஒரு கடவுளை வணங்குங்கள். மனிதனை வணங்காதீர்கள். கல்லை வணங்காதீர்கள் என்று சொன்னதாகப் பார்க்கிறோம்.

பிற மத நூல்களைப் புரட்டிப் பார்த்தால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டைப் பார்க்கிறோம். அதே போல் சித்தர்கள் பாடலில்,

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து மொனமொனன்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த சித்தர்கள் கூட நட்ட கல்லைத் தெய்வம் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லாக் காலங்களிலும் இந்தக் கொள்கை சொல்லப்பட்டது. அதன் பின் மறைந்து விட்டது. பிறகு வந்தவர்கள் மாற்றி விட்டார்கள்.

ஒரே கடவுளை வணங்குங்கள் என்று கூறியவர்களையே கடவுளாக மாற்றி விட்டார்கள். கடவுளைச் சொல்ல வந்த நன்மக்கள் கடவுளாக மாற்றப் பட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் கடைசித் தூதராக வந்ததனால் இன்று வரை இந்தக் கொள்கையில் மாற்றமில்லாமல் சரியான அரண் போட்டு இஸ்லாம் தந்திருக்கின்றது.

இந்த வகையில் முதல் மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான் என்பது புலனாகிறது. முதல் மனிதனிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஒரு கடவுள் கொள்கை தான் இருந்தது. கடவுளுக்குரிய இலக்கணங்களையும் ஆதியிலே வாழ்ந்த நன்மக்கள் சொல்லிக் கொண்டு தான் வந்தார்கள்.

கடைசியாக வந்த நபி (ஸல்) அவர்கள் இந்தக் கொள்கையில் எந்த மாசும் வந்து நுழைந்து விடாத அளவிற்கு ஏராளமான ஏற்பாடுகளையும், அணைகளையும் போட்டு ஏகத்துவக் கொள்கை இன்று வரை நிலைத்து நிற்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.

முஹம்மது இறைத் தூதரா?

லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை – என்பதையும் முஹம்மது ரசூலுல்லாஹ் – முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் – என்பதையும் நம்ப வேண்டும். நாம் சுட்டிக் காட்டிய அடிப்படையில் நம்ப வேண்டும். இப்படி யார் நம்பினார்களோ அவர்கள் தாம் முஸ்லிம்கள்.

அறிவுப்பூர்வமாகப் பேசும் சிலருக்கு இந்த இடத்தில் சந்தேகம் வரலாம். கடவுள் என்று ஒருவன் இருக்கின்றார் என்று கூறுகிறீர்கள். இதை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே? கடவுளே நேராக வந்து எல்லாவற்றையும் சொல்லி விட்டுச் சென்றால் ஏற்றுக் கொள்ளலாம். இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் தான்; முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடவுளுடைய தூதர் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதே அந்தச் சந்தேகம்.

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் தான் என்பதற்கு திருக்குர்ஆன் இன்று வரை ஒரு மாபெரும் நிரூபணமாக உள்ளது. திருக்குர்ஆனை நாம் புரட்டிப் பார்த்தால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தையும், அந்தக் காலத்தில் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும் பார்க்கும் போது உண்மையிலேயே இது முஹம்மது என்ற மனிதரால் சொல்லியிருக்க முடியாது.

20ம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்குரிய விஷயங்கள் அனைத்தும் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆனில் தெளிவாக, நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உருவாக்கி அதன் வழியாகச் சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய்க் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளான்.

நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இத்தகைய கால கட்டத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் வின் வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கான சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 55:33

விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்; மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்று கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.

விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

திருக்குர்ஆன் 6:125

இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

மேலும் மற்றொரு கோனத்திலும் வின்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!

திருக்குர்ஆன் 51:7

பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதன் தான் வாழ்ந்த பகுதியை விட வேறு ஒரு பகுதி இந்த உலகில் இல்லை என்று தான் விளங்கி வைத்திருந்தான்.

அமெரிக்காவை ஒருவன் கண்டுபிடித்தான் என்று அறிந்து வைத்திருக்கிறோம். இந்தப் பூமியில் இருக்கின்ற அமெரிக்காவையே ஒருவன் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது

இந்த உண்மையைப் பார்க்கும் போது இந்தக் குர்ஆன் 14 நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்த மனிதனின் கற்பனையில் தோன்றியது என்று சொல்ல முடியுமா?

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திர மண்டலத்திற்குப் போக முடியும் என்று கூறி இருக்கிறார் என்றால் இது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகச் சொன்னதில்லை. கடவுளுடைய வார்த்தை தான் என்பதற்கு இதுவே போதுமான சான்றாக இருக்கின்றது.

இது ஒரு சின்ன உதாரணம் தான்.

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 13:2

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன் 36:38

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.

பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான்.

உருண்டையாக இருக்கின்ற பூமி தான், இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.

பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது என்றான்.

இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது என்றும், தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல் இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.

இப்படி ஏராளமான விஞ்ஞான உண்மைகளைக் குர்ஆன் கூறுகிறது. குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளைப் பார்த்தால் இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் தான் என்பது தெரிய வரும்.

முஹம்மது என்ற மனிதரால் இப்படிப்பட்ட உண்மைகளை எப்படிக் கூற முடியும்? அவர்கள் வாழ்ந்த காலம் என்ன? எழுத்தறிவில்லாத ஒரு காலம். முஹம்மது அவர்களுக்கும் எழுத்தறிவு கிடையாது.

எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்க எந்த ஒரு அறிவியலும் ஏன் சாதாரண தொலை நோக்கியைக் கூட கண்டுபிடிக்காத காலத்தில் வாழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்கள் இந்தக் கோள்கள் அனைத்தும் சுழல்கின்றன. அவற்றுக்குரிய பாதையில் சுழல்கின்றன என்று கூறுபவர்களாக இருந்தால் அவர் சாதாரண முஹம்மதாக இருந்து கூற முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் என்ற அடிப்படையில் இருந்தால் மட்டுமே சொல்ல முடியும்

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மட்டுமே இதைச் சொல்ல முடியும். இன்னும் திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் அறிவியல் உலகம் கூறும் எல்லா விதமான உண்மைகளையும் அன்றே சொல்லி விட்டது. வேறு எந்த வேத நூலிலும் நீங்கள் இதைப் பார்க்க முடியாது.

மாறாக அவை விஞ்ஞானத்திற்கு எதிராகவே இருக்கும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னே அருளப்பட்ட திருக்குர்ஆனில் 6666 வசனங்கள் உள்ளன. ஆனால் இன்று ஒரே ஒரு வசனத்தைக் காட்டி இது அறிவியல் உண்மைக்கு மாற்றமாக இருக்கின்றது என்று யாராலும் கூற முடியாது.

14 நூற்றாண்டுகள் ஆன பிறகும், இன்றைய அறிவியல் உலகத்தில் இவ்வளவு கண்டுபிடிப்புகள் வந்தும் கூட பொய்ப்பிக்க முடியாத ஒரு நூலை கடவுள் தந்தார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் என்பதற்கு முஸ்லிம்கள் கையில் இன்றைக்கு இருக்கும் ஒரே ஆதாரம் இந்தத் குர்ஆன் தான். இந்தக் குர்ஆனை வைத்துத் தான் நாம் இஸ்லாம் மார்க்கம் கடவுளின் மார்க்கம் என்று நம்புகிறோம்.

இது முஹம்மது (ஸல்) அவர்கள் எழுதிய புத்தகம் என்று சொல்வார்கள். இது முஹம்மது எழுதிய புத்தகம் என்றால் இவையெல்லாம் அவருக்கு தெரியவே தெரியாது. அவருக்குத் தெரிய வேண்டுமானால் அவர் என்ன 20ம் நூற்றாண்டு மனிதரா? 20ம் நூற்றாண்டு மனிதர்களுக்குச் சொல்ல வேண்டியதை அவர் 14ம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றால் குர்ஆன் அவர் கற்பனையில் உதித்ததல்லை என்பது உறுதி.

(இது பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ள, வருமுன் உரைத்த இஸ்லாம்’ என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இப்படிப்பட்ட ஒரு அருமையான தத்துவம்

மனிதர்கள் சிந்திக்க வேண்டிய தத்துவம்

அறிவுக்குப் பொருத்தமான தத்துவம்

மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தத்துவம்

முரண்பாடே இல்லாத ஒரு தத்துவம் தான் இஸ்லாம்.

இஸ்லாம் என்பது பிறப்பினால் வருவதில்லை. அதனைப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் போது வருகிறது. இதனை யாரும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இது அகில உலகத்திற்கும் பொதுவானது. மனிதர்களே!’ என்று தான் குர்ஆன் அழைப்பு விடுகின்றது.

முஸ்லிமான தாய் தந்தைக்குப் பிறந்தவன் எல்லாம் முஸ்லிம் இல்லை. ஆனால் முஸ்லிம் அல்லாத பெற்றோர்களுக்குப் பிறந்து இதனை ஏற்றுக் கொண்டு விட்டால் அவன் முஸ்லிம். உனது பூர்வீகம் என்ன? என்று கேட்க முடியாது. ஆகவே இஸ்லாம் என்பது நம்பி விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கைத் தத்துவம்.

இடைத் தரகருக்கு இடமில்லை

பொதுவாகவே மதங்கள் என்றால் மனிதனை ஏமாற்றும் ஒரு வழி என்று ஆகி விட்டது.

இதற்கு அடிப்படையாக அமைவது மதங்களில் காணப்படும் இடைத் தரகர் கோட்பாடாகும்.

எந்த மதமாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக நெருங்க முடியாது. அதற்குரிய மத குருமார்களிடம் போய் அவர்களுடைய துணையுடன் தான் கடவுளிடம் நெருங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால் கடவுளை நெருங்குவதற்கு உனக்கும் கடவுளுக்கும் இடையில் எந்த இடைத் தரகரோ, புரோகிதரோ இருக்கக் கூடாது.

மனிதன் கடவுளிடம் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்க வேண்டும். நேரடியாகக் கேட்க வேண்டும். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இன்னொரு மனிதன் புரோக்கராக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது.

பெயர் வைக்க வேண்டுமா?

கல்யாணம் நடத்த வேண்டுமா?

இறந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டுமா?

நீங்களாகச் செய்து கொள்ளலாம். இதற்கு மத குருவின் தயவு தேவை இல்லை என்று சொல்லி புரோகிதர்களை எல்லாத் துறையிலும் ஒழித்த மார்க்கம் இஸ்லாம் தான். எந்தத் துறையிலும் புரோகிதர் கிடையாது. புரோகிதர்களுக்கு வேலையே கிடையாது.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

திருக்குர்ஆன் 2:186

‘என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 40:60

கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் புரோக்கர்கள் நுழைந்து மார்க்கத்தைச் சீரழித்து விடாத அளவுக்கு அணை கட்டிய மார்க்கம் இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ திருமணங்கள் நடந்திருக்கின்றன. அத்திருமணங்களில் மந்திரம் ஓத நபிகள் நாயகம் அவர்களை யாரும் கூப்பிட்டது கிடையாது. இவர்களும் சென்றது கிடையாது.

சம்பந்தப்பட்ட பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்தை நடத்திக் கொள்வார்கள். புரோகிதர் தேவையென்றால் நபி (ஸல்) அவர்கள் சென்றிருக்க வேண்டும்.

ஏனைய மதங்களின் சுரண்டலைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கின்றார்களே அவர்கள் இஸ்லாம் குறித்து பயப்படத் தேவை இல்லை. உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் மதத்தின் பெயரால் ஒருவரை மற்றவர் சுரண்ட முடியாது. ஏமாற்ற முடியாது. அப்படிப்பட்ட ஒரு மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாத்தின் மீது விமர்சனங்கள்

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கம் என்பதை ஏற்றுக் கொள்ளும் எத்தனையோ நடுநிலையாளர்களுக்கு, இஸ்லாத்திலுள்ள சில விஷயங்கள் உறுத்தலாக இருக்கின்றன.

ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதித்துள்ளது அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது.

இதை இஸ்லாம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியாகவே வழங்கியுள்ளது.

விபச்சாரம், வைப்பாட்டி போன்ற தொடர்புகள் மூலம் வழிகெட்டு, எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி விடும் நிலையை விட சட்டப்படி மனைவியாக்கிக் கொள்வது எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல!

ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அவளை அம்போ என விட்டு ஓடுவதை விட அவளை மனைவி என அங்கீகரித்து, அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளை தனது பிள்ளைகள் என்று வெளிப்படையாக அறிவிப்பது எந்த விதத்திலும் தாழ்ந்தது கிடையது.

இவ்வாறு இஸ்லாம் அனுமதி அளித்ததற்குரிய காரணங்களைக் கூறினால் நீண்டு விடும்.

(பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது? என்பது பற்றி விரிவாக அறிய ஆர்வமுள்ளவர்கள், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?’ என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

தலாக் என்ற சொல் மூலம் பெண்களை எளிதாக விவாகரத்துச் செய்யும் சட்டமும் சிலருக்கு உறுத்தலாக அமைந்துள்ளது.

இஸ்லாம் தம்பதிகளைச் சேர்ந்து வாழவே வலியுறுத்துகிறது. அதையும் தாண்டி வாழவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தங்கள் மனைவியரை தீ வைத்துக் கொளுத்தி, ஸ்டவ் வெடித்துச் செத்தாள்’ என்று சொல்லி தப்பித்து விடாமல் இருப்பதற்காகவே தலாக் முறையை வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு மண விலக்குப் பெறும் உரிமை பெண்களுக்கும் எளிதாக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

தலாக் விஷயமாக இஸ்லாம் கூறும் நியாயத்தை அறிந்து கொள்ளும் போது இது போன்ற சட்டம் தங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.

(இதுபற்றி மேலதிகமாக அறிய இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?’ என்ற எமது வெளியீட்டைக் காண்க!)

பெண்களின் ஆடைகள், பெண் கல்வி, ஜீவனாம்சம், சொத்துரிமை உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் இஸ்லாத்தில் ஏற்கத்தக்க விடை உள்ளது.

இது போல் ஜிஹாத் என்ற பெயரில் நடக்கும் பயங்கரவாதம், கடுமையான குற்றவியல் சட்டங்கள் போன்றவையும் பலருக்கு உறுத்தலாக உள்ளது.

பயங்கரவாதச் செயலுக்கும் ஜிஹாதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் இதை ஒரு போதும் அனுமதித்ததில்லை.

கடுமையான குற்றவியல் சட்டங்கள் தான் இன்றைய உலகுக்குத் தேவை என்பதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன.

(இவை குறித்து அறிந்து கொள்ள குற்றச்சாட்டுகளும் பதில்களும்’ என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இது போல் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகள் சிலர் ஓரிறைக் கொள்கைக்கு எதிராக, இறந்தவர்களின் சமாதிகளை வணங்குவதும், நாகூர் ஆண்டவரே! என்று இறந்தவர்களை அழைத்து வேண்டுதல் புரிவதும் பலருக்கு உறுத்தலாக உள்ளது. இஸ்லாத்திலும் பல தெய்வ நம்பிக்கை உள்ளதோ என்ற சந்தேகம் இதனால் அவர்களுக்கு ஏற்படுகின்றது.

ஆனால் இவர்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு எதிரானது. இறந்தவரை வழிபடுவதையும், சமாதிகள் கட்டுவதையும், சமாதிகளை வழிபாட்டுத் தலமாக ஆக்குவதையும், அடக்கத்தலங்களில் திருவிழாக்கள் நடத்துவதையும் நபிகள் நாயகம் அவர்கள் கண்டிப்புடன் தடை செய்து விட்டனர்.

இஸ்லாத்தின் வேத நூலான குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளிலும் இச்செயல்களுக்கு அறவே அங்கீகாரம் கிடையாது. குடிகார முஸ்லிம் பெயர் தாங்கிகள் இருப்பதால் இஸ்லாம் போதைப் பொருளை அனுமதிக்கிறது என்று நாம் யாரும் புரிந்து கொள்ள மாட்டோம்.

அது போல் தான் இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய சமாதி வழிபாட்டைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

(சமாதி வழிபாடு பற்றி விரிவாக அறிய தர்கா வழிபாடு’ என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இஸ்லாம் மார்க்கத்தைத் திருக்குர்ஆனிலிருந்து, நபிகள் நாயகத்தின் போதனைகளிலிருந்து அறிந்து கொள்ளக் கூடிய யாரும் இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்’ என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறி நிறைவு செய்கின்றேன்.