Tamil Bayan Points

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே!

பயான் குறிப்புகள்: பிற கொள்கைகள்

Last Updated on March 16, 2021 by

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே!

வஸீலா என்றால் என்ன?

எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் வஸீலா என்று கூறப்படும். அதாவது தமிழில் “துணைச் சாதனம்” என்று கூறலாம். கடலில் பயணம் செய்வதற்கு கப்பல் வஸீலாவாக அதாவது துணைச் சாதனமாக உள்ளது என்று கூறுவர்.

நல்லமல்களே இறைநெருக்கம் தரும் வஸீலா

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 5:35)

மேற்கண்ட வசனத்தில் தன்னை நோக்கி ஒரு வஸீலாவை தேடிக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை, எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை, எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை, ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும் கடவுளை நெருங்கிடலாம் என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களில் இருக்கிறது.

ஆனால் இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலா என்ற துணைசாதனத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்றுதான் நபி (ஸல்) கற்றுத் தந்துள்ளார்கள். நாம் இறைவனுக்குச் செய்யும் வணக்கங்களும், நற்செயல்களும், நல்ல சொற்களும்தான் வஸீலா என்பதை நபிமொழிகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6502)

நபி (ஸல்) அவர்கள் தனது நேசத்திற்குரிய மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒரு துஆவை கற்றுக் கொடுக்கிறார்கள். அதில்  “அல்லாஹ்வே, நான் உன்னிடத்தில் சொர்க்கத்தையும், அதன் பக்கம் என்னை நெருக்கமாக்கி வைக்கக் கூடிய நல்லறங்களையும், நல்ல வார்த்தைகளையும் கேட்கிறேன்” என கேட்குமாறு சொல்லிக் கொடுக்கிறார்கள். 

நூல்  அஹ்மது (23870)

நாம் செய்யக் கூடிய நல்லறங்களும், நல்ல வார்த்தைகளும் தான் நம்மை சுவர்க்கத்தின் பக்கம், அதாவது இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியவை ஆகும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நேசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவற்றை அல்லாஹ்விடம் கேட்குமாறு கற்றுக் கொடுக்கிறார்கள்.

இறைவனின் பக்கம் நெருங்குவ தற்குத் தன்னை வஸீலாவாக எடுத்துக் கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் கூறவேயில்லை. அப்படியிருக்க வேண்டுமென்றால் தன்னுடைய பாசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கும் கூட சொல்லிக் கொடுக்கவில்லை.

திருமறைக் குர்ஆனில் அல்லாஹ், நல்லறங்களின் மூலமாகத்தான் தன்னிடத்தில் உதவி தேட வேண்டும் என்று கற்றுத் தருகிறான்.

பொறுமை, மற்றும் தொழுகை யின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

(அல்குர்ஆன்:2:45.)

பல்வேறு ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியதாக நல்லறங்களைத்தான் கூறியிருக்கிறாôகள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

  1. குகைக்குள் மூன்று நபர்கள் சிக்கிக் கொண்ட போது அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த நல்லறங்களின் மூலமாகத்தான் இறைவனுடைய உதவியைக் கோருகின்றார்கள்.

(பார்க்க: புகாரி 2272)

  1. ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, முதல் நேரத்தில் வருபவர் ஒட்டகத்தை நெருக்கமாக்கியர் போன்றவராவார். இரண்டாவது நேரத்தில் வருபவர் மாட்டையும் மூன்றாவது நேரத்தில் வருபவர் கொம்புள்ள ஆட்டையும் நான்காவது நேரத்தில் வருபவர் கோழியையும் ஐந்தாவது நேரத்தில் வருபவர் முட்டையையும் நெருக்க மாக்கியவர் போன்றவராவார் என்று கூறியுள்ளார்கள்.

(பார்க்க புகாரி-881)

அதாவது ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை இவற்றைத் தர்மம் செய்து அதன் மூலம் இறை நெருக்கத்தைத் தேடியவர் போன்றவராவார்.

இந்தச் செய்தியிலும் தர்மம் செய்தல், ஜும்ஆவிற்கு வருதல்  போன்ற  நல்லறங்கள் தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய காரியங்களாகக் கூறப்படுகிறது.

  1. இரவு நேரங்களில் நின்று தொழுவது அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாகும். (திர்மிதி 3472)

இந்த ஹதீஸிலும் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை என்ற நல்லறத்தைத் தான் இறைநெருக்கத் திற்குரியதாக கூறுகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் நல்லறங்கள் தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய “வஸீலா” துணைச் சாதனம் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

மகான்களின் பொருட்டால் வஸீலா இணைவைப்பே!

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணை வைத்தல் ஆகும். ஏனெனில் இறைவனை நிர்பந்திப்பவர் யாரும் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாக என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத் துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6339)

நபிமார்களாக இருந்தாலும், மலக்குமார்களாக இருந்தாலும், மகான்களாக இருந்தாலும் இறைவனை யாரும் நிர்பந்திக்க முடியாது.

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் “நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது வலியுறுத்திக் கேளுங்கள். தந்தால் தா, தராவிட்டால் போ” என்ற ரீதியில் பிரார்த்திக்கக் கூடாது என்று வழிகாட்டுகிறார்கள். ஏனெனில் இறைவனை யாருமே நிர்பந்திக்க முடியாது. யாருக்காகவும் செய்ய வேண்டும் என்ற இழிவை விட்டும் இறைவன் பரிசுத்தமானவன்.

மகான்கள் மூலம் வஸீலா தேடினால் இறைவன் தருவான் என்று கூறுவது இறைவனை இழிவுபடுத்தும் குஃப்ரான காரியம் ஆகும். இணை வைத்தல் எனும் பெரும் பாவம் ஆகும். குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் கூறப்படும் இந்தச் சட்டத்தை இமாம் அபூஹனீஃபாவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒருவன் “இன்னாரின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் பொருட்டால்” என்று தன்னுடைய துஆவில் கூறுவது வெறுப்பிற்குரிய தாகும். ஏனென்றால் படைத்தவனிடத்தில் படைக்கப்பட்ட பொருளுக்கு  எந்த அதிகாரமும் இல்லை

ஹனஃபி மத்ஹப் நூல்: ஹிதாயா

பாகம்: 4, பக்கம்: 459

நபி (ஸல்) அவர்களின் பொருட்டாலும், மகான்களின் பொருட்டாலும் இறைவனிடம் வஸீலா தேடலாம் என்று கூறுபவர்கள். அதற்கு ஆதாரமாக “இறைநம்பிக்கை யாளர்களே! அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்-5:35) என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.

இவ்வசனத்தின் துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே! என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். “மகான்களும் வஸீலா தேட வேண்டும்” என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன.

  1. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!
  2. அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்.
  3. அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்.

இறைவனை அஞ்சுவதும் அறப் போர் செய்வதும் எப்படி நபி (ஸல்) அவர்களுக்கும் கடமையோ அதைப் போன்றுதான் அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்வதும் அவர்கள் மீது கடமையாகும். எனவே, நபி(ஸல்) அவர்கள் வஸீலா தேடுவதற்கு எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி உளற மாட்டார்கள்.

மகான்கள் கூட வஸீலா தேடு கிறார்கள் என்று பின்வரும் வசனம் தெளிவாகவே கூறுகிறது.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

(திருக்குர்ஆன்-17:57)

மகான்களே அல்லாஹ்விடம் நெருக்கத்திற்காக வஸீலாவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது, அவர்களை வஸீலாவாகக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனமாகும். தன்னுடைய வயிற்றுக்கே சோறு இல்லாதவனிடம் எனக்கு பிச்சை போடு என்று கேட்பது போன்றதாகும்.

பரேலவிகளின் ஆதாரமும் சரியான விளக்கமும்

இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என்று கூறுபவர்கள் அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன் வைக்கின்றார்கள்.

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் போது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) அவர்கள் மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். “இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய் (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!” என்று உமர் (ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.

நூல்: புகாரி (1010, 3710)

இந்த ஹதீஸில் இறந்து போன நல்லடியார்களையோ, அல்லது மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது அவர்களுக்கு எதிரான சான்றாகும்.

அதாவது, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். எனவேதான், அவர்களுடைய காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது அவர்கள் முன்னின்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் தான் அதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவார்கள்.

அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி (ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்ளவில்லை. இதிலிருந்தே இறந்து விட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களை வஸீலா வாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிருத்தி இறைவனிடம் மழைக்காகப் பிரார்த்திக்கிறார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினராக இருந்ததால் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினருடைய விஷயத்தில் தனக்கு இருந்த மரியாதையின் காரணமாக அவர்களை முன்னிருத்தி இருக்கலாம்.

யார் சிறந்தவர் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் அப்பாஸ் (ரலி) அவர்களை விட உமர் (ரலி) அவர்கள் தான் சிறந்தவர்களாவார். ஆனால், உமர் (ரலி) அவர்கள் முன்னிருத்தப் படவில்லை. இதிலிருந்தே மகான்களை வஸீலாவாகக் கொள்ளலாம் என்ற வாதம் தவிடு பொடியாகிறது.

உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிருத்தியது அவர்களுடைய பணிவைக் காட்டுகிறது. மேலும், இதுபோன்று மக்கள் அனைவரும் ஓரிடத்தில் சேர்ந்து பிரார்த்திக்கும் போது ஒருவரைத் தலைமையாகக் கொள்ள வேண்டும் என்பதால் தான் அங்கே அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிருத்தி இருக்கிறார்கள். உமர் (ரலி) சிறந்தவராக இருந்தும் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிருத்தியதைப் போன்று இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் சாதாரண ஒரு மனிதரை முன்னிருத்துவார்களா?

இதிலிருந்தே இந்தச் செய்திக்கும் இறந்தவர்களையோ மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். எனவே, நல்லறங்களைத்தான் நாம் இறைவனை நெருங்குவதற்குரிய வஸீலாவாகக் கொள்ளவேண்டும். இதுவே தெளிவான நபிவழியாகும்.

ஆதம் நபி மன்னிப்பு கேட்டது எப்படி?

ஆதம் (அலை) அவர்கள் தாம் செய்த பாவத்திற்காக நபியவர்களின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்டுள்ளார்கள். எனவே நாம் மகான்களின் பொருட்டால் பாவமன்னிப்புத் தேடலாம் என வழிகெட்ட பரேலவிகள் கூறுகின்றனர்.

இது குர்ஆனுக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட ஒரு விசயமாகும்.

(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிட மிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்:2:37.)

இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இதில் கூறப்படாவிட்டாலும் கீழ்க்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லை யானால் நட்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன்:7:23.)

ஆதம் நபி பிரார்த்தனை செய்த வார்த்தைகள் இவை தான் என்று மேற்கண்ட வசனம் தெளிவு படுத்துகிறது. இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

தவறு செய்த ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக பரேலவிகள் கூறும் கட்டுக்கதை இதுதான்:

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழை வாயிலில் “லாயிலாஹ இல்லல் லாஹூ” என்பதுடன் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்றும் எழுதப் பட்டிருந்ததாம். “இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?” என்று ஆதம் (அலை) கேட்டார்களாம். அதற்கு இறைவன் “அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர்.

அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்” என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம். “இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப் படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவ மன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் (7:23) தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக் கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.

எனவே இந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்.

பார்வையற்றவர் எதன் பொருட்டால் வஸீலா தேடினார்?

பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் எனக்கு சுகமளிக்கு மாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்தார். “நீ விரும்பினால் (இந்தச் சோதனைக்குரிய கூலியை) உனக்குப் பின்னால் (மறுமையில்) கிடைக்குமாறு நான் விட்டு விடுகிறேன். நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

உளூவை நிறைவாகச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது (பின்வரும்) துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன் வைத்து உன்னிடம் முன்னோக்குகின்றேன். முஹம்மதே! என்னுடைய தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன் வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!

அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி)

நூல்: இப்னுமாஜா 1375,  அஹ்மத் 16604

மேற்கண்ட ஹதீஸை எடுத்துக் காட்டி மகான்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என பரேலவிகள் வாதிக்கின்றனர். ஆனால் மேற்கண்ட நபிமொழியை நன்றாகப் படித்து சிந்தித்துப் பார்த்தால் பரேலவிகளின் வாதத்திற்கு இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

“பார்வையற்ற நபித்தோழர் எனக்கு சுகமளிக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தான் நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்.

நபியவர்கள் வாழும் போது எத்தனையோ நபித்தோழர்கள் தங்களது இன்னல்கள் நீங்குவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நபியவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இன்றைக்கும் நமக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் போது “எனக்காக துஆச் செய்யுங்கள்” என்ற நாம் மற்றவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு தான் அந்த நபித்தோழர் நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்.

நபியவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்து விட்டு. அவருக்காக நபி செய்த துஆவின் காரணத்தினால் தமது நோயை நீக்குமாறு பிரார்த்திக்குமாறு அந்த கண் தெரியாத நபித்தோழருக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். நபியவர்கள் தமக்காகச் செய்த பிரார்த்தனையின் பொருட்டால் தமது இன்னலை நீக்குமாறு தான் அந்த நபித்தோழர் பிரார்த்தித்தாரே தவிர நபியின் பொருட்டால் தமது இன்னலை நீக்குமாறு அவர் பிரார்த்திக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த துஆவில் மிக முக்கியமானது, “வ ஷஃப்பிஃனீ ஃபீஹி’ என்ற வார்த்தையாகும்.

இதன் பொருள்: என் பார்வை திரும்பக் கிடைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை (துஆ) செய்கின்றார்கள். அந்தப் பரிந்துரையை (துஆவை) ஏற்பாயாக, நான் செய்கின்ற பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக.!

இந்தக் கருத்தைக் கொண்ட செய்தி மேற்கண்ட வார்த்தைகளுடன் அஹ்மதில் (17280) இடம்பெறுகின்றது. இதே செய்தி ஹாகிமிலும் பதிவாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தையே, ஒரு ஆள் மூலம் வஸீலா தேடுதல் என்பதற்கு மரண அடி கொடுக்கின்றது.

இதில் வேதனை என்னவென்றால் இந்த ஹதீஸின் பிற்பகுதியை பரேலவிகள் திட்டமிட்டு மறைப்பது தான். ஏனெனில் ஹதீஸின் இந்தப் பகுதிக்கு, அமல்கள் மூலமே வஸீலா தேட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு எந்த அர்த்தமும் கொடுக்க முடியாது என்பதால் தான் இதை அவர்கள் மறைக்கின்றனர்.

மகான்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு அவர்கள் எழுப்பியிருக்கின்ற போலியான வாதங்கள், நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தைகள் மூலம் தகர்ந்து, தரையில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கிப் போய் விடுகின்றது.