Tamil Bayan Points

பொய் பேசுவதன் தீமைகள்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 23, 2023 by Trichy Farook

முன்னுரை

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.

பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடு அல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. பன்றி எப்படி ஹராமோ, அது போல பொய் பேசுவதும் ஹராமானதாகும்!

அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்

  اِنَّمَا يَفْتَرِى الْـكَذِبَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ‌ۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ‏

அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்”

(அல்குர்ஆன்: 16:105)

பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்:  

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று பேசினால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசம் செய்வான்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-33 , முஸ்லிம்

பொய்யின் வகைகள்

அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது

இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சில மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட்டார்கள்.

قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ لَا يُفْلِحُوْنَؕ‏

அல்லாஹ் கூறுகிறான்:
”அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும்”

(அல்குர்ஆன்: 10:69)

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :
لاَ تَكْذِبُوا عَلَيَّ ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّار.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
“என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய் கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்”

அறி : அலி (ரலி),
நூல் : புகாரி-106 

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَال

مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

“என்மீது யாராவது பொய் கூறினால், அவர் நரகத்தை தனது இருப்பிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபுஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-108 , முஸ்லிம்

வியாபாரத்தில் பொய் கூறுவது: 

عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» قَالَ: فَقَرَأَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا، قَالَ أَبُو ذَرٍّ: خَابُوا وَخَسِرُوا، مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ

“மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கணுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம்-171 

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ، أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا.

“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அறிவித்தார்.

நூல் : புகாரி-2079 

கனவுகளில் பொய் கூறுவது: 

தாம் காணாத கனவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

 عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
مَنْ تَحَلَّمَ بِحُلُمٍ لَمْ يَرَهُ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَلَنْ يَفْعَلَ وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ ، أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ صَوَّرَ صُورَةً عُذِّبِ وَكُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا وَلَيْسَ بِنَافِخٍ …

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.)

‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’ என்று வந்துள்ளது. அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்பவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.

நூல்: புகாரி-7042 

கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது: 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ»

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
“கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் முன்னுரை ஹதீஸ்-6

இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவலைப் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறுகிறார்கள்.

நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உள்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு, நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: 

யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் இது தவறாகும். சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُدَاعِبُنَا، قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»

நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்). அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதீ-1990 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ : حَدَّثَنَا أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ ، فَنَامَ رَجُلٌ مِنْهُمْ  فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى نَبْلٍ مَعَهُ فَأَخَذَهَا ، فَلَمَّا اسْتَيْقَظَ الرَّجُلُ فَزِعَ ، فَضَحِكَ الْقَوْمُ ، فَقَالَ : مَا يُضْحِكُكُمْ ؟ فَقَالُوا : لاَ ، إِلاَّ أَنَّا أَخَذْنَا نَبْلَ هَذَا فَفَزِعَ ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا.

அப்துல் ரஹ்மான் இப்னு அபி லைலா அறிவிக்கிறார்கள்:
‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) அலறினார். அதைக் கண்ட மக்கள் சிரித்தனர்.

அப்போது நபி (ஸல் )அவர்கள் நீங்கள் எதை கண்டு சிரிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை. நாங்கள் அம்புகளை எடுத்தோம். அதனால் அவர் அலறுகிறார் என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை திடுக்கிறச் செய்வது (அச்சுறுத்துவது) தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

நூல்: அபூதாவூத்-5004 , அஹ்மத்

لَا يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ أَخِيهِ لَاعِبًا، وَلَا جَادًّا – وَمَنْ أَخَذَ عَصَا أَخِيهِ فَلْيَرُدَّهَا

அப்துல்லாஹ் பின் ஸாயிப் பின் யஸீத், தன் தந்தையிடமிருந்து பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:-
“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது. யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவூத்-5003 , திர்மிதி

குழந்தைகளிடம் பொய் சொல்வது:

இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம்முடைய நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، أَنَّهُ قَالَ:
دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا، فَقَالَتْ: هَا تَعَالَ أُعْطِيكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ؟» قَالَتْ: أُعْطِيهِ تَمْرًا، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா’ நான் உனக்கு ஒன்று தருகிறேன் என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன் என்று கூறினார்கள். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள் என்று கூறினார்கள்.

நூல்: அபூதாவூத்-4991

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத்-9836 , ஸஹீஹ் அல் ஜாமிவு

மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது:

وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ

“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறி : முஆவியா இப்னு ஹைதா (ரலி),
நூல் : திர்மிதீ-2315 , அபூதாவூத்

பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்:

உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசக்கூடியவர்களுக்கு கிடைக்கும் தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.

அ) பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: –

فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.

(அல்குர்ஆன்: 9:77)

قَالَ عَبْدُ اللَّهِ:
اعْتَبِرُوا الْمُنَافِقَ بِثَلَاثٍ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ “: قَالَ: وَتَلَا هَذِهِ الْآيَةَ: {وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ} [التوبة: 75] إِلَى قَوْلِهِ: {نِفَاقًا فِي قُلُوبِهِمْ} [التوبة: 77] إِلَى قَوْلِهِ: {بِمَا كَانُوا يَكْذِبُونَ} [التوبة: 77]

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான். அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான். அவனை நம்பினால் மோசம் செய்வான்.

மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள் என்று கூறினார்கள்.

وَمِنْهُمْ مَّنْ عَاهَدَ اللّٰهَ لَٮِٕنْ اٰتٰٮنَا مِنْ فَضْلِهٖ لَـنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ‏

அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.

(அல்குர்ஆன்: 9:75)

فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.

(அல்குர்ஆன்: 9:77)

நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா-25611 

பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்:

 عَنْ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :

إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!

மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்!

நூல் : புகாரி-6094 , முஸ்லிம்

பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: 

وَيَوْمَ الْقِيٰمَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ؕ اَلَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ‏

அல்லாஹ் கூறுகிறான்:
அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தோர்களின் முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?

(அல்குர்ஆன்: 39:60)

பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்:

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு (நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான், அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். அல்லது பிளந்தார்.

பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.

நான் அவ்விருவரிடமும், “நேற்றிரவு முதல் நான், பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், (நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறி : சமுரா இப்னு ஜுன்தப் (ரலி),
நூல் : புகாரி-1386 (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

அனுமதிக்கப்பட்ட பொய்கள்:

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ, அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்

1. போரின் போது

2. சண்டையிட்டுக் கொள்ளும் இரு தரப்பினரை சமாதானப்படுத்த

3. ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.

 عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَا يَحِلُّ الكَذِبُ إِلَّا فِي ثَلَاثٍ: يُحَدِّثُ الرَّجُلُ امْرَأَتَهُ لِيُرْضِيَهَا، وَالكَذِبُ فِي الحَرْبِ، وَالكَذِبُ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்:
மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)

ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது; யுத்தத்தின் போது; மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக!

நூல்: திர்மிதீ-1939 , ஸஹீஹ் அல் ஜாமிவு

மேற்கூறிய இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின் படி, உண்மை பேசி, அல்லாஹ் நம்மை மறுமையில் உண்மையாளர்களுடன் எழுப்பும் வகையில் நடந்து, மரணிப்போம். மறுமையில் வெற்றியடைவோம்!