Tamil Bayan Points

பெருகிவரும் தீமைகளும், காத்துக்கொள்ளும் முறைகளும்…

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 28, 2023 by Trichy Farook

பெருகிவரும் தீமைகளும் காத்துக்கொள்ளும் முறைகளும்…

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! 

நாம் வாழும் இன்றைய உலகம் விஞ்ஞானத்தில் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தற்போது எல்லா வேலைகளையும் மனிதன் சுலபமாக குறுகிய நேரத்தில் முடித்துவிடுகிறான். முந்தைய காலங்களில் மனிதன் மட்டுமே செய்து வந்த வேலைகள் அனைத்தையும் தற்போது இயந்திரங்கள் வியக்கும் விதத்தில் நிறைவேற்றி வருகின்றன.

தொழில் நுட்ப வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் மக்களின் வாழ்கைத் தரம் உயர்ந்தாலும் ஒழுக்கம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை கவனிக்கும் போது பழங்கால மக்களை விட இக்கால மக்கள் அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறார்கள். இவர்களின் தரங்கட்ட வாழ்க்கைக்கு தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நவீனக் கருவிகள் தான் முதல் காரணமாக இருக்கிறது.

இவற்றை நன்மைக்கு மட்டும் பயன்படுத்தி பலனடையும் மக்கள் குறைவாக இருக்கிறார்கள். தீய விஷயங்களுக்கு பயன்படுத்தி நாசத்தில் விழுபவர்கள் தான் அதிகம். எவ்வாறெல்லாம் தீமை பெருகுகிறது. அதை விட்டு எவ்வாறெல்லாம் காத்துக் கொள்ளலாம்  என்பதை பற்றி இந்த உரையில் காண்போம்..

தீமைகள் நிறைந்த நவீனகாலம்

உதாரணமாக புகைப்படக் கருவிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் ஆபாசக் காட்சிகளை காண்பதற்கு எந்த சூழ்நிலையும் இல்லாமல் இருந்தது. ஆனால் புகைப்படக் கருவி பரவத்தொடங்கிய உடன் ஆபாச படங்களும் காட்சிகளும் மலிவாக பரவத்தொடங்கி விட்டன. விளைவு நாட்டில் விபச்சாரமும் கற்பழிப்பும் தலைவிரித்தாடுகிறது.

ஆபாசங்கள் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. உடலை விற்றுப் பிழைக்கும் நடிகர், நடிகைகளின் நடனத்தை பார்க்காத நபர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஆடல், பாடல் வீணான களியாட்டங்கள் ஆகியவையெல்லாம் நாம் பயணம் செய்கின்ற பேருந்திலும் இரயில் வண்டிகளிலும் ஒவ்வொருவரும் கைவசம் வைத்திருக்கும் கைபேசியிலும் விரும்பியோ விரும்பாமலோ வந்து விழுகிறது.

உனக்கு இந்த பாடல் வேண்டுமென்றால் இந்த எண்னை டயல் செய் என்று வழிகேட்டிற்கு அற்புதமாக வழிகாட்டப்படுகிறது. இணைவைப்பு மூடநம்பிக்கை திருட்டு மோசடி கணவனுக்கு அடங்காமை மற்றும் இன்னும் ஏராளமான தீமைகள் தொலைக்காட்சி வடிவில் நம் இல்லங்களுக்குள் சுலபமாக புகுந்துள்ளது. நவீனக்கருவிகள் எப்படியெல்லாம் தீமைக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை விவரித்துக்கொண்டே போகலாம். இவ்வளவு அனாச்சாரங்களும் நாகரீகம் என்ற பெயரில் பெருமிதத்துடன் அரங்கேற்றப்படுவது தான் மிகவும் கேவலம். இப்படிப்பட்ட மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நபியவர்களின் முன்னறிவிப்பு

மொத்தத்தில் மார்க்க அடிப்படையில் இக்காலத்தில் வாழ்வது மிகவும் சிரமம் என்று நினைக்கும் அளவிற்கு அனாச்சாரங்கள் நம்மை சூழ்ந்துள்ளது. வருடங்கள் கழிய கழிய இப்படிப்பட்ட மோசமான காலகட்டத்தை நாம் அடைவோம் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ، فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنَ الحَجَّاجِ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ» سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஸுபைர் பின் அதீ அவர்கள் கூறியதாவது :
நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், “நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின் வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்” என்று கூறிவிட்டு, “இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி-7068 

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் சிறந்த காலமாகும். அதற்கடுத்த வரக்கூடிய நூற்றாண்டுகள் முன்பு இருந்ததை விட தரத்தில் குறைந்துகொண்டே இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ مِنْ بَعْدِهِمْ قَوْمٌ تَسْبِقُ شَهَادَتُهُمْ أَيْمَانَهُمْ، وَأَيْمَانُهُمْ شَهَادَتَهُمْ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தார் வருவர். அவர்களுடைய சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும், அவர்களுடைய சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி-6429 

தீமைகள் பெருகிய இக்காலத்தில் உள்ளத்தை தடுமாற விடாமல் சத்தியத்தில் நிலைத்திருக்கச் செய்து நமது ஈமானை காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்க இருக்கிறோம்.

பலவீனமான உள்ளம்

மனிதனுடைய உள்ளம் விரைவாக தடம் புரளக்கூடியதாகவும் அடிக்கடி மாறக்கூடியதாகவும் உள்ளது. உள்ளம் குரங்கு மாதிரியானது என்று சொல்லப்படுவதுண்டு. குரங்கு ஓரிடத்தில் தங்காது. மரம் விட்டு மரம் பாய்ந்துகொண்டே இருக்கும். இது போன்று நிலையற்ற தன்மை கொண்டதாக உள்ளம் இருப்பதால் உள்ளம் குரங்கைப் போன்றது என்று சொல்கிறார்கள். உள்ளம் எவ்வளவு பலவீனமானது என்பதை நபி (ஸல்) அவர்களும் பலவாறு விளக்கியுள்ளார்கள்.

إِنَّ هَذَا الْقَلْبَ كَرِيشَةٍ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ يُقِيمُهَا الرِّيحُ ظَهْرًا لِبَطْنٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உள்ளம் வெட்டவெளியில் கிடக்கும் (பறவையின்) இறகைப் போன்றதாகும். காற்று அதை தலைகீழாக புரட்டிப்போடுகிறது.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),
நூல் : அஹ்மத்-19757 (18922)

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، آمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهِ فَهَلْ تَخَافُ عَلَيْنَا؟ قَالَ: «نَعَمْ، إِنَّ القُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ

உள்ளங்களை புரட்டக்கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வேண்டுபவராக இருந்தார்கள். நான் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே! உங்களையும் நீங்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் நாங்கள் நம்பியுள்ளோம். எங்கள் விஷயத்தில் (நாங்கள் வழிதவறிவிடுவோம்) என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் ஆம். உள்ளங்கள் அல்லாஹ்வின் இரு விரல்களுக்கு இடையில் இருக்கிறது. அல்லாஹ் தான் நாடுகின்ற விதத்தில் அதை திருப்பிவிடுகிறான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : திர்மிதீ-2140 (2066)

நமது உள்ளம் நிலையற்ற தன்மைகொண்டதாக இருப்பதுடன் அதிகமாக தீமைகளை ஏவக்கூடியதாகவும் உள்ளது. இவ்வாறு யூசுஃப் (அலை) அவர்கள் கூறியதை அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்கிறான்.

وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌۢ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ ؕاِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ

“எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” (என்றும் கூறினார்).

(அல்குர்ஆன்: 12:53)

 أَنَّ صَفِيَّةَ – زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي المَسْجِدِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً، ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا يَقْلِبُهَا، حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ المَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ، مَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكُمَا، إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ»، فَقَالاَ: سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ، وَكَبُرَ عَلَيْهِمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا»

ஷைத்தான் ஏற்படுத்தும் தவறான எண்ணங்களுக்கு உள்ளம் பாத்திரமாக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்பத்தில் கூறியுள்ளார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர்.

அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் “ஹுயை ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) “சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி-2035 

நல்ல உள்ளம் தடம்புரளாது

மேற்கண்ட செய்திகள் மனித உள்ளம் எவ்வளவு பலவீனமானது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த பலவீனத்தை சரிசெய்யாமல் விட்டுவிட்டால் நோய் அதிகரித்து நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வை சீரழித்துவிடும். அதே நேரத்தில் உள்ளத்திற்கு கொடுக்க வேண்டிய ஊட்டங்களை கொடுத்து அதை வலுப்படுத்தினால் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அந்த உள்ளம் தடம்புரளாது. ஈமானிய ஒளி பாய்ச்சப்பட்ட உள்ளம் இஸ்லாத்தை ஒருபோதும் புறக்கணிக்காது என்பதை பின்வரும் சம்பவத்திலிருந்து அறியலாம்.

أَنَّ هِرَقْلَ، قَالَ لَهُ: سَأَلْتُكَ هَلْ يَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ؟ فَزَعَمْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ الإِيمَانُ حَتَّى يَتِمَّ، وَسَأَلْتُكَ هَلْ يَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ؟ فَزَعَمْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الإِيمَانُ، حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ القُلُوبَ لاَ يَسْخَطُهُ أَحَدٌ

(ரோமப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தம்மிடம் கேட்டதாக அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உம்மிடம் “அவரது மார்க்கத்தில் இணைந்தோரில் எவரேனும் தமது புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர், “இல்லை”என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே. அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும்போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்.

நூல் : புகாரி-51 

சந்தேகம் ஏற்படும் போது நம்முடைய மனசாட்சி கூறுகின்ற அறிவுரைப்படி நடந்துகொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இந்நேரத்தில் உள்ளம் நமக்கு நேரான வழியை காட்டுகிறது. உள்ளம் பக்குவப்பட்டுவிட்டால் சரியான வழியை காட்டுகின்ற அளவிற்கு அது உன்னத நிலையை அடைகிறது. நல்லவர்களின் உள்ளம் சத்தியக்கருத்து பிறக்கும் இடமாக இருக்கிறது. இதை பின்வரும் செய்தியிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

الْبِرُّ مَا سَكَنَتْ إِلَيْهِ النَّفْسُ، وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقَلْبُ، وَالْإِثْمُ مَا لَمْ تَسْكُنْ إِلَيْهِ النَّفْسُ، وَلَمْ يَطْمَئِنَّ إِلَيْهِ الْقَلْبُ…

உள்ளம் எதனை ஏற்று மனம் நிம்மதியடைகிறதோ அதுவே நன்மையாகும். மனம் எதை புறக்கணித்து நிம்மதியடையவில்லையோ அதுவே பாவமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜர்ஸூம் (அபூஸஃலபா-ரலி),
நூல் : அஹ்மத்-17742 (17076)

سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْبِرِّ وَالْإِثْمِ فَقَالَ: «الْبِرُّ حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை (“அல்பிர்ரு’) மற்றும் தீமை (“அல்இஸ்மு’) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்அன்ஸாரீ (ரலி),
நூல் : முஸ்லிம்-4992 

إِنَّ اللَّهَ تَعَالَى جَعَلَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உமருடைய நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை ஏற்படுத்தியுள்ளான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : அஹ்மத்-5145 (4898)

சிகிச்சையளித்து வெற்றிபெறலாம்

அனைவரின் மறுமை வாழ்வும் அவரவர்களின் உள்ளத்தைப் பொறுத்தே அமைகிறது. நல்ல எண்ணங்களால் உள்ளத்தை நிரப்பி தூய்மைப்படுத்தியவர் வெற்றிபெறுவார். தீய எண்ணங்களால் அதை கலங்கப்படுத்தியவர் மறுமையில் தோல்வியுறுவார். எனவே நமது உள்ளத்தை நன்மைகளின் பிறப்பிடமாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

 قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ؕ‏

அதைத் (உள்ளத்தை) தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நஷ்டப்பட்டார்.

(அல்குர்ஆன்: 91:9)

நமது உள்ளத்தை தூய்மையாக்கிக்கொண்டால் எந்தப் பொருளும் பலன் தராத நாளில் உள்ளம் நமக்கு பலனளிக்கும். 

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ‏ اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ‏

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ மக்களோ அந்நாளில் பயன் தராது.

(அல்குர்ஆன்: 26:88,89)

ஒரு மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் திகழ்வதற்கு உள்ளம் தான் ஆணிவேராக உள்ளது. உள்ளம் சரியாகிவிட்டால் அதன் பிரதிபலிப்பை உறுப்புக்களில் காணமுடியும். அதுபோன்றே உள்ளம் கெட்டுவிட்டால் அதன் அடையாளத்தை உறுப்புக்களில் காணலாம். உடலின் ஒட்டுமொத்த பாகங்களையும் செயல்படுத்தும் சக்தி உள்ளத்திற்கு உள்ளது.

أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி),
நூல்: புகாரி-52 

முக்கியமானத் தலைவர்கள் ஆட்சியாளர்கள் வருகை தந்தால் அவர்கள் வருகின்ற வழிகளை தூய்மை செய்து அலங்கரிப்பதை காண்கிறோம். அதிகாரிகளையோ அந்தஸ்துள்ளவர்களையோ நாம் சந்திக்கச் சென்றால் நல்ல ஆடையில் அழகிய தோற்றத்தில் காட்சி தருகிறோம். முக்கியஸ்தரின் பார்வை நம் மீது படுகிறது என்ற காரணத்திற்காகத் தான் இவ்வாறு நடந்துகொள்கிறோம்.

அனைவரையும் விட உயர்ந்தோனும் அந்தஸ்துமிக்கோனுமான அகிலத்தின் அதிபதி அல்லாஹ் நமது உள்ளங்களை பார்த்துக்கொண்டிருக்கிறான். எனவே நமது உள்ளங்களை தூய்மையாகவும் நல்லெண்ணங்கள் நிறைந்ததாகவும் வைத்துக்கொள்வதில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும்.

إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்-5012 

நல்ல உள்ளத்தைப் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உள்ளத்தை தூய்மைபடுத்துவதன் மூலம் வெற்றி உண்டு என்று மேற்கண்ட ஆதாரங்கள் தெரிவிக்கிறது. எனவே வெற்றிக்கு காரணமாக விளங்கும் நல்ல உள்ளத்தை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். தோல்வியை பெற்றுத்தரும் தீய உள்ளத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

لَا أُعَلِّمُكُمْ إِلَّا مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَعِلْمٍ لَا يَنْفَعُ، وَدَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا

சைத் பின் அர்கம் (ரலி) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்ததைத் தவிர வேறெதையும் நான் உங்களுக்கு கற்றுத்தரமாட்டேன். இறைவா! இயலாமை சோம்பல் கஞ்சத்தனம் கோழைத்தனம் வயோதிகம் மண்ணறை வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இறைவா! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்து. மேலும் அதை நீ தூய்மைப்படுத்து. சிறந்த முறையில் அதை தூய்மையாக்குபவன் நீ தான். அதற்குப் பொறுப்பாளனும் நீ தான். இறைவா! (இறை)அச்சமில்லாத உள்ளம், திருப்திகொள்ளாத மனம், பலனில்லாத கல்வி, பதிலளிக்கப்படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

நூல்: நஸாயீ-5458 (5363)

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي صَلَاتِهِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا، وَلِسَانًا صَادِقًا، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ

இறைவா! நேர்வழியில் உறுதியையும், திடமான நிலைபாட்டையும் உன்னிடம் வேண்டுகிறேன். உனது அருட்கொடைக்கு நன்றிசெலுத்துவதையும், அழகான முறையில் உன்னை வணங்குவதையும் வேண்டுகிறேன். நல்ல உள்ளத்தையும் உண்மை பேசும் நாவையும் வேண்டுகிறேன்.

நீ அறிந்துவைத்துள்ள நன்மையை வேண்டுகிறேன். நீ அறிந்து வைத்துள்ள தீமையை விட்டுப் பாதுகாவல் தேடுகிறேன். நீ அறிந்து வைத்துள்ள (என்) பாவங்களை மன்னிக்க வேண்டுகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),
நூல் : நஸாயீ-1304 (1287)

சுவைக்கும் தன்மையை பெற்ற உள்ளம்

நாவிற்கு சுவைக்கும் தன்மையை அல்லாஹ் வழங்கியிருப்பதால் நல்ல உணவுகளை உள்ளே செல்ல அனுமதிக்கிறது. கெட்ட சுவையுள்ள உணவு வாய்க்கருகில் கொண்டு செல்லப்பட்டால் அதை சுவைத்தறிந்து வெளியில் தள்ளிவிடுகிறது.
சுவையை அறியும் பண்பால் தான் தேவையான பொருளை உள்ளேயும் கெடுதல் தரக்கூடிய பொருளை வெளியேயும் நாவு தள்ளுகிறது. நாவு சுவையை அறிவது போல் உள்ளத்திற்கும் சுவையை அறியும் பண்பு உள்ளது. நல்லக்கருத்துக்களையும் தீயக்கருத்துக்களையும் பிரித்தறியும் ஆற்றல் உள்ளத்திற்கு உண்டு. இதன் மூலம் நல்லக்கருத்துக்களை மட்டும் ஏற்றுக்கொண்டு தீயக்கருத்துக்களுக்கு உள்ளம் இடமளிக்காது.

இதனால் நன்மைகள் நிறைந்த அற்புத மாளிகையாக உள்ளம் மாறுகிறது. இந்த ஆற்றல் உள்ளத்திற்கு வரவேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்ற மூன்று பண்புகள் நம்மிடத்தில் வர வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் ஏகத்துவக்கொள்கையை வலியுறித்திக் கூறுகிறது.

ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி-16 

எனவே நம்முடைய உள்ளத்தை சீராக அமைப்போம். மார்க்கப்பற்றோடு வாழ்வோம். தீமைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம். மறுமையில் சொர்கத்தை அடையும் பாக்கியம் நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்க வேண்டும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிய வேண்டும்.