Tamil Bayan Points

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on June 16, 2021 by

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு சுமைகளைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

வேலைக்குச் செல்வதால் வீட்டில் சோறு, குழம்பு காய்ச்சுவது இல்லாமல் ஆகிவிடுமா? வீட்டைக் கவனிக்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வேலை இல்லாமல் ஆகிவிடுமா? குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பால் கொடுக்கும் வேலை இல்லாமல் போய்விடுமா? அந்தக் குழந்தையைச் சீராட்டி தாலாட்டி வளர்க்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா?

நாங்கள் வேலைக்குப் போவதால் நீங்கள் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவரிடம் பெண்களால் சொல்ல முடியுமா? அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் பால் கொடுப்பவர்களாகவும், பிள்ளையை வயிற்றில் சுமப்பவர்களாகவும் இறைவன் ஆண்களைப் படைக்கவில்லை.

எனவே இவ்வளவு பொறுப்புக்களையும் சுமக்கும் பெண்கள், பொருளாதாரத்திற்காக வேலை பார்க்க வேண்டும் என்ற சுமையையும் சுமக்க நேர்ந்தால் இரட்டைச் சுமைகளாகி மனஅழுத்தத்திற்கு ஆளாகி விடுவதையும் நடைமுறையில் பார்க்கிறோம். பெண்களை விடவும் உடல் திடகாத்திரமாகவும் அறிவுக் கூர்மையாகவும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்ற ஆணுக்கு, பொருளாதாரம் சம்பாதிக்கும் ஒரு வேலை தான்.

ஆனால் ஆண்களை விடவும் பலவீனமாகப் படைக்கப் பட்டிருக்கிற பெண்களுக்கு இரு வேலைகள் எனில் அது நியாயமானதாக இல்லை. வேலைக்குச் செல்லும் பெண்களும், வேலைக்குச் செல்லாத பெண்களும் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் நிர்வாகத்தை அன்றாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். வேலைக்குச் செல்லாத பெண்களுக்கு, வீட்டு நிர்வாகத்தைக் கவனிப்பது மட்டும் தான் அவர்களது பணி.

இத்துடன் சம்பாதிக்கும் வேலையையும் சேர்த்துச் செய்கின்ற பெண்ணுக்கு மேலும் பணிச்சுமை கூடி அதிகப்படியாகச் சம்பாதிக்கும் வேலையினால் அவளுக்குச் சிரமம் தான் ஏற்படுகிறது. பெரிய வசதி படைத்தவர்கள் வேண்டுமானால் துணி துவைப் பதற்கும், பாத்திரங்களைத் தேய்ப்பதற்கும், வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் கூலிக்கு ஆள் வைத்துப் பார்ப்பார்கள். இருப்பினும் சொந்தமாகப் பார்க்கிற மனதிருப்தியும், அதில் பெண்கள் அடைகிற இயற்கை ஆனந்தமும் வேலையாள் வைத்துப் பார்ப்பதில் இருக்காது.

எப்படியிருப்பினும் பெண்களுக்கு இரட்டைச் சுமைதான். இன்னும் சொல்வதாக இருப்பின், ஆண்கள் திருமணத்திற்காக பெண் பார்க்கும் போதே, வேலையில் இருக்கிற பெண்ணாக இருக்கிறாளா? என்றும், அதுவும் அரசாங்க வேலையில் இருக்கிற பெண்ணாக இருக்கிறாளா? என்றும் பார்க்கிற பலவீனமான ஆண்களை அதிகமாகப் பார்க்கிறோம்.

படித்த பெண் தான் வேண்டும் என்றால் அதையாவது ஏற்றுக் கொள்ளலாம். வேலையில் உள்ள பெண்களைத் தேடுவது என்பது அந்த ஆணின் பலவீனத்தையும் அவளது சம்பாத்தியத்தை எதிர்பார்க்கிற கையாலாகாத தன்மையையும் தான் காட்டுகின்றது. அதாவது பெண்ணின் வருமானத்தில் வாழ நினைக்கிறான். நாம் சம்பாதிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை என்றோ, அல்லது நாம் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்றோ நினைத்துப் பெண் தேடுபவர்களை நடைமுறையில் அதிகம் பார்க்கிறோம்.

இஸ்லாமியக் குடும்பவியலுக்கு இது தகுதி கிடையாது. வேலைக்குச் செல்லாத பெண் தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என ஒரு ஆண் மகன் தேடவேண்டும். ஏனெனில் மனைவி என்பவள் கணவனின் அரவணைப்பில் வாழ வேண்டும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள். அதாவது இஸ்லாமிய மார்க்கம் குடும்பவியல் நிர்வாகத்தை இரண்டாகப் பிரித்து, பொருள் தேடும் நிர்வாகமான வரவு செலவு வகைகள் அனைத்தையும் கணவன் நிர்வகிப்பான் என்றும், வீட்டு நிர்வாகத்தை மனைவி நிர்வகிப்பாள் என்றும் பிரித்து வைத்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பொறுப்புக்கள் உண்டு என்று கூறுகிறது. அப்போதுதான் அந்தச் குடும்பம் சீராக இயங்கும். அவரவர் பொறுப்பை அவரவர் சரியாகப் பேணினாலே போதுமானது. எந்தப் பிரச்சனைகளும் வராது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான்.

பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப் படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

புகாரி-893, 2554, 2558, 2751, 5188, 5200

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: முஸ்லிம்-3733

பெண்கள் கணவனின் வீட்டை நிர்வகிப்பார்கள். கணவன் பொருளாதாரத்தைக் கொடுத்துவிடுவான். மனைவிமார்கள்தான் வீட்டுக்குத் தேவையான அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களான அரிசி, பருப்பு, சீனி, புளி, மசாலா சாமான்கள், சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்கள் என்று பார்த்து பார்த்து வாங்கிக் கொள்வார்கள். நம்மிடம் பொருள் பட்டியல் தந்தால் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது அவர் களாகவே வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய பொருளை உணவாக சமைப்பதும் பெண்களின் பொறுப்பு தான்.

வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவர்களைச் சார்ந்த பொறுப்புதான். அதுபோக வயதான முதியவர்களை அரவணைப்பது, சீராட்டுவது, குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்குக் கல்வி கொடுப்பது, அவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது, ஒழுங்காக வருகிறார்களா? போகிறார்களா? என்று கவனிப்பது போன்ற இந்த வேலைகளையெல்லாம் ஆண்கள் பார்க்க முடியாது.

ஏனெனில் அவன் தான் இத்தனை வேலைக்குமான பொருளாதாரத்தை ஈட்டிக் கொண்டு வர வேண்டும். அதற்கான வேலையில் அவன் ஈடுபட்டிருப்பதால் ஆண்களுக்கு மேற்சொன்ன மற்ற வேலைகளைப் பார்க்கவே முடியாது. எனவே வீட்டிலிருந்து கண்காணிக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் பெண்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று இஸ்லாம் இரண்டாகப் பிரித்து பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.

எனவே இஸ்லாமிய அமைப்பில் யாரெல்லாம் வேலைக்குப் போகும் பெண்களை திருமணத்திற்காகத் தேடுகிறார்களோ அல்லது வேலைக்கு அனுப்பலாம் என்பதற்காகப் படித்த பெண்களைத் தேடுகிறார்களோ அவர்கள் தங்களது ஆண்மைத் தன்மையை விட்டுக் கொடுத்தவர்கள்; தரம் தாழ்ந்தவர்கள். பெண்களுக்குப் படிப்பறிவு இருந்தால் பிள்ளைகளை நன்றாக வளர்ப்பார்கள் என்று நினைத்துப் படித்த பெண்களைத் தேடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

ஒரு மனிதன் தற்போது 8 மணி நேரம் வேலை செய்கிறான். இன்றைய உலகில் அப்படித்தான் நேரம் குறித்து வைத்திருக்கிறார்கள். இதை உலகம் முழுவதும் சட்டமாக்கி விட்டார்கள். 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் பொழுதைக் கழிக்கும் கேளிக்கைகள், ஓய்வு என்று சந்தோஷமாக இருப்பது என்றெல்லாம் பிரித்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.

உலகம் முழுவதும் ஆய்வு செய்து, மனிதன் உடற்கூறு எதை ஏற்றுக் கொள்ளும்? எதை ஏற்றுக் கொள்ளாது? என்றெல்லாம் பரிசோதித்துத் தான் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற இந்த முடிவை எடுத்துள்ளனர். இது மனித உரிமையாகப் பேணப்பட்டு, சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதான் மனிதன் நிம்மதி யாக வாழ்வதற்கு வழிவகுக்கும். 8 மணி நேரத்திற்கு மேல் அதிகப்படியான நேரம் வேலை பார்த்தால் மனிதன் நிம்மதியாக வாழ முடியாது. மன அழுத்தம் வந்துவிடும். பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் முதலாவது விளைவு, பெண்கள் 16 மணி நேரம் வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது.

ஆண்களே 8 மணி நேரம்தான் வேலைக்குச் செல்ல முடியும் என்கிற நிலையில், பெண்கள் வேலைக்குச் செல்பவளாக இருந்தால், காலையில் எழுந்து பம்பரமாகச் சுழன்று தன்னுடைய சுயதேவைகளையும் கடமைகளையும் முடித்துவிட்டு, குடும்பத்திற்குத் தேவையான சமையல் வேலைகள், துணி துவைக்கும் வேலைகள் என்றெல்லாம் அவசர அவசரமாகச் செய்ய வேண்டும்.

பிறகு குடும்பத்திற்கும் தனக்கும் மதிய உணவையும் சேர்த்துச் செய்து கொண்டு, தனது உணவை கட்டிக் கொள்ள வேண்டும். இத்தனையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண் டும் என்பதற்காக ஆட்டோவைப் பிடிப்பதற்கும், பஸ்ஸைப் பிடிப்ப தற்கும், புகை வண்டியைப் பிடிப்பதற்கும் பதறிப் பதறி ஓடுகிற காட்சிகள் நம்மை உருக்குகிறது.

இதற்கிடையில் தான் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் துணி தேய்த்துக் கொடுக்க வேண்டும், பிள்ளைகளைக் குளிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கான அனைத்துத் தேவைகளையும் வேக வேகமாகச் செய்ய வேண்டும். ஆனால் பெண்களின் சுபாவமே மெதுவாகச் செய்வது தான் என்பதை இவ்விடத்தில் கவனிக்கத் தவறி விடுகிறோம். ஆண்கள்தான் வேகவேகமாகப் பணிகளைச் செய்யும் விதமாக இறைவனால் உடற்கூறு வழங்கப் பட்டுள்ளனர்.

பெண்களின் இயல்புத் தன்மையே மெதுவாகவும் இலகு வாகவும் செய்யும் வகையில் தான் இறைவன் அவளது உடற்கூற்றைப் படைத்துள்ளான். அதற்கு மாற்றமாக ஆண்களைப் போன்று வேகமாகச் செய்யப்பழகுகிறாள். அதன் பிறகு பதறிப் பதறி ஓடி, பறந்து வேலைக்குச் சென்று விடுகிறாள். அங்கே எவ்வளவு சிரமங்களைக் கையாளுகிறாளோ அதையும் தாங்கிக் கொண்டு, வேலை முடித்து வந்த பிறகு உடனே மீண்டும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்கிறாள்.

அதன் பிறகு இரவு உணவு சமைக்கும் வேலையில் ஈடுபடுகிறாள். ஆண்கள் வேலைக்குச் சென்றுவிட்டு ஓய்வு எடுப்பதைப் போன்று பெண்களுக்கு எடுக்க முடியாது. ஆண்கள் அங்கே இங்கே என்று வெளியில் செல்வார்கள். தனது மூளைக்கு ஓய்வளிப்பார்கள். ஆனால் பெண்கள் தங்களது இயல்புத் தன்மைக்கு மாற்றமாக காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் செய்யும் வேலை மொத்தம் 16 மணி நேர வேலையாகும்.

அதுவும் இடைவிடாத வேலை. இவ்வாறு செய்வது பெண்களின் தன்மைக்குக் கேடு விளைக்கும் என்பதை முதலாவது விளங்கிக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் முக்கிய விளைவு மன உளைச்சல் தான். சாப்பாட்டில் ஈடுபாட்டுடன் சாப்பிட மாட்டார்கள்.

ஒருவகையான வெறுப்பை தொடர்ச்சியாக வெளிக்காட்டுவார்கள். வெகு விரைவாகக் கோபப்படுவார்கள். ஆத்திரமடைவார்கள். இன்னும் சொல்வதெனில் இப்படி வேலைக்குச் செல்பவர்களில் பலர் கணவனுடன் குடும்ப உறவில் சந்தோஷமாக ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் குன்றிவிடும். இல்லற வாழ்வைக் கூட இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். இவ்வளவு வேலைகளைச் செய்துவிட்டுப் போய் படுக்கையில் விழுந்தோம், படுத்தோம், தூங்கினோம் என்பதாக வாழ்க்கை இயந்திரத்தைப் போன்றாகிவிடும்.

இதனால்தான் கணவன் வேறுமாதிரியாக சுற்ற ஆரம்பித்து விடுகிறான். இப்படி இல்லற வாழ்க்கையில் கூட நாட்டமில்லாத வகையில் மன அழுத்தம் உண்டாகி விடுகிறது. மேலும் குடல் அளற்சி என்ற நோய்கூட பெண்களுக்கு வருவதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் குழந்தையைப் பெற்றிருந்தால் அந்தக் குழந்தையை விட்டும் 8 மணி நேரம் பிரிகிறார்கள்.

உடலால் தாய் பிள்ளையைப் பிரிந்து இருந்தாலும் மனதால் தனது குழந்தையின் மீதே பற்றுதல் உடையவர்களாக இருப்பார்கள். இதனால் வேலையையும் சரியாகக் கவனிக்க முடியாமல், குழந்தையையும் ஒழுங்காகப் பராமரிக்க முடியாத மனச் சிதைவு நிலையை அடைகிறார்கள்.

பெண்களின் இயற்கைத் தன்மை என்னவெனில், இரவில் நடுநிசியில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் குழந்தையின் அழுகுரல் கேட்ட அடுத்த கணத்திலேயே எழுந்து விடுவார்கள். ஆனால் ஆண்களால் அப்படி எழுந்திருக்க முடியாது. அதாவது உளப்பூர்வமாக தாய்க்கும் சேய்க்கும் மத்தியில் இனம்புரியாத ஒரு தொடர்பு இருக்கிறது. வேலைக்குப் போகிற பெண்களின் உடல் தான் அலுவலகத்தில் இருக்குமே தவிர மனது முழுவதும் தன் குழந்தை குறித்தே ஏங்கிக் கொண்டிருக்கும்.

அதிலும் பால் குடிப் பருவத்திலுள்ள 2 வயதிற்குட்பட்ட குழந்தையாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பால் கொடுத்தாக வேண்டும். இந்நேரத்தில் வேலைக்குச் சென்ற பெண் என்ன மாதிரியான மனநிலையில் உழல்வாள்? 8 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் கிடைக்காமல் அந்தக் குழந்தை வேறு வகையான செயற்கை உணவைத் தான் உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

ஆனால் இன்றைய அறிவியலும் மருத்துவமும் தாய்ப்பாலுக்கு இணையான உணவு உலகில் வேறு இல்லவே இல்லை என்கிறார்கள். எல்லாவிதமான நோய் எதிர்ப்பு சக்தியும் அதில்தான் உள்ளது. அப்படியெனில் தாய்ப்பாலை உரிய பருவத்தில் சரியான அளவுக்குக் கொடுத்து, நோய் எதிர்ப்புத் தன்மையுடைய குழந்தையாக வளர்ப்பதற்கு வேலைக்குச் செல்லும் பெண்களால் முடியுமா? அப்படி நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

இதனால் நீண்ட நேரத்திற்கு பால்குடிக்காமல் இருந்தால் அந்தக் குழந்தையும் ஏக்கம் அடைகிறது. அதுமட்டுமல்ல, தாய்க்குப் பால் சுரந்து விட்டால் சுரக்க சுரக்க பிள்ளைக்குக் கொடுத்துவிட வேண்டும். 8 மணி நேரம் வேலை, போவதற்கு 1 மணி நேரமும் வீட்டிற்கு திரும்ப வருவதற்கு 1 நேரம் கணக்கிட்டால் மொத்தம் 10 மணிநேரம் குழந்தையைப் பிரிந்து வாழ்கிற தாய், சுரக்கிற பாலைக் குழந்தைக்குக் கொடுக்காமல் செயற்கையாக கட்டுப்படுத்த முயற்சித்தால் தாய்ப்பால் சுரப்பது குறையும்.

எந்த அளவுக்குப் பால் கொடுக்கிறார்களோ அந்தளவுக்குத் தாய்க்குப் பால் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். கிணறு, இறைக்க இறைக்க ஊறுவதைப் போன்றுதான் தாய்ப்பால் சுரப்பையும் இறைவன் படைத்து வைத்துள்ளான். மேலும் பால் கொடுக்காமல் கட்டுப்படுத்துவதால் பலருக்குப் பால் கட்டி உறைந்து விடுகிறது. இது தேவையற்ற வலியையும் மனஉளைச்சலையும்  ஏற்படுத்துகிறது. மேலும் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கும் இது காரணமாக அமைகின்றது.

இதனால் தாய்க்குத் தேவையற்ற கோபம் வருவதாகவும், உடல் சிதைவில் பல மாற்றங்களினால் தேவையில்லாத ரசாயண மாற்றங்கள் உண்டாவதாகவும் ஆரோக்கியத்திற்கு கேடு என்றெல்லாம் பல விஷயங்களை இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். இத்தனை விளைவுகளையும் வேலைக்குப் போகின்ற பெண் சுமக்க நேரிடுகிறது.

குழந்தைக்கு, தாய்ப் பாசம் என்பது இன்றியமையாத தேவை. பால் கொடுப்பதை விடவும் இதுதான் முக்கியம். தாய் என்றால் பிள்ளையை அணைத்து அரவணைத்து, சிரித்து, கொஞ்சிப் பேச வேண்டும். இது குழந்தைக்கு ஒரு டானிக் போன்ற மருந்து தான். இப்படி கொஞ்சுவதையும் சிரிப்பதையும் தூக்கி அரவணைப்பதையும் எல்லாக் குழந்தைகளுமே எதிர்பார்க்கும். எந்த வீட்டில் குழந்தைகளை ஆசையுடன் தூக்கிக் கொஞ்சி, சிரிப்புக் காட்டி வளர்க்கிறார்களோ அந்த வீட்டுக் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக, நல்ல சூழ்நிலையுடன் வளர்வதாகக் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இதற்கு மாறாக வேலைக்குச் செல்கிற தாய் வளர்க்கிற பிள்ளைகளைப் பார்த்தால், பெரும் பாலும் தறுதலைகளாவும், முரடர்களாவும், அன்புக்கு ஏங்குகிறவர்களாகவும் இருப்பார்கள். இந்தச் சூழலில் வளர்கின்ற பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வ தற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆக, குடும்ப வாழ்க்கை வேண்டும் என்று திருமணம் முடித்துவிட்டு, அதன் வழியாகப் பிள்ளையையும் பெற்றெடுத்துவிட்டு, யாரோ வளர்த்துக் கொள்வார்கள் என்று விட்டுவிட்டுச் சென்றால், அதற்காகவா இவர்கள் திருமணம் முடித்தார்கள்? அதற்காகவா குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்கள்?

எனவே பிள்ளைகளுக்குச் சரியான பாச உணர்வு ஊட்டப்படாமல் கண்ட மாதிரி வளர்வதால் பிள்ளைகள் பாச உணர்வற்றவர்களாக வளர்வது குழந்தைக்கும் கேடு, தாய்க்கும் கேடு,  இந்தச் சமூகத்திற்கும் கேட்டை விளைவிக்கின்றது. பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் இன்னும் பல்வேறு பதிப்புகளை பார்ப்போம்.

பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் 

வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகளுக்குப் பாலூட்டுதல், அவர்களை அரவணைத்தல் போன்ற கடமைகளைச் சரிவர நிறைவேற்றாமல் இருப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அந்தப் பெண்களுக்கும் ஏற்படும் கேடுகளைக் மேலே கண்டோம்.

இவைகளெல்லாம் குழந்தையாக இருக்கும்போது ஏற்படும் பாதிப்புகளாகும். குழந்தைப் பருவத்தைத் தாண்டி கொஞ்சம் வளர்ந்துவிட்டால், குழந்தைகள் சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும். பக்கத்து வீட்டில் நண்பர்கள் பழக்கம் கிடைக்கும். நண்பர்கள் கெட்டப் பழக்க வழக்கங்களை ஊட்டுவதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருக்கும்.

பீடி சிகரெட் குடிக்கிற பழக்கம் உருவாகும். இப்படி எத்தனையோ கெட்ட பண்புகளைப் பிள்ளைகள் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இந்நிலையில் ஒரு தாய் அந்தப் பிள்ளையுடன் இருந்து அவனைக் கவனித்து, அவனுக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லி சரியாக வழி நடத்த வேண்டும். குழந்தைகளைப் பொறுத்த வரை பல நேரங்களில் ஒளிந்து இருந்து கள்ளத் தனங்களைக் கற்றுக் கொள்ளும்.

வேலைக்குப் போகிற தாயினால் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. எப்படி வளர்கிறான் என்பதே தெரியாது. எனவே குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்கும் பெண்கள் வேலைக்குச் செல்வது தடையாக இருக்கிறது. இப்படி பொருளாதாரத்தைப் பெண்கள் தேடுவது குடும்ப அமைப்பையும், சமூகத்தையும் நாசமாக்கிவிடுகிறது என்பதையும் நடைமுறையில் கண்கூடாகப் பார்க்கிறோம்.

சந்தேகப்படும் கணவன்

வேலைக்குப் போகும் பெண்கள் தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று ஆரம்பத்தில் ஆண்கள் ஆசைப்படுவார்கள். இவர்கள் நினைப்பதைப் போன்று அவளும் வேலைக்குச் சென்று விடுகிறாள். ஆணோ பெண்ணோ வீட்டுக்குள் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்வார்கள். ஆனால் வேலைக்குப் போனால் ஆணோ பெண்ணோ, நல்ல வகையான ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டுதான் செல்வார்கள். யாரும் வீட்டுக்குள் உடுத்தியிருந்த ஆடைகளுடனேயே வெளியிலும் வரமாட்டார்கள்.

ஆண்களை விட பெண்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வார்கள். இப்படி நல்ல ஆடைகளை அணிந்து, மேக்அப் செய்து கொண்டு பெண் வெளியில் சென்றால், அதனால் கணவனுக்குத் தேவையற்ற குழப்பங்கள் மனதில் ஏற்படும். இவள் இப்படி ஜோடிப்பதற்குக் காரணம் என்ன? என்று சலனத்துடன் நடப்பான். இவன்தான் வேலைக்குப் போகிற பெண் வேண்டும் என்று தேர்வு செய்தான். பிறகு இவனே சந்தேகம் கொள்வான்.

இதுவும் நடைமுறையில் எத்தனை பேருக்கு நடந்திருக்கிறது. மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு, இப்படி போகிறாளே என்று இவனது மனதில் லேசான சந்தேகம் வரும். பல பேருடன் தனியாக இருக்க வேண்டிய நிலையெல்லாம் ஏற்படுமே? வேலைக்குத்தான் போகிறாளா? வேறு எங்கும் போகிறாளா? இவையெல்லாம் மனதில் தோன்றும்.

நமது நாட்டில் பெங்களுருவில் வேலைக்குச் செல்லும் 750 பெண்களிடம் இதுபற்றி ஓர் ஆய்வு நடத்தினார்கள். நீங்கள் வேலைக்குச் செல்வதினால் உங்களது குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளைச் சொல்லுங்கள் என்று கேட்கும் போது, ஏன் தான் வேலைக்குச் சென்றோம் என்பது போன்றுதான் உள்ளது. வேலைக்குப் போகாமலேயே குடும்பப் பெண்களாக நாங்கள் இருப்பதே எங்களுக்கு சிறந்ததாகத் தெரிகிறது என்றனர்.

இதில் 80 சதம் பெண்கள், எங்களது கணவர்களாலும், கணவரது குடும்பத்தினராலும் நாங்கள் கடும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறோம் என்றனர். அதாவது, 100 பெண்களில் 80 பெண்கள் கணவன்மார்களால் சந்தேகிக்கப்படுகிறார்கள். 20 பெண்கள் தான் கணவரால் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படாமல் இருக்கிறார்கள். பாதிக்குப் பாதி இருந்தால் கூட அது ஒரு கணக்கில் வரும். 100ல் 80 பெண்களுக்கு இப்படியொரு இழிநிலை என்றால் இதைத் தவிர்க்கத்தான் வேண்டும்.

ஓரிரு சதம் என்றால் ஆண்கள் மீது குற்றம் சுமத்துவதில் நியாயம் இருக்கிறது. 80 சதவிகிதம் பேர் சந்தேகம் கொள்கிறார்கள் எனில், பொருளாதாரம் தேடி பெண்கள் வேலைக்குச் செல்வது பெண்களின் இயல்பு வாழ்க்கைக்கு எதிரான செயல் தான் என்பதைப் புரிய வேண்டும். வருமானத்திற்காகப் பெண்களை வேலைக்கு அனுப்பினாலும் மனைவி மீது பலவிதமான சந்தேகங்களுடன் தான் வாழ்கிறான்.

யதார்த்தமாக ஒரு நாள் பஸ் வருவதற்குத் தாமதமாகி விடுவதற்கு வாய்ப்புண்டு, புகைவண்டி குறித்த நேரத்தில் வராமல் போகலாம், வருகிற வழியில் மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று முற்றுகையிடலாம், டிராபிக் பிரச்சனைகள் வரலாம்; இப்படியெல்லாம் நடந்து தாமதமாக வருகிற போது சந்தேகத்துடன் கேள்வி கேட்டு துளைத்துவிடுவார்கள். அலுவலகத்தில் கேட்டதற்கு 6 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள்.

ஆனால் நீயோ 2 மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறாய். தாமதத்திற்கு என்ன காரணம்? எங்கே சென்று சுற்றிவிட்டு வந்துள்ளாய்? இப்படிப் பலவிதமான சந்தேகங்கள் அவனுக்கு ஏற்படுவது இயல்புதான். அப்படியெனில் மனைவி சம்பாதிக்கின்ற இந்த அற்பமான காசுக்காக ஏன் மனச்சங்கடத்துடன் வாழ வேண்டும்? நல்ல மனைவியைக் கூட வீண் சந்தேகப்பட்டு குடும்ப சச்சரவுகளை உண்டாக்க வேண்டுமா?

இவ்வளவு நடந்தால் கணவன் மனைவி சந்தோஷமாக வாழ முடியுமா? திருமண வாழ்க்கை என்பதே ஆணும் பெண்ணும் சந்தோஷமாக வாழத்தானே! அதற்கே வேட்டு வைக்கிற இந்த வருமானம் தேவையா? என்று வேலைக்குச் செல்லும் பெண்கள் சிந்திக்க வேண்டும். இப்படியெல்லாம் தேவையற்ற வீண் சச்சரவுகளும் சந்தேகங்களும் வரக் காரணம், குடும்ப அமைப்பின் அர்த்தம் என்னவென்று புரிந்து கொள்ளாமல் இருப்பதினால்தான்.

எனவே ஆண்கள் தான் பொருளாதாரம் அனைத்திற்கும் பொறுப்பாளி, பெண்களுக்கு இதில் துளியளவுக்குக் கூடப் பொறுப்பில்லை என்ற குடும்ப அமைப்பு விதியை நோக்கி வருவது மட்டும் தான் இதற்கான தீர்வாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களது பெண்பிள்ளைகளை, மனைவிமார்களை வேலைக்கு அனுப்புவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கணவனுக்குச் சம்பாதிக்க முடியாத அளவுக்கு நோய் நொடியில் மாட்டிக் கொண்டால், தந்தைமார்களுக்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டால், கணவன் இறந்து விட்டு சொத்து சுகங்கள் எதுவும் இல்லையெனில் விதிவிலக்காக நிர்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சிலர் வேலைக்குச் செல்வதைக் குறைகூற முடியாது.

கணவனும், ஆண் மக்களும் நன்றாக உழைக்கிற போது, குடும்பத்தின் பொருளாதாரச் சுமைகளை சுமப்பதற்கு ஆண்கள் பொறுப்பாளியாக இருக்கிற போது, பெண்கள் அவர்களது வருமானத்திற்கேற்ப வாழ்க்கையை நடத்துவதற்கு பழகிக் கொள்ள வேண்டும். கணவனால் இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்றால், அதற்குள் எப்படி குடும்பத்தை வழிநடத்த முடியுமோ அப்படி நடத்த வேண்டும்; 5 ஆயிரம் என்றால் அதற்குத் தகுந்தமாதிரி நடத்த வேண்டும்.

10 ஆயிரம் கிடைக்கிறது என்பதால் மனைவியை வேலைக்கு அனுப்ப வேண்டுமா? செத்துப் போய்விடுவார் என்ற நிலையில் கணவன் இருந்தால் மனைவியை வேலைக்கு அனுப்பு வதில் எந்தக் குற்றமும் சுமத்த முடியாது. எனவே, இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் குடும்பவியல் அம்சமாகும்.

பாலியல் தொந்தரவுகள்

பெண்கள் வேலைக்குச் செல்வதால் தங்களது கணவன்மார்களாலும், கணவனது குடும்பத்தினராலும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய சூழலுக்குப் பெண்கள் தள்ளப் படுகிறார்கள் என்பதோடு இதன் விளைவு நிற்கவில்லை. அலுவலகத்தில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் வேலை பார்க்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அங்கு வேலை பார்க்கிற சக ஊழியர்களில் ஆண்களின் வக்கிரத்திற்குப் பெண்கள் ஆளாக்கப் படுகின்றனர்.

வேலைக்குச் செல்கிற பெண்கள் நல்ல ஆடை அணிந்து முகப் பூச்சுக்களையெல்லாம் பூசிக் கொண்டுதான் வருவார்கள். இதைப் பார்க்கிற ஆண் ஊழியர்கள் அந்தப் பெண்களிடம் தனது சல்லாபத்தைக் காட்டுவதற்காக, இரட்டை அர்த்தத்தில் பேசுவார்கள்; பொருளை வாங்கும் போது அந்தப் பெண்களின் கையை உரசித் தொடுவதைப் போன்று வாங்குவார்கள்; தேவையற்ற தொந்தரவுகள் கொடுப்பார்கள். இதை நாமாக ஊகித்துச் சொல்லவில்லை.

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஆய்வில் இதையும் சேர்த்துத்தான் அந்தப் பெண்கள் கூறினார்கள். சக ஊழியர்களில் 90 சதம் பேர்களால் நாங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறோம் என்று அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். பெண்கள்தானே என்று நினைத்துக் கொண்டு பெரும்பாலான ஆண்கள், தவறான சீண்டுதலுக்கு அங்குள்ள பெண்களை ஆளாக்குவார்கள்.

அவளும் வேலைக்காக இவற்றை யெல்லாம் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகிறாள். இதுவே மேல்மட்ட அதிகாரியாக இருந்தால், கையைப் பிடித்து இழுப்பதையும் சரச விளையாட்டுக்களை வக்கிரமாகச் செய்வதையும் அதையும் தாங்கிக் கொள்கின்ற அளவுக்குப் பெண்கள் இறங்கிச் செல்வதையும் பார்க்கிறோம். இதுவெல்லாம் பெரிதாகத் தெரிந்திருந்தால் வேலைக்குப் போய் இருக்கவே மாட்டார்கள்.

வேலையின் மூலம் சம்பாதிப்பதுதான் பெரிது என்றும் அதுதான் முதல் கடமை என்றும் குடும்ப அமைப்பு, குடும்ப சந்தோஷம் இரண்டாம் பட்சமாகத் தெரிவதால் மேலதிகாரிகளின் சீண்டல்  எல்லாம் இவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. ஆரம்பத்தில் வெறுப்பு இருந்தாலும் அனுசரிக்க வேண்டும், இல்லை என்றால் வேலை போய் விடும் என்ற மனநிலை காரணமாக, முதலில் விட்டுக் கொடுப்பது, அடுத்தடுத்து பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதைப் போன்று எல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும்.

மொத்தத்தில் எல்லாம் போய்விடும். இப்படி, வேலை பார்க்கும் இடங்களில் சக ஊழியர்களாலும் மேலுள்ள அதிகாரிகளாலும் முதலாளிகளாலும் பல்வேறு பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் இந்தப் பெண்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நமது சென்னையிலேயே நடந்தேறியுள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மாநகரக் கமிஷனரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், அனைத்து பெண்களும் சொன்ன ஒரேமாதிரியான குற்றச்சாட்டு, வேலைக்குப் போகும் போது பஸ்ஸில், ஆட்டோவில், தெருவில் நடக்கும் போதும், எங்களை வேண்டுமென்றே இடித்துவிட்டுப் போகிறார்கள். இந்த இடிமன்னர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை என்பதுதான்.

இதையாவது மக்கள் தொகை நெருக்கத்தினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எங்களது சக ஆண் ஊழியர்களாலும், ஆண் முதலாளிகளாலும் பல்வேறு பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ச்சியாக ஆளாக்கப்படுகிறோம், அதற்கு விதிமுறைகளையும் நெறிகளையும் ஏற்படுத்தித் தாருங்கள் என்றும் புகார் கொடுத்தனர்.

இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு பெண்களாகிய நாங்கள் குடும்பப் பொருளாதாரத்திற்காக வேலைக்குச் செல்வதால், எங்களது கணவன்மார்களாலும் எங்களது கணவனது குடும்பத்தினர்களாலும் அதிகமான கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எங்களை குத்திக்காட்டி பேசி இழிவாகப் பார்க்கப்படுகிறோம்; மனதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று சென்னை கமிஷனரிடம் பெண்கள் தங்களது கருத்துக்களையும் மனக்குமுறல்களையும் புகார்களையும் தெரிவித்திருந்ததை சில ஆண்டுகளுக்கு முன்னால் தினத்தந்தி நாளிதழ் ஒரு முழுப் பக்கத்திற்கு செய்தியாக வெளியிட்டிருந்தது.

இவ்வளவு பிரச்சனைகளும் வருவதற்குக் காரணம், குடும்ப அமைப்பைச் சரியாகப் புரியாமல் பெண்கள் வேலைக்குச் செல்வது தான். பணத்திற்காக இத்தனை அநியாயங்களும் நடக்க ஒரு பெண் அனுமதிப்பது மிகவும் தவறான செயல். பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இது ஒரு வகை. இன்னும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

ஆண்களின் வருமானமும் அல்லாஹ்வின் அபிவிருத்தியும்

குடும்ப நிர்வாகத்தை ஏற்று வழிநடத்துகிற ஆண்கள் எந்தக் கட்டத்திலும் தங்களது மனைவிமார்களை வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு இரட்டைச் சுமையை சுமத்தி, அவர்களது இயல்புக்கு மாறான சிரமங்களையும் கஷ்டங்களையும் கொடுத்துவிடக் கூடாது. அந்தக் கஷ்டங்களை நாமே சுமந்து கொண்டு, அவர்களைச் சிறந்த முறையில் கவனிக்க வேண்டும் என்பதற்குரிய பல காரணங்களைப் பார்த்தோம்.

பொதுவாக முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என்பதில் மற்றவர்களை விடவும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இருவரின் சம்பாத்தியமும் சேர்ந்து கிடைத்தால் தற்போது வாழ்வதை விடவும் செழிப்பாக வாழலாம் என்பதே வேலைக்கு அனுப்புபவர்களின் மனநிலையாக உள்ளது. இதில் காசு பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆண் போன்று இன்னொரு மடங்கு பெண்களின் சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்தால் சொத்து சுகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பதுதான் பெண்களை வேலைக்கு அனுப்புபவர்களின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.

இது இஸ்லாமிய சமூகமல்லாத மற்ற மக்களுக்குரிய வழியாகும். அவர்கள் உலகப் பொருளாதாரக் கணக்குப் போடுவது அவர்களுக்குச் சரியாகத் தான் தெரியும். ஏனெனில் அவர்கள் உலகத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே அதில் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை.

ஆனால் முஸ்லிம்களாகிய நாம் மறுமையை நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே ரிஸ்க்கைத் தருகிறவன் அல்லாஹ் என்று நம்புகிறோம். ரிஸ்க் என்றால் வெறுமனே உணவு என்று மட்டும் அர்த்தம் வைத்துவிடக் கூடாது. உணவு, ஆடை, அழகு, அலங்காரம், வாகனங்கள், பண்புகள் என்று எதுவெல்லாம் மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரங்களாக உள்ளதோ அவை அனைத்துக்குமே ரிஸ்க் என்று சொல்லப்படும்.

அதை வழங்குகிற இறைவனுக்கு ராஸிக் (ரிஸ்க்கை வழங்குபவன்) என்றும் ரஸ்ஸாக் (அளவு கடந்து ரிஸ்க்கை வாரிவழங்குபன்) என்றும் அல்லாஹ் தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.

எது பரக்கத்?

அல்லாஹ் நமக்குத் தந்த ரிஸ்க்கில் பரக்கத் என்ற மறைமுகமான அருளைத் தருகிறான் என்று நம்பிச் செயல்பட வேண்டும். நிறைய பொருளாதாரத்தைத் தந்து, அதில் நமது தேவைகள் நிறைவேறாமல் ஆகிவிட்டால், அந்த நிறைய பொருளாதாரத்தினால் எந்த நன்மையும் கிடையாது. இலட்சக் கணக்கான ரூபாய் வருமானம் வந்து, அதை விடவும் இலட்சக் கணக்கான வகையில் செலவாகிவிட்டால் அதிகமான வருமானத்தினால் எந்த நன்மையும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.

பத்தாயிரம் வருமானம் வந்து, 12 ஆயிரம் செலவானால் இந்தப் பத்தாயிரத்தில் நன்மை இல்லை என்று பொருள். அதே நேரத்தில் 5000 வருமானம் வந்து 4000 ரூபாயில் நமது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் அதுதான் நமக்குக் கிடைத்த பெரிய நன்மை. எனினும் ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.

ஆக முஸ்லிம்களைப் பொறுத்த வகையில், ஆண்கள்தான் குடும்பப் பொருளாதாரத்தைச் சுமக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னதை கொள்கையளவில் ஒத்துக் கொண்டு செயல்பட்டால் அல்லாஹ் அத்தகைய ஆண்களுக்கு மறைமுகமாக அருள் செய்கிறான். ஆண்கள் மட்டும் வருமானத்தை ஈட்டி குடும்பத்தைப் பார்க்கிற நமது சமூகம் இருக்கிற செழிப்பைப் போன்று ஆணும் பெண்ணும் சேர்ந்து சம்பாதிக்கிற வேறு சமூகங்களில் செழிப்பு இல்லாமல் இருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஆணும் பெண்ணும் சம்பாதிப்பதால் சொகுசாக வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் பெறுகிற சம்பளத்திற்கேற்ற செழிப்பு அவர்களது வாழ்க்கையில் தெரிவ தில்லை. அவர்களது வாழ்க்கையில் பல சிரமங்களைத் தான் அன்றாடம் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள்.

அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆய்வு செய்து பார்த்தால், பிற சமூகங்களைப் போல் பெரிய படிப்பு படித்திருக்க மாட்டார்கள். 5000, 6000 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களாக அதிகமான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்தச் சம்பளத்தில் தான் தானும் சாப்பிட்டு, மனைவி மக்களுக்கும் சாப்பாடு கொடுத்து கொண்டு, பிள்ளைகளைப் படிக்க வைத்து, மனைவிமார்களுக்கு நகை நட்டுகளெல்லாம் அணிவித்து நல்லபடியாக வைத்துள்ளார்கள்.

ஒரு நபரின் சம்பாத்தியத்திலேயே குடும்ப உறுப்பினர்களின் சாப்பாடு, ஆடைகள் உள்ளிட்ட முக்கியத் தேவைகளையெல்லாம் அல்லாஹ் நிறைவேற்றித் தருகிறான். தொகை அதிகமாக வந்தால் இன்னும் நன்றாக வாழலாம் என்று தப்பாக ஒரு முஸ்லிம் கணக்குப் போடவே கூடாது. தொகை கூடுதல் குறைவு என்பது விஷயமல்ல. குறைவோ கூடுதலோ எப்படி யிருந்தாலும் அல்லாஹ் அதில் பரக்கத் என்ற மறைமுக அருளைச் செய்கிறானா? என்று தான் பார்க்க வேண்டும்.

ஒரு இலட்ச ரூபாயைத் தந்து, 2 இலட்சத்திற்கு நோயையும் சேர்த்துக் கொடுத்தால் ஒரு இலட்சத்திற்கு எந்த மதிப்பும் கிடைக்காது. ஒரு இலட்சமும் தராமல், நோயும் வராமல் இருந்தால் நமக்கு மிச்சம் தான். எனவே ஒவ்வொரு முஸ்லிமும், அல்லாஹ் நமக்கு இப்படியொரு ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறான். இதில் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பான், நம்மைச் சிரமத்தில் விட்டுவிட மாட்டான் என்று அல்லாஹ்வின் பரக்கத்தை நம்ப வேண்டும்.

இறைவனின் மறைமுக உதவி யான பரக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பின்வரும் உதாரணத்தைப் பார்ப்போம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறை மறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் அந்தப் பாலைப் பருகினார். பிறகு மற்றோர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். பிறகு மீண்டும் ஓர் ஆட்டில் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார்.

மறு நாள் காலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவர் அந்தப் பாலைப் பருகினார். மற்றோர் ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டபோது, அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறை நம்பிக்கை யாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் பருகுவான்” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-4189, புகாரி 5397

இன்னும் இச்செய்தி புகாரியில் 5393, 5394, 5395, 5396 யிலும் முஸ்லிமில் 4185, 4186, 4187, 4188 ஆகிய அறிவிப்புக்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி நபியவர்கள் கண்முன்னே நடந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுத் தான் அல்லாஹ் முஸ்லிமுக்குச் செய்யும் மறைமுக அருளான பரக்கத்தை விளக்குகிறார்கள், ஒரு ஆட்டின் பாலிலிருந்தே முஃமினுக்கு வயிறும் நிறைந்து விடுகிறது, மனதும் போதுமாக்கிக் கொள்கிறது, அதிலிருந்து கிடைக்க வேண்டிய சத்துக்களும் சரியாகக் கிடைத்து விடுகிறது. முஃமினல்லாதவருக்கு அதிகம் வயிறு கொள்கிற அளவுக்கு சாப்பிடுவார்கள், மனதும் வயிறும் நிரம்பாத நிலை உள்ளது.

எனவே பரக்கத் என்ற மறைமுக அருளைத் தான் முஃமின் ஒரு குடலில் சாப்பிடுவதாகவும் மற்றவர்கள் ஏழு குடலுக்குச் சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள். இந்த நன்மையை முஸ்லிம் சமூகம் இன்றுவரை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறது. எத்தனையோ சமூகங்கள் கணவன் வேலைக்குச் செல்வதைப் போன்று மனைவியைச் சம்பாதிப்பதற்கு அனுப்புவார்கள். இப்படிக் குடும்பத்துடன் உழைத்தும் சாதாரண நிலையில் தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. குடிசைகளிலும் ஓட்டு வீடுகளிலும்தான் இருக்கிறார்கள்.

நமது சமூகம் வெளிநாடுகளில் அற்ப சம்பளத்திற்கு இருந்தாலும் வீட்டைக் கட்டுகிறார்கள். கார வீடுகளிலும் மாடிவீடுகளிலும் சொகுசாக வசிக்கிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் ஒரு பொட்டு தங்கத்திற்குக் கூட வழியில்லாமல் இருப்பார்கள். நமது சமூதாயப் பெண்கள் காதுக்கு, மூக்குக்கு, கைகளுக்கு என்று தங்கத்தை அடுக்கிக் கொள்கிற அளவுக்கு இருக்கிறார்கள்.

ஆனாலும் பிற சமூக மக்களோடு ஒப்பிடுகையில் நாம் தான் மிகவும் வருமானத்தில் பின்தங்கியிருக்கிறோம். நமக்குக் கிடைக்கும் பொருளாதாரம் குறைவாக இருந்தாலும் அதற்குள்ளேயே நமது தேவைகள் நிறைவேறி, மிச்சத்தைச் சேமிக்கும் வகையில் அல்லாஹ் நமக்கு அமைத்துத் தருகிறான்.

கல்யாணத்திற்குப் பிற சமூக மக்கள் பத்தாயிரத்திற்கு நகை போட்டதைப் பெரிதாகச் சொல்வார்கள். முஸ்லிம் சமூக மக்களுக்கு கல்யாண வீட்டில் பெண் உடுத்துகிற பட்டுக்கே பத்தாயிரம் பற்றாமல் இருக்கிறது. கல்யாணப் பெண்ணுக்கு நகை போட்டால் அரைக் கிலோ, ஒருகிலோ தங்கம் என்று போடுகிறார்கள்.

வரதட்சணை வாங்குவதையும் கொடுப்பதையும் இந்த மார்க்கம் தடுக்கிறது. இருப்பினும் முஸ்லிம் சமூகத்தின் செழிப்பை விளங்கிக் கொள்வதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே அதிகமான பொருளாதாரம் நமக்குக் கிடைக்கும் என்பதற்காக பெண்களை வேலைக்கு அனுப்பும் நோய் நமக்கு வந்து விடக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மரபுக்கு மாற்றமாக பொருளாதாரத்திற்கு ஆசைப்பட்டால், மாத வருமானம் இரட்டிப்பாகக் கிடைக்கலாம். ஆனால் அதை விட அதிகமாகச் செலவாகி விடும். இப்படி மனைவியை வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பதால் அல்லாஹ் பரக்கத்தை தடுத்துவிட்டுத் தான் தருவான். கடைசியில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிச்சம் ஒன்றுமிராது. கையைப் பிடிக்கிற மாதிரித்தான் இருக்கும்.

எனவே முஸ்லிம்களைப் பொறுத்த வரை, குடும்பச் செலவுக்கான பொருளாதாரப் பொறுப்பை ஆண்களின் மீது அல்லாஹ் சுமத்தியிருப்பதினால் நாம் தான் அந்தப் பொறுப்பைச் சுமக்கவேண்டும் என்பதையும் அப்படிச் சுமந்தால் அல்லாஹ்வின் உதவியும் மறைமுகமான அருளும் இருக்கிறது என்பதையும் நம்பிச் செயல்பட்டால் எந்தக் கட்டத்திலும் நமது மனைவிமார்களை வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழல் வராது.

அதுபோக, நாம் உலகத்திற்காக வாழ்கின்ற சமூகம் கிடையாது. இதுவரை கடந்த இதழ்களில் கூறப்பட்டவைகள் அனைத்திலும் உலகக் கணக்கின் அடிப்படையில் பெண்களை வேலைக்கு அனுப்பி சம்பாதிக்கக் கூடாது என்பதை விளக்கியிருந்தோம். முஸ்லிம்கள் மறுமையை இலக்காகக் கொண்ட சமுதாயம் என்பதால் இந்த உலகத்தில் வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்றாலும் அதற்காக இஸ்லாமிய நெறிமுறைகளை மீறிவிடவே கூடாது.

உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் கணவர் மட்டும் உழைக்கிறார். அவரது சம்பாத்தியத்தில் சோறு, தண்ணீர் மட்டும் தான் குடித்து வாழ முடிகிறது, மற்றபடி பெரியளவுக்குத் தேவைகளை கணவரது சம்பாத்தியத்தில் ஒன்றும் செய்யமுடியாத சூழல் இருந்தால் அதை அப்படியே பொருந்திக் கொண்டு வாழவேண்டியதுதான். அவர்கள் அப்படியிருக்கிறார்கள்; இவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்று மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளத் தேவையில்லை.

இதற்கு மிகச் சிறந்த ஆதாரம், ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் அனைத்திற்கும் முன்மாதிரியாக அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். நபிகளார் நபித்துவ வாழ்வில் வறுமையும் ஏழ்மையும் தான் நிறைந்து காணப்படுகிறது. நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரது ஒருநாள் உணவு ஒரு பேரீச்சம் பழம் என்ற அளவில் தான் இருந்தது. வெறும் தண்ணீரையும் பேரீச்சம் பழங்ளையும் உண்டு, பாலைப் பருகித் தங்களது வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார்கள்.

சொகுசாக வாழ்வதற்காக, டீவி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மிஷின்  போன்றவை வாங்க வேண்டும் என்பதற்காகக் குடும்பப் பெண்களை சம்பாதிக்க அனுப்பக் கூடாது. நன்றாகவும் நவீன வசதிகளோடும் சொகுசாகவும் வாழ்வதற்கு ஆண்களே மார்க்கம் அனுமதித்த வழியில் கூடுதலாக சம்பாதிப்பதற்கு, உழைப்பதற்கு முயற்சிக்கலாம். இதில் தவறேதும் கிடையாது. இன்னும் சொல்வதெனில் மார்க்கம் அதை வலியுறுத்தவே செய்கிறது.

ஆனால் மனைவியை வேலைக்கு அனுப்பித்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவை ஒருக்காலும் எடுத்துவிடவே கூடாது. ஏனெனில் நபிமார்களும் நபிகள் நாயகமும் அவர்களது தோழர்களும் பட்ட சிரமங்களை இன்றைய காலத்தில் நம்மில் ஒருவர் கூட நிச்சயம் அடைந்திருக்க மாட்டார். அவ்வளவு பெரிய வறுமையில் தான் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இந்தக் குடும்பவியல் தலைப்பில் புரிந்து கொள்ளவேண்டும்.

சமூக பாதிப்பு

பெண்களைச் சம்பாதிப்பதற்காக வேலைக்கு அனுப்புவதால், சமூகத் திற்கும் நாட்டுக்கும் பொருளாதார ரீதியாக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. நாட்டு மக்களுக்கே நட்டம் தான். ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம் இன்று பலநாடுகளில் காணப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு ஆண் வேலைக்குச் சென்றால், மனைவி மக்கள், தன் குடும்பத்தையெல்லாம் காப்பாற்றிக் கொள்கிறான். அந்தக் குடும்பத்திற்கு ஒரு வேலை என்றாகி விடுகிறது.

ஆனால் நடைமுறையில் இன்றைக்குக் கணவர் வேலைக்குச் சென்றால், தனது செல்வாக்கில் மனைவியையும் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். அப்படியெனில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு வேலையாகி விடுகிறது. இப்போது, இந்தப் பெண்ணுக்குக் கிடைத்த வேலை வேறொரு ஆணுக்குக் கிடைத்தால் அவனைக் கொண்டு ஒரு குடும்பமே நன்றாக வாழும். பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஆண் களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுகிறது.

ஒரு ஆண் வேலைக்குச் செல்வது ஒரு ஆணுக்கு மட்டும் உரிய வேலை கிடையாது. ஒரு குடும்பத்தின் வேலையாகும். அப்படியெனில் ஒரு ஆணுக்கு வேலை கொடுத்தால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்துத் தான் வேலை கொடுக்கிறோம் என்றாகும். ஏனெனில் தாய், மனைவி போன்ற பெண்களைப் பார்ப்பதும் ஒரு ஆண்மகனின் வேலை தான். பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஒரு குடும்பத்திலுள்ள இருவர் வேலை செய்வார்கள். அதே நேரத்தில் இன்னொரு குடும்பத்திலுள்ள ஆணுக்கு வேலையில்லாத் திண்டாட்டமாக இருக்கும்.

அடுத்ததாக, பெண்களுக்கு இன்னும் ஒரு முக்கியமான பலவீனம் இருக்கிறது. பெண்கள் இயற்கையாகவே மாதவிடாய்க் காலத்தில் இயல்புக்கு மாற்றமாகவே இருப்பார்கள். டென்ஷனாகவும் கோபமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். மாதவிடாய் நேரத்தில் சாதாரண நாட்களில் இருப்பதை விடவும் அதிகமாக ஓய்வை எதிர்பார்ப்பார்கள். பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தார்கள் எனில் சிறிய வேலைகளைச் செய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் ஏதேனும் நிறுவனத்தில் வேலைக்குப் போகிற பெண்ணாக இருந்தால் மாதம் முழுவதும் எல்லா நாட்களிலும் வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும். நினைத்த நேரத்திற்கெல்லாம் ஓய்வை எடுக்க முடியாது. இந்நேரத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமான சுமைகளைத் தாங்கக் கூடாது என்றும் இலகுவாக வேலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களும் உடற்கூறு ஆய்வு செய்கிற விஞ்ஞானிகளும் சொல்லத்தான் செய்கின்றனர்.

அதேபோன்று பொதுவாக பெண்கள் 45 வயதை அடைய ஆரம்பித்தால் மாதவிடாய்க்கான சுரப்பிகள் குறையத் துவங்கி ஏறத்தாழ 50 வயதுக்குள் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடும். இந்தக் கால இடைவெளியில் உடல் ரீதியாக பல சிதைவு மாற்றங்கள் ஏற்படும். அப்போதெல்லாம் கடுமையாகக் கோபப்படுவார்கள். மாதவிடாய் நின்றதும் உடலிலுள்ள வியர்வை சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடும்.

இவ்வளவு பலவீனங்களுள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அனுப்புவது நியாயமற்ற செயல். இதில் நிறைய விஷயங்கள் உள்ளன. மாதவிடாய் மூலம் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று ஆய்வு செய்தால் இன்னும் அதிகமான பிரச்சனைக்குரிய காரணகளைச் சொல்கிறார்கள்.

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உள்ள பெண்கள் விஷயத்தில் கணவன்மார்கள், குடும்பத்தினர் கூடுதலான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான கோபம் தெரியும். அதையெல்லாம் சகித்துக் கொண்டு தான் வாழவேண்டும். எப்போதையும் விட அதிக பரிவையும் கரிசனத்தையும் அன்பையும் அவர்கள் மீது பொழிய வேண்டும்.

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்த்தால், இஸ்லாம் ஆண்கள் மீது பொருளீட்டும் பொறுப்பைச் சுமத்தியிருப்பது அறிவுப்பூர்வமான தாகவும் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை செய்யக் கூடியதாகவும் மனித குலத்திற்கு நன்மை செய்யக் கூடியதாகவும் இருப்பதை விளங்கிக் கொள்ளலாம்.