Tamil Bayan Points

17) பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது.

நாம் இது வரை எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் யாவும் ஒவ்வொரு பகுதியிலும் 30ஆம் நாள் பிறை பார்க்க வேண்டும். அவ்வாறு பிறை தென்படாத பட்சத்தில் அம்மாதத்தை 30 நாட்களாக நிறைவு செய்ய வேண்டும் என்பதை இரண்டாவது கருத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றன.
ஆனாலும் அந்த ஹதீஸ்களை நிராகரித்து விட்டு விஞ்ஞானக் கணிப்பின் படி தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் இந்த முடிவு சரியானதா என்பதை அறிவதற்கு முன்னால் இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

பிறை பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் அமைந்த இத்தனை ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவை தான். ஆனாலும் வானியல் அறிவு வளராத காலகட்டத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். இன்றைக்கு வானியல் அறிவு பெருகியுள்ள சூழ்நிலையில் அதை ஏற்பது தான் சரி என்று அவர்கள் வாதிடுகின்றார்கள்.

வானியல் அறிவு வளர்ச்சி பெறாத காலத்துக்கு மட்டுமே பிறை பார்த்தல் பொருந்தும். இன்றைய காலத்துக்குப் பொருந்தாது என்பது உங்கள் சொந்த யூகமா? அல்லது அல்லாஹ்வோ அவனது தூதரோ இவ்வாறு கூறியுள்ளார்களா? என்று நாம் அவர்களிடம் கேட்டால் எங்கள் சொந்த யூகமல்ல. அல்லாஹ்வின் தூதர் தான் இதைக் கூறியுள்ளார்கள் என்று கூறி கீழ்க்கண்ட நபிமொழியை எடுத்துக் காட்டுகின்றனர்.

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. வானியலையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு தடவை 29 ஒரு தடவை 30 என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1913

இது தான் இவர்கள் தமது வாதத்தை நிறுவிட எடுத்து வைக்கும் ஆதாரம்.

இந்த ஆதாரத்திலிருந்து இவர்கள் எடுத்துக் வைக்கும் வாதம் என்ன?

எழுதவும் தெரியாத வானியலையும் அறியாத சமுதாயமாக நாம் இருந்தால் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அந்த நிலையை விட்டும் சமுதாயம் உயர்ந்து விட்டால் அப்போது பிறை பார்க்கத் தேவையில்லை. வானியல் அறிவின் மூலமே தீர்மானம் செய்து கொள்ளலாம். வானியல் அறிவு அன்றைக்கு இல்லாததால் தான் பிறை பார்க்கும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தனர். அந்தக் காரணம் இன்று இல்லாததால் நாம் கணித்தே முடிவு செய்யலாம் என்பது தான் இவர்களின் வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட காரணத்தைக் கூறி ஒரு சட்டத்தைக் கூறியிருந்தால் அந்தக் காரணம் நீங்கும் போது அந்தச் சட்டமும் நீங்கி விடும் என்ற வாதத்தை நாம் மறுக்க மாட்டோம். மறுக்கவும் கூடாது. ஆனால் இந்த ஹதீஸில் அத்தகைய காரணம் கூறப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

இந்த ஹதீஸுக்கு தவறான பொருளைத் தருவதால் தான் இப்படி ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

அதை இங்கே அலசுவோம்.

இன்னா உம்மதுன் உம்மியதுன் என்பதற்கு நாம் உம்மி சமுதாயமாவோம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது சரியான மொழி பெயர்ப்பு தான். (ஆனாலும் இதன் கருத்தாழத்தை இவர்கள் கவனிக்கவில்லை என்பதைப் பின்னர் விளக்கிக் காட்டுவோம்.)

அடுத்ததாக லா நக்துபு என்பதற்கு நாம் எழுதுவதை அறிய மாட்டோம்’ என்று மொழி பெயர்த்துள்ளனர். இந்த மொழி பெயர்ப்பும் சரியானது தான்.
அடுத்ததாக வலா நஹ்சுபு என்ற வாசகத்துக்கு வானியலையும் அறிய மாட்டோம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இவ்வாறு மொழி பெயர்த்ததன் அடிப்படையில் தான் தங்கள் வாதத்தையே இவர்கள் நிலை நிறுத்துகிறார்கள். இந்த மொழி பெயர்ப்பு தவறு என்பது நிரூபணமானால் இவர்களின் வாதமே சுக்கு நூறாக நொறுங்கிப் போய்விடும்.

நஹசுபு என்று வார்த்தை இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஹஸிப என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ஹிஸாப் என்ற சொல்லும் இதிலிருந்து பிறந்ததாகும்.

இன்றைக்குச் சிலர் ஹிஸாப் என்ற வார்த்தையை வானியல் என்ற பொருளிலும் கையாண்டு வருகின்றனர். வானியல் அறிவு பெருகிவிட்ட காலத்தில் அதற்கென ஒரு வார்த்தை அவசியம் எனக் கருதி ஹிஸாப் என்ற வார்த்தையை வானியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் ஹிஸாப் என்ற வார்த்தை வானியலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதே இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் ஒரு வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட காலத்தில் அதற்கு அந்தப் பொருள் இருந்ததா? என்பதைக் கவனிப்பது அவசியம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

துப்பாக்கி என்பது ஒரு வகையான ஆயுதம் என்பதை நாம் அறிவோம். துப்பாக்கி என்ற வார்த்தை ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அந்த ஆயுதம் என்று நாம் பொருள் செய்து கொள்வோம். 

ஆனால் திருக்குறளில் துப்பார்க்கு எனத் துவங்கும் குறளில் துப்பாக்கி என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தைக்கு ஆயுதம் என்று பொருள் கொள்ள மாட்டோம். வள்ளுவர் காலத்தில் இந்த ஆயுதம் இருக்கவில்லை. அல்லது இந்த ஆயுதத்தைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதில்லை. உணவாக ஆக்கி’என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் திருக்குர்ஆனிலோ, நபிமொழியிலோ பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்தப் பொருளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் நான்கு பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

{C}1.         {C}போதும், போதுமானது, போதுமானவன் என்பது போன்றவை முதலாவது பொருள். (உதாரணம்: அல்லாஹ் உனக்குப் போதுமானவன்.) 2.206, 2.173, 5.104, 8.62, 8.64, 9.59, 9.68, 9.129, 39.38, 58.8, 65.3, ஆகிய பதினோரு இடங்களில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் மேற்கண்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2. மனதால் நினைப்பது, கருதுவது, தீர்மானிப்பது போன்றவை இரண்டாவது பொருளாகும்.

2.214, 2.273, 3.78, 3.142, 3.169, 3.178, 3.180, 3.188, 5.71, 7.30, 859, 9.16,14.42, 14.47, 18.9, 18.18, 18.102, 18.104, 23.55, 23.115, 24.11, 2415, 24.39, 24.57, 25.44, 27.44, 27.88, 29.2, 29.4, 33.20, 39.47, 43.37, 43.80, 45.21, 47.29, 58.18, 59.2, 59.14, 6.4, 65.3, 75.3, 75.36, 76.9, 90.5, 90.7, 104.3
இந்த வசனங்களில் எல்லாம் மனதால் நினைப்பது, கருதுவது என்ற பொருளில் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

3.கஹ்ப் அத்தியாயத்தில் ஓர் இடத்தில் மட்டும் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை வேதனை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4.திருக்குர்ஆனில் இதைத் தவிர உள்ள ஏனைய இடங்களில் இந்த வார்த்தை கணக்கு,எண்ணிக்கை, கேள்வி கணக்கு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இறைவன் விரைந்து கேள்வி கணக்கு கேட்பவன், கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள்,உங்களிடம் கணக்கு கேட்பான், கணக்கின்றி வாரி வழங்குபவன், சூரியனும்,சந்திரனும் ஒரு கணக்கின் படி இயங்குகின்றன என்பது போன்ற இடங்களில் இந்த வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2.202, 2.212, 2.284, 3.19, 3.27, 3.37, 3.199, 4.6, 4.86, 5.4, 6.52, 6.62, 6.69, 10.5, 13.18, 13.21, 13.40, 13.41, 14.41 14.51, 17.12, 17.14, 21.1, 21.47, 23.117, 24.38, 24.39, 26.39, 33.39, 38.16, 38.26, 38.39, 38.53, 39.10, 40.17, 40.27, 40.40, 55.5, 65.8, 69.20, 69.26, 78.27, 78.36, 84.8, 88.26 ஆகிய 46இடங்களில் கணக்கு, எண்ணிக்கை, கணக்குக் கேட்டல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் வானியல் என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆராய்ந்தால் அவர்கள் எந்த இடத்திலும் ஹிஸாப் ஹஸிப போன்ற வார்த்தைகளை வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தியதே இல்லை.

உதாரணத்திற்கு புகாரியில் 25, 393, 1400, 2946, 6924, 7285, 103, 1500, 6979, 7197, 2412, 2641, 2718, 2933, 3221, 3415, 3700, 4115, 6392, 7489, 4666, 4712, 4939,6536, 6537, 5253, 5312, 5350, 5655, 5705, 5752, 472, 6541 ஆகிய இடங்களில் கணக்கு எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற இடங்களில் நன்மையை நாடி காரியமாற்றுதல், கருதுவது, போதுமானது,பாரம்பரியம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணக்கு, எண்ணிக்கை என்ற பொருளில் அல்லாது மேற்கண்ட பொருளில் சுமார் 125 இடங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கணக்கு, எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்ட இடங்களானாலும் மற்ற 125இடங்களானாலும் எந்த இடத்திலும் வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.

மேற்கூறிய இடங்களில் வீம்புக்காக யாராவது வானியல் என்று பொருள் செய்தாலும் அது பொருந்தக் கூடியதாக இருக்காது என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக அல்லாஹ் உங்களிடம் கணக்கு கேட்பான் என்பதற்கு வானியலைப் பற்றி கேட்பான் என்று கூற முடியாது. அது போல் அல்லாஹ் கணக்கின்றி கொடுப்பவன் என்பதற்கு வானியல் இல்லாமல் கொடுப்பான் என்று கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வானியலைக் குறிப்பிட ஹிஸாப் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை எனும் போது, ஆயிரக்கணக்கான தடவை இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தும் ஒரு தடவை கூட வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை எனும் போது லா நஹ்சுபு என்ற வார்த்தை இடம் பெறும் இந்த ஹதீசுக்கு மட்டும் வானியல் அறிய மாட்டோம் என்று பொருள் கொள்வது ஏற்புடையதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வார்த்தை வானியல் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பது மட்டுமே இவ்வாறு பொருள் கொள்வதை நிராகரிக்க ஏற்றதாகி விடும். ஆனால் இது தவிர வேறு காரணங்களாலும் வானியல் அறிய மாட்டோம்’ என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாகும்.

நாம் உம்மி சமுதாயமாவோம் என்று ஹதீஸின் வாசகம் துவங்குகிறது. உம்மு என்றால் தாய் என்று பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது நேரடிப் பொருள். தாயைச் சார்ந்திருக்கும் கைக்குழந்தைக்கு எப்படி கல்வி ஞானம் இருக்காதோ அது போன்ற நிலையில் இருக்கும் சமுதாயம் என்ற கருத்தில் உம்மி சமுதாயம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக எழுதவும் படிக்கவும் தெரியாத சமுதாயம் என்ற கருத்தில் இது பயன்படுத்தப்படும்.

நாம் உம்மி சமுதாயம் (அதாவது பாமர சமுதாயம்) என்று கூறிவிட்டு பாமரத்தனத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும்.

எழுதவும், படிக்கவும் தெரியாத ஒரு சமுதாயத்திடம் போய் நீங்கள் வடிகட்டிய பாமரர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எழுதவும் தெரியவில்லை. கம்யூட்டர் சயின்சும் தெரியவில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். எழுதவும் தெரியவில்லை; படிக்கவும் தெரியவில்லை என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.

நீங்கள் பாமரர்களாக இருக்கிறீர்கள் என்று கூறிய பிறகு அதை உறுதி செய்ய சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லையே என்று தான் கூறுவோம்.

இது போல் தான் நாம் உம்மி சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பம் செய்கிறார்கள். அதாவது ஏதுமறியாத சமுதாயம் என்று ஆரம்பம் செய்கிறார்கள். எதனால் உம்மியாக இருக்கிறோம் என்பதை இரண்டு காரணங்களைக் கொண்டு நிரூபிக்கிறார்கள். ஒன்று நமக்கு எழுதத் தெரியாது. மற்றொன்று நமக்கு ஹிஸாப் தெரியாது. ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று பொருள் கொள்வோமானால் அது எப்படிப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்?

இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா?

எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு நமக்கு இல்லை. அது போல் சாதாரணமான ஹிஸாப் (அதாவது எண்ணிக்கை) என்ற அறிவும் இல்லை. எனவே நாம் உம்மி சமுதாயமாக உள்ளோம் என்று கூறினால் அது பொருந்திப் போகிறது.

ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதிய பொருளைக் கொள்வதை விட எண்ணிக்கை என்று அன்றைய காலத்தில் இந்த வார்த்தைக்கு கொடுக்கப்பட்டு வந்த சாதாரண பொருளைச் செய்து பாருங்கள். எவ்வளவு அற்புதமாக பொருந்திப் போகிறது என்பதை உணர்வீர்கள்.

அதாவது எழுதவும் தெரியாத எண்ணிக்கையும் தெரியாத உம்மி சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பது தான் இதன் பொருள்.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களில் பலருக்கு ஒன்று இரண்டு என்று வரிசையாக எண்ணத் தெரியாது. இன்றைக்கும் கூட சுவற்றில் தினம் ஒரு கோடு வரைந்து பால் கணக்குப் பார்க்கக் கூடியவர்கள் உள்ளனர். 1400ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தில் எண்ணத் தெரியாதவர்கள் இருந்ததில் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

புகாரி அல்லாத மற்ற நூல்களில் உள்ள அறிவிப்புகள் எண்ணத் தெரியாத சமுதாயம் என்ற கருத்திலேயே இவ்வாசகம் பயன்படுத்தப்பட்டதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது (பத்து விரல்களையும் விரித்துக் காட்டி) இப்படி, (மீண்டும் விரித்துக் காட்டி) மீண்டும் இப்படி (மீண்டும் விரித்துக்காட்டி) மீண்டும் இப்படி” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம்

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் இப்படியும் இருக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி 29 வரை குறிப்பிட்டார்கள். இரு கைகளையும் மூன்று தடவை விரித்து மடக்கினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அஹ்மத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைவிரல்களையும் விரிக்கிறார்கள். மீண்டும் இரு கைவிரல்களை விரிக்கிறார்கள். மீண்டும் இரு கை விரல்களை விரிக்கும் போது ஒரு விரலை மடக்கிக் கொள்கிறார்கள். மறுபடியும் அதே போல் மூன்று தடவை கைவிரல்களை விரித்துக் காட்டுகிறார்கள் இது தான் மாதம் எனவும் கூறுகிறார்கள்.

ஒன்று, இரண்டு என்று முப்பது வரை கூட எண்ணத் தெரியாத சமுதாயத்துக்கு முதலில் பத்து விரல்களைக் காட்டுகிறார்கள். மீண்டும் பத்து விரல், மீண்டும் பத்து விரல் காட்டி விளக்குகிறார்கள். அடுத்த மாதத்துக்கு ஒரு விரலை மடக்கிக் காட்டுகிறார்கள். எண்ணத் தெரிந்த சமுதாயமாக இருந்தால் 29 அல்லது 30 என்று கூறினால் போதாதா? (சில சமயங்களில் அதைப் புரிந்து கொள்ளும் மக்கள் இருந்த சபையில் அப்படியும் கூறியுள்ளார்கள்) எண்ணத் தெரிந்த சமுதாயத்திடம் போய் முப்பது என்பதை மூன்று தடவை விரல்களைக் காட்டி யாரேனும் விளக்குவதுண்டா?

எண்ணத் தெரிந்தவரிடம் முப்பது ரூபாய் கடன் கேட்கும் போது மூன்று தடவை விரல்களை விரித்துக் காட்டி இந்த ரூபாயையும் இந்த ரூபாயையும் இந்த ரூபாயையும் தா என்று கேட்டால் நமக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அவன் நினைப்பான். நாம் ஒரு கடைக்குச் சென்று ஒரு பொருளின் விலை கேட்கிறோம். அதற்கு கடைக்காரர் தனது விரல்களை ஐந்து தடவை விரித்துக்காட்டி இவ்வளவு விலை என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்?

ஆனால் அதே சமயம் எண்ணத் தெரியாதவர்களிடம் இப்படித் தான் கேட்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களுக்கு வானியல் தான் தெரியாது. மற்றபடி எண்ணிக்கையெல்லாம் அத்துபடி என்று வாதிடுவோமேயானால்,எண்ணிக்கை அறிந்த சமுதாயத்திடம் போய் ஒருவன் 29ஐயும் 30ஐயும் இப்படிக் கூறினால் அவனது நிலை என்னவாகும்? அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதப்பட்டாலும் பரவாயில்லை நான் இப்படித் தான் பொருள் செய்வேன் என்று எந்த முஸ்லிமும் சொல்ல மாட்டான். எனவே எப்படிப் பார்த்தாலும் மேற்கண்ட ஹதீஸிற்கு வானியலை அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொள்வது எந்த வகையிலும் ஏற்றதல்ல.

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள்.

நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள் என்பதே அந்த நபிமொழி. 

இந்த நபிமொழியில் மேகமூட்டமாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கணித்துக் கொள்ளச் சொல்லி விட்டதால் வானியல் கணிப்பை ஏற்கலாம் என்று வாதிடுகிறார்கள்.

இவ்வாறு கூறுவது அவர்களுடைய வாதத்திற்கே முரண்பாடானது என்பதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை.

நாம் உம்மி சமுதாயம். நமக்கு வானியல் தெரியாது என்று முந்தைய வாதத்தில் கூறினார்கள். வானியல் தெரியாத அந்த சமுதாயம் மேகமூட்டம் ஏற்படும் போது கணித்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்றும் கூறினார்கள். இவர்களது வாதப்படி வானியல் தெரியாத சமுதாயத்திடம் கணித்துக் கொள்ளுங்கள் என்று எப்படிக் கூற முடியும்?

இவர்கள் ஆதாரமாக எடுத்துக் காட்டும் ஹதீஸில் நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்த இடத்தில் ஃபக்துரூ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாசகத்துக்கு எண்ணிக்கையை எண்ணுதல், மதிப்பிடுதல் என்றெல்லாம் பொருள் உண்டு.
எண்ணிக்கை கூட தெரியாதவர்கள் வாழ்ந்த ஒரு சமுதாயத்திடம் மதிப்பிட்டுக் கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மற்ற அறிவிப்புகளில் மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். ஷஃபானை முப்பது நாட்கள் என்று முழுமையாக்குங்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. அவற்றை முன்னரே நாம் எடுத்து எழுதியுள்ளோம்.

அந்த அறிவிப்புகளையும் கவனத்தில் கொண்டு, எந்தச் சமுதாயத்திடம் இது முதலில் கூறப்பட்டதோ அந்தச் சமுதாயம் கணித்து முடிவு செய்யும் நிலையில் இருந்ததா என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த ஹதீஸை ஆராய்ந்திருந்தால் ஃபக்துரூ என்பதற்கு மேகமாக இருக்கும் போது முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்வதானால் மற்றொரு அறிவிப்பில் ஃபக்துரூ என்பதுடன் ஸலாஸீன என்ற வாசகமும் சேர்ந்து இடம் பெற்றுள்ளது. ஸலாஸீன என்றால் முப்பதாக என்று பொருள். முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்தால் அது பொருத்தமாக உள்ளது. முப்பது நாட்களாகக் கணியுங்கள் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுகிறது. எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறிய பிறகு அங்கே கணிப்புக்கு என்ன வேலை இருக்கும்?

லா நஹ்ஸிபு என்பதற்கு வானியலை அறிய மாட்டோம் என்று ஒரு வாதத்துக்காக பொருள் கொண்டாலும் இவர்களுக்கு எதிராகத் தான் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

நாம் உம்மி சமுதாயம் என்று இந்த ஹதீஸ் துவங்குகிறது. நாம் எழுதுவதை அறிய மாட்டோம். ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்று ஒரே தொடராகக் கூறப்பட்டுள்ளது. எழுதுவதை அறிய மாட்டோம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்கிறோமோ அதே போன்று தான் ஹிஸாபை அறிய மாட்டோம் என்ற வாசகத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

எழுதுவதை அறிய மாட்டோம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்குமே எழுதத் தெரியாது என்ற பொருள் அல்ல. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதத் தெரிந்தவர்களும் இருந்தார்கள். குர்ஆன் எழுதப்பட்டது எழுதத் தெரிந்த நபித்தோழர்களால் தான்.

அதே போல் ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் வானியல் தெரிந்தவர்களும் இருந்தார்கள் என்று தான் அர்த்தமாகிறது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளின் படி வானியல் கணிப்பு தெரிந்த சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த போதிலும் அவர்களிடம் கேட்டு பிறையைத் தீர்மானிக்காமல் பிறையைப் பார்க்க வேண்டும்; அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே கணிப்பு தெரிந்தவர்களாக சிலர் இருந்தாலும் அதன் அடிப்படையில் செயல்படக் கூடாது ஓட்டு மொத்த சமுதாயமும் என்றைக்கு வானியல் மேலோங்கி இருக்கிறதோ அப்போது தான் வானியல் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தான் இவர்கள் வாதப்படி கூற வேண்டும். இது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை.