Tamil Bayan Points

பாலியல் குற்றங்களும் பல்வேறு தண்டனைகளும்.?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 11, 2019 by

பாலியல் குற்றங்களும் பல்வேறு தண்டனைகளும்

சமீபத்தில் கோவை துடியலூரில் சிறுமி ரிதன்யஸ்ரீ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களிடத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் பிள்ளைகளை யாரை நம்பித்தான் வெளியே அனுப்புவது? பெண் பிள்ளைகளுக்கு பள்ளிப் படிப்பு தேவைதானா? கல்லூரிகளுக்கு பெண் பிள்ளைகளை ஏன் அனுப்ப வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விக்கணைகள் பெற்றோர்களுக்கும், ஒட்டு மொத்த மக்களுக்கும் எழுந்து கொண்டிருக்கின்றது.

மொபைல் ஃபோன்களின் வாயிலாக பெண்கள் ஏமாற்றப்பட்டு மான, மரியாதையையும், கற்பையும் பறிகொடுத்திருக்கின்றார்கள் என்ற அதிர்ச்சி செய்திகள் நீடூழி காலம் ஓயாமல் வந்து கொண்டிருக்கின்றது. பாலியல் கொடூரன்களுக்கு இந்தியாவில் என்ன தண்டனை வழங்கப்படுகிறது? சில ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தான் வழங்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் என்ன தண்டனை கொடுக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, நீங்களே முடிவு செய்யுங்கள்!

இந்த மனித மிருகங்களுக்கு, காமக் கொடூரர்களுக்கு, அயோக்கிய கும்பலுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதை ஒட்டு மொத்த மக்களும் தீர்மானித்து அரசிடம் முறையிட கடமைப்பட்டிருக்கின்றோம். பொள்ளாச்சியில் பெல்ட்டால் அடிக்காதீங்க என கதறும் பெண்ணின் சோகக்குரலில் இருந்து தமிழகம் மீள முடியாத நிலையில் இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 200 க்கும் அதிகம் என்கிறார்கள் ஒரு சாரார். வீடியோக்கள் 1000 இருக்கலாம் என்கிறது காவல்துறை.

பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் பெண்களைக் கடவுளாக, தேசமாக, நதியாக வழிபாடு வேறு. ஒருபுறம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அநீதி வெளியே தெரிவதில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஒரு பெண் தனக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்வதற்கு முதல் தடையாக இருப்பது சமூகம் வகுத்திருக்கும் நியதிகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள். எத்தனையோ பெண்கள் மேற்கூறிய காரணங்களால் வாயடைக்கப் படுகின்றனர். அதையும் மீறி சில தைரியமான பெண்கள் தங்களது எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்கின்றனர்.

இப்படி பாலியல் பலாத்கார வழக்குகளில் சுமார் 1,33,000 வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. இவற்றிற்கெல்லாம் எப்போது தீர்வு கிடைக்கும் என்பதை நீதிமன்றத்தால் கூட சொல்ல முடியாது. இது இப்படி இருக்க வெளியே யாருக்கும் தெரியாமல் சிதைக்கப்பட்ட குரல்கள் எத்தனை இருக்கும்? சட்டங்கள் தான் இங்கே மிகப்பெரிய சிக்கல். பாதிக்கப்பட்டவர்களை நோகடிக்கும் நீதி அமைப்பு இரண்டாம் காரணம்.

இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது? ஆயுள்தண்டனை அல்லது அபூர்வமாக மரணதண்டனை. பொள்ளாச்சி விவகாரத்தில் கைதாகியுள்ள கயவர்களின்மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

போக்சோ சட்டம்

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இது 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. போக்சோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம். இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகவும் உள்ளது. கூடவே அபராதமும் விதிக்கப்படும்.

போக்சோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6 படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு. போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம்.

அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு. போக்சோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிரை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போக்சோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். போக்சோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். இது இணைய தளம், கணினி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.

போக்சோ சட்டம் பிரிவு 18ன் படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத் திருத்தத்தை அவசரச் சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்தவண்ணம் தான் இருக்கின்றன. பெண்களின் மீதான வன்முறை மறைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். பல ஆண்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. ஆகவே, பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் ஆதரவாக இருங்கள். உங்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் நிம்மதியைப் பெறலாம் என உங்கள் குழந்தைகளை உணரச் செய்தாலே இதிலிருந்து தப்பிவிடலாம்.

ஆனால் வெளிநாடுகளில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கயவர்களுக்கு கடும் தண்டனைகளையும், வேதனைகளையும் கொடுத்து குற்றத்தை குறைத்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகளைப் பெற்றுக் கொடுத்தும் வருகின்றார்கள். அப்போதுதான்  பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்ற எண்ணத்தில் இதுபோன்ற சட்டங்களை பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டு கொடுக்கப்படுகின்றது.

வட கொரியா

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியாவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை வழங்கப்படுவதில்லை. உடனடி தண்டனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணால், பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய நபர் தலையில் சுட்டுக்கொல்லப்படுகிறார்.

ஈரான்

ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்

ஆப்கானிஸ்தான்

நான்கு நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணால், பலாத்கார குற்றவாளி தலையில் சுட்டுக்கொல்லப்படுகிறார்.

சவுதி அரேபியா

சவுதி அரேபியால் பாலியல் குற்றவாளி என்று நிரூபணம் ஆனால் சில நாட்களிலேயே பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்படுவார்.

எகிப்து

பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி தூக்கிலிடப்படுவார்.

சீனா

ஒரு கட்சி ஆட்சி முறையைக்  கொண்ட சீனாவில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் சில பாலியல் குற்றவாளிகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கப்படும் தண்டனையும் வழங்கப்படுகிறதாம்.

நெதர்லாந்து

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், பிரெஞ்ச் முத்தம் உள்பட எந்த வகையான பாலியல் குற்றங்களும், பலாத்காரமாகவே கருதப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 4 வருடம் முதல் 15 வருடங்கள் வரை குற்றவாளிகளின் வயதைப் பொருத்து தண்டனை வழங்கப்படுகிறது. மற்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்களை வன்கொடுமை செய்தால், பெரும்பாலான நாடுகள் அதை பெரிதாகஎடுத்துக்கொள்வதில்லை ஆனால், பாலியல் தொழிலாளிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கும் 4 வருடம் சிறைதண்டனை நெதர்லாந்து விதிக்கப்படுகிறது.

பிரான்ஸ்

பிரான்ஸ்  நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்பவர்களுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுவதுடன், அவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாவார்கள். மேலும் வன் கொடுமையால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பொறுத்து 30 வருடங்கள் கூட தண்டனை கிடைக்கும்.

ரஷ்யா

பலாத்காரத்திற்கு உள்ளானவ ர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பொறுத்து, 3 வருடங்களுக்கு மேல் 30 வருடம் வரை சிறை தண்டனை பாலியல் குற்றவாளிகளுக்கு ரஷ்யாவில் வழங்கப்படுகிறது.

துபாய்

துபாய் நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தினால், அவர்கள் 7 நாட்களில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுவார்கள்.

நார்வே

பலாத்காரதிற்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பொறுத்து, 4 வருடம் முதல் 15 வருடம் வரை சிறை தண்டனை பாலியல் குற்றவாளிகளுக்கு நார்வேயில் வழங்கப்படுகிறது.

அமெரிக்கா

அமெரிக்காவில் மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என இரண்டு விதமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. தேசிய சட்டப்படி என்றால், 30 வருடம் வரை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. மாநில சட்டப்படி ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு தண்டனை மாறுகிறது.

இஸ்ரேல்

பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு நான்கு வருடம் முதல் 16 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

எனவே இந்தியாவிலும் தண்டனைகளை கடுமையாக்கி தவறு செய்பவர்களை தார்மீக அடிப்படையில் தண்டிக்க வேண்டும்! பாதிக்கப்பட்டவர்களின் குரல் வலை நசுக்கப்படாமல், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கப்படல் வேண்டும்! குற்றம் நடைபெற்றவுடன் உடனே வீரியமாக களத்திலே இறங்கி குற்றவாளிகளுக்கு தண்டனைகள் பெற்றுத் தருவதற்கு போராட வேண்டும். அவ்வாறு செய்தால் பல குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தண்டனையிலிருந்து இலகுவாக தப்பித்து, துணிச்சலாக, திமிராக நடக்காமல் இருக்கவும், மீண்டும் அந்த குற்றம் நடக்காமல் இருக்கவும் பாதுகாப்பாக அமையும்.

திருக்குர்ஆன் கூறும் அழகிய அறிவுரை!

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்!

(அல்குர்ஆன் 2:179)

Source:unarvu(12/04/19)