Tamil Bayan Points

பரேலவிசத்தின் பயங்கரவாதம்

பயான் குறிப்புகள்: பிற கொள்கைகள்

Last Updated on July 26, 2021 by

பரேலவிசத்தின் பயங்கரவாதம்

இறைத்தூதர் இறக்கவில்லையாம்

அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி.

அவர் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் தான் உள்ளார்கள் என்ற ஒரு பயங்கர வாதத்தை வைத்துள்ளார். இது குர்ஆனுக்கு எதிரான யுத்தப் பிரகடனமாகும். அப்பட்டமான இறை நிராகரிப்பு வாக்குமூலமாகும்.

அவரது இந்தக் கூற்றை நம்பி, அவரது பாட்டையில் செல்பவர் நிரந்தர நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவார் என்பதால் இந்த நரகத்தின் ஏஜெண்டிடமிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவரது இந்த அபத்தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். அப்துல்லாஹ் ஜமாலியின் அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் திருத்தூதரான நபி அவர்கள் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விடவும் மேலானவர்களாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்:33:6.)

இவ்வசனத்தின் மூலம் பயனுள்ள பல பாடங்களை அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான். தன்னை ஒரு முஃமின் என்று பறைசாற்றிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தன்னுடைய உயிரைவிடவும் உயர்ந்தவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்காதவன் உண்மையான முஃமின் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றவர்களல்ல. நமது உயிரை விடவும் உயர்ந்தவர்கள். ஆனால் நம்மிலே புறப்பட்டிருக்கின்ற ஒரு கூட்டம் நன்றாய் கதை அளந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் உள்ளங்களில் விஷ விதைகளைத் தூவப் பார்க்கின்றது. அவற்றில் ஒன்று:

நபிகள் நாயகம் (ஸல்) நம்மைப் போன்றவர்களே!

இதைக் கூறுகின்ற போது அவர்களின் தொனியில் அலட்சியம் தென்படுகின்றது. இதைக் கேட்கின்ற உண்மையான முஃமின் உள்ளம் புண்படுகின்றது. இந்த அபத்தமான கூற்றுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பதில் கொடுத்துவிட்டார்கள்.

உங்களில் யாரும் என்னைப் போன்றில்லை.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ, முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது யாரைப் பார்த்து? ஸஹாபாப பெருமக்களைப் பார்த்து. ஸஹாபா பெருமக்கள் யார்? நபிமார்களுக்கு அடுத்த மனித சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் கூறுவதாவது:

இறைவன் இவர்களைப் பொருந்திக் கொண்டான். இவர்களும் இறைவனைப் பொருந்தினார்கள். (அல்குர்ஆன்:98:8.)

இத்தனை சிறப்பும், உயர்வும் பெற்றுள்ள ஸஹாபா பெருமக்களே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்றில்லை என்கிறபோது, தற்போது புறப்பட்டிருக்கிற இக்கூட்டம் எம்மாத்திரம்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நமக்குமிடையே இருக்கின்ற வேறுபாடுகள் ஏராளம். அதற்குண்டான ஆதாரங்கள் தாராளம்.

நமது விளக்கம்

அல்லாஹ்வின் தூதரை மதிப்பது என்றால் அவர்களுடைய கட்டளையை முழுமையாகப் பின்பற்றுவது தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:3:31.)

ஆனால் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கின்றோம் என்று சொல்கின்ற இந்த பரேலவிச (ஆ)சாமிகள் நபி (ஸல்) அவர்களது கட்டளைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் மாற்றுமதக் கலாச்சாரம் கூடாது என்று கூறினால் இவர்கள் கோயில் திருவிழாக்களைப் பின்பற்றி சந்தனக்கூடு, யானை வழிபாடு என அத்தனையும் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை நாம் செயல்படுத்தினால் அதை இவர்கள் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, அதைச் செயல்படுத்துபவர்களை நரம்புத் தளர்ச்சி என்று கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள். இவர்கள் தான் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிச்கிறார்களாம்.

அதே சமயம் இவர்கள் விரலை வெட்டி விடுவோம் என்று சொன்னாலும், உயிரை எடுத்து விடுவோம் என்று சொன்னாலும் அதற்கு அஞ்சாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அந்த நபிவழியை செயல்படுத்துகின்றனர். யார் நபியை உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள்; யார் அவமதிக்கின்றார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மநாபி (ஸல்) அவர்கள் மனிதரே!

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்று நாம், நமது சுய விருப்பப்படி கூறுவது போல் ஒரு போலித் தோற்றத்தை இந்த பரேலவி பயங்கரவாதி ஏற்படுத்துகின்றார்.

உண்மையில் இது எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்ற கூற்றாகும்.

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்:18:110.)

இதைத் தான் நாம் கூறுகின்றோம். நமக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் உள்ள வேறுபாடு வஹீ என்ற இறைச்செய்தியாகும். அந்த உயர்ந்த தகுதியை இந்த உலகத்தில் அவர்களுக்குப் பின் வேறு யாரும் பெற முடியாது என்று அடித்துச் சொல்கிறோம். இப்படிக் குர்ஆன் கூறுகின்ற வேறுபாட்டுடன் புரிந்திருக்கின்ற நம்மைத் தான் சுய விருப்பத்தின் அடிப்படையில் கூறுவதாக விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். இதிலிருந்து இவர்களது விஷமத்தனத்தை, விஷச் சிந்தனையைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் இல்லை என்பதற்கு புகாரியிலிருந்து ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார்கள். அந்த ஆதாரத்திலும் அவர்கள் ஒரு பயங்கர மோசடியைச் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டு, மற்றொரு பகுதியை இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இது தொடர்பாக புகாரியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்!” என்று (மக்களிடம்) கூறியபோது, “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்” என்றோ “உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்” என்றோ கூறினார்கள்.

நூல்: புகாரி-1961

இந்த ஹதீஸ் புகாரியில் 1922, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 6851, 7241, 7242, 7299 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் பல இடங்களிலும் பதிவாகியுள்ளது.

இவை அனைத்திலும், எனக்கு என்னுடைய இறைவன் உணவளிக்கிறான்; குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுக்கின்றான் (அதாவது, நான் பட்டினி கிடக்கவில்லை) என்பதையும் சேர்த்தே சொல்கின்றார்கள். இதை வசதியாக, தங்களுக்குச் சாதகமாக மறைத்துவிட்டு ஹதீஸ் முதல் பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளனர். ஹதீஸில் உள்ளதை மறைப்பது மோசடியாகும்.

இத்தகைய மோசடி செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகள், நபிமார்களுடைய சாபமும் இறங்குகின்றது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

(அல்குர்ஆன்:2:159.)

இதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்ப்போம்.

வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இவர்களாகவே நபி (ஸல்) அவர்கள் மனிதர் அல்ல என்று முடிவெடுத்துவிட்டு அதற்குத் தக்க குர்ஆன், ஹதீஸை வளைக்க முயற்சிக்கின்றனர். அதற்குத் தான் ஹதீஸின் ஒரு பகுதியை விட்டு விட்டு, மற்றொரு பகுதியை மட்டும் ஆதாரமாக எடுக்கின்றனர். ஆனால் அல்லாஹ் தெளிவாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்று ஆணித்தரமாகச் சொல்கின்றான்.

மர்யமுடைய குமாரர் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் கடவுளாக ஆக்கிவிட்டனர். இதை அல்லாஹ் கண்டிக்கிறான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

(அல்குர்ஆன்:5:75.)

ஈஸா நபி அவர்களும், அவர்களது தாயாரும் மனிதர்கள் தான். அவர்களுக்குப் பசி, தாகம் இருந்தது. அதனால் உணவு சாப்பிட்டார்கள். சாப்பிட்ட அவர்கள் மல, ஜலம் கழித்தார்கள். அவ்விருவரும் கடவுளாக முடியாது என்பதற்கு இவ்விரு குறைபாடுகளையும் ஆதாரமாகக் காட்டுகின்றான். உணவு உட்கொள்ளுதல் என்பது நேர்முக ஆதாரம். சாப்பிட்டு விட்டு மலஜலம் கழித்தாக வேண்டும் என்ற மறைமுக ஆதாரத்தையும் மக்களுக்குப் புரியும் படி தெளிவாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

இதே விஷயத்தைத் தான் நபி (ஸல்) அவர்களுக்கும் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

(அல்குர்ஆன்:25:7.)

நபி (ஸல்) அவர்களும் உணவு சாப்பிடுபவர் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இங்கு நபி (ஸல்) அவர்கள் உணவு சாப்பிடுபவர்கள் என்று நேரடியாகவும், மலஜலம் கழிப்பவர்கள் என்று மறைமுகமாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். சாப்பிடுபவர் கடவுளாக இருக்க முடியாது என்ற ஆதாரம் இதில் பெறப்படுவதுடன் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்ற கருத்தையும் இவ்வசனம் தெளிவாக விளக்குகின்றது.

நபிவழிச் சான்றுகள்

அல்குர்ஆனில் இதுபோன்று ஏராளமான சான்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைக் கூறியுள்ளோம். இனி, ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்பதற்குரிய சான்றுகளைப் பார்ப்போம். நபி (ஸல்) அவர்கள் தம்மை மனிதர் என்று பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்றார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகை யின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்களிடம், “இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)” என்றனர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, “ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன்.

ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, “உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-401

நபி (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. தொழுகையின் ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்களுக்கு மறந்து போனதை இது தெளிவுபடுத்துகின்றது. “உங்களைப் போன்ற மனிதன் தான்; உங்களைப் போலவே நானும் மறக்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது.

நூல்: புகாரி-813

இந்த ஹதீஸ் லைலத்துல் கத்ரு மறந்து போனதை விளக்குகின்றது.

இதுபோன்று புகாரி 482, 2358, 6967, 7169, 7181, 7185 ஆகிய ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தெரிவிக்கின்றன.

“அல்லாஹ்வே! முஹம்மது மனிதர் தான். மனிதர்கள் கோபப்படுவது போன்றே அவர் கோபப்படுகின்றார். நான் உன்னிடத்தில் ஓர் வாக்குறுதி பெற்றிருக்கிறேன். எனக்கு நீ அதில் மாற்றம் செய்ய மாட்டாய். யாரையாவது ஓர் இறைநம்பிக்கையாளரை நான் நோவினை செய்திருந்தால் அல்லது அவரைத் திட்டியிருந்தால் அல்லது அவரை அடித்திருந்தால் அதை அவருக்கு இறுதிநாளில் (அவரது பாவத்திற்கு) பரிகாரமாகவும், அதைக் கொண்டு அவரை உன்னிடம் நெருங்க வைக்கும் வணக்கமாகவும் ஆக்குவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-4708

இந்த ஹதீஸ்கள் தெள்ளத் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் தான் என்று தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் வஹீ எனும் இறைச் செய்தியாகும் என்பதை மேலே நாம் கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் இன்னும் ஏராளமான ஆதாரங்களும் உணர்த்துகின்றன.

ஆனால் இந்த பரேலவிச பயங்கரவாதிகள் நபி (ஸல்) அவர்களை மனிதத் தன்மையிலிருந்து உயர்த்தி, இறைத்தன்மைக்குக் கொண்டு செல்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்‘ என்றும் “அல்லாஹ்வின் தூதர்‘ என்றும் சொல்லுங்கள்‘ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நூல்: புகாரி-3445

இந்த பயங்கரவாதிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. இந்த லட்சணத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக மதிக்கிறோம், நேசிக்கிறோம் என்ற வெற்றுப் பேச்சு வேறு! இவர்களின் இந்த லட்சணத்தையும் இவர்கள் முன்வைக்கின்ற ஆதாரங்களின் லட்சணங்களையும் இன்னும் பார்போம். 

இறைத்தூதர் இறக்கவில்லையாம்

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருப்பதாகவே பரேலவிகள் வாதிடுகின்றனர். அதற்கு அவர்கள் சில ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர். அந்த வாதங்களுக்கான மறுப்பை நாம் பார்த்து வருகிறோம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-1147, 2013, 3569

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் அல்லர் என்று கூறி, அவர்களை அல்லாஹ்வின் அந்தஸ்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

உண்மையில் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் ஏனைய மனிதர்களை விட வேறுபடுகின்றார்கள்; வித்தியாசப்படுகின்றார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம், அவர்கள் அல்லாஹ்வின் அளவுக்கு உயர்ந்து விடுவார்களா? என்றால் அறவே கிடையாது.

இவ்வாறு நாம் சொல்கின்ற போது இந்த பரேலவிஷப் பேர்வழிகள், “நாங்கள் நபியவர்களை அல்லாஹ்வின் அளவுக்கு உயர்த்தவில்லை’ என்று வாயளவில் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களது வாதத்தின் பொருள் இதுதான்.

நாம் தூங்கினால் உளூ முறிந்துவிடும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தூங்கினால் உளூ முறியாது. அதாவது அவர்களுக்குத் தூக்கம் இல்லை. அதனால் அவர்களுக்கு உளூ முறிவதில்லை. எனவே அவர்கள் நம்மைப் போன்ற மனிதரல்ல என்பது தான் பரேலவிகளின் வாதம்.

இவர்களது பாஷையில், நம்மைப் போன்ற மனிதர் அல்ல என்று கூறிவிட்டாலே அது அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தும் கருத்தில் தான் கூறுவார்கள். உண்மையில் அல்லாஹ்வுக்குத் தான் தூக்கம் என்பதே கிடையாது. இதைத் திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

(அல்குர்ஆன்:2:255.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தூக்கம் என்பது இல்லை; எனவே அவர்கள் நம்மைப் போன்ற மனிதரல்ல, இறைவனைப் போன்ற, தூக்கம் இல்லாத நிலையில் உள்ளவர்கள் என்பது தான் பரேலவிகளின் கருத்து.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில், தமக்குத் தூக்கம் என்பதே இல்லை என்று கூறவில்லை. “எனது கண்கள் உறங்குகின்றன’ என்று இவர்களது நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றார்கள்.

இந்த ஹதீஸை மக்கள் தவறாக விளங்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் ஃபஜ்ர் தொழுகையின் நேரத்தைத் தாண்டி தூங்க வைத்து விடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!” என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள்.

வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள் “பிலால்!‘ என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்) தான் என்னையும் தழுவிக் கொண்டது” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்” என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்.

பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், “தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!‘ (20:14) என்று கூறுகின்றான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-1097

இந்த ஹதீஸில் பிலால் (ரலி) சொல்கின்ற இந்த வார்த்தை மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 

(அல்குர்ஆன்:39:42.)

உறங்கும் போது எல்லா உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றி விடுகின்றான். காலையில் விழிக்கும் போது அவன் நாடினால் விட்டுவிடுகின்றான். இதுதான் நபி (ஸல்) அவர்களுக்கும், பிலால் (ரலி) அவர்களுக்கும் நடந்திருக்கின்றது. இதையே பிலால் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் சொல்லியும் காட்டுகின்றார்கள்.

அப்படியானால் பரேலவிகள் ஆதாரமாகக் காட்டும் புகாரி 1147 ஹதீஸிற்குரிய விளக்கம் என்ன?

நபி (ஸல்) அவர்கள் வஹீயின் தொடர்பில் உள்ளவர்கள். அவர்களுடைய உள்ளத்தில் எந்த நேரத்திலும் இறைச்செய்தி வந்து கொண்டே இருக்கும்.

நம்முடைய தூக்கத்தில் விளையாடுவது போன்று ஷைத்தான் அவர்களுடைய தூக்கத்தில் விளையாட முடியாது. நாம் தூங்கும் போது நம்முடைய கண்கள், உள்ளம் ஆகிய இரண்டும் சேர்ந்தே உறங்குகின்றன. செல்போன்களை நாம் சுத்தமாக அணைத்துவிட்டால் அதில் எந்த அழைப்பும் செய்தியும் வருவதில்லை. இதைப் போன்று நம்முடைய உறக்கம் அமைந்துள்ளது.

ஆனால் செல்போனை முழுமையாக அணைத்து வைக்காமல் சைலண்ட் மோடில் போட்டுவிடும் போது, அதில் அழைப்புகள், செய்திகள் அனைத்தும் வந்து கொண்டே இருக்கும். இதுபோன்று நபி (ஸல்) அவர்கள் உறங்கினாலும் அவர்களுடைய உள்ளம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றது.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உள்ளம் உறங்காது; கண்கள் உறங்குகின்றன என்ற இந்தச் சிறப்பு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்பல்ல. அனைத்து நபிமார்களுக்கும் உரிய சிறப்பாகும். இதை புகாரியில் இடம் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர் களுக்கு (மீண்டும்) வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், “இவர்களில் சிறந்தவர்” என்று பதிலளித்தார்.

அவர்களில் இறுதியானவர், “இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்” என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில்-(உறக்க நிலையில்)- அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.

நூல்: புகாரி-3570

அதனால் தான் நபிமார்களின் கனவுகளும் வஹீயாக அமைந்திருக்கின்றன. அவை இறைக் கட்டளைகளாகவும் முன்னறிவிப்புகளாகவும் அமைந்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இப்ராஹீத் நபி அவர்களின் அவர்களின் கனவைக் கூறலாம்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று (இப்ராஹீம்) கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.

(அல்குர்ஆன்:37:102.)

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் காட்சிகளைக் காட்டிது தொடர்பான வசனங்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு வசனங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.

(அல்குர்ஆன்:48:27.)

நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மக்காவிற்குச் சென்று உம்ரா செய்வதை அல்லாஹ் கனவின் மூலமாகத் தான் முன்னறிவிப்புச் செய்கின்றான்.

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்! அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.

(அல்குர்ஆன்:8:43.)

நபி (ஸல்) அவர்களுக்கு பத்ருப் போர் வெற்றி பற்றிக் கூறி உளவியல்ரீதியான தைரியத்தை கனவின் மூலம் அளிக்கின்றான்.

இந்தக் கனவுகளில் ஷைத்தான் தன்னுடைய கலப்படத்தை ஒருபோதும் செய்ய முடியாது. ஏனெனில் வஹீ என்ற பாதுகாப்பு வளையத்திலும் வட்டத்திலும் உள்ள கனவாகும். ஆனால் நம்முடைய கனவுகளில் ஷைத்தான் விளையாடுவான்.

“நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமி ருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பி விட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்.

(இப்படிச் செய்தால்) அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற் படுத்த முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப், நூல்: முஸ்லிம் 4213

கண்கள் உறங்குகின்றன; உள்ளம் உறங்கவில்லை என்ற ஹதீஸின் பொருள், நபி (ஸல்) அவர்கள் விழித்திருக்கும் போது எப்படி அவர்களது உள்ளம் பாதுகாப்பாக உள்ளதோ அதே போன்று உறங்கும்போதும் பாதுகாப்பாக உள்ளது. ஷைத்தான் மற்றவர்களிடம் உறக்கத்தில் குப்பை கூளங்களைக் கொட்டுவது போன்று நபிமார்களிடம் செய்ய முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்களது உள்ளம் விழிப்பில் இருப்பதால் அவர்களுக்கு உறக்கத்தில் உளூவை முறிக்கும் காரியங்கள் நிகழ்ந்தாலும் அது தெரிந்துவிடும். இதனால் அவர்களது உளூவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது தான் மேற்கண்ட ஹதீஸின் பொருளே தவிர, நபி (ஸல்) அவர்கள் மனிதத் தன்மையைத் தாண்டி, தூக்கம் மறதி போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட கடவுள் நிலையில் உள்ளவர்கள் என்று ஒருபோதும் விளங்க முடியாது.

பரேலவிகளின் இந்த வாதம் பைத்தியக்காரத்தனமான வாதமாகும். இவர்கள் எடுத்துக்காட்டியிருப்பது ஆதாரம் அல்ல, அபத்தமாகும்.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற கருத்துக்கு இவர்கள் எடுத்து வைக்கும் பொருந்தாத ஆதாரங்களை பார்போம். 

இறைத்தூதர் இறக்கவில்லையாம்

நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்பதற்குக் கூறுகெட்ட குருட்டு பரேலவிஷ சிந்தனைவாதிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரத்தைப் பார்ப்போம்.

உங்களுக்குப் பிடித்தமான பெண்ணை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ, ஆனால் நீங்கள் இவர்களிடையே நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்) 

(அல்குர்ஆன்:4:3.)

நம்மில் ஒருவருக்கு வசதியும் நீதமும் எவ்வளவு தான் அளவு கடந்து இருந்தாலும் நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே கட்டத்தில் 9 மனைவியருக்குக் கணவராக இருந்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்த போது அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர். நூல்: புகாரி, முஸ்லிம்

இதுதான் பரேலவிகளின் ஆதாரம்.

நாம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்ய முடியாது. ஆனால் நபி (ஸல்) அவர்களோ இந்த வரம்பைத் தாண்டி திருமணம் முடிக்கலாம். இந்தச் சிறப்பை, இறை நம்பிக்கை கொண்ட எவரும் மறுக்க முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குரிய தனிச் சலுகை, தனிச் சிறப்பு!

இதை நாம் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் இதை வைத்து நபி (ஸல்) அவர்களை மனித நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாற்றம் செய்வதைத் தான் நாம் மறுக்கிறோம். அதாவது நபி (ஸல்) அவர்களை இதன் மூலம் கடவுள் நிலைக்கு உயர்த்துவதைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இங்கு தான் இவர்கள் புத்தி சுவாதீனத்துடன் பேசுகிறார்களா? அல்லது புத்தி பேதலித்துப் பேசுகிறார்களா? என்று கேட்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் 9 மனைவியரைத் திருமணம் முடித்தது அவர்களின் மனிதத் தன்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் ஒன்பது பேரையல்ல! ஒன்பதாயிரம் பேரை மணம் முடித்தாலும் அது அவர்களுக்குரிய சிறப்பு என்றாலும், சலுகை என்றாலும் அது அவர்களின் மனிதத் தன்மையை பக்காவாகவும் பலமாகவும் நிரூபிக்கின்றது. இப்படித் தான் கொஞ்ச நஞ்ச புத்தியுள்ளவர் புரிந்து கொள்வார். ஆனால் இந்த பரேலவிகளோ அல்லாஹ் சொல்கின்ற கால்நடைகள் என்ற நிலையில் உள்ளவர்கள். இன்னும் அதைவிடக் கீழானவர்கள்; கேவலமானவர்கள்.

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம். 

(அல்குர்ஆன்:7:146.)

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். 

(அல்குர்ஆன்:7:179.)

எதை மனிதத் தன்மைக்கு இலக்கணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை இவர்கள் கடவுள் தன்மைக்கு இலக்கணமாக ஆக்கிக் கொண்டு தங்களை அறிவிலிகள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு இப்படி ஒரு சலுகையைக் கொடுத்ததே அந்த மாமனிதரை, மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்திவிடக் கூடாது என்பதற்காகத் தான். இஸ்லாத்தின் எதிரிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் இந்த ஒரு சலுகையை அல்லாஹ் வழங்கியதே நபியவர்களின் மனிதத் தன்மையை நிரூபிப்பதற்காகத் தான் என்ற அளவுக்குள்ள ஒரு இலக்கணத்தை இவர்கள் தலைகீழாகப் புரிந்து கொள்கின்றார்கள்.

திருமணத்தில் சாட்சி

நம்மில் திருமண நிகழ்ச்சி நடைபெறுமிடத்தில் இரண்டு சாட்சிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போது தான் திருமணம் நிறைவேறும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: சாட்சிகள் இல்லாத திருமணம் செல்லாது. (நூல்: தாரகுத்னீ) ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய திருமணம் சாட்சிகள் இல்லாமலேயே நிறைவேறிவிடும்.

அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, யா ரசூலுல்லாஹ், உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். திருமணத்தின் மூலம் தங்களுக்கு என்னை அர்ப்பணம் செய்து விட்டேன் என்று சொல்லி, இதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டால் திருமணம் நிறைவேறிவிடும். சாட்சிகள் தேவையில்லை.

முஃமினான ஒரு பெண் நபி (ஸல்) அவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினால் (திருமணம் நிறைவேறிவிடும். நபியே! இது) உமக்கு மட்டும் (வழங்கப்பட்ட) உரிமை. மற்ற முஃமின்களுக்கு அல்ல.

(அல்குர்ஆன்:33:50.)

உங்களுக்கு மட்டும் தான் மற்ற முஃமின்களுக்கல்ல என்று சொன்னதின் மூலம் அல்லாஹ் ஒரு கருத்தைத் தெளிவாக்கிக் காட்டுகிறான். அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களைப் போல் அல்ல.

நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்பதற்கு பரேலவிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம், “நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடிப்பதற்கு சாட்சி தேவையில்லை’ என்பதாகும்.

திருமணத்தில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்படுவதால் கீழ்க்கண்ட வசனங்களின் அடிப்படையில் சாட்சி அவசியம் என்று சொல்கிறோம்.

உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்!  (அல்குர்ஆன்:2:282.)

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும். 

(அல்குர்ஆன்:5:106.)

33:50 வசனத்தின்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமணத்திற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். இந்தச் சிறப்பை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஸைனப் (ரலி) அவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ்வே திருமணம் முடித்து வைத்ததாகக் கூறுகின்றான்.

ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். (அல்குர்ஆன்:33:37.)

இப்படி சாட்சி இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்ததால் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்றாகிவிடுமா? ஆதம் நபிக்கும் ஹவ்வா அவர்களுக்கும் அல்லாஹ் தான் திருமணம் முடித்து வைத்தான்.

அதனால் ஆதம் நபி உயிருடன் இருக்கின்றார்கள் என்று இவர்கள் வாதிடுவார்களா?

நபிமார்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதும் இந்தப் பரேலவிகளின் நம்பிக்கையாகும். ஆதம் நபியும் உயிருடன் இருக்கிறார்கள் என்று இந்தக் கூட்டம் வாதிடுமானால் நபி (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்பு இங்கு அடிபட்டுப் போய்விடுகின்றது என்பதை இந்த நேரத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம்.