Tamil Bayan Points

நாய்களால் ஆபத்து: ஆய்வு முடிவுகள்!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 2, 2019 by

நாய்களால் ஆபத்து: ஆய்வு முடிவுகள்!

பலரும் நாய்களை தங்களது செல்லப்பிராணிகளாக வளர்த்துக் கொண்டு தங்களது படுக்கையறையில் அதோடு சேர்ந்து தூங்குவது வரையிலான இடத்தை அந்த நாய்களுக்கு வழங்கி வைத்துள்ளனர். நாய்களுக்கு முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொள்பவர்கள் அதிகம்.

இஸ்லாம் நாய் வளர்ப்பதை தேவைக்கு மட்டுமே அனுமதித் துள்ளது; நாய் இருக்கும் வீடுகளில் அருள் வளத்தை கொண்டு வரும் வானவர்கள் வரமாட்டார்கள் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள். வீட்டின் பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு நாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம்; ஆனால் அதையும் அளவோடுதான் நாம் வைத்திருக்க வேண்டும்; அதை படுக்கையறை வரைக்கும் அனுமதித்து அதனோடு முத்தமிட்டு விளையாடும் அளவிற்குச் சென்றால் அது மிகப்பெரிய ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும் என்பது தற்போது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாய்களை முத்தமிட்டால், அதன் வாய்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள், மனிதர்களின், பல் ஈறுகளில் நோய்களை ஏற்படுத்துவதாக ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜப்பானிய விஞ்ஞானிகள், 66 நாய்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் 81 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல நாய்களுக்கு, அதன் வாய் பகுதியில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நாய்களை கொஞ்சி விளையாடும் அதன் எஜமானர்களுக்கு, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, பல் ஈறுகளில் நோய் இருந்தது தெரிய வந்துள்ளது. ” ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் இந்த கருத்து, நாயிடம் உள்ள அன்பை குறைக்க வழி செய்யும்’ என, அமெரிக்க கால்நடைத்துறை மருத்துவர் ஆன் ஹோகன்ஹாஸ் தெரிவித்துள்ளார். நாயிடம் அன்பு செலுத்துவதால் மனிதனுக்கு ரேபிஸ் நோய் தாக்கி மனிதன் செத்தால் அது பரவாயில்லையா? என்பதை இவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்,

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழுமுறை கழுவச் சொல்லி கட்டளையிட்டுள்ளார்கள். எனவே நாய் வளர்த்து தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகாமல் நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப் அதை பயன்படுத்தாவிட்டால் நாய் உயிரோடு இருக்கும்; மனிதன் உயிரோடு இருக்கமாட்டான்.

Source: unarvu (09/06/17)