Tamil Bayan Points

நல்லறங்களை நாடுவோம்.!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 28, 2023 by Trichy Farook

நற்காரியங்களை செய்வோம்.

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

மார்க்கத்தில் நன்மை தரக்கூடிய செயல்களாக எவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ அவற்றை செய்வதன் மூலம் நமது ஈமானை பாதுகாத்துக்கொள்ள முடியும். எந்த ஒரு நல்லகாரியத்தை நாம் செய்யும் போதும் அதனுடன் இறைவனைப் பற்றிய நம்பிக்கையும் மறுமை சிந்தனையும் நிச்சயமாக பிண்ணிப் பிணைந்திருக்கிறது.

உதாரணமாக தொழுவது, நோன்பு நோற்பது, சிரமப்படுபவர்களுக்கு உதவுவது இன்னும் இது போன்ற நற்காரியங்களை ஒரு முஃமின் எதற்காக செய்கிறான்?. இறைவன் திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான் என்பதற்காகவும் இவ்வாறு செய்தால் மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்காகவும் செய்கிறான்.

இந்த கோணத்தில் நாம் சிந்தித்துப்பார்த்தால் ஒவ்வொரு நற்காரியமும் மறுமை சிந்தனையையும் இறைவேதத்தின் மீதான நம்பிக்கையையும் நமக்கு அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக உணரலாம்.  நாம் புரியும் நல்லறங்கள் மூலம் இஸ்லாமிய கொள்கையையும் கோட்பாடுகளையும் நமது மூளைக்கு அடிக்கடி உணர்த்திக்கொண்டே இருக்கிறோம்.

இதனால் மூளை ஓரிறைக்கொள்கையை அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடாது. அந்தக் கொள்கைக்கு பங்கம் விளைவிக்கும் எப்படிப்பட்ட கருத்துக்களையும் அசத்தியமானவை என்று உடனே இனம் கண்டுவிடும். ஒழுக்கக்கேடான மானக்கேடான விஷயங்களில் விழுந்துவிடாமல் நல்லறங்கள் நம்மை காக்கிறது. இஸ்லாம் என்ற கட்டிடத்தின் இரண்டாவது தூணான தொழுகை வழிகேடுகளிலிருந்து மனிதனை காப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏

(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

(அல்குர்ஆன்: 29:45)

தொழுகையை போன்றே எல்லா நல்லறங்களும் மனிதனை ஒழுக்கமாக வாழச்செய்கிறது. அனாச்சாரங்களிலிருந்து காக்கிறது. தவறுகளை செய்யும் போது அவர்களை வெட்கப்பட வைக்கிறது. இந்த வெட்கம் நாளைடையில் அவர்கள் திருந்துவதற்கு காரணமாக அமைகிறது.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு ஏராளமான நல்லறங்களைப் பற்றி அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவற்றில் சில நல்லறங்களைப் பற்றி இந்த உரையில் காண்போம்.

நல்லறங்கள் வழிகேட்டிற்கு செல்லவிடாமல் காக்கிறது

இறைநம்பிக்கையை ஞாபகப்படுத்தும் நல்லறங்கள் நம்மை விட்டும் அகலுமானால் காலப்போக்கில் இறைநம்பிக்கையே அகன்றுவிடலாம். ஓரிறைக்கொள்கையே ஆட்டம் காண வாய்ப்புண்டு. இந்த அர்த்தத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட ஒரு பொன்மொழியை மொழிந்துள்ளார்கள்.

إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல் : முஸ்லிம்-134 

إِنَّ الْعَهْدَ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمِ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் மத்தியில் உள்ள ஒப்பந்தம் தொழுகை தான். ஆகையால் யார் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் இறைமறுப்பாளராகிவிட்டார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி),
நூல்: நஸாயீ-463 (459)

தொழுகையை விட்டவன் காஃபிராகிவிடுவான் என்ற பொருளில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறவில்லை. மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட தொழுகையை நிறைவேற்றி இறைவனை நினைக்காதவன் காலப்போக்கில் முற்றிலுமாக இறைவனை மறுக்கக்கூடிய நிலைக்கு ஆளாகிவிடுவான் என்பதையே இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

நல்லறங்கள் ஏகத்துவக்கொள்கையின் வெளிப்பாடாகும்

நம்மிடத்தில் உள்ள ஏகத்துவக்கொள்கையின் வெளிப்பாடாகத் தான் நற்காரியங்கள் இருந்துகொண்டிருக்கிறது. உள்ளத்திற்கும் உறுப்புக்களுக்கும் இடையில் வலுவான இணைப்புள்ளது. உள்ளத்தில் உள்ள எண்ணங்களின் பிரதிபலிப்பை உறுப்புக்களில் காணமுடியும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

 أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ

அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி),
நூல் : புகாரி-52 

ஒருவரிடத்தில் சரியான கொள்கை இருந்தால் அது ஏற்படுத்தும் மாற்றங்களை அவருடைய செயல்களில் காணமுடியும். கெட்ட எண்ணம் உள்ளவரை அவரது செயல்களை வைத்து அடையாளம் கண்டுகொள்கிறோம். நல்லறங்கள் இறைநம்பிக்கையின் அடையாளமாகவும் மறுமை நம்பிக்கையின் விளைச்சலாகவும் உள்ளது.

உறுதியை ஏற்படுத்தும் நல்லறங்கள்

وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا يُوْعَظُوْنَ بِهٖ لَـكَانَ خَيْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِيْتًا

அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும்.

(அல்குர்ஆன்: 4:66)

ஒவ்வொரு மனிதனுடைய ஈமானிய உறுதியை அவனது செயல்பாடுகள் தெளிவாக விவரிக்கும் என்று மேற்கண்ட குர்ஆன் வசனம் கூறுகிறது. போதனைகளை காதில் வாங்கிக்கொண்டு செயல்படுத்தாதவர்கள் உறுதியற்றவர்கள் என்பதையும் மேற்கண்ட வசனம் எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ்விற்கு உதவுங்கள் என்ற கட்டளையை நாம் காணலாம். அல்லாஹ்விற்கு உதவுவது என்றால் அவனுக்கு நமது செல்வங்களை தர வேண்டும் என்பது பொருள் அல்ல.

அவனுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக நல்வழிகளில் செலவு செய்ய வேண்டும். அவன் கூறியவாறு உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்பதையே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். இது போன்ற நல்லறங்களை நாம் செய்தால் நமக்கு உறுதியை அளிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

(அல்குர்ஆன்: 47:7)

செயல்பாடுகள் உள்ளத்தில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

أَنَّ رَجُلًا شَكَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ، فَقَالَ: «امْسَحْ رَأْسَ الْيَتِيمِ، وَأَطْعِمِ الْمِسْكِينَ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய உள்ளத்தில் முரட்டுத்தன்மை இருப்பதாக முறையிட்டார். அதற்கு நபியவர்கள் அவரிடம் அனாதையின் தலையை தடவிக்கொடுப்பீராக. ஏழைகளுக்கு உணவளிப்பீராக என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மத்-9018 (8657)

உள்ளத்தின் கடினத்தன்மையை நீக்குவதற்கு நற்செயல்களை புரியுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாம் செய்கின்ற நற்செயல்களால் உள்ளத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வை நினைப்பது

சர்வ வல்லமையும் படைத்த ஏக இறைவனுக்கு அஞ்சுவது தீமைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்வதற்கான அற்புதமான கேடயமாகும். எந்த தீமையாலும் இறையச்சத்திற்கு முன்னால் நிற்க இயலாது. மனிதர்களை அழிவில் தள்ளும் உலக கவர்ச்சி அம்சங்கள் எதுவாக இருந்தாலும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இறையச்சத்திற்கு முன்னால் தோல்வியை தழுவுவது நிச்சயம். இறைவனுக்கு அஞ்சுவதை மனிதன் மறந்துவிடக்கூடாது என்பதற்காக திருக்குர்ஆனில் ஆங்காங்கே இடையிடையே இறையச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

 يٰبَنِىْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا‌ ؕ وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ‌ ؕ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.

(அல்குர்ஆன்: 7:26)

 وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏

(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன்: 2:197)

இறையச்சம் வெற்றியை பெற்றுத்தரும்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன்: 5:35)

பாதுகாத்துக் கொள்வோம்

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ تَوَكَّلَ لِي مَا بَيْنَ رِجْلَيْهِ وَمَا بَيْنَ لَحْيَيْهِ تَوَكَّلْتُ لَهُ بِالْجَنَّةِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் தம் இரு கால்களுக்கிடையே உள்ளத (மர்ம உறுப்பி)ற்கும், தம் இரு தாடைகளுக்கிடையே உள்ளத(நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி),
நூல் : புகாரி-6807 

இறையச்சம் விபச்சாரத்திலிருந்து காக்கிறது

இறையச்சம் நம்மிடத்தில் இருந்தால் எந்த ஆசையாலும் நம்மை வழிகெடுக்க இயலாது. இதற்கு சிறந்த உதாரணமாக யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றை கூறலாம். நாட்டை ஆளும் மன்னனின் மனைவி யூசுப் (அலை) அவர்களை விபச்சாரத்திற்கு அழைத்த போது யூசுப் (அலை) இணங்க மறுத்துவிட்டார்கள்.

சிறைச்சாலைக்குப் போனாலும் பறவாயில்லை. ஒருபோதும் விபச்சாரத்தில் வீழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது அல்லாஹ்வின் நினைப்பும் பயமும் தான். இதை பின்வரும் வசனத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.

وَرَاوَدَتْهُ الَّتِىْ هُوَ فِىْ بَيْتِهَا عَنْ نَّـفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَـكَ‌ؕ قَالَ مَعَاذَ اللّٰهِ‌ اِنَّهٗ رَبِّىْۤ اَحْسَنَ مَثْوَاىَ‌ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!’ என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்” எனக் கூறினார்.

(அல்குர்ஆன்: 12:23)

யூசுஃப் (அலை) அவர்கள் மட்டுமின்றி சாதாரண மனிதர்களையும் இறையச்சம் விபச்சாரத்தில் விழுந்துவிடாமல் பாதுகாத்திருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், “நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றனர்.

அவர்களில் ஒருவர், இறைவா! என் தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தராதவரை தன்னை அடைய முடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன்.

அவளது இரு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய (மணபந்த) உரிமையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளை விட்டு நான் எழுந்துவிட்டேன். இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இதை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாக பாறை விலகியது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி-2215 

இந்த சம்பவத்தை பல முறை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் இதிலிருந்து பெற வேண்டியை படிப்பினையை இன்னும் நாம் பெறவில்லை. காமத்தின் உச்சகட்ட நிலையில் வெறியுடன் இருந்த ஒரு வாலிபரை விபச்சாரத்தில் விழுந்துவிடாமல் அவரைக்காத்த பாதுகாப்புக் கேடயம் இறையச்சமாகும்.

இறையச்சத்தை ஊட்டிய பெண்

அல்லாஹ்வை அஞ்சிக்கொள் என்ற ஒரு வார்த்தை, காமத்தை அடக்கி பிற்காலத்தில் அவர் இறைவனின் உதவியை கண்கூடாக காண்பதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆணுடைய தியாகத்தைத் தான் பெரும்பாலானவர்கள் கவனத்தில் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர் யாருடன் விபச்சாரம் செய்ய முற்பட்டாரோ அந்த பெண் தான் இவரை விட சிறப்பிற்குரியவர்.

போற்றத்தகுந்தவர். அந்த பெண் மட்டும் இறைவனின் பயத்தை அந்த வாலிபருக்கு ஞாபகப்படுத்தாமல் மௌனமாக இருந்து காரியத்தை சாதித்துவிட்டுச் சென்றிருந்தால் இந்த வாலிபர் திருந்தி இருக்க முடியுமா?. அதன் பிறகு இக்கட்டான நேரத்தில் இறைவனின் உதவியை இவரால் பெற்றிருக்க முடியுமா?

அந்த வாலிபரை உன்னத தியாகம் செய்யத் தூண்டியவர் இந்தப் பெண் தான். பஞ்சத்தின் கோரப்பிடியால் பாதிக்கப்பட்டு அற்ப நாணயங்களுக்காக விபச்சாரத்திற்கு ஒத்துக்கொள்ள அப்பெண் நிர்பந்திக்கப்பட்டாலும் அழிவின் விளிம்பை தொடப் போகும் போது அல்லாஹ்வின் அச்சம் அந்தப் பெண்ணை அலறவைத்திருக்கிறது. அந்த அலறல் தான் வாலிபரின் மனதை பதறவைத்திருக்கிறது. இறையச்சத்தின் விளைவால் அடிமனதிலிருந்து எழுகின்ற வார்த்தைக்கு எவ்வளவு பெரிய சக்தி உண்டு என்பதை இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.

அந்தப் பெண் நினைத்திருந்தால் காசையும் வாங்கிக்கொண்டு ஆசையையும் தீர்த்துக்கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இறை பயம் அவர்களை இவ்வாறு நடக்கவிடவில்லை. அந்தப் பெண்ணிற்கு இந்த வாலிபரை பிடிக்காத காரணத்தால் இவ்வாறு நடந்தார்கள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. திருமணத்தின் மூலமாகவே தவிர தவறான அடிப்படையில் அருகில் வராதே என்று அப்பெண் கூறுவதன் மூலம் வாலிபரை மணந்துகொள்ளத் தயார் என்று பகிரங்கப்படுத்துகிறார். ஆனால் திருமணத்திற்கு முன்பாக வேண்டாம் என்று கூறுகிறார்.

காதல் என்ற பெயரில் காமக்களியாட்டங்கள்

இன்றைக்கு காதல் கத்தரிக்காய் என்ற பெயரில் திருமணமானவர்கள் செய்கின்ற காரியங்களை செய்துவிட்டு பெண்களை ஏமாற்றிவிடுகின்ற ஆண்களை பார்க்கிறோம். ஆணுடைய பொய்யான வாக்கை நம்பி தங்களை அர்பணிக்கின்ற பெண்களையும் பார்க்கிறோம். பிள்ளைக் குட்டியை பெற்றெடுத்துவிட்டு கல்யாணம் செய்வோமா? கல்யாணம் செய்துவிட்டு பிள்ளை குட்டியை பெற்றுக்கொள்வோமா? என்று சினிமா பாடல் ஒலிக்கிறது. இப்பாடலை காது கூசாமல் பெருங்கூட்டம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

திருமணம் என்பது தேவையே இல்லாத ஒன்று என்று கூறும் மிருக ஜாதியை சார்ந்தவர்கள் வாழக்கூடிய இந்தக் காலத்தில் நமது ஈமானை காத்துக்கொள்ள வேண்டும் என்றால் அது இறையச்சம் இருந்தால் மட்டுமே முடியும். தீமைகள் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் வாழக்கூடிய நாம் எறும்புகளின் பிடிக்கு ஆளான ஒரு தட்டாம் பூச்சியைப் போல் அல்லது ஒரு பட்டாம் பூச்சியை போல் இருக்கிறோம்.

பலவீனமான உள்ளம் படைத்த நாம் பறக்க முடியாத தட்டான். நம்மை சூழ்ந்திருக்கின்ற தீமைகள் தான் எறும்புகள். தீமைகள் என்ற எறும்புகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறது. இந்த எறும்புகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு தட்டானிற்கு பறக்கும் ஆற்றல் தேவை. இந்த ஆற்றலை இறையச்சம் நமக்கு அளித்து தீமைகளின் பிடியில் சிக்கிவிடாமல் நம்மை பறக்க வைக்கிறது.

ஆகவே நல்லறங்களை, நாடக்கூடிய, செய்யக்கூடிய உள்ளம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். நம்மை அழிவில் தள்ளும் தீமைகளான பெண்ணாசை மற்றும் காதல் போன்ற தீமைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க வேண்டும். நல்லறங்களை மட்டும் நாடக்கூடிய உள்ளம் கொண்டவர்களாக இருப்போம்.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.