Tamil Bayan Points

வறுமைக்கோர் முன்மாதிரி மாமன்னர் நபி(ஸல்) அவர்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 27, 2023 by Trichy Farook

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் மக்களின் ஜனாதிபதியாகவும் வாழ்ந்தார்கள். பொதுவாக ஆட்சிப் பதவியில் உள்ளவர்கள் ஆடம்பர வாழ்கையும் சொகுசையும் விரும்புவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்கையை எவ்வாறு எளிமையில் கழித்தார்கள்? அரசராக இருந்த நபிகளார் எவ்வாறு வாழ்ந்தார்கள்? என்பதை இந்த உரையில் காண்போம்.. 

வறுமைக்கோர் முன்மாதிரி மாமன்னர் நபி (ஸல்) அவர்கள்

மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம். மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

 إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ. فَقُلْتُ يَا خَالَةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ، إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம் என விடையளித்தார்.

(அறிவிப்பவர் : உர்வா,
நூல் : புகாரி-2567 , 6459)

عَنْ أَبِي حَازِمٍ قَالَ
سَأَلْتُ سَهْلَ بْنَ سَعْدٍ فَقُلْتُ هَلْ أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ فَقَالَ سَهْلٌ مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ مِنْ حِينَ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ اللَّهُ. قَالَ فَقُلْتُ هَلْ كَانَتْ لَكُمْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنَاخِلُ قَالَ مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْخُلاً مِنْ حِينَ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ. قَالَ قُلْتُ كَيْفَ كُنْتُمْ تَأْكُلُونَ الشَّعِيرَ غَيْرَ مَنْخُولٍ قَالَ كُنَّا نَطْحَنُهُ وَنَنْفُخُهُ، فَيَطِيرُ مَا طَارَ وَمَا بَقِيَ ثَرَّيْنَاهُ فَأَكَلْنَاهُ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா? என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) இடம் கேட்டேன்.

அதற்கு அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா? என்று கேட்டேன்.

அதற்கு அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை என்றார். தோல் நீக்கப்படாத கோதுமை மாவைச் சலிக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம். பின்னர் வாயால் அதை ஊதுவோம். உமிகள் பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம் என்று விடையளித்தார்.    

(அறிவிப்பவர் : அபூஹாஸிம்,
நூல் : புகாரி-5413 )

 أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، فَرَهَنَهُ

நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தம் கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக  வாங்கினார்கள்.

(அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி-2200 )                                                   

 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ طَعَامٍ ثَلاَثَةَ أَيَّامٍ حَتَّى قُبِضَ.

நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர்  அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்.         

( நூல் : புகாரி-5374 )

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்கையை எளிமை நிறைந்த வாழ்க்கையாக உணவில் மட்டும் அமைத்து கொள்ளவில்லை… அடுத்ததாக கவனியுங்கள் 

படுக்கை விரிப்பில் தொழுவது

كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا. قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ.

‘நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது’.

(அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி-382 )

நபியவர்களின்  பாய் விரிப்பு 

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَهُ حَصِيرٌ يَبْسُطُهُ بِالنَّهَارِ، وَيَحْتَجِرُهُ بِاللَّيْلِ، فَثَابَ إِلَيْهِ نَاسٌ، فَصَلَّوْا وَرَاءَهُ.

நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொண்டு தொழுவார்கள். மக்கள் அவர்களருகே விரைந்து வந்து அவர்களைப் பின்பற்றித் தொழுவார்கள்.

(அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி-730)

وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَيْءٌ وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا مَصْبُوبًا وَعِنْدَ رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ فَرَأَيْتُ أَثَرَ الْحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ فَقَالَ مَا يُبْكِيكَ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ وَأَنْتَ رَسُولُ اللهِ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمُ الدُّنْيَا وَلَنَا الآخِرَة

நபியவர்கள் ஒரு ஈச்ச மரப் பாயின் மீது படுத்திருந்தார்கள். அந்த பாய்க்கும் அவர்களுக்குமிடையே (விரிப்பு) எதுவும் இல்லாமல் இருந்தது. அவர்களின் தலைக்குக் கீழ் ஈச்ச நார் நிரப்பப்பட்ட தோல் தலையணை இருந்தது. அவர்களின் கால்களுக் கீழ் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்க விடப்பட்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் அச்சு பதிந்திருப்பதைக் கண்டு அழுதேன். நபியவர்கள், ‘ஏன் அழுகிறீர்!’ என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் (பாரசீக மன்னர்கள்) சுக போகத்தில் திளைக்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் அல்லவா? நீங்கள் இந்த நிலையில் இருப்பதா?’ என்று கேட்டேன். அப்போது நபியவர்கள், ‘ அவர்களுக்கு இந்த உலகமும் நமக்கு மறுமையும் இருப்பதை நீ விரும்பவில்லையா?’ என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-4913 

 كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَدَمٍ، وَحَشْوُهُ مِنْ لِيفٍ.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.

(நுல்: புகாரி-6456

நபியவர்கள் இந்த உலக சுக போகங்களை அனுபவிப்பதற்கு வாய்ப்பும் முழுத் தகுதியும் இருந்தும் அதனைத் தூக்கியெறிந்து விட்டு, மறுமையில் இதற்கான கூலியை அல்லாஹ் தருவான் என்ற மனப்பான்மையுடன், தன் வாழ்கையை எளிமையான அடிப்படையில் வாழ்ந்துள்ளார்கள்.

உடுத்தி மகிழவில்லை

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

 عَنْ أَبِي بُرْدَةَ قَالَ
أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كِسَاءً مُلَبَّدًا وَقَالَتْ فِي هَذَا نُزِعَ رُوحُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَزَادَ سُلَيْمَانُ عَنْ حُمَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ، وَكِسَاءً مِنْ هَذِهِ الَّتِي يَدْعُونَهَا الْمُلَبَّدَةَ.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி ‘இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்’ என்று குறிப்பிட்டார்.

(நூல் : புகாரி-3108 , 5818)

عَنْ أَبِي بُرْدَةَ
قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كِسَاءً مُلَبَّدًا وَقَالَتْ فِي هَذَا نُزِعَ رُوحُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, ‘இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்’ என்று கூறினார்கள். 

(அறிவிப்பவர் : அபூபுர்தா (ரஹ்),
நூல் : புகாரி-3108 )

أَنَّ امْرَأَةً جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ فِيهَا حَاشِيَتُهَا- أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ قَالُوا الشَّمْلَةُ. قَالَ نَعَمْ. قَالَتْ نَسَجْتُهَا بِيَدِي، فَجِئْتُ لأَكْسُوَكَهَا. فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து ‘இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்’ என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

(நூல் : புகாரி-1277 , 2093, 5810)

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம். மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்விலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள்.

இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.

 أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள்.

(நூல் : புகாரி-390 , 807, 3654)

மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

உணவு, உடை ,வீடு, போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான்.

இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவர்களின் எளிமையான வாழ்கையும் நமக்கு ஏராளாமான பாடங்களையும்  படிப்பினைகளும் தருகின்றது. எனவே நபிகளாரின் வாழ்கை  உலக மக்களுக்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நாமும் நபிகளாரின் வாழ்கையை முன்மாதிரியாக கொண்டு வாழும் நன் மக்களாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஆக்கி  நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.