Tamil Bayan Points

தாம்பத்தியத்திற்குத் தடையா?

கேள்வி-பதில்: இல்லறம்

Last Updated on April 1, 2023 by Trichy Farook

தாம்பத்தியத்திற்குத் தடையா?

இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது பேண வேண்டிய ஒழுங்குகளையும், அது சம்பந்தமான விதிமுறைகள் என்னவென்பதையும் இந்தக் குடும்பவியல் தொடரில் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

பொதுவாக முஸ்லிம்களோ பிற சமூக மக்களோ இல்லறக் கடமைக்கென பல நிபந்தனைகளை அவர்களாகவே வகுத்து வைத்துள்ளனர். குடும்பத்தில் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நாட்களிலோ, நேரங்களிலோ அல்லது குறிப்பிட்ட மாதங்களிலோ இல்லறக் கடமையை நிறைவேற்றக் கூடாது என்று நம்புகின்றனர்.

இன்னும் பலர் நல்ல நேரம், கெட்ட நேரம் என்றும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட பிறையில் கணவன் மனைவி ஒன்று சேரக் கூடாது என்றெல்லாம் பலவிதமான கட்டுக் கதைகளை நம்பிச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.

அதே போன்று முஸ்லிம் சமூக மக்களும் பிற சமூக மக்களைக் காப்பியடித்து, ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதிக் கொண்டு அம்மாதத்தில் திருமணம் முடிக்கவும் மாட்டார்கள். அப்படியே திருமணம் முடித்தால் கூட கணவன் மனைவியை ஒன்று சேர விடமாட்டார்கள்.

அதே போன்று முஹர்ரம் பிறை 1 முதல் 10 வரை கணவன் மனைவியைச் சேரவிடாமல் பிரித்து வைத்துவிடுவார்கள். மேலும் வளர்பிறை, தேய்பிறை என்றெல்லாம் நாள் நட்சத்திரம் பார்த்து, அந்த நாட்களில் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நம்புகிற பழக்கம் அனைத்து சமூக மக்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது.

இரவில் மட்டும்தான் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், பகலில் அதையெல்லாம் நினைத்தே பார்க்கக் கூடாது என்பன போன்ற தவறான அணுகுமுறைகளை மக்களிடம் காண்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மார்க்கம், கணவன் மனைவியின் இல்லறக் கடமையில் நேரம், நாள், நட்சத்திரம் போன்று எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவே இல்லை. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று இதுபோன்ற மூடப்பழக்க வழக்கங்களை உடைத்தெறிகின்றது.

கணவன் மனைவிக்கு எப்போதெல்லாம் இல்லற மகிழ்ச்சி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ள இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அதாவது, ஒரு மனிதனுக்கும் எப்போது அதுபோன்ற மகிழ்ச்சி தேவைப்படுகிறதோ அப்போதே அவன் அதைத் தீர்த்துக் கொள்வது தான் இயற்கையாக அமையும். இதுவெல்லாம் நேரங்காலம் குறித்து வராது. இதற்கு நேரங்காலம் குறிக்கவும் இயலாது.

தமிழ் மக்கள் ஆடி மாதத்தில் நல்லது கெட்டது எதையும் செய்யவே மாட்டார்கள். அதனால் தான் ஆடித் தள்ளுபடி என்றெல்லாம் போடுகிறார்கள். ஆடி மாதத்தில் கல்யாணம், புதுவீடு புகுதல் போன்ற எந்த நல்லவற்றையும் செய்ய மாட்டார்கள். எனவே பொருட்கள் விற்பனையாகாது. அதனால் தான் ஆடி மாதத்தைப் பயன்படுத்தி, இருக்கிற எல்லா இருப்புச் சரக்குகளையும் தள்ளுபடியில் தள்ளிவிடுகிறார்கள்.

இந்த ஆடியைக் காப்பியடித்து முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தில் நல்ல காரியங்களைச் செய்யக் கூடாது என்று நினைத்து வைத்துள்ளார்கள்.

இதே போன்று நபியவர்கள் காலத்தில் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதிக் கொண்டு, அம்மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யவே மாட்டார்கள். நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை ஷவ்வால் மாதத்தில் திருமணம் முடித்து, அந்தத் தவறான நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில். அவர்களுடன் என்னை விட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?

நூல்: முஸ்லிம் 2782

மக்களிடம் பீடை மாதமாக, தவறாகக் கருதப்பட்ட மாதத்தில் திருமணம் முடித்து, நபியின் மனைவிமார்களிலேயே ரசூலுல்லாஹ்வின் விருப்பத்தை அதிகம் பெற்றவளாக இருக்கிறேன் என்று சொல்வதன் மூலம், அன்றைய மக்களின் தவறான நம்பிக்கையைப் பொய்யாக்கி மூடநம்பிக்கையைத் தகர்க்கிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.

எனவே இந்தச் செய்தியிலிருந்து, தாம்பத்தியத்திற்கு நாள் நட்சத்திரம் கிடையாது என்றும், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தெல்லாம் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றும் புரிகிறது.

மேலும் தாம்பத்தியத்திற்குக் கணவனோ மனைவியோ தேவைப்படுகிற நேரத்தில் செய்வதே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும், அதாவது கணவன் மனைவிக்கு எப்போது அந்த உணர்வுகள் ஏற்படுகிறதோ அப்போதே அதனை நிறைவேற்றுவது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் என்பதை நவீன உடற்கூறு மற்றும் மனோதத்துவ ஆய்வாளர்கள் கூறும் உண்மையாக இருக்கிறது.

இந்த வகையில் இஸ்லாம் இந்த விஷயத்திலும் அறிவுப்பூர்வமான மார்க்கமாகத் திகழ்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது.

எனவே மாதவிடாய் காலம் தவிர வருடத்தில் எல்லா நாட்களுமே இல்லறத்திற்கு, தாம்பத்தியத்திற்கு உகந்த நாட்கள் தான் என்பதை இஸ்லாம் கூறுகிறது. எல்லா நேரமும் அதற்குத் தகுந்த நேரம்தான். பகல் என்றாலும் இரவு என்றாலும் முற்பகல் என்றாலும் எப்போது அந்த உணர்வு வருகிறதோ அப்போதே அதை நிறைவேற்ற வேண்டும்.

அதே நேரத்தில் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் பகல் நேரத்தில் மட்டும் தாம்பத்தியத்தைத் தவிர்க்க வேண்டும். இது தாம்பத்தியத்திற்கு மட்டும் சொல்லப்பட்ட சட்டமல்ல. சாப்பிடுவதோ, தண்ணீர் பருகுவதோ கூட முடியாது. அதே நேரத்தில் நோன்பைத் திறந்து விட்டால், திரும்பவும் நோன்பு பிடிக்கும் வரையுள்ள நேரங்களில் அவரவருக்கு உகந்த நேரத்தில் எப்போது இல்லறம் தேவைப்படுகிறதோ அப்போது நிறைவேற்றிக் கொள்வதில் எந்தத் தடையையும் இஸ்லாம் விதிக்கவில்லை.

புனிதமிக்க நாட்களாகக் கருதப்படுகின்ற நாட்களில் கூட இல்லறத்தை நடத்த இஸ்லாம் தடைவிதிக்கவில்லை. புனித இரவுகளான லைலத்துல் கத்ர் இரவுகளில், வெள்ளிக் கிழமைகளில் என்று மார்க்கம் எந்தத் தடையினையும் இல்லறத்திற்கு விதிக்கவே இல்லை. இது இயற்கைக்கு உகந்த மார்க்கம் என்பதை இதிலிருந்தும் நம்மால் உணர முடியும்.

எந்தளவுக்கெனில் துக்கமான நிகழ்வு நடந்திருக்கும் நேரத்தில் கூட இல்லறத்தில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதற்கான மனவலிமையைப் பெற்றவர் எனில், துக்கமான நேரத்தில் கூட இல்லறத்தை நடத்திட இஸ்லாத்தில் எந்தத் தடையும் தவறும் கிடையாது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்களின் ஆண் குழந்தை நோயுற்றிருந்தது. ஒரு நாள் அபுதல்ஹா (ரலி) வெளியே சென்றிருந்த போது அக்குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூதல்ஹா (ரலி) அவர்களின் மனைவி உடனே சிறிது உணவைத் தயார் செய்தார்.  பிறகு குழந்தையின் பிரேதத்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் வீடு திரும்பிய உடன் ‘‘மகன் எவ்வாறுள்ளான்?’’ எனக் கேட்டார்.  அதற்கு அவரது மனைவி “அமைதியாகி விட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்று விட்டிருப்பான் என்பதே எனது எதிர்பார்ப்பு’’ என பதிலளித்தார்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து நீராடிவிட்டுத் (தொழுகைக்காக) வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார். அபூதல்ஹா நபி (ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டுத் தம் வீட்டில் நடந்ததை நபியவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கு அருள்வளம் செய்யக்கூடும்’’ என்றார்கள்.

சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆன் அறிஞர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்.

நூல்: புகாரி 1301

எனவே, கணவன் மனைவி எந்த நேரத்திலும் தங்களின் மகிழ்ச்சிக்கான இல்லறக் கடமையை நிறைவேற்றுவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனால் மார்க்கத்திலும் பிழையாகாது. உலகத்திலும் எந்தக் கேடும் வராது. அப்படிக் கேடு சொல்லப்படுபவை அனைத்தும் பொய்யான கற்பனை கட்டுக் கதை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது முதலாவது அம்சம்.

அடுத்ததாக, கணவன் மனைவிக்கு மத்தியில் இல்லற வாழ்க்கையில் எந்தளவுக்கும் சந்தோஷமாக இருக்கலாம் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அதிகமான கட்டுக் கதைகளையும் பொய்யான பல தகவல்களையும் பரப்பி வைத்துள்ளனர்.

நம் சமூக மக்களும் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு இல்லறத்தில் தேவையற்ற சட்டங்களைக் கடைப்பிடித்து வருவதைப் பார்க்கிறோம். எந்தளவுக்கெனில் இல்லறத்தில் ஈடுபடும் போது கணவன் மனைவி ஒருவரையொருவர் பார்க்கக் கூடாது, கண்ணை மூடிக்கொண்டு தான் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்கள். இது போன்ற கட்டுப்பாடுகள் இஸ்லாத்தில் கிடையாது.

அல்லாஹ்வின் தூதரே! எங்களின் மறைவிடங்களில் நாங்கள் மறைக்க வேண்டியவை (நேரம், இடம்) எவை? மறைக்காமல் இருக்க அனுமதிக்கப்பட்டவை எவை? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘‘உனது மறைவிடத்தை உனது மனைவியிடம் அல்லது வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களைத் தவிர மற்றவரிடம் வெளிக்காட்டாமல் பாதுகாத்துக் கொள்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரலி)

நூல்: அபூதாவூத் 3501

கணவன் மனைவிக்குள் அந்தரங்கம், வெளிப்படை என்று எதுவும் கிடையாது. கணவன் மனைவியாக இருந்தாலும் போர்வை போர்த்தி மறைத்துக் கொண்டுதான் இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வது மார்க்கத்தில் இல்லாத, எங்கும் சொல்லப்படாத விதி.

அதாவது அல்லாஹ்வும் ரசூலும் விதிக்காத கட்டுப்பாடுகளை இவர்களாக சிறப்பு, நன்மை என்று யூகித்துக் கொண்டு விதிக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் புறந்தள்ளிவிட வேண்டும். கணவன் மனைவி இல்லறத்திற்குள் மறைக்க வேண்டும் என்பன போன்ற விதிகள் எதுவும் மார்க்கத்தில் இல்லை என்று நம்ப வேண்டும்.

கணவன் மனைவி குறித்து இறைவன் கூறும் போது, கணவன் மனைவிக்கு ஆடை, மனைவி கணவனுக்கு ஆடை என்று கூறுகிறான். இல்லற வாழ்க்கை குறித்து இத்தனை அழகான உதாரணத்துடன் யாருமே சொல்ல முடியாது.

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.

(அல்குர்ஆன் 2:187)

அதே போன்று குளிக்கும் போது கூட ஆயிஷா (ரலி)யும் நபியவர்களும் ஒன்று சேர்ந்தே குளித்துள்ளார்கள். இதற்கெல்லாம் ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளித்தோம்.

நூல்: புகாரி 250, 261, 273

ஒரு ஆண் மட்டும் தனியாகக் குளிக்கும் போது தனக்கே தெரியாமல் தன்னிடமிருந்து எப்படி மறைவிடங்களை மறைக்க முடியாதோ, அது போன்று கணவனும் மனைவியும் ஒரு சேரக் குளிக்கும் போது மறைவிடங்களை மறைத்திருக்க முடியாது. அதற்கான அவசியம் ஏற்பட்டும் இருக்காது. சிலர் சொல்வதைப் போன்று கண்ணை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற சட்டம் மார்க்கத்தில் இருந்திருந்தால், தன்னோடு ஆயிஷாவைக் குளிப்பதற்கு நபியவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்வதாக இருப்பின், இப்படியெல்லாம் மனைவியிடம் இல்லறமல்லாத நேரங்களிலும் நெருக்கத்தைக் கடைப்பிடிப்பதுதான் கணவன் மனைவியிடையே பிணைப்பை உண்டாக்கும். பாசம் நேசமாக வாழ்வதற்கு வழியாக அமையும்.

இன்றைய நவீன யுகத்தில் மலேசியப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகமான விவாகரத்துகள் நடந்தன. அதை ஆய்வு செய்த மனோதத்துவ அறிஞர்கள், மருத்துவர்கள் போன்றோர் கணவன் மனைவியைச் சேர்ந்து குளிக்கச் சொன்னார்கள். அதன் பிறகு அந்தப் பிரச்சனை கணிசமான அளவில் குறைந்தது.

அப்படியெனில் கணவன் மனைவி சேர்ந்து குளிக்கும் போது தம்பதிகளுக்குப் பலவிதமான ரசனைகள் உண்டாகி, தங்களின் துணைகள் மீது நேசம் கூடுவதாகச் சொல்கிறார்கள். இதை ஒரு உத்தரவாக மலேசிய அரசு வெளியிட்டது. இதை இன்றைக்குக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். ஆனால் நபியவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.

இப்படியெல்லாம் இன்பமாக மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டிய இல்லறத்தை, சில ஊர்களில் வயதான பெரியவர்கள் கணவன் மனைவிக்கிடையே அமர்ந்து கொண்டு, தேவையற்ற குழப்பங்களையும் இடைஞ்சல்களையும் செய்து கொண்டு குடும்பத்தை ரணமாக்கிக் கொண்டுள்ளார்கள். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இல்லற வாழ்வு என்பது மகிழ்ச்சிக்காகத்தான் என்று வாழ வேண்டும். அதைத் தான் மார்க்கம் வலியுறுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

sources:
https://www.news.com.au/breaking-news/malaysia-offers-sex-courses-for-elderly/news-story/9242d9ae8312f3cc83d3b042c4a13ff5