Tamil Bayan Points

தடை செய்யப்பட்ட சம்பாத்தியமும் அதனால் ஏற்படும் தீங்குகளும்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 18, 2023 by Trichy Farook

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!

இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையிடுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது.

இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை திரட்டுவதிலும் ஒரு எல்லையை வைத்திருக்கின்றது.

தடை ஏன்?

எல்லையை மீறும்போது அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மைக்காகவே இதுபோன்ற எல்லைகளையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான்.

வரையரைகளை மீறுபவன் மீது இறைவனின் கோபம் ஏற்பட்டு விடுகின்றது. இதனால் அவனுடைய பிரார்த்தனையும், நல்லமல்களும் மறுக்கப்பட்டு விடுகின்றது.

மக்கள் பாதிக்கப்படும்போது மக்களில் சிலர் சமுதாயத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வட்டி, லஞ்சம், மோசடி, பதுக்குதல், அளவை நிறுவைகளில் குறைவு ஏற்படுத்துதல் போன்றவைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படுகின்றது.

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி காலத்தில் மக்கள் பொருளாதாரத்தை திரட்டும்போது வரம்பு மீறுவார்கள் என்று முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلاَلِ أَمْ مِنَ الْحَرَامِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி-2059 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்தது போன்று, இன்று நமது சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவரும் பல புதுமையான வழிகளில் மக்களை ஏமாற்றி சம்பாதித்து சாப்பிடுகின்றனர்.

ஹராமான பொருளாதாரத்தை திரட்டுவதற்குரிய காரணங்கள்

தடைசெய்யபட்ட வழிகளில் மக்களை ஏமாற்றி சாப்பிடுவதற்கும், பொருளை சேமிப்பதற்கும் உள்ள காரணங்கள் என்ன?

அல்லாஹ்வின் பயமின்மை

பொருளாதாரத்தை திரட்ட சொன்ன இஸ்லாம் அந்த பொருளாதாரத்தை திரட்டும்போது இறைவனை அஞ்சும் படியும் போதிக்கின்றது.

இன்று மக்களிடத்தில் இறைவனை பற்றியுள்ள பயம் எடுபட்டுப்போன காரணத்தினால் முஸ்லிம்களும்கூட இந்த செயலில் இறங்கிவிடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

விரைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை

இன்று மக்களில் அதிகமானோர் எந்த வழியிலாவது பொருளாதாரத்தை திரட்டி விட வேண்டும் என்று நினைக்கின்றனர். காரணம் விரைவில் சம்பாதித்து விட வேண்டும். தாமதமில்லாமல் வாழ்க்கையில் சுகமான வாழ்வுக்கு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்தக்காரணம்.

இதில் சிலர் மிகவும் வரம்பு மீறி விபச்சாரத் தொழிலையே கையிலெடுத்து விடுகிறார்கள். சிலர் விபச்சாரம் மட்டுமில்லாமல் தன்னுடைய மனைவி, பிள்ளைகளை கூட தள்ளிவிடும் கொடுமை நடக்கத் துவங்கிவுள்ளது. இந்த செய்திகளை நாம் தினந்தோறும் பத்திரிக்கை வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் அறிந்து வருகிறோம்.

இவ்வுலக வாழ்வு நம்மை, தீமையான காரியத்திற்கு தூண்டவே செய்யும். அதை கட்டுப்படுத்தி இறைவனின் வரம்புகளை மீறாமல் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று, “எனக்குப் பின், உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள்வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட இருப்பதைத்தான்” என்று கூறிவிட்டு, உலகின் அழகையும் செழிப்பையும் கூறினார்கள்.

(அவற்றில்) முதலில் ஒன்றைக் கூறி, பிறகு மற்றொன்றை இரண்டாவதாகக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை, தீமையைக் கொண்டு வருமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத வெளிப்பாடு) அருளப்படுகிறது” என்று கூறிக் கொண்டோம்.

மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பதுபோல் (ஆடாமல் அசையாமல்) மௌனமாக இருந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத்துவிட்டு, “சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?” என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, “(உண்மையிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்) நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வராதுதான்.

மேலும், நீர் நிலைகளின் கரைகளில் தாவரங்கள் விளையும்போதெல்லாம் அவற்றைக் கால்நடைகள் மேய (அவை நச்சுத் தன்மையுடைய புற்பூண்டுகளையும் சேர்த்துத் திண்பதாலும் அதிமாகத்  திண்று விடுவதாலும்) அவை அவற்றை வயிற்று நோயால் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே கொண்டு போகின்றன; பசுமையான (நல்லவகைத்) தாவரங்களை (தாங்கும் அளவுக்கு) உண்பவற்றைத் தவிர.

அவை அவற்றை வயிறு நிரம்ப உண்டு, சூரியனை (வெப்பத்திற்காக) முன்னோக்கி நிற்கின்றன. பிறகு சாணம் போட்டு சிறுநீர் கழித்து விட்டு (செரித்தவுடன்) மீண்டும் மேய்கின்றன.

(இவ்வாறே) இந்தச் செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதைகளுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச்செல்வம் மறுமை நாளில் அவனுக்கெதிராக சாட்சி சொல்லும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-2368 

அற்ப உலகத்திற்கு ஆசைப்பட்டு ஹராமான சம்பாத்தியத்தில் வீழ்பவர்கள் நாளை மறுமை நாளில் இந்த ஹராமான சம்பாத்தியத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். இந்த உலகத்தில் இறைவனின் கட்டளைகளை மீறி இவ்வுலக வாழ்வில் செழிப்பாக வாழ்பவன் நரக நெருப்பில் அழுத்தி வேதனை செய்யப்படுவான்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

« يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ فَيُصْبَغُ فِى النَّارِ صَبْغَةً ثُمَّ يُقَالُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ فَيَقُولُ لاَ وَاللَّهِ يَا رَبِّ

وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِى الدُّنْيَا مِنْ أَهْلِ الْجَنَّةِ فَيُصْبَغُ صَبْغَةً فِى الْجَنَّةِ فَيُقَالُ لَهُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ فَيَقُولُ لاَ وَاللَّهِ يَا رَبِّ مَا مَرَّ بِى بُؤُسٌ قَطُّ وَلاَ رَأَيْتُ شِدَّةً قَطُّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, நரகத்தில் ஒருமுறை அழுத்தி எடுக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருள் கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!” என்று பதிலளிப்பார்.

அவ்வாறே, இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை, என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை” என்று கூறுவார்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்-5407 

போதுமென்ற மனமின்மை

அடுத்து நமக்கு வந்த செல்வங்களில் திருப்தியையும், போதுமென்ற மனத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

 أَنَّ اللَّهَ يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ ، فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ لَهُ ، بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ ، وَوَسَّعَهُ ، وَمَنْ لَمْ يَرْضَ لَمْ يُبَارِكْ لَهُ

“அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக்கொள்கிறாரோ அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத்-20279 (19398)

நாம் சேர்க்கும் செல்வங்கள் நம்மிடம் நிலையாக இருப்பதில்லை. இன்று ஒருவரிடம் நாளை ஒருவரிடம். நேற்று பணக்காராக பார்க்கப்பட்டவர் இன்று ஏழையாக நிற்கிறார். நேற்று ஏழையாக பார்க்கப்பட்டவர் இன்று பணக்காராக நிற்கிறார். இந்த ஒரு சுழற்சி முறையை அல்லாஹ்வே உருவாக்கியிருக்கின்றான்.

وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ

அந்த நாட்களை மக்களுக்கு மத்தியில் சுழலச்செய்திருக்கின்றோம்.

(அல்குர்ஆன்: 3:140)

எதையும் போதுமென்ற மனதோடு பெற்றுக் கொள்ள வேண்டும். போதுமென்ற மனதை யார் பெற்றுக் கொள்கிறாரோ அவர், தவறான முறையில் பொருளீட்ட மாட்டார். 

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ

“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-6446 

தீய சம்பாத்தியத்தால் ஏற்படும் விளைவுகள்

இன்று மக்களில் அதிகமானோர் ஹராமான பொருளை சம்பாதித்தால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். திருக்குர்ஆனிலும் நபிமொழிகளில் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அருள்வளம் நீக்கப்படும்

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ، أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்!

குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி-2079 

பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படாமல் போகுதல்

இந்த சம்பாத்தியம் இறைவனின் கோபத்தை பெற்றுத் தருவதுடன் நாம் செய்யும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை.

قالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ،

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப்பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்:

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ

தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன்.

(அல்குர்ஆன்: 23:51)

يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏

“நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்.

(அல்குர்ஆன்: 2:172)

ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார்.

ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-1844 

இறைவனுடன் போர்

பொருளை விரைவில் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் வட்டித் தொழிலைச் செய்பவர்கள் இறைவனிடம் போர் செய்யத் துணிந்தவர்களாக கணிக்கப்படுவார்கள்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

(அல்குர்ஆன்: 2:278,279)

சாபத்திற்குரியோர்

  وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ
الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَ
وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَؕ
اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ‏
لِيَوْمٍ عَظِيْمٍۙ

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.

(அல்குர்ஆன்: 83:1-6)

நரகம் பரிசாகும்

 عَنْ أَبِى أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ

நபி (ஸல்) அவர்கள், “யார் தன்னுடைய சத்தியத்தின் மூலமாக ஒரு முஸ்லிமின் பொருளை அநியாயமாக எடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தில் நுழையச் செய்கிறான்” என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்-218 (196)

தவறான முறையில் பொருளை ஈட்டுவதால் இறைவனின் அன்பை விட்டும் அவனின் அருளை விட்டும் தூரமானவர்களாக மாறி நரகவாதிகளாக நாம் மாற வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொருளாதராத்தை இறைவன் அனுமதித்த முறையில் ஈட்ட முயற்சி செய்வோம்.

தடை செய்யப்பட்ட சம்பாத்தியமும் அதனால் ஏற்படும் தீங்குகளும்!
யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்