Tamil Bayan Points

ஜும்ஆ தொழுகைக்குத்  தாமதமாக வந்தால்…

கேள்வி-பதில்: ஜும்ஆ

Last Updated on March 3, 2021 by

ஜும்ஆ தொழுகைக்குத்  தாமதமாக வந்தால்…

ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா? அல்லது லுஹர் தொழுகையைத் தொழ வேண்டுமா? என்பதில் மக்களுக்கு மத்தியில் ஒரு குழப்பம் இருப்பதைக் காண முடிகிறது.

இதுபோன்ற நிலையை அடையும் போது பெரும்பான்மையான மக்கள், இரண்டு ரக்அத்கள் மட்டும் எழுந்து தொழுகின்றனர். ஒரு சிலர் லுஹர் தொழுகையை எழுந்து தொழுகின்றனர். இவ்விரண்டு முறைகளில் எது சரியான முறை என்பதையே இக்கட்டுரையில் காணவிருக்கின்றோம்.

ஜும்ஆத் தொழுகையின் கடைசி ரக்அத்தை ஒருவர் தவறவிட்டால் அவர் எழுந்து நான்கு ரக்அத்கள் லுஹர் தொழ வேண்டும் என்று நேரடி வாசகத்தைக் கொண்ட செய்திகள் இருக்கின்றன.

அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும். எனவே அதை ஆதாரமாகக் கொண்டு நாம் முடிவு செய்ய முடியாது. அதே சமயம், இந்தக் கருத்தை வேறு சில செய்திகளின் அடிப்படையில் நிறுவ முடிகிறது.

السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (3/ 203)

5947- أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِى إِسْحَاقَ الْمُزَكِّى أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ فَقَدْ أَدْرَكَهَا إِلاَّ أَنَّهُ يَقْضِى مَا فَاتَهُ.

1608- حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ ، حَدَّثَنَا يَعِيشُ بْنُ الْجَهْمِ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ (ح) وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحٍ ، حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ ، عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ فَقَدْ أَدْرَكَهَا وَلْيُضِفْ إِلَيْهَا أُخْرَى

وَقَالَ ابْنُ نُمَيْرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَدْرَكَ مِنَ الْجُمُعَةِ رَكْعَةً فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى

أَخْبَرَنَا قُتَيْبَةُ وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ وَاللَّفْظُ لَهُ عَنْ سُفْيَانَ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَقَدْ أَدْرَكَ رواه النسائي

“யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார். எனினும், (தவறிப்போன ஒரு ரக்அத்தை) அவர் நிறைவேற்ற வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி நஸாயீ, தாரகுத்னீ, பைஹகீ உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்ட்டுள்ள ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

ஜும்ஆ தொழுகையின் கடைசி ரக்அத்தை அடைந்து விட்டால் ஜும்ஆ தொழுகையை அடைந்து விடலாம். தவறவிட்ட ஒரு ரக்அத்தை மட்டும் எழுந்து பூர்த்தி செய்தால் போதுமானது என்று மேற்கண்ட செய்தி கூறுகிறது.

“யார் ஜம்ஆ தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்துவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தே ஒரு ரக்அத்தை அடையாதவர் ஜும்ஆவை தவறவிட்டுவிட்டார் என்ற கருத்தை விளங்க முடிகிறது.

அதனால், ஜும்ஆ எனும் சிறப்புத் தொழுகை கிடைக்கப் பெறாதவர் லுஹரையே நிறைவேற்றிவிட வேண்டும்.

ரக்அத்தின் எல்லை

ஜும்ஆவின் ஒரு ரக்அத் கிடைத்தால் அவருக்கு ஜும்ஆ கிடைத்துவிடும் என்பது தெளிவு.தொழுகையில் எது வரை இணைந்தால் ஒரு ரக்அத்தை அடைந்து கொள்ளலாம்?

தொழுகையில் ருகூஃவிலிருந்து இமாம் நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்துவிடலாம். இக்கருத்தில் பலவீனமான நபிமொழிகள் இருந்தாலும் பின்வரும் நபிமொழி ஆதாரப்பூர்வமானதாகும்.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ الْأَعْلَمِ وَهُوَ زِيَادٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ رواه البخاري

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்துகொண்டிருந்த போது நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-783

இந்தச் செய்தியில் ருகூவை அடைந்தால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம் என்பதற்கான ஆதாரம் அடங்கியுள்ளது. எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்)  அவரகள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது ருகூஃவில் இருக்கிறார்கள். அப்போது, அபூபக்ரா (ரலி) அவர்கள் வேகமாக வந்து ஸஃப்பில் இணைவதற்கு முன்பாகவே ருகூஃவு  செய்துவிட்டு பின்பு ஸஃப்பில் வந்து இணைந்திருக்கிறார்.

ருகூஃவில் இணைந்துவிட்டால் ரக்அத் கிடைத்துவிடும் என்பதால் தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

நபி (ஸல்) அவர்களும், அவர் வேகமாக ஓடி வந்ததைத் தான் இவ்வாறு இனிமேல் செய்யாதே என்று சொல்கின்றார்கள்.

மேலும், ருகூஃவில் இணைந்த அவருக்கு ரக்அத் தவறியிருக்குமேயானால் எழுந்து தொழ நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தும் நபி இதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.

“அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக!’’ என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் கூறியதிலிருந்து அவர் ரக்அத்தை அடைவதற்காக வேகமாக வருகிற ஆர்வத்தைப் பற்றித்தான் இந்தச் செய்தி பேசுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

ருகூவை அடைந்தால் அந்த ரக்அத் நமக்குக் கிடைத்துவிடும் என்பது இந்தச் செய்தியிலிருந்து தெளிவாகிறது.

எனவே, ஜும்ஆத் தொழுகையின் கடைசி ரக்அத்தின் ருகூஃவில் இணைந்து விட்டால் ஜும்ஆ கிடைத்துவிடும். இமாம் ருகூஃவிலிருந்து நிமிர்ந்ததற்குப் பிறகு இணைந்தால் அவர் ஜும்ஆ கிடைக்கப் பெறாதவராவார். அவர் லுஹரையே தொழ வேண்டும்.

ஜும்ஆவில் பங்கெடுப்பதில் அலட்சியமாகவும், தாமதமாகவும் வரும்போதுதான் இதுபோன்று ஜும்ஆவை தவறவிடுகிற நிலை ஏற்படுகிறது. ஜும்ஆவில் அலட்சியமாக இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி ‘’மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்’’ என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.

நூல் : முஸ்லிம் 1570

நபிகள் நாயகத்தின் இந்த எச்சரிக்கையையும் மனதில் கொண்டு முஸ்லிம்கள் செயல்பட வேண்டும்.