Tamil Bayan Points

ஜும்ஆவின் சிறப்புகளை அறிவோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 26, 2023 by Trichy Farook

ஜும்ஆவின் சிறப்புகள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ – வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால், கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும்.

இன்று அரபகத்தைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அமைந்துள்ளது. வணக்கத்திற்காக அமைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை என்ற பெயரில் வீண் கேளிக்கைகளில், திரைப்படக் கூத்துகளில் கழிந்து கொண்டிருக்கின்றது.

இதே போலத் தான் அரபகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையின் அருமை பெருமை தெரியாமல், அரபக மக்களும் சரி! இங்கிருந்து பிழைக்கப் போனவர்களும் சரி! வீடியோ பார்ப்பதிலும் வீணான காரியங்களிலும் ஈடுபட்டு அந்நாளின் புனிதத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சாரார் இந்நாளுக்குரிய அருமை பெருமைகளை, சிறப்புகளைத் தெரிந்து வணக்கங்களிலும் மார்க்க சொற்பொழிவுகளை ஏற்படுத்தி அதைக் கேட்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள்.

இதுபோல் நன்மையில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஆர்வமூட்டுகின்ற வகையிலும் இந்நாளின் இன்ன பிற சிறப்புகளைத் தெரிந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவும் ஜும்ஆ நாளின் சிறப்புகளையும் ஜும்ஆ நாளை சும்மா கழிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.

நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்

نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، وَهَذَا يَوْمُهُمُ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللهُ لَهُ، فَهُمْ لَنَا فِيهِ تَبَعٌ، فَالْيَهُودُ غَدًا، وَالنَّصَارَى بَعْدَ غَدٍ

இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : முஸ்லிம்-1551 (1414), புகாரி-3486 ,

உலகில் ஓர் உயர் நாள்

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الجُمُعَةِ ، فِيهِ خُلِقَ آدَمُ ، وَفِيهِ أُدْخِلَ الجَنَّةَ ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا ، وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الجُمُعَةِ

“சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப்பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ-488 (450)

இந்நாளில் ஓதப்படும் ஸலவாத் இறைத்தூதருக்குக் காட்டப்படல்

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ ». قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَقُولُونَ بَلِيتَ. فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الأَرْضِ أَجْسَادَ الأَنْبِيَاءِ

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள்.

அறி : அவ்ஸ் பின் அவ்ஸ்
நூல் : அபூதாவூத்-1047 (883)

(குறிப்பு : நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது.

“நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நஸாயீ-1282 (1265) வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.)

ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம்

عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهْوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். “அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-935 

ஜும்ஆ தொழுகைக்காக, வியாபாரத்தை விட்டு விரைந்து செல்லல்

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.

(அல்குர்ஆன்: 62:9)

பத்து நாட்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படல்

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
الصَّلاَةُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ

“ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகள், அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும்பாவங்களாக அவை இருக்கலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-394 (342), திர்மிதி 198

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
مَنِ اغْتَسَلَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَصَلَّى مَا قُدِّرَ لَهُ ثُمَّ أَنْصَتَ حَتَّى يَفْرُغَ مِنْ خُطْبَتِهِ ثُمَّ يُصَلِّىَ مَعَهُ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى وَفَضْلَ ثَلاَثَةِ أَيَّام

“ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவுனமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-1556 

இதே கருத்தில் அபூதாவூத்-1113 (939), அஹ்மத்-7002 (6707) ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸில், ஒன்றுக்குப் பத்து என்பதற்கு ஆதாரமாக, “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு.

وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏

தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்”

(அல்குர்ஆன்: 6:160)

என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டியதாக இடம் பெற்றுள்ளது.

 عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثمَّ يَخْرُجُ فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى

“ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : ஸல்மான் பார்ஸி (ரலி)
நூல் : புகாரி-883 

அபூஸயீத் (ரலி) அறிவிக்கும் முஸ்லிம்-1537 (1400) வது ஹதீஸில், இதே கருத்துடன் “பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் அபூதாவூத்-347 (293) வது ஹதீஸில் இதே கருத்துடன், “நல்லாடை அணிதல்’ என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.

எடுத்து வைக்கும் அடியை தொடுத்து வரும் நன்மை

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ، وَابْتَكَرَ وَغَدَا، وَدَنَا مِنَ الْإِمَامِ وَأَنْصَتَ، ثُمَّ لَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ كَأَجْرِ سَنَةٍ صِيَامِهَا وَقِيَامِهَا

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)
நூல் : நஸாயீ-1398 (1381)

இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் “வாகனத்தில் வராமல்….” என்பதும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜும்ஆ தொழுகையின்  சிறப்புகள் அறிந்து இனிவரும் காலங்களில் நேரத்தோடு வந்து ஜும்மா தொழும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

ஜும்ஆ நாளில் கஹ்ஃப்  ஓதுவது சம்பந்தமான பலவீனமான செய்தி

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِنَّ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறி : அபூஸயீது (ரலி)
நூல் : ஹாகிம்-3392 (இந்த ஹதீஸ் பலவீனமானது)