Tamil Bayan Points

ஜிஹாத் செய்வோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 26, 2023 by Trichy Farook

ஜிஹாத் செய்வோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
ஜிஹாத்’ என்பதற்கு உழைத்தல்,  பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி பல்வேறு அர்த்தங்கள் இருந்தாலும், பலவிதமான நற்செயல்களுக்கும் ‘ஜிஹாத்’ என்ற வார்த்தையை இஸ்லாம் பயன்படுத்துகிறது. அவற்றை அறிந்து செயல்படுத்தக் கூடியவர்களாக நாம் மாறவேண்டும்.

ஹஜ் செய்வதும் ஜிஹாத்

 عَنْ عَائِشَةَ ، أُمِّ الْمُؤْمِنِينَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ
قُلْتُ يَا رَسُولَ اللهِ أَلاَ نَغْزُوا وَنُجَاهِدُ مَعَكُمْ فَقَالَ لَكُنَّ أَحْسَنُ الْجِهَادِ وَأَجْمَلُهُ الْحَجُّ حَجٌّ مَبْرُورٌ فَقَالَتْ عَائِشَةُ فَلاَ أَدَعُ الْحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சிறந்த, அழகிய ஜிஹாத், பாவச்செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்” என்றார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.

அறி : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி-1861 (மேலும் பார்க்க : புகாரி-1520 , 2784)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸின் மூலம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்படும் ஹஜ்ஜை நிறைவேற்றுவது சிறந்த ஜிஹாத் என்பதை வளங்க முடிகிறது.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத்

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَهُ فِي الْجِهَادِ فَقَالَ أَحَىٌّ وَالِدَاكَ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர். “ஆம்” என்று பதிலளித்தார். “அப்படியென்றால் அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்” என்று கூறினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி-3004 (மேலும் பார்க்க : புகாரி-5972 )

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை ஜிஹாத் என்ற வார்த்தையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நியாயத்திற்காக நாவினால் குரல் கொடுத்தலும் ஜிஹாத்

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ
أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறி : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல் : நஸயீ-4209 (4138)

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,”அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறி : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல் : அஹ்மத்-18828 (18074)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ ، أَوْ أَمِيرٍ جَائِرٍ

“ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : அபூதாவூத்-4344 (3781)

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஆட்சியாளர்களின் தவறுகளையும், அவர்களின் நியாயமற்ற போக்குகளையும் சுட்டிக்காட்டி நாவினாலும், எழுத்துக்களினாலும் தைரியமாக எதிர்ப்பதும் ஜிஹாத் தான் என்பதையும், மேலும் அதுதான் சிறந்த ஜிஹாத் என்பதையும் விளங்க முடியும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
 مَا مِنْ نَبِىٍّ بَعَثَهُ اللَّهُ فِى أُمَّةٍ قَبْلِى إِلاَّ كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لاَ يَفْعَلُونَ وَيَفْعَلُونَ مَا لاَ يُؤْمَرُونَ فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ »

எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள். அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.

அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். தாம் செய்யாதவற்றை அவர்கள் சொல்வார்கள். தமக்குக் கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள். ஆகவே யார் இவர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.

யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் தாம். இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம்-80 (71)

மேற்கண்ட ஹதீஸ் முஃமின்களின் பண்பைப் பற்றிக் கூறும்போது கை, நாவு, உள்ளம் ஆகிய மூன்று வழிகளிலும் தீமைக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை ஜிஹாத் என்று குறிப்பிடுகின்றது.

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
جَاهِدُوا بِأَيْدِيكُمْ وَأَلْسِنَتِكُمْ وَأَمْوَالِكُمْ

உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அனஸ் (ரலி)
நூல் : நஸாயீ-3192 (3141)

மேற்கண்ட ஹதீஸ் கை, நாவு, பொருளாதார உதவி ஆகிய மூன்று வழிகளில் தீமைக்கெதிராக போர் புரிவதையும் ஜிஹாத் என்று தான் சொல்கிறது.

இதன்மூலம் அநீதி, அக்கிரமம் போன்ற எத்தகைய தீமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் ஜிஹாத் தான் என்பதைத் தெளிவாக விளங்க முடிகிறது.

மனதைக் கட்டுப்படுத்துவதும் ஜிஹாத்

« الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ »

தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : ஃபழாலா பின் உபைத் (ரலி)
நூல் : திர்மிதீ-1621 (1546) 

மேற்கண்ட ஹதீஸ் மூலம் தீய எண்ணங்களைக் கொண்டு நம்மை வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்யக்கூடிய செயல்களை செய்விக்கத் தூண்டும் நமது மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவதும் ‘ஜிஹாத்’ தான் என்பதை விளங்க முடிகிறது.

இந்த அடிப்படையில் நன்மைகளைச் செய்து,  நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்து அருள்புரிவானாக!