Tamil Bayan Points

சலுகைகளால் நிரம்பி வழியும் தொழுகை!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 21, 2023 by Trichy Farook

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

இறைவன் நமக்கு விதியாக்கி இருக்கிற தொழுகை கடமையாக்கப்பட்ட நிகழ்விலிருந்து, அதன் சட்டதிட்டங்களை பின்பற்றுகிற அனைத்திலும் இறைவன் நமக்கு ஏராளமான சலுகைகளை வைத்திருக்கிறான். இந்த மனித சமுதாயம் ஒருபோதும் தொழுகையை விட்டுவிடக் கூடாது என்பதற்காக.

ஆரம்பமே சலுகை தான்.

ஐம்பது நேரத் தொழுகை ஐந்தான அருட்கொடை.  பொதுவாக மனிதனுக்கு ஒரு பணியை முதலில் குறைத்துக் கொடுத்து விட்டு, அதன் பின்னர் அதை அதிகப்படுத்தினால் அவன் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டான். அது தான் மனித இயல்பு!

எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு எட்டு மணி நேர வேலையைக் கொடுத்து விட்டு, பின்னர் அதை 12 மணி நேர வேலையாக ஆக்கும் போது அவனது இயல்பு அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தனக்கு அந்த வேலை பறி போய் சும்மா இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அந்தப் பணியை விட்டே விலகி விடுகின்றான்.

ஒருவருக்கு 12 மணி நேர வேலையைக் கொடுத்து விட்டு, அதை அவன் தாங்க முடியவில்லை எனும் போது, 8 மணி நேரமாகக் குறைத்தால் ஆயிரம் சலாம் போட்டு அதை ஏற்றுக் கொள்வான். இந்த மனித இயல்பின் அடிப்படையில் தான் மார்க்கத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.

فُرِضَتْ عَلَيَّ خَمْسُونَ صَلاَةً فَأَقْبَلْتُ حَتَّى جِئْتُ مُوسَى فَقَالَ مَا صَنَعْتَ قُلْتُ فُرِضَتْ عَلَيَّ خَمْسُونَ صَلاَةً قَالَ أَنَا أَعْلَمُ بِالنَّاسِ مِنْكَ عَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ الْمُعَالَجَةِ وَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَسَلْهُ فَرَجَعْتُ فَسَأَلْتُهُ فَجَعَلَهَا أَرْبَعِينَ ثُمَّ مِثْلَهُ ثُمَّ ثَلاَثِينَ ثُمَّ مِثْلَهُ فَجَعَلَ عِشْرِينَ ثُمَّ مِثْلَهُ فَجَعَلَ عَشْرًا فَأَتَيْتُ مُوسَى فَقَالَ مِثْلَهُ فَجَعَلَهَا خَمْسًا فَأَتَيْتُ مُوسَى فَقَالَ مَا صَنَعْتَ قُلْتُ جَعَلَهَا خَمْسًا فَقَالَ مِثْلَهُ قُلْتُ سَلَّمْتُ بِخَيْرٍ فَنُودِيَ إِنِّي قَدْ أَمْضَيْتُ فَرِيضَتِي وَخَفَّفْتُ عَنْ عِبَادِي وَأَجْزِي الْحَسَنَةَ عَشْرًا.

என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், “என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உமது இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்று சொன்னார்கள்.

நான் திரும்பச் சென்று இறைவனிடம் அவ்வாறே கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க இறைவன் இருபதாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல, (இறைவனிடம் நான் மீண்டும் குறைத்துக் கேட்ட போது) அவன் அதை ஐந்தாக ஆக்கினான்.

பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், “என்ன செய்தீர்கள்?” என்று கேட்க, “அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான்” என்று கூறினேன். அதற்கு அவர்கள் முன்பு கூறியதைப் போலவே கூறினார்கள். அதற்கு, “நான் ஒப்புக் கொண்டு விட்டேன்” என்று பதிலளித்தேன்.

அப்போது, “நான் எனது விதியை அமல் படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை வழங்குவேன்” என்று அறிவிக்கப்பட்டது.

அறி : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-3207 

قَالَ أَنَا أَعْلَمُ بِالنَّاسِ مِنْكَ عَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ الْمُعَالَجَةِ وَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَسَلْهُ

முதலில் ஐம்பது நேரத் தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்குகிறான். அந்தக் கடமையை அப்படியே பெற்று விட்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் திரும்ப வருகின்ற போது மூஸா (அலை) அவர்கள் வழிமறித்து, விசாரிக்கிறார்கள். 50 நேரத் தொழுகை என்ற சொன்ன மாத்திரத்திலேயே, “உடனே திரும்பிச் செல்லுங்கள்” என்று மூஸா நபி கூறி விடுகிறார்கள்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களிலேயே மக்களிடம் பெருத்த சோதனைகளைச் சந்தித்த இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள் தான். இதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.

நூல் : புகாரி-3207   

மக்களிடம் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து அவர்களின் மன ஓட்டங்களைப் புரிந்த மூஸா நபியவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களைத் திரும்ப அனுப்பி வைக்கிறார்கள். ஒரு முறை, இரண்டு முறையல்ல! இவ்வாறு 9 தடவை திரும்ப அனுப்புகிறார்கள். இதனால் 45 நேரத் தொழுகைகள் குறைகின்றன. ஐந்து நேரத் தொழுகைகள் மட்டும் எஞ்சின. இருப்பினும் ஒன்றுக்குப் பத்து நன்மை என்ற விகிதத்தில் 5 நேரத் தொழுகைகளுக்கும் 50 நேரத் தொழுகைகளுக்கான நன்மைகளை அளிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், முதலில் நமக்குக் கடமையாக்கப்பட்டது 50 நேரத் தொழுகைகள் தான். இதைப் பெற்றுக் கொண்டு நபியவர்கள் வரும் போது, மூஸா நபியவர்களை அல்லாஹ் சந்திக்கச் செய்கிறான். இந்தச் சந்திப்பு அல்லாஹ்வின் மிகப் பெரிய ஏற்பாடாகும். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவாகக் கூறுகிறான்.

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَلَا تَكُنْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآٮِٕهٖ‌ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَۚ‏

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர். அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம்.

(அல்குர்ஆன்: 32:23)

இந்தச் சந்திப்பின் மூலம் தொழுகையைக் குறைத்து, “உங்கள் மீது கடமையாக்கப்பட்டது 50 நேரத் தொழுகைகள் தான்; மூஸாவின் தலையீட்டால் இதை ஐந்தாகக் குறைத்திருக்கிறேன். இதை நீங்கள் நிறைவேற்றத் தவறி விடாதீர்கள்” என்று மனோதத்துவ ரீதியாக நமக்கு இறைவன் உணர்த்துகிறான். சலுகையுடன் கூடிய இந்தத் தொழுகையை இனியும் தவற விடலாமா?

பயத் தொழுகையும் பயணத் தொழுகையும்

போர்க்களத்தில் தொழும் தொழுகைக்கு, ஸலாத்துல் கவ்ஃப் – பயத் தொழுகை என்று பெயர்.

இறைவன் தொழுகையை நமக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமையாக ஆக்கியிருக்கிறான். இவ்வாறு நேரம் குறிக்கப்பட்ட இந்தக் கடமையை போர்க் காலத்திலும், பயணக் காலத்திலும் குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது மிகக் கடினமாகும். இப்படியொரு கடினமான, சிரமமான சூழ்நிலை நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் அஹ்ஸாப் எனும் அகழ்ப் போரின் போது ஏற்படுகின்றது.

عَنْ عَلِيٍّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :
 لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَلأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا شَغَلُونَا ، عَنِ الصَّلاَةِ الْوُسْطَى حِينَ غَابَتِ الشَّمْس

அஹ்ஸாப் (அகழ்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறி : அலீ (ரலி)
நூல் : புகாரி-2931 , 4111, 6396

நபித்தோழர்களும் இது போன்ற சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

 قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ
لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ فَأَدْرَكَ بَعْضُهُمُ الْعَصْرَ فِي الطَّرِيقِ فَقَالَ بَعْضُهُمْ لاَ نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي لَمْ يُرِدْ مِنَّا ذَلِكَ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ

அகழ்ப் போர் தினத்தில் நபி (ஸல்) அவர்கள், “பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள். வழிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழா குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்” என்று கூறினர். வேறு சிலர், “(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்.) எனவே நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது, அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.

அறி : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி-4119 

இப்படி நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் சிரமப்பட்டிருக்கும் வேளையில் தான் பயத் தொழுகை, அதாவது போர்க்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது.

وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَآٮِٕكُمْ وَلْتَاْتِ طَآٮِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ‌ ۚ وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَ ذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْـتُمْ مَّرْضٰۤى اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ‌ ۚ وَ خُذُوْا حِذْرَكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங் களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழையின் காரணமாகவோ, நீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்! (தன்னை) மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன்: 4:102)

இவ்வசனம் போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது.

போர்க்களத்திலும், எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும் போதும் இமாம் இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையை நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணியாகப் பிரிந்து, ஒரு அணியினர் களத்தில் நிற்க வேண்டும்; மற்றொரு அணியினர் இமாமுடன் சேர்ந்து தொழ வேண்டும்.

ஒரு ரக்அத் தொழுததும் அவர்கள் களத்திற்குச் சென்று விட வேண்டும். தொழாத அணியினர் வந்து தொழுகையில் சேர வேண்டும். இவர்கள் வரும் வரை இமாம் தொழுகையை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதிலிருந்து போர்க்களத்தில் எல்லாத் தொழுகையும் ஒரு ரக்அத் தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இமாம் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்பதைப் பொதுவானதாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் இவ்வசனத்தின் துவக்கத்தில் “நீர் அவர்களுடன் இருந்து”, “நீர் அவர்களுக்குத் தொழுகை நடத்தினால்” என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒரு அணியினருக்கு மட்டும் அவர்கள் தொழுகை நடத்தி விட்டு மற்றொரு அணிக்குத் தொழுகை நடத்தாது விட்டால் அவர்கள் வருத்தம் அடைவார்கள்.

நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர மற்றவர்கள் இமாமாகத் தொழுகை நடத்தும் போது அவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடிக்க வேண்டும். அடுத்த அணியினர் தமக்குள் இன்னொருவரை இமாமாக ஏற்படுத்தி ஒரு ரக்அத் தொழ வேண்டும்.

போர்க்காலங்களில் இடையூறுகள் குறுக்கிடும் என்பதால் எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கொரு விதிவிலக்கை அளித்து, இம்மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்கு ஓர் இலகுவை, எளிமையை வழங்குகிறான். சலுகையுடன் கூடிய இந்தத் தொழுகைக்குத் தான், பயத் தொழுகை என்று பெயர். போர்க்களத்தில் நிற்கும் மக்களுக்கு இறைவன் அளித்த மாபெரும் சலுகையும் அருட்கொடையுமாகும்.

பயணத் தொழுகை

இது போலவே பயணத்தின் போதும் மக்களுக்குத் தொழுகையில் அல்லாஹ் சலுகையளிக்கிறான். அதற்குப் பெயர் பயணத் தொழுகையாகும்.

உண்மையில் பயணம் என்று நரகமாகும். இதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.

السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ

நூல் : புகாரி-1804 

மனிதன் தன் பயணத்தின் போது இது போன்ற ஒரு வேதனையை அனுபவிக்கையில் மார்க்கம் கடமையாக்கியுள்ள தொழுகையின் மூலமும் சிரமப்படக் கூடாது என்பதற்காக இரு விதமான சலுகைகளை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

1. குறைத்துத் தொழுதல்

2. இணைத்துத் தொழுதல்

கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாக சுருக்கித் தொழலாம்.

இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும், நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்.

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِىِّ قَالَ
سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ الشَّاكُّ – صَلَّى رَكْعَتَيْنِ

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்தை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறி : யஹ்யா பின் யஸீத்
நூல் : முஸ்லிம்-1230

இந்த செய்தியின் அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்கள் கஸ்ர் செய்த அளவை குறிப்பிடும் போது மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்.

இதில் மூன்று பர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் கூடுதல் அளவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.

  • ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.
  • பயணத்திலிருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.
  • விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.
  • அதே போல் மஃரிப் தொழுகையையும், இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம்.
  • அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்.

அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர், இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாகவுமே தொழ வேண்டும்.

 عَنِ ابْنِ عُمَرَ قَالَ
جَمَعَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ صَلَّى الْمَغْرِبَ ثَلاَثًا وَالْعِشَاءَ رَكْعَتَيْنِ بِإِقَامَةٍ وَاحِدَةٍ

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷா தொழுகையையும் சேர்த்துத் தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.

அறி : இப்னு உமர் (ரலி)
நூல் : முஸ்லிம்-2477

பயணத்தில் அல்லாஹ் இப்படி ஒரு சலுகையை வழங்கி, மக்களுக்கு மார்க்கத்தை இலகுவாக்கியுள்ளான். இந்தச் சலுகை இல்லையெனில் மக்கள் பெரும் அவதிக்கும் அல்லலுக்கும் உள்ளாகி விடுவார்கள்.

உறக்கம், மறதிக்கும் ஒரு சலுகை

இப்படிப் பயணத்தில் சலுகையளித்த எல்லாம் வல்ல அல்லாஹ், ஒரு மனிதன் தொழுகையை விட்டு விட்டு, தன்னையறியாமல் தூங்கி விட்டால், அல்லது மறந்து விட்டால் அதற்காக அவனைத் தண்டிப்பதில்லை. அதற்கும் ஒரு சலுகையை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ نَبِىُّ اللَّهِ -صلى الله عليه وسلم
مَنْ نَسِىَ صَلاَةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا

“யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம்-1217

உறக்கத்திற்கும் மறதிக்கும் மகத்தான இந்தச் சலுகையை அல்லாஹ் வழங்குகிறான். தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்பதால் அதில் “களா’ என்ற பேச்சுக்கே இடமில்லை. (இதைத் தனிக் கட்டுரையில் காண்க!)

தொழுகையில் களா இல்லை எனும் போது அதற்கேற்றவாறு மார்க்கத்தில் சலுகை இருந்தாக வேண்டும். இந்தச் சலுகை இல்லையென்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி விடுவார்கள். அதற்காகத் தான் அல்லாஹ் இப்படிப்பட்ட சலுகையை அளிக்கிறான்.

நோயாளியின் தொழுகை

தொழுகைக்கான சலுகைகள் இத்துடன் நின்று விடவில்லை. தொழுகையை நின்று தான் தொழ வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது. ஆனால் நின்று தொழ முடியாத கட்டங்களில் உட்கார்ந்தும் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக நோயாளிக்கு இந்த விஷயத்தில் பெரும் சலுகையை மார்க்கம் வழங்கியுள்ளது.

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ : عَنِ الصَّلاَةِ فَقَالَ صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ

எனக்கு மூல நோய் இருந்தது. “எவ்வாறு தொழுவது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு” என்று விடையளித்தார்கள்.

அறி : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல் : புகாரி-1117 

தொழுகை விஷயத்தில் கடுமை காட்டும் மார்க்கம், மறு பக்கத்தில் இப்படிப்பட்ட சலுகைகளை வழங்கி, தன்னை மனித குலத்திற்கு ஓர் எளிய மார்க்கமாக ஆக்கி வைத்திருக்கின்றது.

தொழுகையில் களா இல்லை!தொழுவோருக்குக் கஷ்டம் இல்லை!

தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில், உடனே தொழுவதற்கு “அதா’ என்று பெயர். குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல் ஆறப் போட்டு, கடன் மாதிரித் தொழுவதற்குப் பெயர் “களா’ ஆகும். இவ்வாறு தொழுவது இன்று நடைமுறையில் இருந்து வருகிறது.

சிலர் இஷா நேரத்தில் சுபுஹ் தொழுவார்கள். காலையில் கடைக்கு அல்லது அலுவலகத்திற்குச் சென்று விடுவார்கள். இஷா வரை எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். பிறகு அலுவல் முடிந்து வீட்டுக்கு வரும் போது காலையிலிருந்து கணக்குப் பார்த்து, ஐந்து வேளை தொழுகையையும் தொழுது முடிப்பர்.

தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுதே ஆக வேண்டும். அவ்வாறு தொழவில்லை என்றால் அவர் குற்றவாளி ஆகி விடுகின்றார். போர்க்களத்தில் கூட தொழுகையை ஒத்திப் போட அனுமதியில்லை. இதற்காக போர்க்காலத் தொழுகை என்ற சலுகையை வழங்கி, அந்தந்த நேரத்தில் தொழச் செய்கிறான். கடமையான தொழுகையை போர்க்களத்திலேயே தள்ளிப் போட அனுமதியில்லை எனும் போது மற்ற சாதாரண நேரத்தில் தள்ளிப் போட முடியுமா? என்று சிந்திக்க வேண்டும்.

கடமையான தொழுகைகளைத் தள்ளிப் போடக் கூடாது என்பதற்கு, போர்க்காலத் தொழுகை ஓர் ஆணித்தரமான சான்றாகும்.

இதனால் தான் தொழுகைக்காகப் பல சலுகைகளை வழங்கியுள்ளான்.

  • தொழுகைக்காக உளூச் செய்வதற்குத் தண்ணீர் இல்லா விட்டால் தயம்மம் செய்தல்.
  • குளிப்பு கடமையாகி விட்டாலும் தண்ணீர் இல்லாவிட்டால் அல்லது குளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் தயம்மம் செய்தல்.
  • பயணத்தில் இருந்தால் இரு தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுதல்.
  • பயணத்தில் நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதல்.
  • நோயாளியாக இருப்பவர் நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்து தொழுதல்; உட்கார்ந்து தொழ முடியாதவர்கள் படுத்துத் தொழுதல்; அதற்கும் இயலாவிட்டால் சைகை மூலம் தொழுதல்.

இது போன்ற எண்ணற்ற சலுகைகளை மார்க்கம் வழங்கி, தொழுகையைத் தள்ளிப் போடக் கூடாது, களாச் செய்யக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

ஒரு கம்பெனியில் பணி புரியும் பணியாளர்கள், விடுப்பு எடுக்கக் கூடாது என்று நிர்வாகம் நிபந்தனையிடுகின்றது. குடும்பத்தைப் போய் பார்க்க வேண்டும் என்று அதன் தொழிலாளர்கள் கூறும் போது, பக்கத்திலேயே குடியிருப்பை நிர்வாகம் கட்டிக் கொடுக்கிறது. சாமான்கள் வாங்க கடைக்குப் போக வேண்டும் என்றால், அதற்காக கடைகளையும் அதில் ஏற்படுத்துகிறது. குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்றால், பள்ளிக்கூடத்தையும் கட்டித் தருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இத்தனை சலுகைகளையும் அந்தக் கம்பெனி வழங்குவதற்குக் காரணம், தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்பதற்காகத் தான்.

இது போன்று தான் தயம்மும், ஜம்வு, கஸ்ர் என பல்வேறு சலுகைகளை இறைவன் வழங்கியிருப்பதற்குக் காரணம் உரிய நேரத்தில் தொழாமல் விடுப்பு எடுக்கக் கூடாது என்பதால் தான். இதன் மூலம் தொழுகைக்குக் களா இல்லை என்று தெளிவாக அறிவிக்கிறான்.

காலா காலம் களாச் செய்யும் கொடுமை

அந்தந்த நேரத்தில் தொழ வேண்டும் என்று 4:103 வசனத்தில் அல்லாஹ் கடுமையாகக் கூறியிருந்தும் மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் உரிய நேரத்தில் தொழுதாக வேண்டும் என்று கண்டிப்பாக உணர்த்தியிருந்தும் சிலர் சுபுஹ் தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை மொத்தமாகத் தொழுது கடனைக் கழித்து கணக்கைத் தீர்ப்பதற்குக் காரணம், ஒரு வேளையில் தொழுகையை விட்டு விட்டால் மறு வேளையில் தொழுது கொள்ளலாம் என்பது போன்ற சட்டங்களைச் சொல்வதால் தான்.

“தொழுகையை இவ்வாறு களாச் செய்யலாம் என்று சொல்வது நல்ல நோக்கத்திற்காகத் தான். ஓர் அடியான் தன் மீது கடமையாகி விட்ட தொழுகையை விட்டு விட்டால் அது கடனாகி விடுகின்றது. கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி கட்டாயமோ அது போல் செலுத்தியாக வேண்டும். இல்லையேல் அல்லாஹ் தண்டித்து விடுவான் என்பதற்காகத்தான் களாத் தொழுகை உண்டு என்று கூறுகின்றோம்” என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றனர்.

மார்க்கத்தில் இல்லாத இது போன்ற தீர்ப்புகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். “இவ்வளவு நாளும் தொழாமல் இருந்து விட்டோமே, சரி இன்றையிலிருந்து இனிமேலாவது ஒழுங்காகத் தொழுவோம்” என்ற நல்ல முடிவிற்கு ஒருவன் வந்து, மார்க்க அறிஞரிடம் ஃபத்வா கேட்கின்றான். இன்றையிலிருந்து நான் தொழப் போகின்றேன், இதுவரை நான் விட்ட தொழுகைகளின் நிலை என்ன? என்று கேட்கின்றான்.

அதற்கு அந்த மார்க்க அறிஞர் ஓர் அதிரடித் தீர்ப்பை வழங்குகின்றார். “15 வயதில் உனக்குத் தொழுகை கடமையாகி விட்டது. ஆனால் இருபது வருடங்களாகத் தொழாமல் இருந்து விட்டாய். எனவே இருபது ஆண்டு காலத் தொழுகையை நீங்களாச் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பு வழங்குகின்றார்.

தொழப் போகிறேன் என்று திருந்தி வந்தவருக்கு இந்தத் தீர்ப்பு திருப்பு முனையாக அமையவில்லை. திருந்தி, வருந்தி வந்தவரின் நம்பிக்கையை அறுத்து விடும் கத்தி முனையாக அமைந்து விட்டது. இவ்வளவு நாட்கள் நிலுவையாகக் குவிந்து கிடக்கும் தொழுகைகளுடன் இனிமேல் உள்ள தொழுகைகளும் கிடந்து விட்டுப் போகட்டும் என்று வந்த வழியைப் பார்த்து திரும்பி விடுகின்றார். இல்லையென்றால் காலம் காலமாகச் செய்து அவதிப்படுகின்றார்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

(அல்குர்ஆன்: 5:6)

وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍ‌ؕ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَ‌ؕ

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. 

(அல்குர்ஆன்: 22:78)

அல்லாஹ் இந்த மார்க்கத்தை எளிமையாக்கியிருக்கும் போது இம்மார்க்கத்தை நாம் சிரமமாக்குவது எந்த வகையில் நியாயமாகும்?

உறக்கமும் மறதியும்

ஒருவர் தொழாமல் தூங்கி விட்டால் தூக்கத்திலிருந்து விழித்ததும் தொழலாம். அல்லது மறந்து போய் தொழாமல் இருந்து விட்டால் நினைவு வந்ததும் தொழவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்தில் இருந்து திரும்பும் போது இரவுப் பயணம் மேற்கொண்டார்கள். எங்களுக்குத் தூக்கம் வந்ததும் ஓய்வெடுத்தார்கள். பிலாலிடம் இன்றைய இரவில் காவல் காப்பீராக! என்று சொன்னார்கள். பிலால் தன்னுடைய வாகனத்தில் சாய்ந்து கொண்டிருக்கும் போதே அவர்களது கண்களில் தூக்கம் மிகைத்து விட்டது. சூரிய வெளிச்சம் தங்கள் மீது வருகின்றவரை நபி (ஸல்) அவர்களோ, பிலாலோ அவர்கள் தோழர்களில் வேறு யாருமே விழிக்கவில்லை. அவர்களில் முதன் முதலில் விழித்தது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்கம் அடைந்து, பிலாலே! என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் அர்ப்பண மாகட்டும்! உங்களுடைய உயிரைப் பிடித்து வைத்திருந்தவனே என்னுடைய உயிரையும் பிடித்து விட்டான்” என்று பிலால் சொன்னார். உடனே அவர்களுடைய வாகனங்களில் கொஞ்சம் ஓட்டிச் சென்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்து பிலாலுக்கு உத்தரவு இட்டார்கள்.

பிலால் தொழுகைக்கு இகாமத் சொன்னார். அவர்களுக்கு நபி (ஸல்) சுப்ஹ் தொழுவித்தார்கள். தொழுகை முடிந்ததும், “தொழுகையை மறந்தவர் அந்தத் தொழுகை நினைவுக்கு வந்தவுடன் தொழுது விடுவாராக! ஏனெனில் என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக! என்று அல்லாஹ் சொல்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : முஸ்லிம்-1211 , அபூதாவூத்

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். சூரியன் உதித்த பிறகு தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் உடனே அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கடந்து சென்று தொழுகை நடத்துகின்றார்கள். தொழுது முடித்து விட்டு, “மறந்தவர்கள் நினைவு வந்ததும் தொழுங்கள்” என்று சொல்கின்றார்கள்.

இன்னொரு ஹதீஸில், “யார் தொழுகையை மறந்து விடுகிறாரோ அல்லது தொழாமல் உறங்கி விடுகிறாரோ அதற்குரிய பரிகாரம் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அனஸ் (ரலி) மூலம் அறிவிக்கப்பட்டு, முஸ்லிமில் இடம் பெறுகின்றது.

மற்றோர் இடத்தில், “தூங்கிக் கொண்டிருக்கையில் (தொழுகையை) தாமதப்படுத்துதல் (குற்றம்) இல்லை. தாமதப்படுத்துதல் (என்ற குற்றம்) அடுத்த நேரத் தொழுகை வரும் வரை தொழாமல் இருப்பவர் மீது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ்களிலிருந்து தூக்கம், மறதி ஆகியவற்றின் காரணமாக தொழுகை தாமதமாகி விட்டால் அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான். ஏனெனில் இவை இரண்டுமே நம்முடைய கட்டுப் பாட்டில் இல்லாத விஷயங்கள்.

அதற்காக அலாரத்தை அணைத்து விட்டு வேண்டுமென்றே சுபுஹ் தொழாமல் தூங்குபவருக்கு இது பொருந்தாது. எதுவுமே தெரியாத அளவுக்குத் தூங்கி விட்டால் அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். இந்த இரண்டு காரணங்களைத் தவிர்த்து சுய நினைவுடன் தொழுகையை விடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அப்படியானால் களா தொழுகையே இல்லையா? இவ்வளவு நாளும் தொழாமல் 20 வருடங்களாகத் தேங்கிப் போனவருக்கு வழி வகை என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏ يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.

(அல்குர்ஆன்: 2:183)

அல்லாஹ் வசனத்தில் நோன்பைக் கடமையாக்குகின்றான். 185வது வசனத்தில் நோன்பு மாதம் வந்து, ஒருவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் ரமலான் மாதம் அல்லாத வேறு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று நோன்பை களாச் செய்யுமாறு கூறுகின்றான்.

இப்படி நோன்பில் களாச் செய்யுமாறு கூறிய இறைவனுக்கு தொழுகையில் சலுகையளிக்க மறந்து விடவில்லை; மறக்கவும் மாட்டான். நிச்சயமாக அவன் ஞானமிக்கவன்.

وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا‌ ۚ‏

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

(அல்குர்ஆன்: 19:64)

 لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى

என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்.

(அல்குர்ஆன்: 20:52)

وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَآٮِٕكُمْ وَلْتَاْتِ طَآٮِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ‌ ۚ وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَ ذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْـتُمْ مَّرْضٰۤى اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ‌ ۚ وَ خُذُوْا حِذْرَكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏

தொழுகையில் அல்லாஹ் களாவை விரும்பவில்லை. அவ்வப்போது உடனே தொழ வேண்டும் என்று உறுதியாகக் கட்டளையிடுகின்றான். அல்லாஹ் தன் திருமறையில் 4:102 வசனத்தில், போர்க்களத்தில் எப்படித் தொழ வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு விட்டுப் பின்னர், தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று கூறுகின்றான்.

தொழுகையைக் களாச் செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்ற இடம் உண்டென்றால் அது போர்க்களம் தான். எதிரிகள் முஸ்லிம்களை அழித்து விடத் துடிக்கும் அந்தக் கட்டத்தில் கூட தொழுகையை விடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுவதிலிருந்து களாத் தொழுகை என்பது இஸ்லாத்தில் அறவே அனுமதிக்கப் பட்டதல்ல என்பதை விளங்கலாம்.

எனவே தொழுகையைக் களாச் செய்வதற்கு வல்ல அல்லாஹ் எந்தவிதமான வழியையும் விட்டு வைக்கவில்லை. அந்தந்த நேரத்தில் உரிய தொழுகையைக் கண்டிப்பாகத் தொழுதாக வேண்டும்.

களாத் தொழுகை என்ற ஒன்று இருக்கின்றது என்று சொல்வதால் தான் மக்களிடம் அலட்சியம் ஏற்படுகின்றது. அதனால் தொழுகையை விட்டு விட்டு களாவாக, 17 ரக்அத்துகளையும் மொத்தமாகத் தொழும் நிலைக்குச் சென்று விடுகின்றார்கள். சினிமாவுக்குச் செல்வதற்காகத் தொழுகையை விட்டு விட்டு, சினிமா முடிந்த பின்னர் மூன்று வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர்களும் உண்டு.

ஒரு நேரத் தொழுகையை வேண்டுமென்று விடுவது இறை நிராகரிப்புக்குக் கொண்டு செல்லும் பெரும் பாவம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் உணரத் தலைப்பட்டு அந்தந்த நேரத்தில் அந்தந்த தொழுகையை நிலைநாட்டுவார்கள்.

ஒருவர் தனக்குத் தொழுகை கடமையான நாளிலிருந்து 20 வருடங்களாகத் தொழவில்லை என்றால் அதற்காக அவரது மனம் வருந்துகின்றது. அவர் 15 வயதிலிருந்து விட்ட தொழுகையை எல்லாம் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்குப் பரிகாரம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது தான். எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக் காத்திருக்கின்றான்.

மனிதன் மாபெரும் தவறுகளைச் செய்திருந்தாலும், அவன் திருந்தி பாவ மன்னிப்புத் தேடுகின்ற போது அவனது கடந்த காலத் தவறுகளையெல்லாம் அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுகிறான்.

فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْــًٔـا ۙ‏

திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். 

(அல்குர்ஆன்: 19:59,60)

அல்லாஹ் இப்படி ஒரு விசாலத்தைத் தன் அடியார்களுக்கு வழங்கியிருக்கும் போது அதில் இந்த அறிஞர்கள் குறுக்கிட்டு, திருந்தி வருபவர்களிடம் களா எனும் பெரும் பாரத்தை ஏற்றி அவர்களை விரக்தியாளர்களாக, அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடையக் கூடியவர்களாக ஆக்கிவிடுகின்றனர்.

சமுதாயத்தில் இன்று அதிகமான மக்கள் தொழாமல் இருக்கின்றனர். அவர்களுக்குக் கடந்த காலத் தொழுகைகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும். அப்படிப் பட்டவர்கள் திருந்தி வருகின்ற போது மத்ஹபுப் பாணியைக் கடைப்பிடித்தால் அவர்கள் காலா காலம் பள்ளிக்கு வரவே மாட்டார்கள். மார்க்கம் கூறும் இந்த உண்மையான வழியைக் காட்டினால் தான் அதிகமான மக்கள் தொழ முன்வருவார்கள்.

இப்படி ஒரு இலகுவான மார்க்கத்தில் மனந்திருந்த வரும் அடியார் மீது களா எனும் நெருக்கடியைத் திணித்து, எளிமையான இந்த மார்க்கத்தைக் கடின சித்தாந்தமாக இந்த மார்க்க அறிஞர்கள் மாற்றி விட்டனர்.

  قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! 

(அல்குர்ஆன்: 39:53)

“இத்தனை நாளும் தொழாத மக்களே! கவலைப்படாதீர்கள்! உங்களை நான் மன்னிக்கக் காத்திருக்கிறேன்” என்று அல்லாஹ் அழைப்பு விடுக்கிறான்.

மேற்கூறிய இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின் படி நடந்து, இன்றிலிருந்து தொழுகையைத் தொடங்கி, முஸ்லிமாக வாழ்ந்து,  முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!