Tamil Bayan Points

கோடை வெயிலும் நரக வெயிலும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 18, 2023 by Trichy Farook

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின் கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி சுருண்டு விட்டனர். தற்போது தான் சற்று வெப்பம் தணிந்து காற்று வீசத் துவங்கியுள்ளது என்றாலும் அவ்வப்போது 106, 107 டிகிரி என்ற கணக்கில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கின்றது.

இங்கு இப்படி என்றால் வட மாநிலங்களில் வெயிலின் வெப்பப் பசிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை முன்னூற்று ஐம்பதைத் தொட்டு விட்டது. அங்கு வீசிய அனல் காற்றில் அவர்களின் சூடான சுவாசக் காற்று நின்று போனது தான் இந்தத் தலையங்கத்தின் தூண்டுகோலாக – நரக வெப்பத்தை நினைவூட்டும் கருவாக அமைந்தது.

ஓர் இறை நம்பிக்கையாளர் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை நரக நெருப்பின் சூட்டோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. ஏனெனில் சூடு என்றதும் நபி (ஸல்) அவர்கள் நரக நெருப்புடன் முடிச்சு போடுகின்றார்கள்.

 عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ
إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا ، عَنِ الصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ

வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி-534 , முஸ்லிம் 72

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகில் கொளுத்துகின்ற வெயிலை நரகத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிடுகின்றார்கள்.

 وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ

இறைவா! எனது ஒரு பகுதி, மறு பகுதியைச் சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-537

இந்த ஹதீஸில் வாட்டி வதைக்கும் வெயிலை நரகம் விடும் மூச்சு என்று கூறுகின்றார்கள்.

ஆக கொளுத்துகின்ற வெயில் என்பது கொளுந்து விட்டெரியும் நரகத்தின் அக்னி சாட்சி என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

காய்ச்சலும் ஒரு நரக வெப்பமே!

الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ

காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரி-3264 , முஸ்லிம் 4094

காய்ச்சலும் நரக சூடு தான் என்று தொடர்பு படுத்துவதுடன் அதற்கான மருத்துவத்தையும் கூறுகின்றார்கள். இன்று அறிவியல் உலகில் 100 டிகிரிக்கு மேல் உடல் காய்ச்சலில் தகிக்கும் என்றால் நெற்றியில் ஈரத் துணியை வைக்கின்றார்கள். உடல் சூடு உடனே தணிந்து விடுகின்றது.

இந்த ஹதீஸ்களை இங்கு குறிப்பிடக் காரணம், சூடு என்றதும் அதை நபி (ஸல்) அவர்கள் நரகத்தின் சூட்டுடன் தொடர்புபடுத்தி நரகத்தின் சிந்தனைப் பொறிகளை நம்மிடம் கிளப்பி விடுகின்றார்கள்.

பாருங்கள்! சூரியனிலிருந்து பூமி 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் அதன் கொடுமையைத் தாங்க முடியவில்லையே! அதன் வெப்பத்தில் சுருண்டு விடுகிறோமே! ஏன்?

சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். அதனால் தான் 149 மில்லியன் கி.மீ. தூரத்தில் சூரியன் இருந்த போதும் அதன் வெப்பக் கதிர்கள் நம் கண்களைக் கூசச் செய்கின்றன. நம்முடைய கண்களால் கூட பார்க்க முடியாத சூரியன் என்ற மாபெரும் அணு உலைக்குள் நாம் தூக்கிப் போடப்பட்டால் நம்மால் தாங்க முடியுமா? அதனுடைய மையப் பகுதியின் வெப்பம் ஒரு லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும்.

100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தண்ணீர் கொதித்து ஆவியாகி விடுகின்றது. 1100 டிகிரி வெப்பத்தில் கடின இரும்பு திரவ நிலைக்கு வந்து விடுகின்றது. பஞ்சு பஸ்பம் போன்ற மனித உடல் தாங்கும் வெப்பம் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் தான்.

அதற்கு மேல் கொதிக்கும் வெப்பத்தை மனித மேனி தாங்காது! ஒரு போதும் தாங்காது எனும் போது சூரியனின் வெப்பத்தை விடப் பன்மடங்கு வெப்பம் நிறைந்த, பல கோடி அணு உலைகளுக்குச் சமமான நரக வெப்பத்தை நாம் எப்படித் தாங்க இயலும்? இதை எப்போதாவது நாம் சிந்தித்தோமா?

அணுகுண்டு முட்டை பொறித்த அக்கினிக் குஞ்சு

இரண்டாம் உலகப் போரின் போது மனித குல விரோதி, அழிவு சக்தி அமொக்காவின் விமானம் ஜப்பானின் ஹிரோஷிமாவின் வானில் வட்டமடித்து அணுகுண்டைப் போடுகின்றது.

மூன்று மீட்டர் நீளம், முக்கால் மீட்டர் விட்டம், நான்கு டன் எடை கொண்ட அந்த அணுகுண்டு முட்டை ஓர்அக்கினிக் குஞ்சைப் பொறிக்கின்றது. யுரேனியம், புளூட்டோனியம் உரசலில் நியூக்ளியஸ் இரண்டாக உடைந்து அது நியூட்ரான்களாக – அக்னி சிறகு விரித்து பூமியை நோக்கிப் பறந்து வருகின்றது.

அணுகுண்டு முட்டையிலிருந்து அக்னிக் குஞ்சு வெளியான போது அதன் முதல் வெப்பம் 10,000 டிகிரி செல்சியஸ். அந்த ‘சா’ப்பறைவை சாவகாசமாகத் தரையிரங்கிய போது அதன் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ்.

அவ்வளவு தான். அந்த அக்னிக் குஞ்சு தின்று முடித்த உயிர்களின் எண்ணிக்கை ஒன்றே கால் லட்சம். சிதைந்தவர்கள் 30,524 பேர், காயம் பட்டவர்கள் 79,130 பேர், காணாமல் போனவர்கள் 3,622 பேர்.

மனித நெருப்பின் அழிவு சக்தி இவ்வளவு பெரியது என்றால் அல்லாஹ்வின் நெருப்பின் சக்தி எப்படியிருக்கும்? அதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கும் போது, உள்ளத்தையே அது சுட்டெரித்து விடுகின்றது. அதைத் தான் இந்த வசனம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحُطَمَةُ ؕ‏
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۙ‏

ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.

(அல்குர்ஆன்: 104:5,6)

அணு குண்டாகட்டும், இன்ன பிற அணு ஆயுதங்களாகட்டும். அவை அனைத்தும் நெருப்பினால் ஆனது தான். இவை நெருப்பு என்ற வட்டத்தைத் தாண்டி விடாது. இந்த நெருப்பை மறுமை நெருப்புடன் நபி (ஸல்) அவர்கள் ஒப்பீடு செய்து மறுமையில் நெருப்பின் பரிமாணத்தை, அல்லாஹ்வின் நெருப்பின் தன்மையை நமக்கு விளக்குகிறார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ يَا رَسُولَ اللهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உஙகள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’’ என்று கூறினார்கள். உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே போதுமானதாயிற்றே!’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப் பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’’ என்று கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி-3268 , முஸ்லிம் 5077

இத்தகைய தன்மை கொண்ட நெருப்பின் வேதனையை நம்மால் தாங்க முடியுமா?

149 மில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கும் சூரியனின் வெப்பம் தாக்கி சுருண்டு சாகின்றோம். 50 டிகிரி செல்சியஸ் வரை தாக்கிய இந்த வெப்பத்தில் 350 பேர் இறந்திருக்கின்றார்கள். இந்த சூரியனை விடவும் வெப்பம் நிறைந்த நரக நெருப்பு எப்படியிருக்கும்?

வெயிலில் கிடைக்கும் விடுதலை

மறுமையில் உள்ள நெருப்புக்கும் இம்மையில் உள்ள நெருப்புக்கும் உள்ள வேறுபாட்டை ஹதீஸில் கண்டோம். இந்த வேறுபாட்டைத் தவிர இன்னும் பல வேறுபாடுகள் இரண்டுக்கும் உள்ளன. இந்த உலகத்தைப் பொறுத்த வரை கொளுத்திய கோடையின் கத்தரி வெயில் மாறி இப்போது குளிர் – மழை காலம் தொடங்கி விட்டது. அதனால் நாம் இந்தச் சூட்டிலிருந்து, வெயிலின் வெப்பத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்கிறோம்.

அது போல் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற பெரு நகரங்களை அழித்த அணுகுண்டின் மொத்த நெருப்பு, அல்லது துப்பாக்கி, பீரங்கிகளிலிருந்து வரும் சிறு நெருப்பு மொத்த மனிதக் கூட்டத்தையோ, அல்லது தனி மனிதனையோ தாக்கினால், மனிதன் கொஞ்ச நேரத்தில் இறந்து போய் விடுகின்றான். இப்படி சாவு வந்து வேதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றது. மரணமே மனிதனைக் காப்பாற்றி விடுகின்றது. ஆனால் நரகத்தில் அது போன்ற நிலை அறவே கிடையாது.

اِنَّهٗ مَنْ يَّاْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَـنَّمَ‌ۚ لَا يَمُوْتُ فِيْهَا وَ لَا يَحْيٰى‏

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

(அல்குர்ஆன்: 20:74)

الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏
ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىؕ‏

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

(அல்குர்ஆன்: 87:12,13)

மனிதன் அங்கு சாக வேண்டும் என்று துடியாய் துடிப்பான். சாவு தான் அங்கு அவனுக்குக் கிடைக்கின்ற விடுதலை! அது தான் அவனுக்குக் கிடைக்கின்ற நிரந்தர ஆறுதல். ஆனால் அது அவனுக்கு அறவே கிடையாது.

مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏
يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍؕ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறு மிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.

(அல்குர்ஆன்: 14:16,17)

உலகத்தில் கோடை வெப்பத்தைத் தணிக்க, குடம் குடமாக தண்ணீர் குடித்துக் கொள்வான். ஆற்றில், குளத்தில், குளிர்ந்த நீரில் குளித்து சூட்டைத் தணித்துக் கொள்வான். ஆனால் நரகில் சீழ் தான் அவனுக்குக் குடிப்பதற்குக் கொடுக்கப்படும்.

நீர்க் குளியல் அல்ல நெருப்புக் குளியல்

உலகத்தில் நம்மைத் தாக்கும் நெருப்பு ஒரு முனையிலிருந்து தான் வரும். ஒரு திசையில் நெருப்பு வரும் போது மறு திசைக்கு ஓடி தப்பிக்க வழியுண்டு. ஆனால் மறுமையில் உள்ள அந்த நெருப்பு எல்லா முனைகளிலிருந்தும் தாக்கிக் கொண்டிருக்கும். மேலே, கீழே, வலம், இடம் என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருப்பு சூழ்ந்து முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்.

يَوْمَ يَغْشٰٮهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَيَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! “நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்” என்று (இறைவன்) கூறுவான்.

(அல்குர்ஆன்: 29:55)

وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏

“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

(அல்குர்ஆன்: 18:29)

சுருக்கமாகச் சொல்லப் போனால் சுற்றி வளைத்து சுவர்களாக இருக்கும் நெருப்பு சுவாலைகளில் நித்தம் நித்தம் நெருப்புக் குளியல் நடத்திக் கொண்டிருப்பான். மேலும் அந்த வேதனைக்கு முடிவு என்பதே இல்லை.

   اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
   لِّلطّٰغِيْنَ مَاٰبًا ۙ‏
  لّٰبِثِيْنَ فِيْهَاۤ اَحْقَابًا‌ ۚ‏

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாக தங்குவார்கள்.

(அல்குர்ஆன்: 78:21-23)

ஒரு நாள் விடுமுறை கேட்டல்

வேதனை தாளாமல் நரகத்தின் காவலர்களிடம் ஒரு நாள் மட்டும் விடுமுறை கேட்பார்கள். அப்போது நரகத்தில் காவலர்கள் என்ன கூறுவார்கள் தெரியுமா?

وَقَالَ الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ‏
قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنٰتِ ؕ قَالُوْا بَلٰى ؕ قَالُوْا‌ فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓـؤُا الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ

“உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்” என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள். “உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் “ஆம்’ என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.

(அல்குர்ஆன்: 40:49,50)

كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِيْدُوْا فِيْهَا – وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ

கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்)

(அல்குர்ஆன்: 22:22)

وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْۤا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَ لَمْ يَجِدُوْا عَنْهَا مَصْرِفًا

குற்றவாளிகள் நரகத்தைப் பார்க்கும் போது அதிலே தாங்கள் விழக்கூடியவர்கள் என்பதை அறிந்து கொள்வார்கள். அதை விட்டுத் தப்பும் இடத்தையும் அவர்கள் காண மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 18:53)

மனிதன் நரகத்தைப் பார்த்த உடனேயே அதில் விழப் போகிறோம் என்பதை அறிந்து கொள்வான்.

وَلَا يَسْـَٔـلُ حَمِيْمٌ حَمِيْمًا ۖۚ‏
يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ
وَصَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ
وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِۙ
وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ ثُمَّ يُنْجِيْهِۙ‏
كَلَّا ؕ اِنَّهَا لَظٰىۙ
نَزَّاعَةً لِّلشَّوٰى‌

எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும்.

(அல்குர்ஆன்: 70:10-16)

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖ ؕ اُولٰٓٮِٕكَ لَـهُمْ عَذَابٌ اَلِـيْمٌۙ وَّمَا لَـهُمْ مِّــنْ نّٰصِــرِيْنَ

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.

(அல்குர்ஆன்: 3:91)

நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மனைவி, மக்கள், பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுக்க நினைப்பான். இந்தப் பூமி முழுக்க தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. இப்போது அவனிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

عَنْ أَنَسٍ يَرْفَعُهُ
أَنَّ اللَّهَ يَقُولُ لأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ أدَمَ أَنْ لاَ تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلاَّ الشِّرْكَ

நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனையளிக்கப்படுவோரிடம், ‘‘பூமியிலிருக்கும் பொருட்கள் எல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணையாகத் தர முன் வருவாய் அல்லவா?’’ என்று அல்லாஹ் கேட்பான்.

அதற்கு அவன், ‘ஆம்’ என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘‘நீ ஆதமின் முதுகுத் தண்டில் இருந்த போது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு இணை கற்பிக்காமல் இருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால் எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை’’ என்று கூறுவான்.

அறி : அனஸ் (ரலி)
நூல்: புகாரி-3334 

இதைத் தான் நாங்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறோம். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தையெல்லாம் இங்கு சுட்டிக் காட்டி நாம் கேட்பது ஒன்றே ஒன்று தான். இறைவனுக்கு இணை வைக்கும் இந்த மாபாதகத்தை மட்டும் ஒரு போதும் செய்யாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்கிறோம்.

அரபு நாட்டுக்கு அனுப்பும் ஏஜெண்ட்கள் நம்மை ஏமாற்றி, சொன்ன வேலைக்கு மாற்றமாக வேறு வேலைக்கு அனுப்பி விட்டால் திரும்பி வந்து விடலாம். ஆனால் அந்த உலகத்திற்குப் போய் விட்டு ஒரு போதும் திரும்ப வரவே முடியாது.

وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏
حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:98,99)

رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ‏
قَالَ اخْسَـُٔـوْا فِيْهَا وَلَا تُكَلِّمُوْنِ‏

“எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்” (என்றும் கூறுவார்கள்). “இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!” என்று அவன் கூறுவான்.

(அல்குர்ஆன்: 23:107,108)

தமிழகத்தில் ஆலிம்கள் எனப்படுவோர் மக்களை தர்கா, மவ்லிது போன்ற ஷிர்க்கின் பக்கம் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். இது அரபு நாட்டுக்கு ஏமாற்றி ஆளனுப்பும் பாவத்தை விட பன்மடங்கு பெரிய பாவமாகும். மக்களை இந்த ஆலிம்களிடமிருந்து மீட்டு இணை வைப்பின் பக்கம் செல்லாமல் தடுப்பது நம்முடைய தலையாய கடமையாகும்.

அதனுடைய ஓரம்சமாகத் தான் கொளுத்திய கோடை வெயிலை, நரக வெப்பத்துடன் ஒப்பிட்டுக் காட்டி மக்களை சுவனத்தின் பக்கம் ஏகத்துவத்தின் இந்தத் தலையங்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்காகத் தான் அல்லாஹ்வின் தூதராக முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

يٰقَوْمَنَاۤ اَجِيْبُوْا دَاعِىَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ يَغْفِرْ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَ لِيْمٍ‏

எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளியுங்கள்! அவரை நம்புங்கள்! அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.

(அல்குர்ஆன்: 46:31)

தூதரின் இந்த அழைப்புக்கு நாமும் பதிலளித்து, மக்களையும் பதிலளிக்கச் செய்வோமாக! மக்களுக்கு மறுமையில் சுவனத்தில் இட ஒதுக்கீடு கிடைக்கப் பாடுபடுவது தான் நம்முடைய முதல் இலக்கு!