Tamil Bayan Points

குழந்தைக்குத் தாய்ப்பால்!

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

Last Updated on February 14, 2020 by

குழந்தைக்குத் தாய்ப்பால்! குர்ஆனை உறுதிப்படுத்தும் நாட்டு நடப்புகள்

தாய்ப்பால் தொடர்பாக கடந்த ஜனவரி 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ளதைப் போல், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளது.

இவர்களால் உலகப் பொதுமறை என்று மெச்சப்படுகின்ற திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலைப் பேசுகின்றது. ஆனால் அது தாய்ப்பாலைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அல்லாஹ்வின் வேதமோ தாய்ப்பாலைப் பற்றிப் பேசுகின்றது.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை  உண்டு.

இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்:2:233)

ஐக்கிய அரபு நாடுகள் என்று கோர்ட் கூறியிருந்தாலும் அது உண்மையில் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் கூறுகின்ற தாய்ப்பால் சட்டமாகும். ஐக்கிய அரபு நாடுகள் குர்ஆன் காட்டும் பாதையை விட்டும் விலகிப் போனாலும் அந்நாடுகளில் அல்குர்ஆனின் மிச்ச சொச்ச சட்டங்கள் இன்னும் இருக்கின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

நோய் தீர்க்கும் தாய்ப்பால்

தாய்ப்பால் கொடு‌க்கு‌ம் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல! தாய்ப்பால் குடிக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு மார்பகப் புற்றுநோய் வருவதையு‌ம் தடுக்கும்.

குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் கொடுத்தால் அந்தத் தாய்க்கு, பிரசவத்திற்குப் பிறகு வெளியேறும் ரத்தப்போக்கு குறையும். குழந்தைக்கு மன அமைதி ஏற்படும். ஒவ்வாமை ஏற்படாது எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூறுகின்றனர்.

இந்தியாவில் வருடத்திற்கு 2 கோடியே 50 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றில் ஒரு வயது நிறைவடையும் முன்பே 17 லட்சம் குழந்தைகள் இறந்துவிடுகின்றன. 5 வயதிற்குள் 22 லட்சம் குழந்தைகள் இறந்து விடுகிறார்கள். குழந்தை இறப்பைத் தடுக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தைக்கு இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தாய்ப்பால் வரப்பிரசாதம் ஆகும். குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் குடிக்க வைக்க வேண்டும். உடனே கிடைக்கும் தாய்ப்பால் மிகச்சிறந்தது. அதனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகத்தில் 4000 பாலூட்டி இனங்கள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகின்றது. அந்தப் பாலூட்டி இனங்கள் அனைத்தும் தமக்குப் பிறந்த குட்டிகளுக்கு செயற்கைப் பால் புகட்டுவது கிடையாது. இயற்கையான தாய்ப்பாலைத் தான் புகட்டுகின்றன.

பசு தன் கன்றுக்கும், குதிரை, கழுதை, ஆடு போன்றவை தமது குட்டிகளுக்கும் பாலூட்டுவதை நாம் பார்க்க முடிகின்றது. ஆனால் பாலூட்டி இனத்தில் உள்ள மனித இனம் தான் இந்த இயற்கை அருட்கொடைக்கு எதிராகச் செயல்படுகின்றது.

இதனால், தாய் தன்னுடைய உடலையும் கெடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற பிள்ளையின் உடல் நலத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறாள். ஒரு தாய் தனக்குச் சுரக்கும் பாலில் என்ன அடங்கியிருக்கிறது என்று தெரிந்திருந்தால் அதைக் குழந்தைக்குக் கொடுக்க ஒரு போதும் தயங்க மாட்டாள்; தவிர்க்க மாட்டாள்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய் முதன் முதலில் கொடுக்க வேண்டியது தாய்ப்பால் தான். வேறெதையும் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. வீட்டிலுள்ள வயதான பெண்மணிகள், நாட்டு மருந்து என்ற பெயரில் பிறந்த குழந்தைக்கு எதையேனும் புகட்டி விடுகின்றனர். இது மாபெரும் தவறாகும். முதன் முதலில் தாய்ப்பாலைத் தவிர வேறெதையும் கொடுக்கவே கூடாது.

குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் சுரக்கும் அந்தத் தாய்ப்பால் வெறும் ஆகாரம் மட்டுமல்ல! அந்தக் குழந்தை வளர்ந்து, வாலிபமாகி, வயோதிகமடையும் வரை, ஆயுட்காலம் வரை காக்கும் அவ்டதம் (மருந்து) ஆகும்.

முதலில் சுரந்து வரும் பாலுக்கு சீம்பால் (Colostrum) என்று குறிப்பிடுவர். இதன் ஒவ்வொரு சொட்டும் நோய் எதிர்ப்பு மருந்தாகும். அதனால் இந்த சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கத் தவறிவிடக் கூடாது. இந்தச் சீம்பால் சுவாசம், குடல் சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியிருப்பது மட்டுமல்லாமல், அனைத்து நோய் எதிர்ப்பு சக்தி உயிரணுக்களும் இதில் அடங்கியிருக்கின்றன.

இந்தத் தாய்ப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட கலவையைக் கொண்டிருக்கின்றது. செயற்கைப் பால் ஒருபோதும் இந்தக் கலவைகளைப் பெற முடியவே முடியாது.

Lactoferrin  என்ற ஒரு சேர்மானம் தாய்ப்பாலில் உள்ளது. இது, கிருமி நாசினிகள், காளான் நாசினிகள் போன்ற எதிர்ப்பு சக்தியுடன் கூடிய பல்முனை புரதச் சத்துக்களைக் கொண்டதாகும்.

மேலும் தாய்ப்பாலில் அடங்கியுள்ள Aminoacid, Cystine, Methionine, Taurine ஆகியவை மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாதவை.

மூளை வளர்ச்சிக்கு மிக மிக அவசியம் தாய்ப்பால் தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்வதற்காக, அறிவுத்திறன் அளவெண் சோதனை நடத்துவார்கள். இதில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் 8 புள்ளிகள் குறைவாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அத்தனைக்கும் மூலாதாரமாக அமைவது தாய்ப்பால் தான்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு புரதச் சத்து, கனிமச் சத்து, துரித வளர்ச்சி, புத்திக் கூர்மை ஆகிய நன்மைகள் கிடைப்பதுடன், கேன்ஸர், ஆஸ்துமா, சுவாசம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், காது புண், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கின்றது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் இல்லை. அதாவது நோய்கள் தாக்கும் சாத்தியங்கள் குறைவு. இது தவிர தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இதனால் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன.

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • பிரசவத்தின் போது விரிந்த கருப்பை தாய்ப்பால் கொடுப்பதால் சுருங்குகிறது.
  • பால் கொடுக்கும் தாய்க்கு 200 முதல் 500 வரை கலோரி வெளியேறுகிறது. சாதாரணமாக இந்தக் கலோரியை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்ட வேண்டும்.
  • வாழ்க்கையில் 6 மாத காலம் தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு மார்பகப் புற்று நோய் வருவதில்லை.
  • பால் கொடுக்கும் காலத்தில் மாதவிலக்கு தள்ளிப் போகிறது.
  • எல்லாவற்றுக்கும் மேலாக தாய், பிள்ளையின் பாசப் பிணைப்பு! தாய், தன் பிள்ளைக்குப் பால் கொடுக்கும் கட்டம் உண்மையில் உலகில் ஓர் உன்னத நிலையாகும்.

தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. அதனால் தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகளை இத்துடன் நிறுத்திக் கொண்டு, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் தீமைகளைப் பார்ப்பபோம்.

தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்படும் தீமைகள்

  • குழந்தைக்குப் பால் கொடுக்காத தாய்க்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
  • பால் கொடுக்காவிட்டால் உதிரப் போக்கு அதிகமாகி உடலிலிருந்து இரும்புச் சத்து அதிகம் வெளியேறும்.
  • தாயின் உடல் எடை அதிகரித்தல்.
  • செயற்கைப் பால் கொடுக்கும் புட்டியிலும், ரப்பரிலும் கிருமிகள் சேர்வதால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்படுதல்.
  • தாய்ப்பால் கொடுப்பதற்கென எந்தத் தயாரிப்பும் தேவையில்லை. ஆனால் பயணத்தில் இருக்கும் போது செயற்கைப் பால் தயாரிக்க முடியாததால் குழந்தைக்கு ஏற்படும் வேதனை.

இது போன்ற எண்ணற்ற தீமைகள் உள்ளன. எனவே ஒரு தாய் தனது நலத்தையும், தான் உயிரையே வைத்திருக்கும் குழந்தையின் நலத்தையும் கவனித்துக் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் நோய் நிவாரணமாக  மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியில் பாதுகாப்பாக அமைகின்றது. அதைக் கடந்த வருடம், 2019- ஆகஸ்ட் மாதம், தாய்ப்பால் வாரத்தில் தமிழ் இந்து நாளேடு வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வு இதோ:

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பற்றாக்குறையான தாய்ப்பாலைக் கொடுத்தால், அது இந்தியப் பொருளாதாரத்தை 14 பில்லியன் (1400 கோடி) டாலர்கள் குறைக்கக் கூடும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு:

  • இந்தியாவில் மட்டும் சுமார் 1 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் தாய்ப்பால் பற்றாக்குறையால் இறக்கின்றனர். இதனால் 14 பில்லியன் டாலர்கள் அளவில் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
  • சீனா, இந்தியா, நைஜீரியா, மெக்ஸிகோ மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டும் போதுமான அளவு தாய்ப்பால் அளிக்காததால், ஒவ்வோர் ஆண்டும் 2,36,000 குழந்தைகளுக்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர்.
  • இந்த நாடுகளில் கணக்கிடப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்கால இறப்பு விகிதம் மற்றும் இழப்புகளின் அளவு சுமார் 119 பில்லியன் டாலர்களாக இருக்கும்.
  • தாய்ப்பாலே குழந்தையின் முதல் தடுப்பூசி. அதுவே குழந்தைகளை கொடிய நோய்களில் இருந்து காப்பாற்றும்.
  • ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 194 நாடுகளில், உலகத்தில் உள்ள ஒரு நாடுகூட தாய்ப்பால் கொடுப்பதற்காக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பிறந்த 6 மாதம் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்ளும் குழந்தைகள் 40% மட்டுமே! 23 நாடுகளில் மட்டுமே 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது.
  • குழந்தைகளுக்கு 6 மாதம் முழுமையான தாய்ப்பால் அளிக்க ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் ஆண்டுக்கு 7 டாலர்கள் செலவழித்தால் போதும். இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 5,20,000 குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியும். இதனால் மருத்துவச் செலவுகள் குறைந்து, 10 ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் டாலர்களை உருவாக்க முடியும்.
  • தாய்ப்பால் அளிப்பது என்பது மிகவும் உபயோகரமான முதலீட்டு வழி. இதன்மூலம் நாட்டின் இளைய சமுதாயத்தையும், பொருளா தாரத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
  • உலகளாவிய அளவில், தாய்ப்பால் அளிக்கக் கோரும் விழிப்புணர்வுக்கான முதலீடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகள் ஆண்டுதோறும் சுமார் 250 மில்லியன் டாலர்களை மட்டுமே அதற்காக செலவழிக்கின்றன.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித இனம் இந்த இயற்கைச் செயலை மீறும் என்று மனித இயல்பைத் தெரிந்த எல்லாம் வல்ல இறைவன், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என தனது திருமறை மூலம் உத்தரவிடுகின்றான். உலகத்தில் எந்தச் சித்தாந்தமும், மதமும் காட்டாத வழிமுறையை மக்களுக்குத் திருக்குர்ஆன் காட்டுகிறது.

எவ்வளவு காலம் பால் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த இயற்கை வேதம் தெளிவுபடுத்தி விடுகின்றது. தாய்ப்பால் கொடுக்க முடியாத அன்னையருக்கு ஒரு மாற்று வழியையும் இந்தத் திருக்குர்ஆன் கற்றுத் தருகின்றது. அது தான் செவிலியர் முறை!

மனிதனுக்கு மனிதப் பால் தான் கொடுக்க வேண்டும். அதற்கு மாட்டுப் பாலோ அல்லது மாவுப் பாலோ மாற்றுப் பரிகாரமாகாது. மாட்டுப் பால், கன்றுக் குட்டியின் கனமான குடலுக்குத் தான் பொருத்தம். மாவுப் பால் இரசாயனக் கலவைகளின் சங்கமம். இதை உட்கொண்ட எந்தக் குழந்தையும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு ஆட்படாமல் இருந்ததில்லை.

அதனால் மனிதனைப் படைத்த அந்த இறைவன் செவிலித் தாய் முறையை செயல்படுத்தச் சொல்கிறான். இன்று தாய்மார்கள், அல்லாஹ் கூறும் இந்த அரிய அறிவுரையைச் செயல்படுத்த முன்வருதில்லை.

பால் சுரக்கும் பெண்கள் இதை ஒரு தொழிலாகச் செய்வதன் மூலம் தங்களுக்கு ஒரு வருவாயைத் தேடிக் கொள்வதுடன், குழந்தைகளின் நலத்தையும் பாதுகாத்து நன்மைகளைப் பெறலாம்.

இந்த குர்ஆன் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்துகையில், ‘மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்’ (2:185) என்று கூறுகின்றது.

அது போல் திருக்குர்ஆன் மனித குலத்தின் ஒரு வாழ்வியல் வழிக்காட்டியாக அன்றிலிருந்து இன்று வரை தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது.