Tamil Bayan Points

உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா?

கேள்வி-பதில்: ஜும்ஆ

Last Updated on March 3, 2021 by

உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா?

ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் கட்டாயம் தொழுகை நடத்த வேண்டுமா ? இல்லை என்றால் ஆதாரம் குறிப்பிடவும்.

முஹம்மத் ஆஸிர்

இஸ்லாத்தின் ஒரு அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யார் வணக்க வழிபாடுகளில் ஒன்றை இருப்பதாகக் கூறுகிறாரோ அவர் தான் ஆதாரம் காட்ட வேண்டும். ஒன்றை இல்லை என்று கூறுவதற்கு ஆதாரம் கேட்கக் கூடாது.

ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. எனவே இதற்கு மாற்றமாகச் சொல்பவர் தான் அதற்கு உரிய ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

அப்படி எந்தக் கட்டளையும் இல்லாமல் இருப்பதால் இரண்டையும் வெவ்வேறு நபர்கள் செய்வதைத் தடுக்க முடியாது.

தொழுகை நடத்துவதற்கு அதிகம் குர்ஆன் மனனம் செய்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அது போல் அவர்கள் உரை நிகழ்த்தும் போது மயிர்க்கால்கள் சிலிர்த்து விடும் அளவுக்கு உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்துவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.

இந்த இரண்டு தகுதிகளும் ஒருவரிடம் இருந்தால் அவரே இரண்டையும் செய்யலாம். ஒருவருக்கு அவ்வாறு இல்லாவிட்டால் யார் யாருக்கு எந்தத் தகுதி உள்ளதோ அவர் தனக்குத் தகுதியுள்ளதை மட்டும் செய்யலாம்.

ஒருவருக்கு பாங்கின் வாசகம் தெரியும். ஆனால் குரல் வளம் போதாது என்றால் தெரிந்தவர் சொல்லிக் கொடுக்க குரல் வளம் உள்ளவர் திருப்பிச் சொன்னதற்கும் ஆதாரம் உள்ளது.

கனவில் பாங்கு சொல்லும் முறை அறிவிக்கப்பட்ட அப்துல்லாஹ் பின் ஸைத் ரலி அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொன்னார். நீ கனவில் கணடதை பிலாலுக்குச் சொல்! அவர் அதைக் கூறுவார். ஏனெனில் அவர் உன்னை விட அதிக சப்தம் உடையவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள் : திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்