Tamil Bayan Points

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் – 3

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on December 29, 2016 by Trichy Farook

முன்னுரை

இஸ்லாத்தின் சிறப்புகளைக் கூறும், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தொடர் உரையில், நம்மை பங்கு பெறச் செய்த இறைவனுக்கே புகழனைத்தும் உரியது!

மூளைக் காய்ச்சலுக்கு மூல காரணம்

12.09.2000 அன்று பி.பி.சி.யில் வெளியான ஒரு செய்தி: மூளைக் காய்ச்சலுக்கு உத்தர பிரதேசத்தில் 100 பேர் இறந்தனர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைத் தாண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நோய் இப்பகுதியில் 22 வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக இது வரை 7000 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிக அதிகமாக இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு மூல காரணம் பன்றிகள் தான். இந்தப் பன்றிகளைக் கொல்ல வேண்டும். அரசியல் காரணங்களால் பன்றிகள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்தச் சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இவ்வாறு பி.பி.சி.யின் அந்தச் செய்தி கூறுகின்றது.

26.07.07 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான செய்தி:

இந்த நோயின் தாக்குதலை விட்டும் காப்பதற்காக 11 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (முதலில் பன்றியிடமிருந்தும் பின்னர்) கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆசியா பசிபிக் பகுதியிலுள்ள 10,000 குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் பலி வாங்கியுள்ளது.

இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு தப்பியுள்ளனர். ஆனால் அவர்களின் நரம்பு மண்டலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இது “ஹிந்து’ தரும் தகவலாகும்.

1999ல் இந்நோய் மலேஷியாவில் ஏற்பட்டதும், அந்நாடு 64,000 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. மலேஷியாவில் இந்நோய் பரவத் தொடங்கியதும் மக்கள் கிராமம் கிராமமாக வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று 19.03.1999 அன்று பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.

அனுபவமும் அறிவியலும் உணர்த்தும் பாடம்

மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு மூல காரணம் பன்றிகள் தான். அனுபவப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் இதை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். சாக்கடையில் குளியல் நடத்தும் பன்றியிடம் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சிய கொசு நம் வீட்டுக் குழந்தைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டால் போதும்; குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் வந்து விடும் என்று வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு அறிவியல் ரீதியாக உணர்த்தப்படும் இந்நோய்க்குப் பெயர் ஜப்பானீஸ் என்ஸபலைடிஸ் என்பதாகும். இந்நோய் 1871ல் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. என்ஸபலைடிஸ் என்றால் மூளையில் எரிச்சல் ஏற்பட்டு செயலிழப்பதாகும். இந்த நோயின் வைரஸ் ஃப்லாவிவிரிடியா என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் வந்து தங்கி வளர்வதும், வாழ்வதும் சாட்சாத் பன்றிகளிடம் தான். அவற்றிடமிருந்து கொசுக்கள் மனிதர்களிடம் அந்நோயைத் தொற்றச் செய்கின்றன.

உலகில் இஸ்லாம் தான் பன்றியின் இறைச்சியைத் தடை செய்கின்றது.

 

اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

 

 حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ‌ ؕ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ‌ ؕ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.

அல்குர்ஆன் 5:3

 

اِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَ الدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான்.

அல்குர்ஆன் 16:115

இந்த வசனங்கள் அனைத்தும் பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடை செய்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, “நிச்சயமாக மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே அதைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கூடாது! அது ஹராம்!” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, “அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 2236

இதன் மூலம் பன்றியை விற்பனை செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்பு வரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2222

பன்றி என்பது கொல்லப்பட வேண்டிய பிராணி என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

“நர்தஷீர் எனும் விளையாட்டை விளையாடுபவர் தனது கையை பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவர் போன்றவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் 4194

பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் கை வைப்பது கூட அருவருக்கத்தக்க செயல் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

பன்றியினால் ஏற்படும் தீமை களை உணர்ந்து தான் இஸ்லாமிய மார்க்கம் இப்படியொரு கடுமையான நிலைபாட்டை எடுக்கின்றது. ஆனால் உலகம் பன்றியின் தீமையை உணர்ந்தபாடில்லை.

பன்றியின் தீமைகள்

இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.

இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.

பன்றிகள் மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.

இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடை செய்யப்படவில்லை.

பன்றிகள் மலத்தை உண்பது தான் தடை செய்வதற்குக் காரணம் என்றால் சாக்கடையில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எந்தப் பன்றியும் உண்ண அனுமதிக்கப்படவில்லை.

எனவே பன்றியின் மாமிசம் தடுக்கப்பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும்போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.

100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது.

சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.

மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும்போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது.

ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம்.

இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும்போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது.

பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

பன்றி உணவு சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர்.

இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஆந்திராவில் கண் முண்ணே

ஆந்திர மாநிலத்தில் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் மூளைக் காய்ச்சல் நோய் தாக்கி 100 குழந்தைகள் இறந்தனர்; 500 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, உடனே பன்றி வளர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அதிகாரிகள், “பத்து லட்சம் பேர் பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர்; அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள்” என்று பதிலளித்தனர்.

மக்களின் உயிருடன் விளையாடுகின்ற எந்த ஒரு தொழிலையும் ஒழித்துக் கட்டும் இயற்கை மார்க்கமான இஸ்லாமிய ஆட்சியின் அவசியத்தை இங்கு உணர வேண்டும்.

இன்னும்  ஏராளமான அம்சங்கள் இஸ்லாம் ஒர் இயற்கை மார்க்கம் தான் என்பதனை பறை சாற்றுகின்றன. அடுத்தடுத்த உரைகளில் அவற்றை வரிசையாக காண்போம், இன்ஷா அல்லாஹ்!